அவன் கூறுகையில் கூட குரலில் அத்தனை நடுக்கம். அதுவே அவளை இன்னும் கிலி பிடிக்க செய்ய அவனின் கண்களை அசையாது பார்த்தாள்.
“இப்படி பார்த்தா திரும்ப ஆரம்பிச்சிட போறேன். போய் முகம் கழுவிட்டு வா….” என அவளின் கன்னம் தட்டியவன் தனக்கு உடை எடுக்க செல்ல விருஷ்திகாவும் கட்டிலை விட்டு மெல்ல இறங்கினாள்.
அவள் இறங்கி செல்வதை பார்த்தவனுக்கு தான் சற்றுமுன் நடந்துகொண்டதில் சுரீரென்ற அழுத்தம்.
அவருமே ஒருநொடி அவனின் கோலத்தில் திகைத்து தான் போனார். என்னவாகியிருக்குமோ என உள்ளம் துடித்தடங்கத்தான் செய்தது.
ஆனாலும் மீண்டும் தெனாவெட்டாய் அழகர் கேட்கவும் அத்தனையும் உதறிவிட்டு கதிரவேலன் அவனின் முகத்தில் அந்த காகிதத்தை விசிறியடித்தார்.
“என் சொத்தை நான் விப்பேன். என்னவும் செய்வேன். அதை கேட்க நீ யாருய்யா?…” என்றார் மரியாதை இன்றி.
கோபத்தில் அழகரின் நரம்புகள் புடைத்துக்கொண்டு வந்தது. இதுவே மயில்வாகனனாக இருந்தால் பேசியதற்கு சங்கில் மிதித்திருப்பான்.
மாமனாராகிற்றே. மனைவியை திரும்பி பார்த்தவன் கண்கள் ஆத்திரத்தை அடக்குவதில் சிவந்திருந்தது.
“என்னாச்சு?…” என்றாள் விருஷ்திகா தாளமாட்டாமல்.
ஒருபக்கம் சாந்தா வேறு அவளை பார்த்து பரிதவித்திருக்க, இன்னும் பெரிதாய் ஆகிவிடுமோ என்னும் பயத்தில் நடுங்கிபோய் நின்றார்.
“என்ன ஆச்சா? என்ன புருஷன் கூட சேர்ந்துட்டு ஆட்டமா காமிக்கிற? அதுதான் சொந்தமே வேண்டாம்ன்னு உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிட்டு போய்ட்டியே. இப்ப எதுக்கு என் சொத்து?,….” என்றதும் கூட அவர்கள் யாருக்குமே புரியவில்லை.
“சொத்தா? உங்க சொத்து எனக்கெதுக்கு? முதல்ல இப்படி நடுவீட்டுல நின்னு கூச்சல் போடற வேலை வச்சுக்காதீங்க ப்பா. பொறுமையா என்ன விஷயம்ன்னு சொல்றதுன்னா சொல்லுங்க. இல்லைன்னா கிளம்புங்க…” என விருஷ்திகாவுமே பேசிவிட்டாள்.
எங்கே அழகரும், கதிர்வேலனும் பேசி இது இன்னும் பெரிதாகிவிடுமோ என்னும் பயம். அதற்கு தான் பேசுவதே மேல் என்று அவள் பேச,
“லக்ஷ்மி…” என்றவன் சத்தத்தில் அவளும் வாய் மூடினாள்.
“இப்ப சொல்லுங்க. நான் தான் நோட்டீஸ் அனுப்பினேன். அதுக்கு இப்ப என்ன?…” என்றான் அழகர் திமிராய்.
“அழகரு, என்னய்யா?…” என அம்மையப்பன் கேட்க,
“பெரிய மாளிக கெட்டி வச்சிருக்கியான். எம்மன்னவரு நெனச்சா ஒவ்வீட்ட மாரி நூறு வீடு கட்டுவாரு. யாருக்கிட்ட பேசுத…” என்று அழகுமீனாளும் வாய் திறந்தார்.
அப்போது தான் அவர்கள் கோவிலில் இருந்து திரும்பியிருக்க மாணிக்கவல்லி, தில்லை திருமண வீட்டில் இருந்து வந்திருக்க, ஞானசேகரன், சுடர்மணி இருவரும் கடையில் இருந்து வந்திருந்தனர்.
அவர்கள் வந்த சற்றுநேரத்திற்கெல்லாம் புயல்போல கதிர்வேலனும், குள்ளநரியாய் மயிவாகனனும் வந்துவிட்டனர்.