“இப்போ தான் டெஸ்ட் பண்ணினேன். அதான் மண்டபத்துல இருந்து வந்துட்டேன். அதை சொல்ல கூட முடியாம…” என்றவள் கண்ணீர் உடைப்பெடுக்க,
“ஏன்டா ஏன்? என் வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோஷமா இருக்க நினைக்கிற எந்த விஷயத்திலையும் அப்படி இருக்க முடியலை? எவ்வளோ பேச்சு. சந்தோஷமா? எங்கப்பா வந்து தானே ஆகனும். இல்லையா?…” என்றவள் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச பாரமும் கண்ணீராய் கரைய ஆரம்பித்தது.
அவனின் வார்த்தைகள் எந்தளவிற்கு அவளுள் ஆழமாய் வேரோடி இருக்கிறதென்று அழகருக்கு புரிந்தது.
மனம் வருந்த மனைவியை வேதனையுடன் பார்த்தான் அவன். உண்மை தானே.
விட்டுவிட்ட வார்த்தைகள் எந்த காலத்திற்கும் மறையாதே. அவன் திருமணம் முடித்ததை விட அதனை நியாயப்படுத்தி பேசிய வார்த்தைகள் தானே இன்னும் அவளை கொன்று கொண்டு இருக்கிறது.
“டெஸ்ட் பண்ணினதும் எவ்வளோ சந்தோஷப்பட்டேனோ அதைவிட அடுத்த நிமிஷம் நீங்க பேசினது தான் ஞாபகம் வந்துச்சு. என்ன பண்ணியிருக்கீங்க தெரியுதா?…” என்றவள் அவன் அசைவின்றி அமர்ந்திருக்க, தன் ஆதங்கத்தை எல்லாம் அவனின் மார்பில், கன்னத்தில் அடித்தும், கிள்ளியும் வைத்து காண்பிக்க மொத்தமாய் அவளிடம் தன்னை ஒப்புக்கொடுத்து அமர்ந்திருந்தான் அழகர்.
“போச்சு சும்மாவே என்னை சொல்லுவீங்க, சரியா என்னை வளர்க்கலைன்னு. இப்ப பாருங்க உங்களை அடிக்கிறேன். பேசறேன். இதுக்கும் சொல்லுவீங்க தானே? அதுவும் புருஷனுக்கு மரியாதை இல்லைன்னு…” என்று சொல்ல, அவள் பேசட்டும் என்று மௌனமாய் இருந்தான் அழகர்.
“என்னால அதையெல்லாம் மறக்க முடியலையே. நான் என்ன செய்யட்டும்?…” என்று சண்டையிட்டு, அழுது, ஓய்ந்து அவனின் தோளிலேயே சாய்ந்துவிட தானே அவன் கரம் அவளை அரவணைத்தது.
“ஸாரி நானும்…” என்று அவனின் கழுத்தை கட்டிக்கொண்டவள்,
“ரொம்ப சந்தோஷமா இருக்க நினைச்சேன். ஆனா மனசுல இது முள் மாதிரி குத்திட்டே இருக்கு. நான் மறக்கவேமாட்டேனா?…” என்று அவனை பார்த்து பரிதாபமாய் கண்ணீருடன் கேட்டவளை கண்டு தாளமுடியவில்லை.
“கொஞ்சம் முன்னாடி நீங்க கட்டி புடிச்சதும் பயந்துட்டேன். அதுதான் தள்ளிவிட்டேன். ஆனா இப்ப வேணும். இதை சொல்லி நீங்க சந்தோஷத்தோட குடுக்கனும்ன்னு தோணுது…” என்று சொல்ல அவளின் கன்னம் பற்றியவன் அவள் கேட்டதை போலவே முத்தமிட,
“இது எவ்வளோ நல்லா இருக்கு. கொஞ்சநேரத்துல மூச்சு முட்டிருச்சு…” என்று கண் சிமிட்டி கண்ணீரை விரட்டியவள் முகத்திலும் புன்னகை.
“ரொம்ப கோபம். அதுதான் அடிச்சுட்டேன்…”
“ஹ்ம்ம்…” என்றவனின் இந்த பேரமைதி புதிதாய் இருந்தது.
லேசாய் அதற்கு முறைத்தவன் மீண்டும் தன் மார்பில் அவளின் முகத்தை பதித்துக்கொள்ள இன்னுமே நடுக்கம்.
“ஏன் உங்க கை நடுங்குது?…” என்று அதனை பற்றி கொண்டு கேட்ட விருஷ்திகா அவனின் புறங்கையை பார்க்க சின்ன சின்னதாய் சிராய்ப்புகள்.
“என்னாச்சு, என்ன இவ்வளோ காயம்?…” என்றவள் அப்போதுதான் அவனை நன்றாகவே பார்த்தாள்.
தோளில், இடுப்பில், காலில் என்று அடிபட்டு ரத்தம் உறைந்திருந்தது. நெற்றியிலும் காயமிருக்க, அவனின் நெற்றி முடி அதனை மறைத்திருந்ததில் இப்போதுதான் பார்த்தாள்.
“என்னாச்சு, ஏன் இவ்வளோ அடிபட்டிருக்கு?…” என்றவளின் உயிரெல்லாம் பதற, அப்போதுதான் அவன் சொல்லிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
‘செத்து பிழைச்சு வந்திருகேன்டி’ என்றவன் குரலில் இருந்த அந்த உணர்வில் முழுதாய் கலங்கியவள்,
“இது இது எப்படி?…” என்று வார்த்தை தடுமாற,
“ப்ச், சின்ன அடிதான். பைக் ஸ்கிட்டாகி விழுந்துட்டேன்…” என்றவனை நம்பாமல் பார்த்தாள் விருஷ்திகா.
“நிஜமா தான். பைப்பாஸ்ல வரும்போது ஆப்போசிட்ல வந்த கார் கன்ட்ரோல் இல்லாம வந்திருச்சு. அதை சமாளிக்க ஒடிச்சு திருப்பின இடத்துல இப்படி. லைட்டா தான்…” என்றான் கையை உதறி.
“ஹைய்யோ…” என்று விருஷ்திகா தன்னையே அடித்துக்கொண்டாள்.
தானுமே நிதானமின்றி அவனை அத்தனை படுத்திவிட்டோமே என்று. அவளின் கையை பிடித்து தடுத்தவன்,
“பைத்தியமாடி உனக்கு?…” என்ற அதட்டலுடன்,
“வயித்துல என் பொண்ணு இருக்கா. பயந்துடமாட்டாளா?…” என்றதும் மீண்டும் இதழ்கள் பிதுங்க, வெடித்து ஒரு அழுகை.
மொத்தமாய், அவள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் கட்டவிழ்ந்து வெடித்து சிதற ஆதுரமாய் அவளை பற்றிக்கொண்டான் அழகர்.
காதலில் சரணாகதிக்கிருக்கும் அழகியல் வேறு எதற்கும் அமைந்துவிடாதே.
ஒருவரை ஒருவர் உணர்வுகளால் சரணடைய செய்திருக்க, சங்கடங்களுக்கு வழி ஏது?
இருவரின் அருகாமையில் அவரவர் துயர் களைந்து, முன்கோபங்கள் வலுவிழந்து, அணைப்பின் அரணில் கட்டுண்டிருந்தனர்.
வீட்டில் மற்றவர்களும் வந்துவிட்டிருக்க, கூடவே பிரச்சனையுடன் மயில்வாகனனை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தார் கதிர்வேலன் ஆவேசமாய்.