ஒருபுறம் விருஷ்திகா, மறுபுறம் மாணிக்கவல்லி நின்றிருக்க தில்லை தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“வான்றேன்ல…” என்றான் மீண்டும் அதட்டலாய்.
அம்மையப்பன் ஒருபுறம், அழகுமீனாள் ஒருபுறமும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் நடந்த கலவரத்தில்.
“நீ வா, உன் அண்ணன் கூப்பிடறாங்க இல்ல….” என்று விருஷ்திகா புகழை அழகரின் அருகில் அழைத்து சென்றாள்.
தயங்கி, பயந்து, நடுக்கத்துடன் அழகரின் அருகில் வந்து நின்றவளை வேதனையுடன் பார்த்தான் அரவிந்த்.
“நில்லு. நிமிர்ந்து நில்லு. புகழ் அண்ணே சொல்லுதேம்ல. நீ என்ன தப்பு பண்ணின கூனி, குறுகி நிக்க. நிமிர்ந்து பாரு….” என்று தங்கையை தலைநிமிர செய்தவன்,
“அந்தாளை பாரு…” என்றான் மயில்வாகனனை காண்பித்து.
அழகர் அடித்த அடியில் துவண்டு போயிருந்தாலும் மயில்வாகனன் வஞ்சகம் குறையாமல் பார்த்தார் அவர்களை.
“சொல்லு, நீ எந்த தப்பும் பண்ணலைன்னு….” என்று அழகர் அதட்டலாய் கூற,
“அண்ணே…” என்றாள் அழுகையுடன் புகழ்.
“எல்லாரும் கேட்டுக்கங்க. இந்த கேடுகெட்டவனோட மவன்…” என்ற அழகரின் பார்வை அரவிந்தை பார்க்க அவனின் கண்களில் மிதமிஞ்சிய வலி.
விருஷ்திகாவிற்குமே அரவிந்தின் மனநிலை தெளிவாய் புரிந்தது. அவளுமே வேதனையுடன் தன் அண்ணனை பார்த்தாள்.
“இந்தாளோட சின்ன மகன் நம்ம புகழுக்கு தொந்தரவு குடுத்திருக்கான். அது எல்லை மீறவும் நான் அடிச்சேன். இதுதான் விஷயம். இதுல புகழுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவளுக்கு அவன் செயல்ல உடன்பாடும் இல்லை….” என்றவன்,
“சித்தி, இனிமே இவளை கை நீட்டினீங்க…” என்று எச்சரித்து,
“இதுக்குமேல இந்த விஷயமா யாரும் யார்ட்டயும் பேச கூடாது….” என்றான் முடிவாய்.
அவனின் பேச்சில் என்னவோ பெரிதாய் நடந்திருக்கிறது. அதற்கு தான் இத்தனை கோபம் என்று புரிந்தது.
அழகுமீனாள் சத்தமின்றி வசைபாடிக்கொண்டே புலம்பி அழ, தில்லைக்கு மகள் மீது தவறில்லை என்று தெரிந்தாலும், பேசுபொருளாகி போனாளே என்னும் வேதனை தின்றது.
வீட்டினரிடம் கூறியவன் பார்வை அரவிந்தை கவனிக்க, அவன் இன்னும் அசையாது நின்றிருந்தான்.
“அரவிந்த், இனிமே உங்கப்பாவோ, இல்லை உங்க தம்பியோ திரும்ப இந்த வீட்டு பக்கம் பார்வையை திருப்பினா பார்க்க கண்ணிருக்காது. சத்தமில்லாம செய்கையை செஞ்சிவிட்டுருவேன். இதை சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை…” என்றும் மிரட்டல் போல கூற,
“உன்னை விடமாட்டேன்டா. விடமாட்டேன்…” என தீனமான குரலில் அப்போதும் மயில்வாகனம் சலம்பலை கூட்டினார்.
அவர்களை உறவே வேண்டாம் என்று வெளியேறும்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.
அவரை அடக்கி அமைதியாக அமரவைக்கும் முன் அத்தனை பாடாகி போனது அரவிந்திற்கு.
அவன் அசந்த நேரம் பார்த்து மயில்வாகனன் அழகரின் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட கதிர்வேலன், சாந்தாவிடம் சொல்லிவிட்டு அவரை அழைக்க வந்த இடத்தில் இத்தனை கலவரம்.
இன்னும் விஷால் என்ன செய்தான் என்றும் தெரியாமல், தகப்பனுக்கு பரிந்தும் பேசமுடியாமல், அவருக்கு பரிதாபமும் படமுடியாத தன் நிலையை அறவே வெறுத்தான்.
எல்லாவற்றிற்கும் மேல் புகழ்மதியின் தோற்றம். மனம் துடியாய் துடித்தது. வெளிப்படுத்த முடியாத உணர்வை விஷமாய் உள்ளே விழுங்கிக்கொண்டவன் அழகரை பார்த்தான்.
“உங்ககிட்ட பேசனும்…” என்று கூற, அழகருக்கு நிச்சயம் பொறுமை இல்லை.
“இல்லை அரவிந்த், கிளம்புங்க…” என்றவனுக்கு மனம் துணுக்குற்றது அரவிந்தின் பார்வை தன் தங்கையின் மீது விழும் விதத்தில்.
“பேசனும் அழகர்….” என்றவன்,
“ஒருநிமிஷம்…” என சொல்லி தான் வந்த காரில் மயில்வாகனனை ஏறி அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
“உள்ள போங்க எல்லாரும்…” என்ற அழகரை ஞானசேகரன் பார்க்க,
“எல்லாரையும் தான். பிரச்சனை முடிஞ்சது. இதை இத்தோட விட்டுடனும்…” என்றும் அவன் மீண்டும் வலியுறுத்த, யாரும் நகர்வதை போல் தெரியவில்லை.
விருஷ்திகாவை திரும்பி பார்த்த அழகர் பேச வாய் திறக்கும்முன், இறைஞ்சும் பார்வை பார்த்தாள் அவனை.
“வாங்க…” என்று சொல்லிவிட்டு அருகிருந்த ஒரு அறைக்குள் நுழைய மற்றவர்கள் எல்லாம் நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்துவிட்டனர்.
நடந்து முடிந்ததை ஜீரணிக்க முடியவில்லை. ஒருமணிநேரம் முன்பிருந்த நிம்மதி முற்றிலும் பறிபோய்விட்டதை போல் நிலைகுலைந்து போயினர்.
புகழ்மதி தாயின் அருகில் செல்லவே அஞ்சினாள். ஒருவரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை விருஷ்திகாவின் தோளில் புதைத்துக்கொள்ள அவள் தான் அவளுக்கு ஆறுதலாய் இருந்தாள்.
அழகருடன் அந்த அறைக்குள் நுழைந்த அரவிந்தின் மனதிற்குள் பெரும்பதட்டம் விஷால் என்ன செய்திருப்பனோ என்று.
மனதை திடப்படுத்திக்கொண்டு தான் அழகருடன் வந்தான். வந்தவன் பேசும்முன்,
“உங்க தம்பி என்ன செஞ்சான்னு தெரிஞ்சுக்கனும். அதுதானே?…” என்றவன்,
“இதை யாருக்குமே நான் தெரியப்படுத்த கூடாதுன்னு நினைச்சேன். ஏன் லக்ஷ்மிக்கிட்ட கூட வாய்வார்த்தையா தான் மேலோட்டமா சொன்னேனே தவிர்த்து, இதை காமிக்கலை….” என்று விஷால் அனுப்பியிருந்தவற்றை அரவிந்திடம் காண்பிக்க பார்த்ததுமே குற்றுயிராகி போனான் அரவிந்த்.
அந்த புகைப்படங்களில் இருந்த சிலவற்றை கண்கொண்டு காண முடியவில்லை.
“காட்…” என்ற அரவிந்தின் ரத்தஓட்டம் தாறுமாறாக எகிறியது.
அவனால் பார்க்கவும் முடியவில்லை. அதிலிருந்த விஷாலின் குரலை கேட்கவும் முடியவில்லை.
இத்தனை கீழ்த்தரமாக தன் தம்பி நடந்துகொண்டிருப்பான் என்று நினைக்கவே இல்லை அரவிந்த். அவமானத்தில் குறுகி போனான்.
“இப்ப சொல்லுங்க, உங்க தம்பியை நான் அடிச்சதில தப்பிருக்கா?…” என்ற அழகரின் குரலில் ஆவேசமில்லை.
குரல் தழுதழுக்க கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது. இதுவரை அழகரை அப்படி பார்த்ததில்லை.
“கொன்னு போட்டிருக்கலாம்….” என்றவன் தொண்டைக்குள் பெரும் வேதனை ஜீரணிக்க முடியாதவிதமாய்.
அதைவிட அரவிந்திற்கு தெரியவேண்டிய ஒன்று இதனை புகழ்மதி பார்த்திருக்க கூடுமோ என்பது தான்.
“இது… இதை… இந்த மெசேஜ், போட்டோஸ்…” என்றவனின் நாவண்ணம் ஒட்டிக்கொண்டு பேசமுடியாமல் தடுமாற, அவனை ஆழமாய் பார்த்தபடி அழகர் தலையசைத்தான்.
“புகழ் இதை எதையுமே பார்க்கலை…” என அரவிந்தின் உயிருக்கு உயிர் கொடுத்ததோடு நடந்த விஷயத்தையும் கூற, மொத்தமாய் ஒடிந்து போனான் அரவிந்த்.
அந்த கைப்பேசியை அழகரிடம் நீட்டியவன் தளர்ந்த நடையுடன் அறையை விட்டு வெளியேற அழகரும் பின் தொடர்ந்தான்.
குடும்பத்தினர் அனைவரும் நடுக்கூடத்தில் தான் அமர்ந்திருந்தனர் இன்னும்.
அரவிந்த் அவர்களை தாண்டிக்கொண்டு வாசல்ப்பக்கம் வந்து நின்றவன் மீண்டும் திரும்பி புகழ்மதியை பார்த்தான்.
அவள் நிமிரவே இல்லை. அவனொருவன் இருப்பதை உணர்ந்தும் கவனமாய் தவிர்க்க, மீண்டும் மனதில் கனம் கூடியது அரவிந்திற்கு.
“பார்த்துக்கோங்க…” என்று பொதுவாய் சொல்லி புகழ்மதியை பார்த்துவிட்டு அழகரை பார்த்தவன் அதற்குமேல் நில்லாமல் கிளம்பிவிட்டான் அந்த வீட்டிலிருந்து.
இத்துடன் இந்த பிரச்சனை முடிந்துவிடவேண்டும் என்று மனதோரம் வலியுடன் அரவிந்த் நினைத்திருக்க, மீண்டும் அழகரின் கையில் மயில்வாகனன் சின்னாபின்னமாக போவதை அவன் உணரவில்லை.
அரவிந்தின் ஓய்ந்த தோற்றம், அவனின் பார்வையும், அதில் தெரிந்த பரிதவிப்பும் அழகரின் மனதில் அழுத்தமாய் பதிந்தது.