தனக்கு பின் தன் பிள்ளைகளையுமே தொடருமே. ‘இவங்கம்மா யாருன்னு தெரியுமா? அவங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு தெரியுமா?’ என்பதுமாதிரியான சுட்டிக்காட்டல்கள்.
எரியும் மனம் இன்னும் தணிந்தபாடில்லை. அவசரங்களில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகி போகும் அவலம்.
எதற்கு ஆரம்பித்ததோ, ஆனால் அனைத்திற்கும் காரணியாய் தான் மட்டுமே அங்கே தனித்து காட்டப்படும் துயரம்.
யாரிடம் சொல்ல முடியும் நானே எதிர்பார்க்கவில்லை தன் திருமணத்தை என்று என எண்ணுகையில் தொண்டை அடைத்தது.
எதிர்பார்த்து காத்திருந்த வாழ்வினை வாழ முடியாமல் அவள் படும்பாடு சொல்லில் மாளாததாய் இருந்தது.
தன்னை பேசியது தன்னுடன் போகாமல், இப்போது தன் வீட்டு பெண்ணையே தன்னை காண்பித்து பேசுகின்றனரே என மனம் ஆறாமல் சுருண்டுவிட்டாள் விருஷ்திகா.
யாரின் மீதும் கோபம் கொள்ள முடியவில்லை. கோபப்பட்டு என்ன செய்வது?
உண்மைக்கும் இந்த நிமிடம் அழகர் கூறுவதை போல நடந்து முடிந்ததை எண்ணி கவலைகொண்டு வாழமுடியாது என கடந்துவிட நினைத்தாலும், அதன் கடினம் அவளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.
அப்படி கடந்து வருவது அதனை சுலபமாகவும் தெரியவில்லை. குடும்பத்தின் நிம்மதி முற்றிலும் தொலைந்துபோனது.
உறக்கமின்றி விழிகளுமே எரிய, உறங்கமுடியாமல் மனம் தவித்திருக்க மெல்ல திரும்பினாள் அவள்.
அழகர் இன்னும் வந்து படுக்கவும் இல்லை. அறைக்குள் இங்குமங்குமாய் நடந்துகொண்டே இருந்தான்.
என்றைக்கும் இல்லாத கவலை அவன் முகத்தில் அப்பிக்கிடந்தது. அது புகழ்மதியை மட்டும் என்பதில்லை என விருஷ்திகா கண்டுகொண்டாள்.
எச்சிலை விழுங்கி தன் துயரம் விழுங்கியவள் அவனை பார்த்தவாறு திரும்பி படுத்துக்கொள்ள அழகரும் அவளின் அசைவில் திரும்பி பார்த்தான்.
மீண்டும் இங்குமங்குமாய் ஒரு நடைபயணம். விழிகள் மட்டும் மனைவியின் முகத்தில் பதிந்திருக்க, அவனுக்கு இணையாய் விருஷ்திகாவும் கணவனை தான் பார்த்திருந்தாள்.
நேரம் செல்ல செல்ல இறுக்கங்கள் குறைந்து மெலிதாய் இதழோரம் புன்னகை நெளிய துவங்கியது.
அவள் அழைக்காமல் அவன் நெருங்கவில்லை. என்னவோ மனது கிடந்து அடித்துக்கொண்டது.
‘அநியாயம் பண்ணிட்டடா. தப்பு அழகர்’ என அவன் மனதின் கூச்சல் மட்டும் குறையவே இல்லை.
முடிந்ததை நினையாதவனின் நினைவினில் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு மட்டுமே.
கோபத்தில் எடுத்த அந்த முடிவில் தெளிவாய் உறுதியாய் இருந்திருந்தும் கூட அப்படி செய்திருக்க கூடாதென முதன்முதலாய் தன் செயலின் மீதான ஒரு அபிமானம் மாற்றம் பெற்றது.
அவளின் வாடிய முகமும், வருந்தும் விழிகளும் மனதை பிசைய மௌனமாய் பார்த்திருந்தான் அழகர்.
நிச்சயம் இந்த திருமணத்தினை எப்படியாவது அவனால நடத்தியிருக்க முடியும். ஆனால் யார் மீது கோபம் கொண்டு, யார் வருந்துவது?
மனதெல்லாம் செல்லாய் அரித்தது அவனின் செய்கை. செய்ததோடு எத்தனை பேச்சுக்கள்?
அத்தனையும் தாங்கிக்கொண்டது அவன்பால் இருக்கும் நேசத்தினால் மட்டும் தானே?
லேசாய் இதழோரம் புன்னகை மிளிர நடந்துகொண்டிருந்தவன் அப்படியே நின்று அவளை பார்த்தான்.