இவனுக்கு தன்னை திருமணம் பேசியதற்கு தானே இத்தனை ஆர்ப்பாட்டமும். அந்த கோபத்தில் தானே இந்த திருமணமும்.
அப்போதுதான் ஒவ்வொன்றாய் விளங்கியது, அழகுமீனாள் தன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் எதற்கு இத்தனை ஆவேசம் காண்பிக்கிறார் என்று.
அதிலும் அவர் பேசிய சில வார்த்தைகளில் நிஜத்திற்கும் கசந்துதான் போனாள் விருஷ்திகா.
“எனக்கு ஒன்னு கேட்கனும். கேட்கட்டுமா?…”
“ஹ்ஹ்ம்ம், பேசு. கேளு…” என அந்த காகிதங்களை தள்ளி வைத்து அவள் எதிரில் அமர்ந்தான் அழகர்.
“எங்கம்மா இங்க வளர்ந்தாங்க. அம்மாச்சி, தாத்தா வளர்த்தாங்க ஓகே. ஆனா அவங்களுக்குன்னு ஒரு விருப்பம் இருக்க கூடாதா?…” என்று கேட்கவும் அவன் முகம் மாறியது.
“இல்லை, நான் பொதுவா சொன்னேன். அம்மாப்பா நமக்கு கல்யாணம் செய்யனும்ன்னு பேசின எதுவும் எனக்கு தெரியாது. எனக்கே உங்களை பிடிச்சது. பார்த்தேன். கல்யாணம்ன்னு வரும்போது என் விருப்பத்தை வீட்டுல சொல்ல தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்…” என்றவள்,
“ஆனா அவங்க ஏன் என்னை வெளில தரனும்ன்னு முடிவு செஞ்சாங்கன்னு எனக்கு தெரியலை. நம்ம கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் கூட என் மனசுல இருந்ததை சொல்லியிருந்தா சந்தோஷமா நடத்தி வச்சிருப்போம்ன்னு சொல்றாங்க. அப்போ இது எங்க தப்பா போச்சு?…” என்றாள் விருஷ்திகா.
அழகரிடம் பேரமைதி. அவளே கேட்டு தெளிந்துகொள்ளட்டும் என்று பார்த்திருந்தான்.
“பெத்தவங்களா அவங்க பிள்ளைங்களுக்கு இதை செய்யனும்ன்னு ஆசைப்படுவாங்க. அப்படி கூட யோசிச்சிருக்கலாம். அதுக்கு நீங்க நடந்துக்கிட்டது சரியா? இதுல நான் என்ன பண்ணினேன்? நான் உங்க கோபங்களுக்கு பகடையா?…” என்ற கேள்வி உண்மைக்கும் அழகரின் நெஞ்சத்தை பதம் பார்த்தது.
அவள் சொல்லியதிலும் எவ்வித தவறும் இல்லையே. எத்தனை கோபமிருந்தும் அவளின் மரியாதையையும் அங்கே அவன் வீதியில் நிறுத்திவிட்டான் தானே!
காதல், இருவரின் விருப்பம் என்று எத்தனை தான் சாயம் பூசி சமாளித்தாலும் அதனை நல்லவிதம் என்று சொல்லிவிட முடியாதே.
“முடிஞ்சு போனதை பேசறதை நான் என்னிக்கும் விரும்பறதில்லை. ஆனா கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லனுமே…” என்றவன்,
“உங்கம்மாப்பா உன்னை பெத்தவங்களா உன் வாழ்க்கையை பத்தி தனிச்சு முடிவெடுக்கறது எந்தவிதத்திளையும் தப்பு சொல்லிடமுடியாது. ஆனா அவங்க இங்க நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட பேசியிருக்கனும்…” என்றவன் அவளின் கேள்வியான பார்வையில்,
“உங்கம்மாவை வளர்த்துட்டோம்ன்றதுக்காக அவங்க ஒன்னும் இங்க இருக்கிறவங்களுக்கு அடிமை இல்லை. ஆனா தானா ஆசையை வளர்த்துவிட்டது உங்கம்மா தான். அப்போ அவங்க முடிவில மாற்றம்ன்னு வரும்போது அதை பக்குவமா சொல்லியிருக்கனுமா இல்லையா?…” என்றான்.
“ஹ்ம்ம்…” என விருஷ்திகா தலையசைத்தாள்.
சட்டென்று அழகரின் முகத்தில் பெரிதாய் ஒரு விரிந்த புன்னகை பூக்க, தன் கை நீட்டி அவளின் கன்னம் தீண்டினான்.
“ரொம்ப பயந்த பொண்ணு மாதிரி பார்க்காதடி. செட்டே ஆகலை. அதுவும் நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி உன்னோட முழு அவதாரத்தையும் பார்த்திருக்கேன். இப்ப என்னன்னா பச்சைப்பிள்ளை மாதிரி. சத்தமா சிரிக்க போறேன் பாரு…” என்றான் கேலியாய்.
“ப்ச்…” அவள் சலிக்க,
“சீரியஸா பேசிட்டிருக்கேன். என்ன சத்தம்? டைவர்ட் பன்ற மாதிரி….” என அவளை இலகுவாக்கியவன்,
“நாம டாப்பிக் மாறிட்டோம். இதுக்கு தான் சொன்னேன்…” என்று அவளின் கன்னத்தை தட்டிவிட்டு அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
“உன்னோட அம்மா பிராப்பரா சொல்லி இருக்கனும். ஆனா அவங்க எப்படி சொன்னாங்க? எம்மா போஸ்ட் அப்படின்ற மாதிரி ஊர்ல இருந்து வந்தாங்க. வந்து பார்க்க வந்துட்டு உனக்கு வரன் வந்திருக்கு. சென்னை பையன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. எப்படி இருந்திருக்கும்?…” என்றதும் விருஷ்திகாவிற்கு புரிந்தது.
“நீ என்னை மாதிரி கோபப்படறவளும் இல்ல. புரியாம பேசறவளும் இல்லை. என்னோட வார்த்தைல இருக்கிற உண்மையை புரிஞ்சா போதும். அதுக்குன்னு நான் செஞ்சது சரின்னு சொல்லமாட்டேன். இப்பவும் உன் அப்பா மேல, அம்மா மேல எனக்கு கோபம் தான்…” என்றான் முகம் இறுக.
“உன்னோட அப்பாம்மாவை இப்படி நம்பவச்சு ஏமாத்தினா உனக்கு எப்படி இருக்கும்?…” என்றவன்,
“எனக்கு ஒன்னும் பொண்ணே கிடைக்காம ஒன்னும் உன்னை எதிர்பார்த்துட்டு யாரும் இங்க இல்லை….” என்றும் கூற சட்டென்று முறைத்தாள் விருஷ்திகா.
“நிஜம்டி. முறைக்கிற நீ. உன்னை இம்ப்ரெஸ் பன்றதுக்காக எல்லாம் பொய் சொல்லமுடியாது…” என்றவன் வாய் வழக்கம் போல் அவனை பழி வாங்கிவிட்டது.
“என்னை நீங்க இம்ப்ரெஸ் பண்ணுங்கன்னும் நான் சொல்லலை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. சிலரை மாத்தவேமுடியாது…” என்று முணங்கினாள்.
“இதுதான் நான். இவனை தான நீ விழுந்து விழுந்து காதலிச்ச? அதுவும் அஞ்சு வருஷம்…” என்றான் கோபமாய்.
“தப்பு தான்….”
“எது என்னை காதலிச்சதா?…”
“நான் உண்மையை எல்லாம் சொல்லமாட்டேன். சொன்னா உங்க மனசு கஷ்டப்படுமே…” என்று பரிகாசம் செய்ய,
“கொழுப்புடி…” என்றான் அவளின் கன்னத்தை கிள்ளி.
“காதலே பிடிக்காதாம். ஆனா வாயை திறந்தா நூறுதடவை காதல் காதல்ன்னு சொல்றது….”என்றாள் முணுமுணுப்பாய்.
“இப்ப இது ரொம்ப முக்கியம்…” என்றவன்,
“இப்பவும் உங்கப்பாம்மாவை, அவங்க செஞ்சதை மறக்கவே முடியாது லக்ஷ்மி. உனக்கு வரன் பார்க்கிறதுன்னா தாராளமா பார்த்திருக்கட்டும். எனக்கு இந்த விஷயம் தெரியவந்தப்போ கூட சரி பண்ணட்டும், அதனால என்னன்னு தான் கேட்டேன்…” என்று அவளின் முறைப்பை இன்னும் அதிகப்படுத்தினான்.
“உண்மையை சொல்றேன்ம்மா. மாப்பிள்ளை நல்லவனா இருந்தா குடுக்கட்டும்ன்னு கூட சொன்னேன்…” என்றவன் பிடித்திருந்த தன் கையை வெடுக்கென்று உருவிக்கொண்டாள்.
அதில் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை அவன். அவளுக்கு கோபம் வரும் என தெரிந்தே தான் அவன் கூறியதும்.