அன்றிரவு முழுவதும் கதிர்வேலனை எப்படி அணுகுவது, இதனை எப்படி சமாளிப்பது என்று மாறி மாறி நள்ளிரவு வரை விவாதிக்கத்தான் முடிந்தது.
இந்த பிரச்சனையில் விருஷ்திகாவின் பக்கம் வேறு ஒருவரும் செல்லவில்லை.
சுடர்கொடி, திருமகளின் மாமியாரும், மாமனாரும் வேறு கிளம்பி அதிகாலையே வந்துவிட அடுத்து ஒரு பஞ்சாயத்து.
ஒவ்வொரு உறவுகளாய் விஷயம் அறிந்து வீடு வந்து இருவீட்டாருக்கும் சென்று பேசி என மறுநாள் இரவு வரை ஓயவில்லை.
விருஷ்திகாவின் உடைகள் அவள் கேட்கபடாமலே வீடு வந்து வாசலுக்கு கொண்டுவந்து வைத்துவிட்டு போக அழகுமீனாள் ஆடிவிட்டார்.
“அம்புட்டையும் கொளுத்தி போடுவேன் கொளுத்தி. அள்ளிக்கிட்டு போங்கடா…” என முன் வாசல்புறம் வந்து சத்தமாய் கத்த எதிர்வீட்டில் எவ்வித சுவடும் இல்லை.
போதாததிற்கு அழகர், விருஷ்திகாவின் திருமணம் தொலைகாட்சிகளில் காண்பிக்கப்பட,சுற்றுவட்டாரம் கடந்து செய்தி ஊடகங்களில் மதுரையில் ருசிகர சம்பவம் என்று தலைப்பிட்டு மதுராபுரி உணவகத்தின் உரிமையாளரின் திடீர் திருமணம் என கொட்டை எழுத்தில் புகைப்படத்துடன் பிரசுரமானதோடு டிவி செய்திகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
“சோஷியல்மீடியா ஃபுல்லா போக்கஸ் பண்ணிருக்காங்க…” என நம்பி அழகரிடம் காண்பிக்க,
“ஸோ வாட்?…” என்றான் அலட்சியமாய்.
இத்தனை ரணகளம் நடந்திருக்க மற்ற சுற்றத்தார் எல்லாம் மதுரைக்கு வந்துவிட எப்போதையும் விட இன்னும் உறவுகளில் வருகை.
“எல்லாம் இருக்கட்டும் அம்மையப்பா, என்னன்னாலும் கொடித்தடைன்னு ஒன்னு இருக்குல. கலியாணம் ஆனது ஆகி போச்சு. ஆனா மத்த சடங்குக எல்லாம் திருவிழா முடியவும் வெச்சிக்கிடலாம்…” என்றார் அம்மையப்பனின் உறவினர்.
“நானும் அதத்தேன் ரோசிக்கேன் மச்சான்…” என்ற அம்மையப்பன் அழகுமீனாளை அழைத்தார்.
“ஒங்கிட்ட கால்ல விழுந்துட்டு தான அவென் போனான். நாந்தேன் பாத்தேனே…” என திருமகள் வேறு அந்தநேரம் கூற அம்மையப்பன் மட்டுமல்லாது அனைவரும் அழகுமீனாளை தான் பார்த்தனர்.
அவள் மீதெல்லாம் விழிகளோட அந்த அதீதங்களின் மீதான பதிப்புகள் அவனுள் பாதிப்புகளை தர உரிமையும், உணர்வும் அவனை ஜெயிக்க, அவளை ஜெயித்திருந்தான் அழகர் அமிழ்திறைவன்.