“நான் பொய் சொல்லலை. அன்னைக்கு என்ன பேசினேனோ அதை தான் இப்பவும் சொல்றேன்…” என்றவன்,
“வீட்டுல இப்படின்னு என்கிட்ட நடந்ததை சொல்லவும் அவ்வளோ கோபம். உண்மையா உங்கம்மாப்பா யூஸ் பண்ணிட்டு வீசி எறிஞ்ச மாதிரி தான் தோணுச்சு. சொந்தம்ன்னா அவ்வளோ ஈஸியான்னு. அதான் அப்படி பண்ணுனேன்…” என்று சொல்ல விருஷ்திகா மௌனமாய் இருந்தாள்.
அத்தனை குழப்பம். இதனை முன்பும் கூட அன்றைய வாக்குவாதத்தின் பொழுது அழகர் கூறினான் தான்.
ஆனால் தன்னை ஏமாற்றிவிட்டானே என்ற ஆதங்கத்தில், ஆற்றாமையில் இருந்தவளுக்கு பெரிதாய் பாதிப்பை, யோசனையை தரவில்லை.
இப்போது அவன் கேட்பதில் இருக்கும் நியாயம் புரிந்தது. இதனை சாந்தாவிடம் கேட்கவேண்டும் என்றும் நினைத்திருந்தாள் விருஷ்திகா.
“ரொம்ப யோசிக்காத. என்னை நியாயப்படுத்த நான் சொல்லலை. நடந்தது இது தான், இதுக்காக தான் நான் நடத்திக்கிட்டதும் அப்படின்ற விஷயத்தை உனக்கு தெளிவு படுத்தறேன்…” என்றான் நிதானமாய்.
“ஆனா இப்பவும் என்னோட எண்ணம் இதுதான். ப்ளஸ்டூ முடிச்ச பொண்ணு. அப்ப இருந்தே உன் பார்வை என் மேல விருப்பமா இருந்திருக்கு. என் வீட்டு பொண்ணு எப்படி இருக்கனும்ன்ற ஒரு எதிர்பார்ப்பு உன்கிட்ட மாறினதுல தான் என்னோட கோபமும். அந்தவகையில கண்டிக்க நினைச்சேன்….” என்றவன்,
“இப்பவும் என் நிலைப்பாடு இதுதான். என்னை மாதிரியே நீயும் நினைக்கனும்ன்னு நான் சொல்லலை. ஒரே எண்ணங்கள் எல்லாருக்கும் சாத்தியம் இல்லையே. நான் இப்படி இருக்கிறது தப்புன்னு சொல்ல கூடாது. என் பாயின்ட் ஆஃப் வியூ வேற. எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி காதல் ஒத்துவராது…” என்று முடிக்க அழகரின் கைப்பேசி அழைத்தது.
“இந்த நேரம் யார்?…” என்றபடி அழகர் எழுந்து சென்று போனை எடுத்தான்.
“அழகரு கீழ வாய்யா. வெரசா வா சாமி…” என அம்மையப்பனின் பதட்டம் சுமந்த குரல்.
“என்னாச்சு?…” என்றான் அழகர் அவரின் குரலை கண்டே.
பேசியதோடு நிற்காமல் கதவை திறந்து வெளியேற விருஷ்திகாவும் என்னவென்று புரியாமல் கீழே சென்றாள்.
கதவை திறந்து மாடிப்படி அருகில் செல்லவுமே அத்தனை கூச்சல்கள். மயில்வாகனனின் சத்தம் உச்சஸ்தானியில் கேட்டது.
பதறிவிட்டாள் விருஷ்திகா. இதென்ன புதிதாய் என்பதை போல அழகரின் பின்னால் ஓடி வர வீட்டில் அத்தனைபேரும் விழித்திருந்தனர் அந்த நள்ளிரவு நேரத்தில்.
“வாடா, உன்னை இன்னைக்கு சும்மா விடமாட்டேன்…” என கண்கள் இரண்டும் சிவக்க கத்தினார் மயில்வாகனன்.
கத்தியதோடு அழகர் வரவும் அவனின் கழுத்தை பற்றி இழுத்தவர் அடிக்க பாய ஒரே தள்ளில் கீழே தள்ளினான் அழகர்.
“சாமி, என்னய்யா இது? அவரு வயசென்ன?…” என ஞானசேகரன் மயில்வாகனனை தூக்க நெருங்க,
“பேசாம இருங்க நீங்க…” என்றான் தகப்பனை.
“அண்ணே கம்முன்னு நில்லுங்க….” என்ற சுடர்மணி,
“அவரு மகனை நீயி அடிச்சு படுக்கவச்சிட்டன்னு சொல்லுதாரு அழகரு. என்ன விஷயம்?…” என்றார் அவர் தன் அண்ணன் மகனிடம்.
அம்மையப்பன், அழகுமீனாள், வீட்டின் மற்ற பெண்கள், உடன் புகழ்மதியும் நின்றிருந்தாள்.
நடுக்கமும், பயமுமாய் அவள் நின்றவிதம் கண்டு அழகரும், விருஷ்திகாவும் வேதனையை விழுங்கினர்.
இதற்குமேல் நிச்சயம் வீட்டினரிடம் இந்த விஷயத்தை மறைக்க முடியாதென்று தெரிந்துவிட்டது அழகருக்கு.
விருஷ்திகாவை திரும்பி பார்த்தான். பார்த்தவன் பார்வையே அவனின் கோபத்தை காண்பித்தது.
“இந்தாள் இங்க வர்ற வரைக்கும் உன் அம்மாப்பா அங்க என்ன பன்றாங்க?…” என்றான் ஆவேசமாய் அவளிடம் அடிக்குரலில்.
வேறு யாரிடம் அவன் உணர்வுகளை கொட்ட முடியும். சட்டென்று கோபம். அதனை அவனால் குறைக்க முடியவில்லை.
எப்படியும் அந்தாள் இங்கே வந்து ஆடத்தான் போகிறார் என்று ஒரு அனுமானம் இருந்தாலும், மறுநாள் காலை வீட்டினரிடம் தானே பக்குவமாய் எடுத்து சொல்வதாய் இருந்தான்.
அதற்குள் நள்ளிரவில் அனைவரின் ரத்தக்கொதிப்பையும் ஏற்றுவதை போல் மயில்வாகனன் பிரச்சனையை கிளப்ப வந்துவிட இனி பக்குவமாவது, பத்திரமாவது என்று புரிந்துவிட்டது.
“என்னய்யா உன் பிரச்சனை. நான் தான் அடிச்சேன்….” என்றான் ஆவேசம் தணியாமல்.
“என்னய்யா, என்ன அழகரு இதெல்லாம்?…” என்றார் அழகரிடம்.
அதற்குள் அரவிந்தும் அடித்துபிடித்து அங்கே வந்து சேர்ந்திருக்க அவன் பார்த்தது ஆவேசமாய் மயில்வாகனனை அறைந்த அழகரை தான்.
அரவிந்த் வரும்பொழுதுதான் மயில்வாகனனும் வார்த்தையை விட்டிருந்தார், அதுவரை எதற்கு விஷாலை அழகர் அடித்தான் என்று எவருக்கும் புரியாமல் இருந்தது.
“எம்புள்ளை உன் தங்கச்சிய கட்டிக்க நெனச்சதே உனக்கெல்லாம் குடுப்பினை. அவன் அவ்வளோ ஈஸியா போய்ட்டானோ? என்னமோ அவள ஏமாத்தி கழட்டி விட்டதாட்டம் இல்ல நீ அவனை போட்டு அடிச்சிருக்க? உன்னை போலீஸ்ல புடிச்சு குடுக்கலைன்னா என்னன்னு பாரு…” என்றவரின் பேச்சில் அனைவருமே ஆடிப்போய் நின்றனர்.
“பெரியப்பா வார்த்தையை அளந்து பேசுங்க. அறிவில்லாம பேசாதீங்க. இப்படி பேச வெக்கமாயில்ல?…” என்று விருஷ்திகா பேசியதோடு அழகரின் கையையும் பிடித்திருந்தாள்.
கோபத்தில் என்னவும் செய்துவிடுவானோ என்று பயத்தில் அவனை இறுக்கமாய் பற்றியிருந்தவளுக்கு மயிலின் பேச்சை தாங்கமுடியவில்லை.
“வாடியம்மா. நீ ஏன் பேசமாட்ட? என் தம்பி பெத்த மகளே, நீயும் தான இவன தேடி ஓடி போன. உன்னை நடுவீதில நிக்கவச்சு இவன் தாலி கட்டினான். இந்த குடும்பத்துக்கு என்ன புதுசா? என்னமோ அதிசயமா பொட்டப்புள்ளைய வளக்குததாட்டம் பேசிக்கிட்டு….” என பேச,
“வாயை மூடுங்க. அவ்வளோ தான் மரியாதை உங்களுக்கு. இதுக்கு மேல என் குடும்பத்தை பத்தி பேசினீங்க அவ்வளோ தான். வெளில போங்க…” என்றாள் விருஷ்திகா.
“ஓடிப்போனவன்னு உன்னை சொன்னா அசிங்கமா இருக்கோ. இன்னும் நீயும் உன் குடும்பமும் அசிங்கப்படத்தான் போறீங்க….” என்றவர் புகழை பார்த்து,
“ஏய், என் மகனுக்கு நீ தான உன் போன் நம்பரை குடுத்த. இன்னிக்கு….” என்று பேசியவரின் அடுத்த வார்த்தை வெளிவரவில்லை.
விருஷ்திகாவின் பிடியில் நின்றிருந்த அவளை உதறிவிட்டு அழகர் பலங்கொண்டமட்டும் மயில்வாகனனை அறைய, அரவிந்த் அந்தநேரம் சரியாக வந்து சேர்ந்துவிட இன்னும் பேசினார் அவர்.
“அழகர்…” என்றான் கோபத்துடன் அரவிந்த்.
எத்தனை இருக்கட்டும். இவ்வளவு பேர் மத்தியில் தன் தகப்பனை அடிக்க கண்டவனுக்கும் கோபம் எழ, வந்து தகப்பனை தாங்கிக்கொண்டான்.
“என்ன பன்றீங்க? அவர் வயசென்ன? இப்படி அடிக்கறீங்க?…” என்றவன்,
“ஏற்கனவே எங்கப்பாவை நீங்க அடிச்சதை தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தேன்னா அது உங்கமேல உள்ள நம்பிக்கையால. ஆனா இப்ப, இந்த நேரம்…” என கேட்க,
“இப்ப பேசுடா. இப்ப பேசு…” என்று மகன் தனக்கு ஆதரவு தந்துவிட்ட வேகத்தில் கொக்கரித்தார் மயில்வாகனன்.
“திரும்பவும் சொல்றேன்டா. ஒந்தங்கச்சியை தூக்கிட்டு போயாச்சும் எம்மவன் உன்னை, உன் குடும்பத்தை சந்தில நிறுத்தாம விடமாட்டான். அதேநேரம் அவன் அவளை கட்டிக்கிடவும் நான் விடமாட்டேன். அசிங்கப்பட்டு அழுந்தனும் நீயும் உன் குடும்பமும்…” என்று பேச அரவிந்த் அதிர்ந்து போனான்.
“அப்பா…” என்று அவன் அவரை கண்டிக்கும்முன் அழகர் பாய்ந்துவிட்டான்.
“பொறுக்கிய பெத்த பொறக்கி நாயே….” என்று அடித்து மயில்வாகனனின் உடைகளை கிழித்தெறிந்து சல்லடையாக்கிவிட்டான் அழகர்.
“அவன சங்குல மிதிடா அழகரு…” என்று சுடர்மணியும் விடவில்லை.