“இப்ப பாரு, உன் அம்மா உன்னை நினைச்சு கண்ணீரோட கவலைப்பட்டுட்டே போறாங்க. கொஞ்சநேரம் முன்னாடி எல்லாரும் நல்லா தான இருந்தாங்க. திரும்ப நீ அழுது அவங்களோட அந்த சந்தோஷத்தையும் குறைக்கிற….” என்றவள்,
“அவங்க சந்தோஷத்துக்காக நீ நிம்மதியா இருன்னு சொல்லலை. உனக்கே தைரியம் வேண்டாமா? தன்னம்பிக்கை வேண்டாமா? அழுதுட்டா எல்லாம் மாறிடுமா? அப்படின்னா இங்கயே இருந்து நாள் முழுக்க அழு. உன்னோட இந்த குடும்பமும் சேர்ந்து அழறோம். எல்லாமே மாறிடும் பாரு…” என்றதும் புகழ்மதி கண்ணீரை துடைத்து பார்த்தாள்.
“உன்னோட இயல்பு வேற தான் புகழ். ஆனா எல்லா விஷயத்தையும் இயல்போட எடுத்துக்க கூடாது. கொஞ்சம் இதைவிட்டு வெளில வா. நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை. அதை முழுசா நீ உணர்ந்தாலே தப்பு பண்ணிட்டோம்ன்ற எண்ணம் வராது. இந்த கண்ணீரும் வராது. புரியுதா?…”
“ஹ்ம்ம்…” என்றாள் புகழ்.
“என்ன சொல்லிட்டு போனாங்க உன் அம்மா?…”
“வெளில வா, மதினி எல்லாம் வேலையா இருக்கோம். நீயும் சேந்து நில்லுன்னாங்க…”
“ஹ்ம்ம், சரிதானே. வந்து நில்லு. எப்பவும் போல இரு…” என்றவள்,
“உன் மொபைலை சரி பண்ணியாச்சு…” என்றும் கூற,
“இல்ல, எனக்கு வேண்டாம்…” என்றாள் மீண்டும் பயந்து பதறி.
“இதைத்தான இப்ப வேண்டாம்ன்னு சொன்னேன். எடுத்துக்க வேண்டியதை எடுத்துக்கனும். இதுல எப்படி பேஸ் பண்ணனும்ன்னு கத்துக்கனும். புரிஞ்சுக்கோ. ஒரு போன் அதனால தான் எல்லாம்ன்னு நினைக்காத. அதை நம்ம கண்ட்ரோல்ல வைச்சிட்டா போதும்…” என்று சொல்லி தேற்றி அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் விருஷ்திகா.
புகழ் முகம் கழுவிவிட்டு அங்கே வந்ததுமே வல்லியும், தில்லையும் நிம்மதியாகினர்.
மதிய உணவுநேரம் அனைவரும் வந்துவிட நேரம் சற்றே இலகுவாய் கடந்தது.
என்றைக்கும் போல திருமகள், சுடர்கொடி இருவரும் அழைத்து பேச, அழகுமீனாள் பாட்டை பாடிவிட்டார்.
“என்னிய இம்மிக்கும் மதிப்பேனாங்கறா வவுசுக்காரி. எம்பேரன் எஞ்சாமி, ஏ ராசா, ஏ மன்னவர காப்பிய போட்டு கொண்டாந்து தர வச்சிட்டாளே? எங்கயாச்சும் நடக்குமா?…” என்று நீட்டி முழக்க,
“போச்சு போ. இனிமே மன்னவரு மாவாட்டாத குறையா பொண்டாட்டிக்கு கையில கொண்டாந்து தர போறாரு…” என்று அக்கா, தங்கை இருவரும் அழகுமீனாளை தூண்டிவிட,
“அத வேற சொல்லாதீங்கடி. நெஞ்செல்லாம் வேவுது பாத்துக்க…” என்று இங்கே இவர் அலும்பை கூட்ட என்று பொழுது கலகலப்பாகவே கழிந்தது.
சுடர்கொடி, திருமகளுக்கு இந்த விஷயங்கள் தெரியப்படுத்தப்படவே இல்லை.
வீட்டில் வேலையாட்கள் பகல் பொழுதில் இருப்பதனால் விஷால் பற்றிய பேச்சுக்களும் எடுக்கப்படவில்லை.
புகழ்மதியும் பழையபடி இல்லை என்றாலும் முன்பை போல ஓரளவு இயல்பாக நடந்துகொள்ள யாரின் பார்வைக்கும் வித்தியாசமாக தெரியவில்லை.
அழகர் மருத்துவமனைக்கு வந்துவிட்டு சென்ற அன்றே சாந்தாவும் மகளுக்கு அழைத்து பேசியிருக்க,
“என் புருஷனா இருக்க போய் அவனை கொண்டு வந்து உயிரை காப்பாத்திவிட்டார். நானா இருந்தா அவன் பூமிக்கு பாரமா இருக்க தேவையே இல்லைன்னு விட்டிருப்பேன். அந்த பொறுக்கிக்கு, அவனை பெத்தவரு சப்போர்ட் வேற….” என்று மயில்வாகனன் வந்து பேசியதை பற்றி எல்லாம் அவள் கூற,
“என்னடி இது? ஒன்னு மாத்தி ஒன்னு வந்துட்டே இருக்கு. இப்ப என்ன செய்வேன் நான்? உங்கப்பா வேற உன் புருஷன் மேல பயங்கர கோவத்துல இருக்கார்…”
“இருந்தா இருந்துட்டு போகட்டும். வேற வேலை இல்லை. இத்தனை கோபமா ஒருத்தனை அடிச்சிருக்காருன்னா ஏன்னு யோசிக்கவேண்டாமா?…”
“அவரு விஷால் புகழை விரும்பறதுக்கு உன் புருஷன் எதிர்ப்பா நிக்கிறதா நினைக்கிறாரு….”
“நல்லா நினைச்சார். அட போங்கம்மா. அவன் செஞ்ச வேலைக்கு. ப்ச், என்னை பேச வைக்காதீங்க. நான் சொன்னேனே பொறுக்கி, இதுக்கான எக்ஸ்ட்ரீம் மீனிங் என்னவோ அதையெல்லாம் அவன் பண்ணிட்டான். புரிஞ்சுக்கோங்க…” என்றவள்,
“அவன் விஷயமா எதுவும் பேசவேண்டாம். விட்டுடுங்க ம்மா…” என்றாள்.
“என்னடி சொல்ற?…” என்ற சாந்தாவுக்குமே பதட்டம். விஷாலா இப்படி என்று.
“இந்தமனுஷன் நான் தான் வச்சு பார்க்கனும்ன்னு நிக்கிறார். உன் பெரியப்பா பேசற பேச்சுக்கு எனக்கு சுத்தமாவே பிடிக்கலை விருஷ்தி…” என்றும் கவலையாய் பேச,
“என்னமோ பண்ணுங்க. தயவு பண்ணி அவங்களை ஊருக்கு அனுப்பறதுக்கு பாருங்க…” என்று சொல்லி வைத்துவிட்டாள் விருஷ்திகா.
அதற்கு நேர்மாறாக தான் கதிர்வேலனும் வீம்பு பிடித்துக்கொண்டு அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறி கதிர்வேலன் இல்லம் வந்து சேர்ந்தனர் விஷாலும், மயில்வாகனனும்.
அதுவும் அழகரின் வீட்டின் எதிர்வீட்டிற்கே மீண்டும் குடி வர, அழகருக்கு தெளிவாய் விளங்கியது.
“போய் நீங்களே கேட்டுக்கோங்க…” என அவனுக்கு பதில் கொடுத்துவிட்டாள்.
விஷால் எழுந்து நடமாட எப்படியும் ஆறு மாதங்கள் வரை ஆகிவிடும் என்று மருத்துவர் கூறியிருக்க,
“உன்னை முடக்கி போட்டவன நான் மொத்தமா முடிக்கறேன்டா. அவன் கண்ணார பாக்கனும் ஒவ்வொரு கஷ்டத்தையும்…” என்றவரால் அழகரை எந்தவிதத்திலும் முடக்கிவிட அணுகமுடியவில்லை.
அவன்மீது கை வைக்க முடியாதென்று தெரிந்தவர் மீண்டும் தான் நினைத்திருந்த பழைய விஷயத்தையே கையில் எடுத்தார்.
நிச்சயம் அரவிந்த் இருந்தால் அவனுக்கு தெரிந்தால் இதற்கு சம்மதிக்கவும் மாட்டான். நடக்கவும் விடமாட்டான்.
அவரின் நல்லநேரம் என்பதை போல அரவிந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றே துபாய் கிளம்பிவிட்டான்.
யாரிடமும் தெரிவிக்கவில்லை. கதிர்வேலனிடம் கூட சொல்லிக்கொள்ளவில்லை.
கிளம்பும் அன்று தான் அவர்களுக்கே தெரிந்தது. அதுவும் அந்த வீட்டிற்கு கூட வராமல் மேலூர் வீட்டிற்கு சென்று தன் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.
கூடுதல் தகவலாக அதனை அழகரிடமும் தெரிவித்தவன், அதையுமே விமானநிலையத்தில் இருந்து தான் தெரிவித்தான்.
“நான் கிளம்பறேன். திரும்ப பார்க்க முடியுமான்னு தெரியலை. விருஷ்தியை பார்த்துக்கோங்க….” என்றவன்,
“இன்னைக்கு அவங்களை டிஸ்சார்ஜ் பன்றாங்க. அங்க தான் வரப்போறாங்க உங்க வீட்டு எதிர்வீட்டுக்கு…” என்றும் தகவலாய் சொல்லிவிட்டான் அரவிந்த்.
“டேக் கேர் அரவிந்த். பத்திரமா போய்ட்டு வாங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்…” என்று பொதுவாய் சொல்லி வைத்துவிட்டான் அழகர்.
இதோ வேண்டுமென்றே வீட்டின் முன் வாசலில் தான் மயில்வாகனனின் நடமாட்டம்.
வேண்டும் என்றே கதிர்வேலனை அத்தனை தூரம் அலைக்கழித்தார் உடல்நிலை சரி இல்லை என்று காரணம் காண்பித்து.
“என்ன பாடு படுத்தறான் இவன். யாருக்காகவாம் இத்தனை தூரம் பன்றான்?…” என்று அம்மையப்பன் கோபமாய் பேச,
“ஹ்ம்ம் உங்க மருமகனுக்கும் இது தேவை தான்…” என்றுதான் அழகர் கூறினான்.
“சரியான சர்க்கஸ் குரங்கு இந்த மயிலு. சிக்கட்டும்…” என்று பல்லை கடித்தவனின் கோபம் மீண்டும் அதிகமாகிவிடுமோ என்றுதான் அம்மையப்பனும், வீட்டினரும் பயந்து போயினர்.
எதிர்வீடு வந்துவிட்டார்கள் என்று தான் பெயர். பேச்சுவார்த்தை என்பது சுத்தமாய் இல்லை.
அங்கே மயில்வாகனன் எதையாவது பேசினால், இங்கே அழகுமீனாள் பதிலுக்கு மூக்கை உடைத்துவிடுவதை போல பேசிவிடுவார்.
ஆனாலும் மயில்வாகனன் அடங்கவில்லை. அதிலும் சாந்தா விருஷ்திகாவிடம் மட்டும் பேசிக்கொள்ள, அதுவும் பொறுக்கவில்லை.