மயில்வாகனன் மயக்கம் தெளிந்த பின்னர் அவரை சென்று பார்க்க ஓவென்று ஒப்பாரி வைக்காத குறையாக அத்தனை கண்ணீர்.
“நான் அனாதையா நிக்கிறேனே. என் புள்ளைய, என்னை யார் பாத்துப்பா? என் நிலைமை இப்படி ஆகிடுச்சே…” என்று கதிர்வேலனை பார்க்காமல் வஞ்சகத்துடன் நீலிக்கண்ணீர் வடிக்க தாங்கவில்லை கதிர்வேலனுக்கு.
“நான் இருக்கேண்ணே. நாங்க இருக்கோம். நீங்க என்ன தான் எங்களை விலகி போக சொன்னாலும் அப்படியெல்லாம் உங்களை விட்டுட்டு போயிடமாட்டோம்…” என மயில்வாகனன் கையை பிடித்துக்கொண்டார் கதிர்வேலன்.
“சொல்லு தேவி…” என்று மனைவியையும் தன்னோட இழுக்க,
“ஆமா, பார்த்துக்கறோம்…” என்றார் சாந்தா.
“அவன் நல்லா இருப்பானா? என் மேல, என் புள்ளை மேல கையை வச்சவன் கை வெளங்காம போகும். பார்த்துட்டே இரு…” என்று கதிர்வேலனை ஆழம் பார்க்க,
“அண்ணே இதென்ன பெரிய வார்த்தை. பொறுத்தார் பூமி ஆள்வார். அமைதியா இருங்க. அவங்கவங்க செய்யறதுக்கான பலனை அனுபவிப்பாங்க…” என்று தன்மையாய் கூற, சாந்தாவிற்கு தான் உள்ளம் பதறியது.
அரவிந்த் அவரை பார்க்க கூட உள்ளே வரவில்லை. அவரை மட்டுமல்ல விஷாலையும் அவன் பார்க்கவில்லை.
மனமெல்லாம் இறுகி கிடந்ததே இருவரின் செயல்களின் விளைவில். மருத்துவரிடம் மட்டும் என்ன ஏதென்று விசாரித்துக்கொண்டான். அதுவும் கடமைக்கு.
தந்தையும், தம்பியும் இப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
அவன் செய்த ஈனத்தனத்திற்கு மயில்வாகனன் பரிந்து வந்ததோடு, அழகரின் வீட்டில் வைத்து பேசிய பேச்சுக்கள் ஜீரணிக்கும்படி இல்லை.
“போய் பார்த்துட்டு வா அரவிந்த்…” என சாந்தா கூற,
“பார்த்துக்கறேன் சித்தி…” என்றுவிட்டான்.
“அவனால பார்க்க முடியுமா? எவ்வளோ சங்கடம் இருந்தா பார்க்காம இருப்பான்…” என்று கதிர்வேலன் அதையும் நல்லவிதமாகவே தான் எடுத்துக்கொண்டார்.
விடிய விடிய இத்தனை பேச்சுக்களும் நடந்திருக்க காலை பத்துமணிக்கு மேல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அழகர்.
வீட்டில் இருப்பவர்கள் ஒருவரும் இதனை பற்றி கதிர்வேலன், சாந்தாவிடம் கூட கேட்டுக்கொள்ள கூடாது என்று சொல்லிவிட்டான்.
சொல்லியவன் பார்வை விருஷ்திகாவையும் குறிப்புடன் பார்க்க, அவன் கூறாமலே புரிந்தது அவளுக்கு.
ஹோட்டலுக்கு சென்றுவிட்டு மருத்துவர்களின் அழைப்பின் பெயரில் தான் அங்கே வேறு வழியின்றி அவன் வந்ததும் கூட.
அவன் வருகையை அங்கே யாருமே எதிர்பார்க்கவில்லை. அரவிந்த் துளியும் நினைக்கவில்லை அழகர் வருவான் என்று.
“இதுவே வேற யாரோவா இருந்தா நாங்களே கம்ப்ளைண்ட் குடுத்திருப்போம். இது அம்மையப்பன் ஸார் பேமிலி. அதனால தான் கேட்கிறோம்….” என்றும் கூற, அவர்கள் மூவரும் அழகரை தான் பார்த்தனர்.
“ஹ்ம்ம், கேட்கிறாங்க இல்ல. சொல்லுங்க. கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்…” என்று தெனாவெட்டாக நின்ற மருமகனை கோபமாய் பார்த்தார் கதிர்வேலன்.
“டாக்டர்…” என்று அவர் பேச துவங்க,
“சித்தப்பா ப்ளீஸ். நான் பேசிக்கறேன்…” என்று முன்வந்தான் அரவிந்த்.
“நான் முதல்லையே சொன்னது தான். இது ஆக்ஸிடென்ட் தான். உங்களுக்கு கஷ்டம்ன்னா சொல்லுங்க நாங்க சென்னைக்கு மாத்திடறோம்….” என்று இறுக்கத்துடன் அரவிந்த் கூற, டாக்டர்ஸ் வேடிக்கை பார்த்தனர்.
“என்ன அழகர்?…” என்று அவனிடம் கேட்க,
“பாதிக்கப்பட்டவங்க தானே கம்ப்ளைண்ட் பண்ணமுடியும்? நான் என்ன செய்யமுடியும் இதுல?…” என்றதும்,
“பிரச்சனை யாராலன்னு தெரிஞ்சா சரிபண்ண பார்க்கலாமே. இங்க அழகருக்கு தெரியாதவங்கன்னு யாரும் இல்லை. அவர் சால்வ் பண்ணிடுவார். முதல்லையே என்னன்னு பார்த்து பெருசாகாம முடிச்சு விடுங்க…” என மருத்துவர் கூற,
“இனிமே பிரச்சனை வர வாய்ப்பில்லைன்னு நினைக்கறேன் டாக்டர். இல்லைன்னா நாமளும் இறங்கி முடிக்க வேண்டியது தான். அதை நான் அரவிந்த்ட்ட பேசிக்கறேன்…” என்று தோளை குலுக்கிக்கொண்ட அழகர் பெரிதாய் அலட்டிக்கொள்ளவே இல்லை.
அதுவே கதிர்வேலனுக்கு ஆத்திரமான ஆத்திரம் செய்வதையும் செய்துவிட்டு எத்தனை ஆணவம் என்று பார்த்தார் தன் மருமகனை.
இப்படி எல்லாம் அழகரை நினைத்ததே இல்லை. மகளின் திருமணம் நடந்தேறி ஒருமாதம் கூட நிறைவேறாத இந்த சிலநாட்களுக்குள் என்னவெல்லாம் நடந்தேறிவிட்டது என நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
அரவிந்திற்கு தான் மனதோரம் சுருக்கென்ற வலி பெரிதாகிக்கொண்டே இருந்தது அழகரை காணுகையில்.
“நீங்க பேசுங்க….” என்ற மருத்துவர்,
“மிஸ்டர் அரவிந்த், நீங்க என்னவோ சாதாரணமா நினைக்கறீங்க. கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. அழகர் பார்த்துப்பார். அவர் இருக்கும்போது யாருக்காக இந்த யோசனை?…” என்று மருத்துவர்களும் தைரியம் கூறி,
“விஷால் கிட்ட பேச முடியாது. மயில்வாகனன் கிட்ட பேசுங்க…” என்றார்.
அரவிந்த் செய்வதறியாது நிற்க, கதிர்வேலனுக்கு பொடுபொடுவென்று வந்தது இதனை கண்டு.
“ஓகே, நாங்க பேசிட்டு வர்றோம். நானே வந்து உங்களை பார்க்கறேன்…” என்று மருத்துவர்களை அனுப்பி வைத்தான் அழகர்.
அவர்கள் செல்லவுமே அரவிந்த் அழகரை என்ன இதெல்லாம் என்று ஆற்றாமையுடன் பார்த்தான்.
“எனக்கும் இங்க வரனும்ன்னு எந்த விருப்பமும் இல்லை. ஆனா வேற வழி இல்லை. டாக்டர் கால் பண்ணி வாங்கன்னு சொன்னாங்க….” என்று அரவிந்தை பார்த்து கூறியவன்,
“இப்பவும் ஒன்னும் இல்லை. தாராளமா கம்ப்ளைண்ட் குடுக்கலாம். நான் யார் கையையும் பிடிக்கமாட்டேன்…” என்றான் அவனிடம்.
“கைன்னு ஒருந்தா தானே பிடிக்க? மனுஷத்தன்மையோட கொஞ்சமாவது நடந்துக்கனும். இப்படியா இரக்கம் இல்லாம?…” என்று வாய்கொள்ளாமல் கதிர்வேலன் கூறிவிட்டார்.
ஆனால் அழகரை காணாமல், அவன் முகம் பாராமல் அரவிந்தை பார்த்தபடி அதிக கோபத்துடன்.
“மனுஷங்களுக்கு தான் இரக்கம் எல்லாம் பார்ப்பேன்னு சொல்லுங்க அரவிந்த். உள்ள கிடக்கற ரெண்டு ஜென்மமும் மனுஷங்களா?…” என்று இகழ்ச்சியாய் கூறினான் அழகரும்.
“எங்கண்ணன் வயசென்ன? விஷால் சின்ன பையன். என்ன பண்ணிட்டான்? அவன் ஏதோ பிடிச்சிருக்குன்னு பேசியிருக்கான். முதல்ல நாம சரியா இருந்துட்டு மத்தவங்களை குத்தம் சொல்லனும். என் பொண்ணை இப்படி கல்யாணம் செஞ்சவர் எல்லாம் இதுல நியாயம் பேச கூடாது….” என்றதுமே சுள்ளென்று வந்தது அழகருக்கு.
வழக்கம் போல நரம்புகள் புடைக்க கோபத்தில் வார்த்தைகள் வந்துவிட்டது. முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன் வெளிவர துடித்த ஆவேச பேச்சை அடக்கிக்கொண்டான்.
“லக்ஷ்மி…” என்று பற்களை கடித்து மனைவியின் நாமம் உச்சரித்தவன் கைகள் இறுக, அதனை பார்த்த அரவிந்திற்கு இன்னும் கலவரமாகியது.
“சித்தப்பா என்ன பேசறீங்க?…” என்றான் அரவிந்த்.
“ம்ம்ம், இப்ப கேளு. என்ன பேசறீங்கன்னு. யார்க்கிட்ட கேள்வி கேட்கனுமோ அங்க கேட்டுடாத…” என்ற கதிர்வேலன்,
“எதுக்குடா பயப்படற? உன் தங்கச்சிக்கா? முதல்ல உன்னை பெத்தவருக்கும், கூட பிறந்தவனுக்கும் உருத்தா இருடா….” என்றார் இன்னும் கோபமாய் அவனிடம்.