எந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி தப்பிக்க நினைத்தானோ அதனுடனான தன் வார்த்தைகளும் அழகரின் சீற்றத்தை வெகுண்டெழ செய்துவிட விளைவு குற்றுயிரானான் விஷால்.
அழகர் கொடுத்த அடியின் வீரியமும், வலியும் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் மடிய செய்ய, தாங்கமுடியாத வேதனையில் இறுதியாய் கையெடுத்து கும்பிடாத குறையாய் அவனின் காலில் விழுந்தான் விஷால்.
அவனை அப்படியே போட்டுவிட்டு செல்ல நம்பி கூற அழகருக்கு அதற்கும் மனமில்லை.
“உன் மதினி இருக்காளே? அவளுக்கு பார்க்கனுமே. ஆனா இன்னொருதடவை இவன் இனிமே புகழ் பக்கம் திரும்ப கூடாது…” என்றவன் தூக்கிவந்து மருத்துவமனையில் போட்டுவிட்டு வந்தான்.
நெற்றியை பிடித்தபடி ஜீரணிக்க முடியாத மனப்பான்மையுடன் அழகர் அமர்ந்திருக்க விருஷ்திகாவிடம் இன்னுமே மௌனம்.
“சத்தியமா சொல்றேன் லக்ஷ்மி. அன்னைக்கு நான் கேட்டப்போ கூட நீ விருப்பம் இல்லைன்னு ஒருவார்த்தை சொல்லியிருந்தா நிச்சயம் நம்ம கல்யாணம் நடந்திருக்காது. நடந்திருக்காதுன்னா அந்தவிதத்துல நடந்திருக்காது….” என்றவன் பெருமூச்சுடன் அவள் முன் சாய்ந்தமர்ந்தான்.
“உனக்கு தெரியுமான்னு தெரியலை. உன்னோட அம்மா எப்பவும் எனக்கு நீன்னு தான் சொல்லியே வளர்த்திருக்காங்க. இந்த வீட்டுல நீ எனக்கானவளா தான் பார்க்கப்பட்ட. சட்டுன்னு அது இல்லைன்னு உடையும்போது அந்த இடத்துல ஒரு ஏமாற்றம். யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சுட்ட மாதிரி தான் காமிச்சது…”
“ஏன் இப்பவும் அப்படித்தான் தோணுது. ஏன் பேசின பேச்சை மாத்தனும்? திடீர்ன்னு வந்து சென்னைல இருக்கிற உன் பெரியப்பா ப்ரெண்டோட பையனுக்கு பேசறதா சொல்லனும்? எனக்கு கோபம், என்னோட வீட்டு மனுஷங்க மனசுல ஆசையை வளர்த்து ஏமாத்திட்டாங்கன்னு….”
“ஏற்கனவே இதை நான் சொல்லியிருந்தேன். ஆனா இவ்வளோ எலாப்ரேட்டா சொல்லலை. சொல்லவும் தோணலை. ஒரு அலட்சியம், அப்படின்னு சொல்லலைன்னாலும் இது ஒரு விஷயமான்னு தோணுச்சு. அப்போ அதுக்கு பேர் அலட்சியம் தானே?…”
“நீ என்னை விரும்பின. உன் மனசு எனக்கு தெரிஞ்சது. அதனால வேற எந்த செகெண்ட் தாட்டும் இல்லாம உன்னை கல்யாணம் செய்யற முடிவெடுத்தேன். ஆனா ஏன் அந்த ஸ்பாட்? இதுவுமே எனக்கு செகெண்ட் தாட் தோணலை…”
“உன்னை கல்யாணம் செஞ்சு அங்க வச்சு உங்கப்பாம்மாவை நான் பார்க்கனும். அந்த நிமிஷம் அவர் உடைஞ்சு நிக்கறதை பார்க்கனும்ன்ற ஒரு மூர்க்கம். இப்பவும் அந்த எண்ணம் தவறில்லை. ஆனா உன் மனசை பார்க்கலைன்னு சொன்னியே. உண்மை தான்…”
“நான் அங்க சறுக்கிட்டேன். திரும்ப நீ என்கிட்ட கேட்டவிதம், என்னை பிடிக்கும் தானே? இதுக்கேன் இத்தனை ஆர்ப்பாட்டம்ன்ற ஒரு ஆணவம், எஸ், என்கிட்ட அது நிறையவே இருக்கு. அதனால அப்படி பேசிட்டேன். எனக்கு ஒளிச்சு மறைச்சு பேச முடியாது. எதுவானாலும் பளிச்சின்னு பேசி தான் பழக்கம்…”
“உன் பார்வை, உன் காதல் எல்லாமே எனக்கு தவறா தான் தோணுச்சு. அந்த எண்ணம் என்னை வளர்ப்புன்ற வார்த்தையை பேச வச்சிருச்சு. பேசியிருக்க கூடாது. நீ சொன்னியே, உன் அக்கா தங்கச்சிங்களை பேசும்போது வலிக்குதோன்னு. ஆனா உன்னை பேசினப்பவும் எனக்கு வலிச்சதுடி. ஆனாலும் அதை ஒத்துக்க மனசு வரலை…”
“இப்பவும் உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தானே நீ வாழற. உன்னை கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுத்ததுமே எனக்குள்ள மனைவியா எனக்கு பிடிச்சவளா நீ வந்துட்ட. அந்த உரிமையில நான் உன்னை பார்த்தேன். ஒருவேளை நம்ம வீட்டுல நார்மலா நமக்கு கல்யாணம் பேசியிருந்தாலுமே தாலி கட்டும் வரை நான் அப்படித்தான் இருந்திருப்பேன்….”
“நிறைய பேசிட்டேன்ல…” என்றான் மென்மையாய்.
அவன் பேசியதும், அவளுக்கு தெரிவிக்க வந்ததும் என்ன என்று தெளிவாய் புரிந்தாலும் விருஷ்திகா இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை.
இதோ அவள் எதிர்பார்த்த அந்த வார்த்தைகள். வார்த்தைகளாய் அல்லாது உணர்வுகளாய்.
இத்தனை பேசவேண்டும் என்பது கூட இல்லையே. அவன் வருத்தத்தை, உணர்தலை உணர்த்தியிருந்தால் போதுமே.
ஆனாலும் சட்டென்று அவனோடு சென்று ஒட்டிக்கொள்ள முடியாமல் என்னவோ தடுத்தது.
வார்த்தைகள் தந்த வலியை அவளால் இப்போது மறக்க இயலாது. ஆனாலும் வருந்தி வருபவனை எட்டி வைக்கவும் முடியாமல் மௌனமாய் இருந்தாள்.
“நான் உன்னை காயப்படுத்திருக்க கூடாது லக்ஷ்மி. தெரிஞ்சே தான் செஞ்சேன். ஆனா இப்ப உணர்ந்து தான் பேசறேன்…” என்றவன்,
“நீ என்கிட்ட சொல்லாதது கோபம் தான். சொல்லியிருக்கனும்ன்னு நினைச்சேன். ஆனா அந்தநிமிஷம் நீ அதை என்னவா நினைச்சிருப்பன்னு எனக்கு புரியுது. எதையும் என்னோட நீ ஷேர் பண்ணலாம்ன்ற நம்பிக்கையை நான் உனக்கு தரலையே….” என்றான் அழகர்.
அவன் பேச பேச இன்னுமே வார்த்தைகளை தனக்குள்ளே தொலைத்தாள் விருஷ்திகா.
“மன்னிப்பு இது வெறும் வார்த்தையோ, வடிவமோ இல்லை. அது ஒரு உயிர். உயிர் இல்லாத மன்னிப்பு இறப்புக்கு சமம். நீங்க நினைச்சிருந்தா பிரச்சனையை சரி பண்ண முன்னாடியே கேட்டிருக்கலாம். ஆனா கேட்கலை. பொய்யா கேட்கிறதுக்கு கேட்காததே பரவாயில்லை…” என்றவள்,
“ஏதோ வார்த்தையை தெரியாம விட்டுட்டோம். இது ஒரு விஷயமா அப்படின்ற அந்த அலட்சியம் இருக்கே. மன்னிப்பு, இது வார்த்தையாக கேட்கனும்ன்னு இல்லை….” என்றாள் உணர்வுகள் அடக்கப்பட்ட குரலில்.
அவன் கொடுத்த அந்த வார்த்தைகள் நிச்சயம் விலைமதிக்க முடியாதது அந்த நிமிடம். அழகரிடம் அத்தனை தடுமாற்றம்.
“நீங்க வார்த்தையால மன்னிப்பு கேட்கணும்ன்னு இல்லை. உணர்ந்து ஒரு பார்வையும், சின்ன அணைப்பும் போதும். ஆனா உங்ககிட்ட அந்த வருத்தம் கூட இருந்ததில்லை. உங்க கண்ல எப்பவுமே ஒரு சவால் இருக்கும். நீங்க எந்த தப்பும் செய்யலைன்னு….”
“நீங்க பேசின வார்த்தைகள் என்னை காயப்படுத்துச்சுன்னு உங்களுக்கு தெரியுது. எனக்கு அது பிடிக்கலைன்னு தெரியுது. அதை என்னோட தவறான புரிதல்ன்னு மட்டும் தான் நீங்க சொன்னீங்களே தவிர, நீங்க பேசினதுக்கு உங்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஆனா அதுவே உங்க அக்கா, தங்கச்சின்னு வரும்போது தவறா தெரியுது. இதை தான் தாங்கிக்கவும், ஏத்துக்கவும் முடியலை. அப்போ நான் வேற தானே?…”
“இந்த விஷயம் சொல்லாததுக்கும் நீங்க என்னை எப்படியும் நினைப்பீங்கன்றதுக்காக இல்லை. புகழ் சொல்லி பயந்ததால மட்டும் தான். நீங்க மட்டும் அப்படி எதுவும் சொல்லியிருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும். எல்லாத்தையும் கேட்டுட்டு போக நான் ஒன்னும்…”
“ஒன்னும்…” என்றவனிடம் தெளிவும், சிறு புன்னகையும் மீண்டிருந்தது.
“சொல்லித்தான் பாருங்களேன்…”
“சொல்லனும். உன்கிட்ட இன்னும் நிறைய. ஆனா இப்படி இல்லை. இன்னைக்கு மனநிலைல நான் ரொம்பவே உடைஞ்சுட்டேன் லக்ஷ்மி…” என்றவன் குரலும் கரகரத்திருந்தது.
“அவன் சொன்னான், நீ செஞ்சதை நான் செஞ்சேன்னு. அப்பவும் என்னை நான் நியாயப்படுத்தினேன். என்னை பிடிச்சதால மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்னு….” என்றவன்,
“ஆனா நானும் சொல்லியிருக்கனும் தானே? இங்க நமக்கு கல்யாணம் நடக்க போதுன்னு உன்கிட்ட சொல்லியிருக்கனும். கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நான் தான் உன்கிட்ட சொல்லாம நம்ம கல்யாணத்தை நடத்திக்கிட்டேன்னு சொல்லியிருக்கனும்…” என்று தடுமாறி பேசினான்.
அவனுக்கு அந்த சமாதானமுமே வரவில்லை. தடுமாற்றமும் கூட புதிதாய் இருக்க, பார்க்க ஒருபக்கம் சிரிப்பாகவும் இருந்தது விருஷ்திகாவிற்கு.
ஆனாலும் முகத்தில் புன்னகையை காண்பிக்காமல் பார்த்திருந்தவள் கண்கள் ஒளிர்ந்தது.
கருவறை கூடுடைத்து வெளிவரும் குழந்தை போன்றது கர்வக்கூடுடைத்து தானெனும் அகந்தையை பொசுக்கி வெளிவருபவனின் ஆன்மம்.
குற்றம் உணர்ந்து, சொல்லின்றி, மொழியறியா குழந்தையென கனிந்து தாய் முகம் பார்ப்பதை போன்றது.
சரணடைதலின் அரிச்சுவடி தெரியாதவனின் தடுமாற்றம். ரசிக்க தெரிந்தவனுக்கு ரசனையை வார்த்தைகளில் வடிக்க தெரியவில்லை.