வார்த்தைகளற்ற பேரமைதி அழகரிடத்தினில். விருஷ்திகா அவனை பார்த்தவண்ணமே அசையாது அமர்ந்திருந்தாள்.
“வாயை திறக்காம இருந்து அவனை இவ்வளோ தூரம் வளர்த்துவிட்டுட்டீங்க இல்ல?…” என்றவன் குரலில் என்ன இருந்ததென்றே பிடிபடவில்லை.
தங்களை குற்றம் சொல்கிறானா? ஆதங்கமா? வெறுப்பா? எதுவுமே தெரியவில்லை.
ஆனால் இத்தனை அமைதியும், நிதானமும் என்னவோ போல் அவளை பாடாய் தான் படுத்தியது.
“சொல்லு லக்ஷ்மி, பேசு. நிறைய பேசுவியே?…” என கேட்க,
“நிஜமாவே எனக்கு நேத்து தான் தெரியும். நானே கூப்பிட்டு கண்டிச்சிடுவோம்னு தான் உங்ககிட்ட சொல்லலை…” என ஒருவாறு அவனிடம் கூறிவிட்டாள்.
“கண்டிக்கிறதா? விஷால் என்ன செஞ்சிருக்கான்னு தெரியுமா?…” என்று பல்லை கடித்தவன்,
“உன் அம்மாட்ட பேசினியே. என்ன சொன்னாங்க?…” என்றான் மீண்டும் ஆழ்ந்த குரலில்.
“என்னன்னா? எதை பத்தி…” என கேட்க,
“ஓஹ், உனக்கு எதுவும் புரியலை. இல்ல…” என்றவன் குரலில் ஏகத்திற்கும் நக்கல்.
“அதான் உன் அண்ணன். ஓஹ் உங்களுக்கு ஒரே வயசுல. ஆனாலும் உன்னை விட எட்டுமாசம் மூத்தவன் தானே. அண்ணன் சொல்லலாம்…” என்று முகம் இறுக பேசினான்.
‘ஏன் இப்படி?’ என விருஷ்திகாவிற்கு பதறிக்கொண்டு வந்தது அவனின் பேச்சும், பாவனையும்.
“ஒரு அண்ணன் அவனோட தங்கச்சியோட உடலமைப்பை பத்தி இன்னொருத்தன் சொல்லி கேட்கிற விஷயம் எவ்வளவு கொடுமைன்னு புரியுமா லக்ஷ்மி?…” என்றதும் அதிர்ந்தே போனாள் விருஷ்திகா.
“விஷாலா?…” என வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.
“அவ்வளோ அசிங்கமா பேசி அனுப்பிருக்கான் புகழுக்கு. அதுவும் அவன் ப்ரெண்டோட நம்பர்ல இருந்து…” என்றவன் முகம் கல்லாய் மாறியிருந்தது.
“சொல்லியிருப்பாங்களே, அவன் வாய்ல ஒரு பல்லு இல்லைன்னு. ஆமா, அவன் என்கிட்டையே பேசினதுக்கு அவனை உயிரோட விட்டதே தப்புன்னு இப்ப வரைக்கும் வருத்தப்படறேன்…” என்றவனை பார்க்கவே பயங்கரமாய் தெரிந்தது.
“அவன் இதோட விட்டானா? அவனுக்கும் புகழுக்கும் கல்யாணமாகின மாதிரி போட்டோஸ் ரெடி பண்ணிருக்கான். இன்னும் இன்னும் சில போட்டோஸ்…” என்று சொல்லியவன் சட்டென கண்களை மூடி, கைகொண்டு முகம் மறைத்து நெற்றியை தாங்கி பிடித்து குனிந்துகொள்ள, விக்கித்து போய் பார்த்தாள் விருஷ்திகா.
சிலநொடிகள் மௌனமாய், கனமாய் தான் கழிந்தது. இப்படி விஷால் செய்வான் என்று நினையாதவளுக்கு கோபம் பலமடங்கு பெருக இப்போது நேரில் இருந்தானென்றால் அடித்து துவம்சம் செய்துவிடும் ஆவேசம்.
“என்கிட்டயே சொல்றான் என் தங்கச்சியை கல்யாணம் செய்வேன். அதுக்கு என்னவேணா செய்வேன்னு. அந்த போட்டோஸ், எல்லாம் வைரலாக்குவேன்னு. அப்ப எப்படியும் எனக்கு கட்டி வைக்கனும்ன்னு. அவனை விட்டுவைக்க முடியுமா?…” என்று ஆத்திரம் மிக அவன் கேட்கையில் உயிர்வரை பதறியது.
“இதை புகழோட மொபைலை சர்வீஸ்க்கு குடுத்த கடைக்காரன் பார்த்துட்டு நம்பிக்கு சொல்றான். நம்பி எனக்கு. நேர்ல அதையெல்லாம் பார்த்ததோட, அவங்களுக்கும் இது தெரிஞ்சிருக்க எப்படி இருந்திருக்கும் எனக்கு அந்த நேரம்?…” என்றவன்,
“நல்லவிதமா அவன் சொன்னதால எனக்கு மட்டும் தெரிஞ்சது. இதையே அவன் வேறமாதிரி பயன்படுத்தியிருந்தா?…” என்று கேட்கையில் விருஷ்திகா அலமலந்து போனாள்.
தன் தவறின் அதீதம் அவளுக்கு புரிய, மீண்டும் மீண்டும் மனதினுள் அவளின் செயல்மீதான கோபம் அவளுக்குள்ளேயே.
“நான் சொல்லியிருக்கனும். தப்பு தான். ஸாரி…” என்று பயந்து பயந்து அவனிடம் கேட்டவளை அசையாது சிலநொடிகள் பார்த்தான் அழகர்.
என்ன நினைக்கிறான், எதை எண்ணியபடி பார்க்கிறான் என்று எதுவும் புரியவில்லை.
அவனின் பார்வையை விலக்கி நிற்கவும் முடியவில்லை. எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவள் பார்க்க மெல்ல அழகரின் கை உயர்ந்தது.
அடிக்கத்தான் வருகிறான் என உடல் தூக்கிப்போட நடுநடுங்கியவள் கண்களை மூடிக்கொண்டு,
“வேணும்னு சொல்லாம இருக்கலை நான். புகழ் வேண்டாம்ன்னு சொல்லியும் சொல்லியிருக்கனும் தான். நிச்சயம் என் தப்பு தான். மன்னிச்சிடுங்க ப்ளீஸ். இனிமே இப்படி செய்யமாட்டேன். சொல்லாம இருக்கமாட்டேன்…” என்றவள் கண்ணீருடன் அவனிடம் பேச பேச அழகரின் மனதோடு முகமும் வேதனையில் சுண்டியது.
நினைக்கவே அத்தனை பயம். ஒருவேளை விஷால் சொல்லியதை போல பொய்யான அந்த விஷயத்தை பரப்பியிருந்தாலோ, இல்லை அந்த கடைக்காரர் செய்திருந்தாலோ விளைவு?
பொய் என்று உரக்க கூறினாலும் நம்பும் பலரை தவிர்த்து, பரிகாசம் செய்யவே இதனை பயன்படுத்தும் சிலரும் இருப்பார்கள் தானே?
புகழின் எதிர்காலம்? அதையும் விட காலத்திற்கும் இந்த விஷயம் அழியாமல் போய்விடுமே.
நினைவே அவளை கதிகலங்க செய்ய, விஷால் செய்ததை கண்டவனுக்கு ரத்தம் கொதித்து, இத்தனை எதிர்வினையாற்றவில்லை என்றால் தான் தவறு என நினைத்தாள் விருஷ்திகா.
மீண்டும் அழகரிடம் பெரும் மௌனம். அதனை காணவும், கடக்கவும் விருஷ்திகாவிற்கு சிரமத்துடனான வலியினையும் தந்தது.
இப்படி அவன் அமர்ந்து பார்த்ததில்லை. என்றுமே மிடுக்கும், திமிருமாய் நிமிர்ந்திருப்பவன்.
ஓய்ந்து போன தோற்றத்தோடு அமர்ந்திருந்தவனை பார்க்கவே கண்கள் கலங்கியது.
எந்தவகையிலும் சமாதானம் சொல்லிவிட முடியாது. மீண்டும் மீண்டும் மனதினுள் அவளை ரணமேற்றியது தான் மறைத்த விஷயம்.
ஒருவேளை தான் சொல்லியிருந்தால் கடை வரை விஷயம் சென்றிருக்காதோ, இன்னொருவர் தங்களின் குடும்ப விவரத்தை பார்த்திருக்க நேர்ந்திருக்காதோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
விஷயம் வெளியில் பார்க்கப்படும் பார்வைகளில் எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்கள், இழி சொற்கள், பழி பார்வைகள்.
அதனை தங்களின் திருமணத்திலேயே கண்டுகொண்டவள் தானே. இத்தனைக்கும் காதல் திருமணம் என்று தெரியப்பட்டிருந்தாலும் பேசுவருக்கு பேசுபொருளாக ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்வு.
வாழ்த்துக்களோ? வக்கிரங்களோ? தங்களின் குணங்களை அதனை கொண்டே வார்த்தைகளால் அவர்கள் வெளிப்படுத்துவர்.
எத்தனை எத்தனை விமர்சனங்கள். அதிலும் குடும்பத்திற்குள்ளேயே வந்தமர்ந்துகொண்டு உறவெனும் மனிதர்கள் பேசியது அதைவிட அதிகமே.
வெளியாட்களை வெளிவட்டாரங்களைவிட, உறவென்ற பெயரில் உள்ளிருப்பவர்களின் பரிகாசங்கள் சொல்லில் அடங்காததே.
நினைக்க நினைக்க கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அதுவும் விஷாலின் மனதில் இத்தனை வக்கிரங்களா?