எதிரிலிருப்பவன் என்ன நினைக்கிறான், தன்னை என்ன பேசுவான் என நினைக்கையில் மீண்டும் உள்ளம் சுருண்டுபோனது.
இனியும் எவ்வித சுடுசொற்களையும் தாங்கிக்கொள்ள முடியாதளவில் மனது பொசுங்கி போயிருக்க, இன்னும் என்னவோ?
அவளின் அதீத மௌனம் அழகரை கவனிக்க செய்ய, தன்னுணர்விலிருந்து விடுபட்டு மனைவியை பார்த்தான்.
வெளிறிய முகத்துடன், என்ன நடக்குமோ என்னும் அச்சத்துடன் அவனிலிருந்து விலகி இருப்பவளின் பயந்த பார்வை அவனின் மனதை கீறியது.
எதை எண்ணி அஞ்சுகிறாள் என்று புரிந்தவன் மனதளவில் வெகுவாய் துவண்டு தான் போனான்.
“உன்னை கஷ்டப்படுத்திட்டேனோ நிறைய?…” என கேட்டவனை திடுக்கிட்டு பார்த்தவள்,
“என்ன என்ன கஷ்டம்?…” என்றவளுக்கு எதை கேட்கிறான் என்று புரியவில்லை.
அவனை எந்தவகையிலும் சேர்க்க முடியவில்லை. இதை தான் பேசுவான், இந்த நேரம் இப்படித்தான் இருப்பான் என்று எந்தவித கட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாமல் தள்ளாடினாள்.
இதோ இப்போதும் அந்த அமைதியான பார்வை கூட அவளை குத்தி கிழிப்பதை போன்ற தோற்றத்தினை தான் தந்தது.
“நான், நான் பேசினது இதெல்லாம்…” என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தாள் விருஷ்திகா.
நிச்சயம் அழகரிடம் இதனை, இந்த கேள்வியினை எதிர்பார்க்கவில்லை.
அவனின் முகத்தில் தொனிக்கும் அந்த அலட்சியமும், திமிரும், சவாலான பார்வையும் இந்தநொடி அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.
நிஜமாகத்தான் கேட்கிறானா என்ற ஐயமே எழுந்துவிட்டது அவளுக்கு. திகைப்பு குறையாமல் அவள் பார்த்திருக்க,
“நான் பேசினதுன்னு சொன்னது எதைன்னு உனக்கு புரியும்….” என்றான் மீண்டும் அதனை வார்த்தையால் விவரிக்காமல்.
சட்டென்று இதனை பற்றி இன்று பேசவேண்டிய அவசியம் ஏன் என்று புரியாமலும், இது என்ன மாற்றம்? நிஜம் தானா? என்றும் குழம்பி போய் பார்த்தாள் விருஷ்திகா.
அவனின் வார்த்தைகளை விட அந்த முகம் காண்பித்தது அவனின் உணர்வுகளை.
உணர்ந்து பேசுவதை. நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சிலை போல அமர்ந்திருந்தாள் அவன் பேச கேட்டு. எந்தவகையில் எதிர்வினையாற்ற என்றும் தெரியாத நிலை அவளது.
இதற்கு கோபம் கொள்ளுவதா? இப்போது புரிந்ததா என சொல்லி அவன் வேதனையை கூட்டுவதா?
எதுவோ ஒன்று. ஆனால் அவனை போல வலிக்கட்டும் என்று இருக்க முடியாதவிதத்தில் தடுமாறி பார்த்தாள்.
அவன் கூறிய வளர்ப்பு அவளை அப்படி எள்ளி நகையாட அனுமதிக்கவில்லை.
இதனை இந்தவகையில் எண்ணுவதே தவறென்றும் உள்மனம் அறிவுறுத்தியது.
‘உன் வளர்ப்பு சரி என்றால் அவன் வளர்ப்பு தவறென்பதை போலவா நினைக்கிறாய்?’ என அவன் அவளுள்ளம் அந்த வழியில் செல்லவே மறுத்தது.
ஞானசேகரன், மாணிக்கவல்லி போல் ஒரு பெற்றோரையும் சேர்த்தே அல்லவா கூண்டில் ஏற்றுவதை போல்.
வார்த்தைகளில் பேசினால் மட்டும் தானா? எண்ணங்களுக்கும் உயிர் உள்ளது தானே?
குடும்பத்தின் மீதான இந்த பலவீனங்கள் அவளை அழுத்திக்கொண்டிருக்க அழகரை விழிகள் கலங்க பார்த்தாள்.
“உண்மையா உன்னை நான் குறைவா நினைச்சு பேசலை லக்ஷ்மி. இதை நீ நம்புறதும், நம்பாதது உன் விருப்பம்….” என்றவன்,
“அன்னைக்கு இருந்த வேகமும் கோபமும். ப்ச்,…” என்று தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
அழகரின் மனக்கண்ணில் விஷால் ஆவேசமாக பேசியவை தான் வலம் வந்தது.
“ஏன் என் வீட்டு பொண்ணை எங்க யாருக்கும் சொல்லாம காதலிச்சு கல்யாணம் பண்ணின உனக்கு நான் உன் தங்கச்சியை பண்ணும் போது பொறுக்கலையா? உன் தங்கச்சி விவரம் தான். இல்லைன்னா விருஷ்தியை நீ மடக்கின மாதிரி என்னால உன் தங்கச்சியை வழிக்கு கொண்டு வரமுடியலையே…” என்ற வார்த்தையில் அத்தனை உக்கிரமாய் அவன் மீது பாய்ந்திருந்தான் அழகர்.
எந்த எண்ணிலிருந்து அந்த புகைப்படங்களும், குரல்வழி செய்தியும் வந்ததோ, அவனை பிடித்து உயிரை மட்டும் விட்டுவைத்து விசாரித்து, அவனை கொண்டே விஷாலையும் வரவழைத்தனர்.
“அண்ணே அண்ணே, தெரியாம பண்ணிட்டோம்ண்ணே. எல்லாம் அனுப்பின பொறப்பாடுதான் விசாலுமே பயந்து உங்க தங்கச்சிக்கு அனுப்பினத டெலிட் பண்ண சொன்னான். பதட்டத்துல என்னோட சாட்டை டெலிட் பண்ணிட்டேன். எங்க உங்க தங்கச்சி பார்த்து உங்கட்ட சொல்லிருவாங்களோன்ற பயத்துல போன் போட்டான். அவங்க எடுத்ததும் கட் பண்ணிட்டாங்க போல…” என்று கூற இன்னும் அடி வெளுத்துவிட்டான் அழகர்.
“விசாலோட தங்கச்சிக்கும் போன் போட்டோம். அவங்க இனிமே இப்படி நடக்க கூடாதுன்னு சொல்லி திட்டி வச்சிட்டாங்க. இவ்வளவு தான் ண்ணே எனக்கு தெரியும்…” என்றவனின் கெஞ்சுதலை கேட்கும் நிலையில் அழகர் இல்லை.
இப்படி ஒருவனின் எண்ணிலிருந்து, அவனை வைத்துக்கொண்டு விஷால் தன் தங்கைக்கு பேசி அனுப்பியதை நினைக்கையில் ரத்தமெல்லாம் கொதித்தது.
“இவனை எல்லாம் உசுரோட விடாதீங்கண்ணே…” என்று நம்பியும் போட்டு சாத்தி எடுக்க நாராய் கிழிந்துபோனான் அவன் விஷால் வரும்முன்.
நண்பனின் அழைப்பில் உடனே கிளம்பி வந்து சேர்ந்த விஷால் முதலில் அழகரை பார்க்கவில்லை.
நண்பனை தேடியவன் பார்த்தது நம்பியை தான். அவனை பார்த்ததும் முதலில் பயந்தவன், பின் சட்டென்று அலட்சியம் தலைதூக்க திமிராய் நின்றான்.
“என்ன விஷயம் தெரிஞ்சிருச்சு போல? என்கிட்டையே கேட்டிருந்தா நானே வந்திருப்பேனே? இதுக்கு என் ப்ரெண்டை பிடிச்சு என்னை வரவழைச்சு ரொம்ப பில்டப் தான்…” என்றவனுக்கு தான் செய்ததை வைத்தே தப்பிக்கும் எண்ணம்.
“சாக போறடா நீ. என்ன காரியத்த செஞ்சிருக்க?…” என்று நம்பி கேட்டுக்கொண்டிருக்க,
“அப்படித்தான் செய்வேன். தேவையில்லாம நீ இதுல தலையிடாத. ஹோட்டல்ல வேலையை பார்த்தோமா, மேஜையை துடைச்சு எச்சி இலை பொறுக்கினோமான்னு…” என்றவனின் உதடு கிழிந்தது.
“பொறுக்கி ராஸ்கல்…” என்று அவனின் நெஞ்சில் எட்டி மிதித்த அழகர்,
“எவ்வளோ தைரியம் இருந்தா என் குடும்பத்துக்குள்ளையே கை வைப்ப? என் குடும்பம் என்ன? எத்தனை நெஞ்சுரம் இருக்கனும் ஒரு பொம்பளை புள்ளை வாழ்க்கைல இப்படி விளையாட….” என்று அடித்து சாய்க்க,
“ஏய், நீ என் குடும்பத்துக்குள்ள கை வைக்கலையா? என் தங்கச்சியை கல்யாணம் செஞ்சுக்கலையா? நான் உன் தங்கச்சியை பண்ணிக்க நினைச்சா தப்பா?…” என்றவனை மீண்டும் எட்டி மிதித்தான் அழகர்.
“லக்ஷ்மி என்னை விரும்பினாடா. விருப்பம் இல்லாத பொண்ணை நான் கல்யாணம் செய்யலை. ஆனா நீ, நாயே என்ன பேச்சுடா பேசியிருக்க?…” என்று கையை திருகிவிட்டான்.
“ஆமா, பேசுவேன். எனக்கொண்ணும் உன் தங்கச்சியை கல்யாணம் செஞ்சுக்கனும்ன்னு எண்ணமில்ல. ஆனா அவ என்னை விட்டு ஒதுங்கி போக நினைச்சா பாரு. அதுக்குன்னே அவளை கல்யாணம் செஞ்சுக்க நினைச்சேன். நானெல்லாம் உன் தங்கச்சியை பார்க்கறதே பெருசு…” என்று அப்போதும் அடங்காமல் வீம்புக்கென்றே பேசி அடிகளை வாங்கினான்.
“ஆனா அவ தள்ளி போக போகத்தான் எனக்கு வேணும்ன்னு தோணுச்சு. கண்டிப்பா அவளை கல்யாணமும் பண்ணுவேன் பாரு. இந்த போட்டோஸ் போதாதா எனக்கு? சுமாரா இருந்தாலும் உன் தங்கச்சி…” என்றவனின் வார்த்தைகளில் வெறிகொண்டு பாய்ந்துவிட்டான் அழகர்.
அடுத்து பேச வாய் இருக்கவில்லை விஷாலுக்கு. மொத்த பற்களும் உதிர, உயிர் பயத்தில் எழுந்து ஓட பார்க்க, கால், கை ஒத்துழைப்பு தரவில்லை.
அழகரை பார்த்து பயந்தவன், அந்த புகைப்படங்களை வைத்து தப்பிவிடத்தான் நினைத்தது.
ஆனால் அழகரின் பேச்சில் கோபமும், வன்மமும் பொங்க பேச்சின் தவறையும் உணரவில்லை. யாரிடம் பேசுகிறோம் என்பதையும் உணரவில்லை.