“அடடா, நான் உங்களையும், தில்லையத்தையையும் சொல்லலை. எல்லாம் நான் கட்டியிருக்கேனே உங்க பிள்ளை. அவரை சொன்னேன். நூறு மாமியாருக்கு சமம். அவரை சமாளிக்க வேண்டாம். அதான் கொஞ்சம் நீக்குபோக்கு சொல்லிக்குடுங்க…” என்றவள்,
“இப்ப பாருங்க…” என கூறி, ஒரு கனத்த இரும்பு கரண்டியை எடுத்து அடுக்களை வாசலருகே தெரியாமல் போடுவதை போல பொத்தென்று போட,
“சரிங்கத்தை, எதாச்சும் செய்வோம்ன்னு பார்த்தா இவங்க விடலை. உங்க மகனுக்கு நீங்களே செய்ங்க….” என்று மீனாளை பார்த்து தோள்பட்டையை வெட்டிக்கொண்டு கிளம்பினாள் விருஷ்திகா.
“எஞ்சாமி பாடு திண்டாட்டம்தேன். பூனையாட்டம் இருந்தவ போடுத போட பாத்தியா?…” என்று மருமகளிடம் தான் புலம்பி தள்ளினார்.
விருஷ்திகா தன்னிடம் எதிர்பட்ட தில்லையை பார்த்தவள், அங்கேயே தேங்கி நிற்க கோபமும், ஆற்றாமையுமாய் தில்லை வந்தார்.
“என்னத்தத்தா சொல்ல? அவ அப்பா இருந்தவரைக்கும் கம்மின்னிருந்தவ இப்ப வெளிலையே வரமாட்டேன்னுதா. எல்லாம் எந்நேரம்…” என தலையில் அடித்துக்கொண்டு சென்றார்.
அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டாம் என்று தான் தில்லை புகழை அழைக்க சென்றதுமே.
விருஷ்திகாவும் இருக்க கொஞ்சம் கலகலப்பாய் இல்லை என்றாலும், மனம் தெளிந்து கண்ணீரின்றியாவது இருப்பாளே என்று நினைத்தார்.
அதற்காகவே அழைக்க செல்ல புகழ்மதி வெளியே வரவே இல்லை. சுடர்மணி கிளம்பியதுமே உள்ளே சென்று படுத்துக்கொண்டவள் தான்.
தில்லை வருத்தத்துடன் கண்ணீரை துடைத்துவிட்டு செல்வதை பார்த்த விருஷ்திகா நேராக அங்கே சென்றாள்.
“எவ்வளோ நேரம் அழுதுட்டே இருப்ப நீ?…” என்றாள் சென்றதுமே புகழ்மதியிடம்.
அவளை எதிர்பாராத புகழ் திடுக்கிட்டு திரும்பி பார்க்க முகமெல்லாம் வீங்கி போயிருந்தது.
“என்னால தான மதினி. இப்ப எம்புட்டு பெரிசா போச்சு?…” என மீண்டும் புகழ்மதி அழுதே கரைந்திருந்தாள்.
தன்னால் தான் என விருஷ்திகாவிடம் முதல்நாள் நடந்தவற்றை கூறி புலம்பிக்கொண்டே இருக்க விருஷ்திகாவின் பொறுமை பறந்தது.
“என்ன எல்லாம் உன்னால? நீ என்ன பண்ணின?….” என்றவள்,
“ஆமா, உன்னால தான். எல்லாமே உன்னால மட்டும் தான்….” என்றதும் புகழ் விக்கித்து பார்த்தாள் அழுகையை நிறுத்தி.
“அவன் என் அண்ணன் இருந்தா என்ன? எவனா இருந்தா என்ன? அறிவு வேண்டாமா? இப்படி ஒருத்தன் உன்கிட்ட நடந்துக்கிட்டான்னா முதல்ல வீட்டுல சொல்லனும். சரி யார்க்கிட்டயும் சொல்ல பயம். உன் அம்மாக்கிட்ட சொல்லியிருக்கலாமே? இல்லை உன் அப்பாக்கிட்டையாவது சொல்லியிருக்கனும்….” என்றவள்,
“இப்படி சொந்தம், உறவு, நம்மளை எதுவும் நினைச்சிருவாங்களோன்னு நீயா பயந்துட்டு இப்ப இவ்வளோ தூரம் வந்திருக்கு. இதுவே அன்னைக்கே தெரிஞ்சிருந்தா இன்னைக்கு குடுத்த அடியை உன் அண்ணன் அன்னைக்கே குடுத்திருப்பார். அவனும் திரும்பி பார்க்காம போயிருப்பான்…”
“இப்ப மட்டும் என்ன நிம்மதி கிடைச்சிருச்சு? பெருசா வளரவிட்டு எல்லாருக்கும் தெரிஞ்சு உன்னை எதுவும் சொல்றதுக்கு…” என்று அவளை பிடித்து வாட்டிவிட்டாள் விருஷ்திகா.
“உங்க பெரிப்பா இப்பவே நாந்தேன் நம்பர குடுத்தேம்ன்னு பேசறாரு மதினி…” என்று புகழ் தேம்ப,
“என்னை பேசாத பேச்சா? அவர் பேசினா உண்மை ஆகிடுமா? என்ன பேசறாங்கன்றதை மாதிரி, யார் சொல்றாங்கறதும் ரொம்ப முக்கியம். அவரை எல்லாம் நீ மனுஷன்ற கேட்டகிரில வச்சிருக்கியா என்ன?…” என்றாள் விருஷ்திகா கண்டனத்துடன்.
“இங்க ஆயிரம் பேசுவாங்க. பேச மட்டும் தான் தெரியும். ஒரு விஷயத்தை பாஸிட்டிவா பார்க்கிறதை விட நெக்கட்டிவா பார்த்து அவங்க மனசோட அழுக்கை வார்த்தைல சொல்லி, அதுல ஒரு குரூர சந்தோஷம் அடைஞ்சுப்பாங்க….”
“இதோ நீ விடறியே கண்ணீர், இதுதான் அவங்களோட எதிர்பார்ப்பு. நேத்து பயந்து போய் நின்னியே. எனக்கே உன்னை அறையனும் போல இருந்துச்சு. உன் மகன் தான் என் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சான்னு ஒருவார்த்தை நிமிர்ந்து சொல்லியிருந்தா உனக்கு மட்டும் இல்லை, இந்த குடும்பத்துக்கும் அது மரியாதை…”
“இப்படி ஒளிஞ்சு, மறைஞ்சு நீ அழுதுட்டே இருந்தா வேற என்னவோன்னு தான் நினைப்பாங்க. மத்தவங்க தவறான புரிதலுக்கும் இது வழி அமைச்சு குடுக்காதா? தைரியம் வேண்டாமா? உன்னால பேஸ் பண்ண முடியலைன்னா உனக்கு குடும்பம் இல்லையா?…” என்றாள் விருஷ்திகா.
சரமாரியாக கேட்க புகழுக்கு அவள் சொல்லுவதில் புது உத்வேகம் பிறந்தாலும், அவளின் இயல்பு எழுந்து நிற்க விடவில்லை.