விருஷ்திகா மனதில் பெரிதாய் காயமொன்று உருவெடுத்திருக்க உணர்வுகள் மருக பார்த்து நின்றாள்.
“நா, நானா போன் நம்பர தரல்லப்பா. நெசமா…” அவர்கள் தன்னை நம்பவேண்டுமே என்னும் பரிதவிப்பு அவளின் விழிகளில்.
“தெரியும்த்தா. எங்கம்மால தெரியாதா சாமி…” என்றவருக்கு மகளின் வேதனையை காண பொறுக்கவில்லை.
“இனிமே அவேன பத்தின நெனப்பே கூடாதுய்யா. அப்பா சொல்லுதேம்ல. ஒறங்குவோம். பாரு எல்லாரும் முழிச்சு கெடக்காங்க…” என்றதும் அனைவரையும் காண அவர்களும் புகழ்மதியை தான் பார்த்திருந்தனர்.
“இங்க உன்னை யாரும் எதுவும் நினைக்கலை புகழ். போய் தூங்குடா கண்ணு…” என்றார் ஞானசேகரனும்.
எப்போதும் வளவளவென்று பேசும் அழகுமீனாளும் வார்த்தையின்றி அழுதபடி இருக்க,
அதற்குமேல் அங்கே இருந்து இன்னும் அதனை நினைத்து வருந்தவேண்டாம் என்று அவரவர் அறைக்கு கிளம்ப அழகரும் அவர்கள் செல்லும் வரை பார்த்து நின்றான்.
வல்லியை புகழுடன் உறங்க சொல்லும்படி கூறலாம் என நினைத்திருக்க, சுடர்மணி தங்களுடன் அழைத்துக்கொண்டார்.
“நா பாத்துக்கிடுதேன் அழகரு. அவ எங்கண் பார்வையில இருக்கட்டும்….” என்று சொல்லி சென்றதும் தான இன்னும் நிம்மதியானது.
அனைவருமே எங்கே புகழ்மதி ஒடுங்கிவிடுவாளோ என்ற அச்சத்தில் தான் இருந்தனர்.
அவர்கள் உறங்க செல்லும் முன்பே அழகர் இன்னொரு விஷயத்தையும் தெளிவாய் கூறிவிட்டான்.
“இன்னைக்கு நடந்த பிரச்சனை நம்மோட. இதை அக்காக்களுக்கு யாரும் எப்பவும் சொல்ல கூடாது. ஞாபகம் வச்சுக்கோங்க…” என்றவன்,
“அப்பத்தா…” என்று அழைக்கவும் கண்ணீருடன் தலையசைத்தவரை பார்த்தவனின் மனதும் வலித்தது.
“ஒண்ணுமில்லத்தா. நீ பேச்சுவாக்குல சொல்லிட போறியோன்னு சொன்னேம். நம்ம வீட்டு பொண்ணா இருந்தாலும் வேணாம். வெளங்குச்சா? எதையும் நெனையாம போய் படு…” என்று அனுப்பிவைத்தான்.
அனைவரும் அவரவர அறைக்குள் செல்லவும் அழகர், விருஷ்திகா மட்டும் தனித்திருந்தனர்.
“லக்ஷ்மி…” என்றவனின் முதல் அழைப்பில் அவள் உணர்வு பெறவில்லை.