நேரடியாக கதிர்வேலனிடம் அழகர் பேசிவிட கதிர்வேலன் இதனை எதிர்பாராது திகைத்து போனார்.
“ஆமா, தாலி கட்டினேன். லக்ஷ்மி எனக்குன்னு பேசினவ தானே? ஏன் மறந்து போச்சா?…” என்று கேட்க, இன்னும் வாயடைத்து நின்றவர்,
“அதை நாங்க ஒன்னும் மறக்கலை. நீங்க தான்…” என்று பேசும்முன் அவரை கை நீட்டி நிறுத்தியவன்,
“ப்ச், உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. முடிஞ்சா உங்க அண்ணனுக்கு புத்தி சொல்ல பாருங்க. இல்லைன்னா மொட்டையும், பட்டை நாமமும் தான்…” என்றதோடு அரவிந்தை பார்த்தான்.
“உன் ஒருத்தனுக்காக மட்டும் தான் வந்தேன். ஒரு மனுஷன் இங்க இருக்கான்னு மட்டும். மத்த யாருக்கும் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை….” என்றவன்,
“சொல்லவும் முடியாது. என்ன செய்யனுமோ செஞ்சுக்கட்டும்…” என கூறி கதிர்வேலனை பார்த்தான்.
“அப்படி இங்க யாரும் யாரையும் தேடலை. போதும். யார் யார் எப்படின்னு எனக்கு இந்த கொஞ்சநாள்ல எல்லாம் புரிய வந்திருச்சு. கிளம்ப சொல்லு அரவிந்த்…” என்றார் கதிர்வேலன்.
“முடியாது, இதென்ன உங்கப்பா வீட்டு ஹாஸ்பிட்டலா?…” என்ற அழகரை கதிர்வேலன் தீயாய் முறைக்க கண்டு,
“அப்படின்னு நானும் கேட்பேன் அரவிந்த். என்கிட்ட எப்படி பேசறாங்களோ அப்படித்தான் என்னோட பேச்சும் இருக்கும்…” என்றவன் அரவிந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அந்த வளாகத்தை தாண்டி கீழ் தளத்திற்கு படிகளில் அழகர் வேகமாய் இறங்க, அவன் எதிர்பார்த்ததை போல அரவிந்தும் அவனின் பின் வந்தான்.
திரும்பாமலே அழகர் படிக்கட்டின் கடைசி படியில் நின்றுவிடவும் அரவிந்த் அவன் முன் வந்து நிற்க, பேரமைதியுடன் அழகரின் பார்வை.
அதிலிருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை அரவிந்திற்கு. தன் மீதும் கோபமா என்றும் தெரியவில்லை.
ஆனாலும் தன் ஒருவனுக்காக என்று அழகர் பேசியதில் மனதின் வலி கூடத்தான் செய்தது.
“புகழ்…” என அரவிந்த் கேட்க,
“ஹ்ம்ம், பெட்டர்…” என்றான் அழகர்.
அவன் கூறியதுமே அரவிந்தின் கண்களில் வலியும், நிம்மதியும் ஒருசேர தோன்றியதை அழகரால் கவனிக்க முடிந்தது.
“ஹ்ம்ம், குட். பார்த்துக்கோங்க…”
“கண்டிப்பா. என் தங்கச்சியாச்சே. பார்த்துப்பேன். வேற?…” என்றான் அழகர் கத்தரிப்பதை போல்.
“இல்ல, இன்னொரு விஷயம்…” என்ற அரவிந்த் சற்று தயக்கத்துடன்,
“உங்க கல்யாணம் முடிஞ்சப்போ விருஷ்திக்கிட்ட மொபைல் இல்லை. அவளை காண்டேக்ட் பண்ண புகழ் நம்பருக்கு தான் பேசினேன்…”
“ஓஹ்…” என்றான் அழகர் தன் பேண்ட் பாக்கெட்டினுள் இரு கைகளையும் நுழைத்து சுவற்றில் சாய்ந்தபடி.
“ஒரு நிமிஷம்…” என்றவன் தனது கைப்பேசியை எடுத்து புகழ் என்று பதிந்து வைத்திருந்த பெயரையும், எண்ணையும் காண்பித்தவன்,
“நம்பரை ப்ளாக் பண்ணிட்டேன்…” என்றான் மனம் வலிக்க.
அழகர் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. அவனை பார்த்தது, பார்த்தபடி தான் நின்றான்.
“புகழ் மொபைல்ல என் நம்பரும் இருக்கும். ரிமூவ் பண்ணிடுங்க….” என்ற பொழுதே அவனின் குரல் கரகரத்தது.
அழகரின் விழிகளுடன் புருவங்களும் லேசாய் சுருங்கி விரிய, அந்த நொடிநேர பார்வையை கூட அரவிந்தால் கவனிக்க முடியவில்லை.
“ஓகே, நல்லவிஷயம்…” என்ற அழகர்,
“ஊருக்கு கிளம்பும்போது முடிஞ்சா சொல்லுங்க….” என சொல்லிக்கொண்டிருக்க, அவர்களை தேடி சாந்தாவும் வந்துவிட்டார்.
“மாப்பிள்ளை…” என்று அவர் அழைக்கவும் அழகர் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்,
“இவங்களுக்கும் சொல்ல எதுவும் மிச்சம் இருக்காமா அரவிந்த்?…” என்றான் எள்ளல் குரலில்.
“இல்லை, அவர் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஆனா நீங்க செஞ்சதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்ன்னு நான் நம்பறேன்…” என்றார் சாந்தா.
“ஓஹ், இந்த நம்பிக்கை லக்ஷ்மியை நான் கல்யாணம் பண்ணின விஷயத்துலையும், விதத்துலையும் கூட இருக்கா என்ன?…” என்று கேட்க சாந்தாவிற்கு எதுவும் புரியவில்லை.
“கிளம்பறேன் அரவிந்த்…” என்று சொல்லியவன் விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
அவனின் நடையிலேயே அவன் கோபம் தெரிய சாந்தா இன்னும் மிரண்டு போய் தான் பார்த்திருந்தார்.
“என்ன அரவிந்த்? நான் என்ன சொல்றேன். இவர் என்னன்னா?…”
“சித்தி விடுங்க. இப்ப நீங்க ஏன் வந்தீங்க? சித்தப்பா ஏன் இப்படி பேசறாங்க?…” என்றான்.
“அவருக்கு விஷாலும், உன் அப்பாவும் படற கஷ்டம் பார்த்து வருத்தம்…” என்று கூற பேசியபடியே மேலே வந்துவிட்டனர்.
“நாம கண்ணால பார்க்கிறவங்க படற கஷ்டம் மட்டும் தான் நமக்கு தெரியும். அதுக்காக பிரச்சனையோட இன்னொரு பக்கத்துல கஷ்டமே இல்லைன்னு சொல்ல முடியாது சித்தி…” என்றவன் கதிர்வேலனை பார்த்து,
“இனிமே அவர்க்கிட்ட இப்படி பேசாதீங்க சித்தப்பா. ஒண்ணே ஒண்ணு தான் சொல்லுவேன். என்னன்னு விளக்கம் எல்லாம் கேட்காதீங்க. இப்ப உள்ள படுத்திருக்கிற ரெண்டுபேரும் அவங்க செஞ்சதுக்கான பலனை தான் அனுபவிக்கிறாங்க. தப்பு அழகர் பக்கம் இல்லை…” என்று சொல்லி மீண்டும் தனியே சென்று அமர்ந்துவிட்டான்.
“என்ன?…” என கதிர்வேலன் அதிர்ந்து பார்க்க,
“என்னன்னு தெரியலை. தெரியாத விஷயத்துக்கு பஞ்சாயத்து பண்ணாதீங்க. முதல்ல அவங்க ரெண்டுபேரும் எழுந்து வரட்டும்…” என்றார் சாந்தா.
“அதுக்காக, இப்படி தான் சாவடி அடிக்கிறதா? தப்பு இருந்தா மனுஷனுக்கு ஒரு பொறுமை வேண்டாம். உன் மருமகனால விஷால் உயிர் போயிருந்தா என் பொண்ணு வாழ்க்கை…” என ஒருபுறம் மகளின் எதிர்காலம் குறித்து பரிதவித்தார்.
“எப்படி தேவி என் பொண்ணு அழகரை சமாளிக்கிறா? பார்த்த தான. எவ்வளோ கோவம். நான் சொல்லவும் அந்த ஒருநிமிஷம் என்ன ஒரு ஆவேசத்தோட பார்த்தாருன்னு…” எனும்பொழுதே அத்தனை நடுக்கம்.
“இத்தனை ஆக்ரோஷமா ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்லை. அதுவும் அழகரை. இந்த மனுஷனுக்கா பொண்ணை குடுக்க தவியா தவிச்சேன்? இப்ப என் பொண்ணுமில்ல அவர்க்கிட்ட சிக்கிட்டு படாதபாடு படுவா…” என்று மகளின் எதிர்காலம் குறித்து அவர் புலம்ப துவங்கினார்.
கதிர்வேலனுக்கு நேர் எதிராக அழகரும் தன் காருக்குள் அமர்ந்து பல்லை கடித்தபடி புலம்பினான் விருஷ்திகாவிடம்.
“உன்கிட்ட சிக்கிட்டு நான் படாத பாடு படறேன்டி சூனியபொம்மை. உன்னால சட்டுன்னு கோபத்தை கூட காட்ட முடியலை. பேச ஆரம்பிக்க முன்ன சட்டுன்னு உன் பேர் தான் வாய்ல வருது. எங்கையோ இருந்துட்டு என்னை கன்ட்ரோல் பன்ற நீ….” என்று எல்லாம் கூறி கோபமும், தவிப்புமாய் அவளிடம் முறையிட,
“இதை சொல்லத்தான் வீடியோ கால் பண்ணுனீங்களா நீங்க?…” என முறைத்தவள் இதழோரம் ஆர்ப்பரிக்கும் புன்னகை அமர்த்தலாக.
“சிரிப்படி, ஏன் சிரிக்கமாட்ட? என்னை உன் விரலசைவுக்கு கொண்டுவர பார்க்கிற நீ. தொலைச்சிக்கட்டிருவேன் ராஸ்கல். இந்த அழகர் யாருக்கும் கட்டுப்படறவன் இல்லை…” என்றும் வீராப்பாய் பேச,
“கிளம்பும் போது அம்மாச்சி கால்ல விழுந்தீங்களா என்ன?….” என்றாள் விருஷ்திகா நக்கலுடன்.
“ஒய் அடிங்,…” என்றவன் கீழுதட்டை கடித்து அவளுக்கு மிரட்டல் போல காண்பிக்க,
“கிளம்புங்க காத்து வரட்டும். அப்பறம் எங்கப்பா வந்து உங்ககிட்ட என் பொண்ணால இருக்கமுடியாதுன்னு அடுத்த சண்டைக்கு வந்திடாம?…” என்றால் அடக்கப்பட்ட சிரிப்புடன்.