“ஏன் உன் மருமவன் தங்கச்சி என்ன உலக அழகியா? அவக்கிட்ட இவன் என்னவோ புடிச்சிருக்குன்னு சொல்லிருக்கான். அது ஒரு குத்தமா? என்னமோ இவன் பண்ணாததையா என் மகன் பண்ணிட்டான்? காட்டான். காட்டான்….” என்றதோடு,
“அவன்லாம் என் மகன் கால் தூசிக்கு வருவானா? அவனும் அவன் தங்கச்சியும்? ஏன் இவனும் தான உம்மகளை இழுத்துட்டு போய் ரோட்டுல வச்சு தாலி கட்டினான். எம்புள்ளை அப்படியா?…” என கேட்க கதிர்வேலன் அதிர்ந்துபோய் பார்த்தார்.
விஷாலுக்கு புகழை பிடித்ததா என்றதோடு, இதற்காகவா இப்படி விஷாலை படுக்க வைத்துவிட்டான் என அழகர் மேலும் அதிருப்தி.
அந்த அதிருப்தியே மயில்வாகனன் தன் மகளையும், மருமகனையும் குறைத்து, கீழிறக்கி பேசியதை ஆட்சேபிக்கவிடவில்லை.
ஆனால் சாந்தாவுக்கு அப்படி அல்ல. சுத்தமாய் மயில்வாகனத்தின் இந்த பேச்சில் பிடித்தமில்லை.
கதிர்வேலனை தான் இறைஞ்சுதலாய் பார்த்தார் அவர். அவரால் எதிர்த்தும் பேச முடியவில்லை.
“முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியாம குதிக்காதீங்கப்பா. விஷாலும் என்ன நடந்ததுன்னு சொல்லலை. அவரும் சொல்லலை. ஆனா விஷயம் புகழ்மதி சம்பந்தப்பட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க…” என்றிருந்தான் அரவிந்த் மயில்வாகனனிடம்.
“எப்படி பொறுமையா இருக்க? என் மகன் அங்க குத்துயிரா கிடக்கானே? உனக்கென்னப்பா என்னவேணா பேசுவ. உன்கிட்ட பேசமுடியுமா?…” என்ற மயில்வாகனன்,
“நீங்க யாரும் வேண்டாம். என் மகனை நானே பார்த்துக்கறேன். உங்க உறவே வேண்டாம். வெளில போங்க எல்லாரும்…” என்று சொல்லியவர்,
“உன்னை ஆளாக்கினதுக்கு எனக்கு நல்ல கைம்மாறு செஞ்சுட்டடா கதிரு. போதும், என் புள்ளை உசிரையும் எடுத்திடாத. இதோ ஒருத்தனை உனக்கு நேந்துவிட்டதே போதும். கூட்டிட்டு கிளம்பு. இனி என் கண்ணுலையே படக்கூடாது நீங்க…” என்று கத்தியவர் விஷாலின் அறையின் முன் அமர்ந்துகொண்டார்.
ஆனாலும் வாய் ஓயாமல் பேச்சுக்கள் குறையவில்லை. அவ்வளவு வார்த்தைகள். கதிர்வேலன் அத்தனைக்கும் பொறுமையாய் இருந்தார்.
ஆனாலும் கதிர்வேலன் தன் அண்ணனுக்காக தான் நின்றாரே தவிர்த்து, அழகரின் மேல் துளி நம்பிக்கை இல்லை.
“என்னவோ பெருசா இருக்கும் போலங்க. அதான் மாப்பிள்ளை இப்படி கோபமா…”
“வாயை மூடு தேவி. மாட்டை அடிக்கிற மாதிரி எப்படி கையை, காலை உடைச்சு படுக்க வச்சிருக்கார். இதுல நீ சப்போர்ட் வேறையா? என் பொண்ணை கல்யாணம் பண்ணும்போது மட்டும் காதல் பிடிச்சது. இதுவே அவங்க வீட்டு பொண்ணுன்னதும் பார்த்த தான்?…” என்றவர்,
“நீ இதுவிஷயமா பேசாத சொல்லிட்டேன். ஏன் பெரியவங்க நாம இல்லை. விஷால் செஞ்சது பிடிக்கலைன்னா வீட்டு பெரியவங்ககிட்ட இல்ல சொல்லியிருக்கனும். எல்லா முடிவையும் இவரே எடுப்பாரா? எல்லாரும் பொறுத்து போனுமா என்ன? என் அண்ணன் பேசினதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை…”
“அப்படி என்ன கண்ணுமண்ணு தெரியாத கோபம் ஒரு மனுஷனுக்கு? அவன் உடம்பை பார்த்த தான? வாய்ல ஒரு பல்லு இல்லை. உதடெல்லாம் கிழிஞ்சு போய்…” என கண்கள் கலங்கி போய் பேசினார் கதிர்வேலன்.
“அதுக்கில்லைங்க, அதுக்காக மரியாதை இல்லாம, நம்ம பொண்ணையும் சேர்த்தே…” என்று சாந்தா என்ன கூற வருகிறார் என்றே கேட்க தயாரில்லை கதிர்வேலன்.
“தேவி அமைதியா இருக்கறதுன்னா இரு. இல்லையா கிளம்பி போய்ட்டே இரு. நீ இங்க இருந்து பார்க்கனும்ன்னு இல்லை. என் அண்ணனையும், அண்ணன் மகனையும் நான் பார்த்துக்கறேன்….” என்றவர்,
“அவர் கோபத்துல கூட இப்படி பேசுவார். உனக்கு தெரியாதா நம்மளை விட விருஷ்தியை அவர் எப்படி பாசமா பார்த்தார்ன்னு. அந்த ஆதங்கம், அதோட அவளோட புருஷனே இப்படி பண்ணினா…” என்றவருக்கும் மனம் ஆறவில்லை.
“விஷால் சின்னப்பையன். அவனும் விவரம் புரியாம ஆசைப்பட்டு என்னவோ தெரியாம பண்ணிட்டான். மிஞ்சி மிஞ்சி போனா என்ன செஞ்சிருப்பான்? பிடிச்சிருக்குன்னு சொல்லியிருப்பான். இதுக்கே கையை காலை உடைச்சா, உன் மருமகன் பண்ணினதுக்கு நாம என்ன செய்யலாம்? சொல்லு…” என்றார் ஆவேசத்துடன்.
சாந்தாதேவி மௌனமாய் பார்க்க மட்டுமே முடிந்தது. இப்போது என்ன கூறினாலும் அவரின் புத்திக்கு உரைக்கப்போவதில்லை என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.
ஆனாலும் அரவிந்தும் இப்படித்தான் நினைக்கிறானோ என்றொரு பயம். அவனிடம் கேட்டதற்கு சரியான பதிலில்லை.
“விஷால் எழுந்துக்கட்டும் பார்த்துப்போம்…” அவ்வளவே தான் அவன் கூறியது.
இரவெல்லாம் மயில்வாகனன் தாம்தூம் என்று குதித்துக்கொண்டே தான் இருந்தார் மகனிடத்திலும்.
கதிர்வேலன், சாந்தாவை அப்போதே கிளம்ப சொல்லியும் அவர்கள் இருக்க இருக்க இன்னுமே இளக்காரம் கூறியது மயில்வாகனனுக்கு.
சற்றே அசந்தநேரத்தில் அவர் அழகரின் வீடு தேடி செல்வார் என்று தெரியாமல் அல்லாடிவிட,
“நீங்க இங்கயே இருங்க சித்தப்பா. பார்த்துக்கோங்க சித்தி. நான் போய் கூட்டிட்டு வர்றேன்….” என்று அரவிந்த் தான் அடித்துபிடித்து கிளம்பி சென்றான்.
ஆனால் அங்கே சென்று வந்ததில் இருந்து இப்போதுவரை அரவிந்திடம் அசாத்திய மௌனம். மௌனம் என்பதை விட முகமே செத்துவிட்டிருந்தது.
கண்களை மூடினால் கூட விஷால் புகழ்மதிக்கு அனுப்பியிருந்த புகைப்படங்கள் தான் தெரிந்தது.
அதற்கே கண் கொட்டாமல் கூட அவன் உயிரற்ற நிலை போல் சிலையாகி இருந்தான்.
மயில்வாகனனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட, கதிர்வேலன் என்ன நடந்ததென கேட்டும் எதுவும் சொல்லவில்லை அரவிந்த்.
“ஏன் அடிச்சான்னு கேட்க போனா இப்படியா வயசை கூட பார்க்காம அடிச்சு அனுப்புவாங்க. இப்பத்தான் எனக்கு பயமா இருக்கு. நாளைக்கு என் பொண்ணும் இப்படி ஒரு சூழலுக்கு ஆளாகிட்டா?…” என்று சாந்தாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.