“பார்த்தியா உன் பொண்டாட்டிய. எம்புள்ளைய படுக்க வச்சவன் அவன். அவன் வீட்டோட என்ன உறவு வேண்டியிருக்கு?…” என்று கொந்தளிக்கும் பொழுது மட்டுமே கொஞ்சம் நியாயம் பார்த்தார் கதிர்வேலன்.
“விருஷ்தியை அப்படியே விட்டுட முடியாதேண்ணே. நமக்காக அங்க போக்குவரத்து எதுவும் தேவி வச்சுக்கலையே. ஆனா பொண்ணை விட்டுக்குடுக்க முடியுமா?…” என்று அந்த விஷயத்தில் அவர் சரியாய் இருக்க, அடக்கி வாசித்தார் மயில்வாகனன்.
மேலும் சிலநாட்கள் இப்படியான சச்சரவுகளுடனே கழிந்தது.. புகழ்மதி முழுதாகவே அந்த விஷயத்தில் இருந்து மீண்டுவிட்டாள்.
விஷாலை அவ்வப்போது வீல் சேரில் நர்ஸ் உதவியுடன் வீட்டின் வெளியே வைத்து புகழ்மதி இருக்கையிலேயே உருட்டிக்கொண்டிருந்தாலும் அந்த பாதிப்பை அவளிடம் காண முடிவதில்லை.
“கிறுக்குப்பய. அவளுக்காக போயி அடிவாங்கிட்டு கிடக்கான். அவ எனக்கென்னன்னு இருக்கா…” என்று அதற்கு ஒருபாடு கோபம் கொந்தளிக்கும் மயில்வாகனனுக்கு.
எல்லாவிதத்திலும் எதிர் வீட்டில் இருக்கும் அழகரையும், அவன் குடும்பத்தையும் என்ன குடைச்சல் கொடுத்து நிம்மதியிழக்க செய்யலாம் என்றிருந்த மயில்வாகனனின் நிம்மதிக்கும், உறவுக்கும் அன்றைக்கு இறுதிநாள்.
உறவினர் ஒருவரின் வீட்டு திருமண விசேஷம் என்று குடும்பத்துடன் பெண்கள் கிளம்பியிருக்க உடன் விருஷ்திகாவுமே சென்றிருந்தாள்.
உறவு என்பதனால் அங்கே சாந்தாதேவியும் வருவதாய் இருந்தது. புகழ்மதி கல்லூரிக்கு சென்றிருந்தாள்.
திண்டுக்கல் வரை சென்றிருந்த அழகர் மதுரை திரும்பிக்கொண்டிருந்தவன் விருஷ்திகாவிற்கு அழைத்து பார்த்துவிட்டு, மாணிக்கவல்லிக்கு அழைத்தான்.
“சொல்லு அழகரு,…” என்றவர் சத்தம் சுத்தமாய் அவனுக்கு கேட்கவில்லை.
“ம்மா வெளில வாங்க…” என்று அவன் ஒருபுறம் கத்த, மாணிக்கவல்லி பேசியது காதில் விழவே இல்லை.
திருமண மண்டபத்தில் அத்தனை சத்தத்தில், ரேடியோ வேறு ஒருபக்கம் பாட்டை தெறிக்க விட்டிருக்க அழகரின் காதை கிழித்தது அந்த சப்தம்.
“அம்மா…” என்றான் அழகர் இன்னும் சத்தமாய்.
“இருய்யா, இருய்யா…” என்று அவர் வேறொரு இடம் வந்து, மணமகள் அறை என்றிருந்த அறைக்குள் நுழைந்தார்.
“இப்ப சொல்லு, பொண்ணோட ரூமுக்கு வந்துட்டேம்…” என்று கதவை சாற்றிவிட்டு கேட்க, இப்போது சத்தம் மெலிதாகவே கேட்டது.
“கலியாணம் முடிஞ்சதா?…” என்றான்.
“இப்பத்தேன் பொண்ணை கூட்டிட்டு சாமி கும்புட போயிருக்காக. இனிமேத்தான் மேடைக்கு வரும். என்னய்யா?…” என்று கேட்க சிலநொடிகள் அமைதி.
“லக்ஷ்மி எங்க? என்ன பன்றா? அவக்கிட்ட போனை குடுங்க…” என்றவன் அடுத்ததாய்,
“அவ நம்பர் ரீச்சாகவே இல்லை. போன் ஆஃபாகியிருக்கான்னு பார்த்துட்டு எனக்கு பேச சொல்லுங்க…” என்றும் கூற,
“லச்சுமி இங்க இல்லைய்யா…”என்றார் வல்லி.
“என்ன? உங்களோட தானே கல்யாணத்துக்கு வந்தா? ஏன் எங்க போயிருக்கா?…”
“சொன்னேம் அழகரு. ஆனா வேண்டாம்ன்னு சொல்லிட்டு ஆட்டோ புடிச்சு போய்ட்டா. வீட்டு நம்பருக்கு…” என்று சொல்லி முடிக்கும்முன்,
“நான் பார்த்துக்கறேன். நீங்க கல்யாணத்தை முடிச்சிட்டே வாங்க. நான் வீட்டுக்கு தான் போறேன்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் அழகர்.
எதற்கு அழைத்தான், எதற்கு கேட்டான் என்று எதுவும் புரியவில்லை. கிளம்பி செல்வோமா என்று ஒருபுறம் தோன்றினாலும் மகனும் வீட்டிற்கு தானே செல்கிறான் என்று இருந்துகொண்டார் வல்லி.
தில்லை கேட்டதற்கும் அதையே கூறியவர் அங்கே திருமணத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
ஒருபக்கம் வீட்டிலும் யாரும் இல்லை. தனிமை என்பது அவர்களுக்கு கிடைக்கவும் இல்லை.
எதற்கு தாங்களும் இடைஞ்சல் தரவேண்டும் என்று இருந்துகொண்டார் மாணிக்கவல்லி.
“செத்தநேரம் ரெண்டும் தனியா தான் இருக்கட்டுமே. கலியாணம் முடிஞ்சதுல இருந்து மாத்தி மாத்தி ஒரே சடவாத்தேன் போகுது…” என்று கூற, வல்லிக்கும் சரி என்றுபட்டது.
இவர்களின் எண்ணம் ஒருபுறம் இருக்க, அழகர் கைகள் லேசாய் உதறிக்கொண்டிருந்தது.
“என்னண்ணே நெசமா வீட்டுக்கா?…” என்றான் ஓட்டுனர்.
“ஆமாங்கேன். சத்தங்காட்டாம போடா…” என்று அவனின் முதுகில் ஒரு அடி வைத்தான்.
இன்னும் மனது இயல்பிற்கு திரும்பவில்லை. அத்தனை பதட்டம். படபடப்பு அதிகமிருக்க, இதயத்துடிப்பும் அதிகத்திற்கு தான் இருந்தது.
வீடு வந்ததும் காரை அனுப்பி வைத்தவன் வேகமாய் மாடியேறி வர அவர்களின் அறை கதவு ஒருபக்கமாய் திறந்திருந்தது.
திருமணத்திற்கு சென்றிருந்தவளின் பின்புற தோற்றம் பார்த்தவன் மனம் ஆசுவாசப்பட, உயிர் திரும்பிய மனநிலை.
“லக்ஷ்மி…” என்றவனின் அழைப்பில் அவளுமே திரும்பி பார்க்க, பார்த்தவள் எழும் முன், அவள் முகம் அவனின் நெஞ்சத்தில் பதிந்தது.
சிறு நூலிழையளவு கூட காற்று நுழைய முடியாத ஒரு அணைப்பு. எலும்புகள் நொறுங்கிவிடும் என்பதை போலிருந்தது அந்த வன்மை.
படுத்திருந்தவள் விழிகளில் புதிதாய் ஒரு மின்னல். கூடவே அசாத்திய சோர்வு. அவனை எதிர்பார்த்த மகிழ்ச்சி என்று எல்லாம் கலந்துகட்டி இருந்தது.
அவனின் வருகையில் மகிழ்ந்து அவனிடம் பேச வாய் திறக்கும்முன் அவளை சுருட்டியிருந்தான் அழகர்.
“என்னாச்…” என்றவளின் வார்த்தைகள் சுத்தமாய் அடைபட்டுக்கொள்ள என்ன ஏதென்று உணரும்முன் அவனின் முத்தங்கள் மூர்ச்சையடைய செய்தது.
அத்தனை ஆவேசத்திலும், அவனிடம் நடுக்கம். இதுவரை இப்படி ஒரு அணுகுமுறை அவனிடம் தென்பட்டதே இல்லை.
அதன் அதிர்வில் உறைந்திருந்தவள் முழுதாய் அவனின் ஆளுகைக்குள் வந்துவிட பதறிப்போனாள்.
இவ்வளவு நாளாகிற்று. கிட்டத்தட்ட திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் கடந்திருக்க, இத்தகைய அத்துமீறல்கள் என்றும் இருந்ததில்லை.
இன்றைக்கு என்ன என்று உணர்ந்தும் கேட்கமுடியாமல் அவனின் ஆதிக்கத்தில் மிரண்டுபோயிருந்தாள் விருஷ்திகா.