வக்கீல் நோட்டீஸ் என்றதுமே அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மனமெல்லாம் பதட்டம்.
“எவ்வீடு மாளிகை இல்லாம இருக்கலாம். ஆனா அது என்னோட வீடு. அதை நான் என்னவும் செய்வேன். உங்க வீட்டு மன்னவருக்கு என் வீட்டுல என்ன கண்ணுன்னு கேட்கறேன். அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க…” என்றார் கதிர்வேலன் ஆவேசமாய் அழகுமீனாளிடம்.
“அப்பத்தா…” என அவரையும் அடக்கியவன் பார்வையில் ஒருவரும் பேசக்கூடாது என்றிருந்தது.
“நான் தான் நோட்டீஸ் அனுப்பினேன். அந்த வீட்டை விக்க போறதா சேதி. அதுதான் என்னோட, என் பொண்டாட்டியோட சம்மதம் இல்லாம வீட்டை விக்க முடியாது. விக்கவும் கூடாது…”என்ற அழகர்,
“உங்க சொந்த சம்பாத்தியத்துல கட்டினதை என்னவும் செய்ங்க. யார் கேட்பா?…” என்றான் அலட்சியமாய்.
“என்ன நான் வீட்டை விக்க போறேனா?…” என்ற கதிர்வேலன்,
“கதிரு, நாம என்னவும் செஞ்சுட்டு போறோம். அட விக்கிறோம்ன்னே வச்சுக்கோவேன். இவனுக்கு என்ன வந்துச்சு?…” என பேச்சை திசைமாற்றினார்.
“அதானே? உனக்கென்ன?…” என்றார் அழகரை பார்த்து கதிர்வேலன்.
“அப்பா உண்மையா வீட்டை விக்க போறீங்களா நீங்க?…” என மீண்டும் விருஷ்திகா கேட்க,
“இருக்கட்டுமே. விக்கறேன். என்ன இப்போ? உங்களுக்கு என்னன்னு கேட்கறேன். கோர்ட் வரைக்கும் போய் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறீங்களா? நான் சும்மா விடமாட்டேன்….” என்று கூச்சல் போட,
“ஒருத்தர் முட்டாளா இருக்கலாம். ஆனா இவ்வளோ முட்டாளா இருக்க கூடாது…” என்ற அழகர்,
“அவ பேசத்தான் செய்வா. என்ன செய்ய முடியும் உங்களால?…” அழகர் கேட்க,
“என்னவேணா செய்வேன். எனக்கு இவ புள்ளையே இல்லைன்னு தலைமுழுகிட்டு என் சொத்தை எல்லாம் என் அண்ணன் பசங்க பேருல எழுதிட்டு போய்டுவேன்…” என்று வீம்புகொண்டு பேச,
“முதல்ல அதை செய்டா தம்பி. இதுக்குமேல இதுங்க நம்ம வழிக்கே வரக்கூடாது…” என்ற மயில்வாகனன்,
“அதான் கேட்டாச்சுல. வா போவோம்…” என்று அங்கிருந்து கதிர்வேலனை நகர்த்த பார்த்தார்.
அவருமே இங்கே கதிர்வேலன் வருவதை தடுத்து நிறுத்த நினைத்திருக்க, கதிர்வேலன் இப்படி வந்து சண்டையிட்டதில் இன்னுமே பயந்து வந்தது.
அதில் அழகர் வேறு முழுதாய் திரும்பி வந்ததில் பீதியாகி போயிருந்தார்.
“எங்க கூட்டிட்டு போற மயிலு?…” என்ற அழகர் கையை கழுத்தின் பின் வைத்து சொடக்கிட்டுக்கொண்டவன்,
“ஒருநிமிஷம்…” என்று சொல்லிவிட்டு மாடிக்கு விரைந்தான்.
“எனக்கு பதில் சொல்லுட்டு போ அழகர். நில்லு முதல்ல…” என்று கதிர்வேலன் கத்த,
“என்னங்க இது? இப்ப அவர் நம்ம மருமகன். என்ன பேசறீங்க?…” என்றார் சாந்தாதேவி.
“மருமகனாம் பெரிய இவன்? மாமனார் சொத்துக்கு இப்படி ஆசைப்படுவான்னு நான் நினைக்கவே இல்லை. பெரிய இடம். மனசும் அப்படித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன்…” என்று வார்த்தைகளை விட, விருஷ்திகா துடித்து போனாள்.
“நீங்களாப்பா இப்படி பேசறீங்க? உங்களுக்கு என்னாச்சு?…” கலங்கி போய் கேட்க மகளின் கண்ணீர் அவரை அசைத்து பார்த்தாலும், அழகரின் செயலில் ஆவேசம் தணியாமல் நின்றார்.
“இவளை பேசவேண்டாம்ன்னு சொல்லு தேவி….” என்று கூற,
“நான் பேசாம யார் பேசுவா?…” என விருஷ்திகா.
“உனக்கு என்ன தான் வேணும் கதிரு? என்னாச்சுன்னு இப்பிடி மல்லுக்கு நிக்கித?…” என்று அம்மையப்பன் கேட்க,
“கூட ஒருத்தன் நிக்கிறானே கேடுகெட்ட பய…” என்று சுடர்மணி பேசவும் மீண்டும் கதிர்வேலன் வார்த்தைகளை விட்டார்.
“என் அண்ணனை பேச இங்க யாருக்கும் யோக்கியதை இல்லை…” என்றவர்,
“என் பொண்ணை என் கண்ணை மறைச்சு தாலி கட்டினவனுக்கும், அந்த குடும்பத்துக்கும், பெத்தவனை ஏமாத்தின நான் பெத்ததுக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை….” என்றதுமே விருஷ்திகா உடைந்து போனாள்.
“வாயை மூடுங்க, இல்லை யாருன்னு பார்க்கமாட்டேன்…” என மாடிப்படியிலிருந்து இறங்கியவன் வேகத்தில் அனைவரும் விதிர்த்து பார்க்க,
“ஏன், உண்மையை சொன்னா கசக்குதோ? அப்படித்தான் பேசுவேன். பாதிக்கப்பட்டவன் நான்….” கதிர்வேலன் கத்த,
“பேசினா நான் மனுஷனா இருக்கமாட்டேன். இந்த வீட்டையும், என் குடும்பத்தையும் பேச ஒரு தகுதி வேணும். நம்பின குடும்பத்த ஏமாத்த நினைச்ச நீங்க யோக்கியதையை பத்தி பேசவேண்டாம்…” என்று அழகரும் பேச வெகுண்டுவிட்டார் கதிர்வேலன்.
“யாரை யார் பேசறது? நாங்களா ஏமாத்தினோம். எங்களை நடுவீட்டுல குளிப்பாட்டி வச்சா சொந்தமாகிடுமான்னு பேசினது நீங்க தான? அன்னைக்கு கசந்த என் பொண்ணு இன்னைக்கு இனிக்குதோ? அப்போ எல்லாம் சொத்துக்காக தானே?…” மயில்வாகனன் உருவேற்றி வைத்தது கதிர்வேலன் வாயிலிருந்து விஷமாய் வெளியே வந்தது.
“என்ன? நாங்க உங்களை பேசினோமா? சும்மா இந்த மாத்தி பேசற வேலை வச்சுக்காதீங்க. பொண்ணை இங்க தர்றேன்னு சொல்லிட்டு வேற இடம் பார்த்தது மட்டும் எதுக்காகவாம்?…” என்று அழகரும் பேச என்ன நடக்கிறதென அனைவருமே குழம்பி போய் பார்த்தனர்.
“தேவி, நீ தான கேட்டுட்டு வந்து அழுத. சொல்லி தொலை. அப்பவாச்சும் புரியுதான்னு பார்ப்போம்….” கதிர்வேலன் சாந்தாதேவியிடம் எகிற,
“ஆமா, பேசிக்கிட்டிருக்காங்க. கல்யாண விஷயமா…” என்று தில்லை சொல்லிக்கொண்டிருக்க, முழுதாய் என்னவென்று பகிரும்முன்,
“இந்தாடி அம்பா…” என்றார் அழகுமீனாள் உள்ளிருந்து.
“அத்தை கூப்பிடுறாங்க. நீ உள்ள வாத்தா…” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல சாந்தாவும் உள்ளே நுழைய அங்கே அம்மையப்பனின் அறையில் காரசாரமான விவாதம்.
“சொன்னேனே கேட்டீங்களா? முன்னாடியே படிச்சு படிச்சு சொன்னேன். இந்த நினைப்போட தான் இம்புட்டு நாளும் இந்த வீட்டுக்குள்ள வந்து போயிருக்காங்க….” என்ற அழகரின் குரலில் அப்படியே நின்றுவிட்டார் சாந்தா.
வேறு என்னவோ பேசுகிறார்களோ என்று யோசித்து பிறகு வரலாம் என்று திரும்ப, மீண்டும் அழகரின் ஆவேச குரல்.