“சம்பந்தம் பண்ண ஒரு தராதரம் வேண்டாமா? யார் வீட்டுக்கு யார் சம்பந்தி ஆகறது? சொந்தக்காரங்கன்னா உடனே சம்பந்தம் பண்ணிடறதா?…” என்று அழகர் கூறவும் சாந்தா விக்கித்து போனார்.
“அழகர் சொல்றது சரிதாண்ணே…” என சுடர்மணியும் கூற,
“நீயும் என்னப்பா இப்படி பேசற? சொந்தத்துக்குள்ள வெடுக்குன்னு பேச முடியுமா? கதிர்வேலன் மாப்பிள்ளை என்ன நினைப்பார்?…” என்றார் ஞானசேகரன்.
“யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. இதுக்கு நான் ஒத்துக்கவும் முடியாது. நீங்களும் இதுல தலையிடாதீங்க. நான் பேசிக்கறேன் அவங்கட்ட. என்கிட்ட வந்து சொல்லட்டும்…” என்று முடிவாய் சொல்லியவன்,
“யாரை எங்க வைக்கனும்ன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க. இல்லைன்னா நாளைக்கு ரோட்டுல போறவன் கூட தட்டை தூக்கிட்டு நடுவீட்டுக்கு வருவான். நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல நிப்பாட்டினதுக்கு இது தேவைதான்…” என்று சொல்லிவிட்டு அழகர் வரும் சத்தத்தில் சட்டென சாந்தா வெளியேறிவிட்டார்.
கண்ணீர் கொப்பளித்து வந்தது. இத்தனை கோபத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை.
விருப்பமில்லை என்றால் ஒற்றை வார்த்தையில் சொல்லியிருந்தால், தானே கூட தள்ளி இருந்திருக்கலாம். இப்படியான சொற்கள் சாந்தாவை குத்தி கிழித்தது.
வளர்த்த குடும்பம். அவரால் அவர்களை குறை கூறவோ, கோபம் கொண்டு பேசவோ முடியாது. கண்ணீரை அடக்கிக்கொண்டு தன் வீடு வந்துவிட்டார் சாந்தா.
சற்றுநேரத்தில் மாணிக்கவல்லி சாந்தாவுக்கு கைப்பேசியில் தொடர்புகொள்ள எடுப்பதா வேண்டாமா என்னும் யோசனை. எடுத்துவிட்டார்.
“சொல்லுங்க மதினி…” என்று சுரத்தில்லாமல் பேச,
“என்ன சாந்தா வாசவரைக்கும் வந்தவ அப்படியே போய்ட்ட போல? தில்லை வந்து சொன்னா நீ வந்தன்னு. பார்த்தா காணுமே?…” என்றார்.
“அடுப்புல வேலையா இருந்தேன் மதினி. ஒரு யோசனையில அங்க வந்துட்டேனா. அதான் சரி முடிச்சிட்டு அப்பறம் வருவோம்னு திரும்ப வீட்டுக்கு வந்தேன்…” என்றார் அழுகையை அடக்கிக்கொண்டு.
“உன் குரலே என்னமோ போல இருக்கே…” என்ற கனிவில் சாந்தாவின் கண்களில் கண்ணீர்.
“தாளிச்சு கொட்டினது. மூக்குல ஏறி இருமிட்டேன். அதான் போல…” என்று சமாளித்தவர்,
“அப்பறம் பேசட்டா மதினி…” என்று வைத்துவிட்டார்.
மாணிக்கவல்லி போனை வைத்துவிட்டு தில்லையிடம் சொல்லிக்கொண்டிருக்க அழகர் வெளியே வந்தான்.
“படிக்கிற பொண்ணுக்கு சம்பந்தம் பேசினப்பவே அவன் மொகரையை பேத்திருந்தா வீடு வரைக்கும் வந்திருக்குமா? ராஸ்கல். என் கண்ணுல சிக்கட்டும் டவுனுக்குள்ள…” என்று கத்திக்கொண்டிருந்தான்.
புகழ்மதியை விருப்பப்பட்டு கதிர்வேலனின் தூரத்து உறவினர் கேட்டிருக்க அதற்கு அத்தனை ஆவேசம்.
“படிக்கிற பச்சப்புள்ளைய என்ன கண்ணோட்டத்துல பார்த்திருக்கான்….” என்று இன்னும் அழகருக்கு ஆறவில்லை.
இதை எதையும் புரியாமல் அது தங்களுக்கான விவாதம். தன் மகளின் திருமணம் சம்பந்தமானது என்று நினைத்து சாந்தா துபாய் திரும்பிய பின்பு கதிர்வேலனிடம் கூற அவருக்குமே நம்பமுடியவில்லை.
பேச்சுக்கள் மயில்வாகனன் வரை செல்ல ஏற்கனவே தன் தொழில்முறை நண்பரின் மகனுக்கு விருஷ்திகாவை கேட்டவருக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்ததை போலிருக்க அத்தனை சந்தோஷம்.
மனம் கலங்கி இருந்தவரிடம் பேசி பேசிய தன் பக்கம் இழுத்தவர் பேச்சுவாக்கில் கதிர்வேலனே அந்த சம்பந்தத்திற்கு சம்மதம் சொல்லவும் வைத்துவிட்டார் நயவஞ்சகமாக.
அழகர் குடும்பத்தின் மீது ஆதங்கத்திலும், ஆற்றாமையிலும் இருந்தவர்களுக்கு அடுத்து மகளின் எதிர்காலம் என்று வருகையில் வேறு முடிவினை எடுக்க தோன்றவில்லை.
இதனை சாந்தா அழுதுகொண்டே சொல்லி முடிக்க தலையில் அடித்துக்கொண்டான் அழகர்.
“உங்களை என்ன தான் செய்யறது? நான் தான் அவசரப்பட்டேன்னா நீங்க அதுக்கு மேல இருக்கீங்க…” என்று பல்லை கடித்தவனால் அந்த பிழையை ஜீரணிக்கவே முடியவில்லை.
எங்கே இந்த சங்கடத்தின் ஆரம்பம் என்று அப்போது தான் தெரியவர அனைவருக்குமே தாளமுடியவில்லை.
“ஏம்மா சாந்தா, உன்னை அப்படியாம்மா நாங்க நினைச்சோம்ன்னு நீ வருத்தப்பட்ட? அம்புட்டுத்தானா நீ எங்களை புரிஞ்சுக்கிட்டது?….” என அம்மையப்பன் கேட்கையிலே மனம் கலங்கி போனார்.
சாந்தாவிற்கே தான் கேட்டது சரியா தவறா என்று இப்போது பதட்டம் வர, தங்களை பேசவில்லையா இவர்கள் என்று இந்தநொடி யோசித்து திக்கற்ற பிள்ளையாய் பார்த்தார் அவர்களை.
“உன் புருஷனோட சொந்தக்கார பைய ஒருத்தன் எப்பவும் இங்க சுந்தரம்ன்னு வருவானே. அவன் மகனுக்கு நம்ம மதியை கேட்டு வந்து நின்னான். அவனும், அவன் குடும்பமும் என்னன்னு உனக்கு தெரியாதா சாமி. அந்த கோவத்துல அழகரு பேசினது சாந்தா…” என்று வேதனையோடு கூறினார்.
“என்னதான் பொண்ணுன்னு வளத்தாலும் இந்தா வேறன்னு காமிச்சிட்டாளே. ஒத்த வார்த்த என்கிட்டையாச்சும் கேட்டாளா பாதகத்தி…” என்று அழகுமீனாள் ஒருபுறம் அங்கலாய்க்க ஒவ்வொருவருமே இதில் ஸ்தம்பித்து போய் பார்த்தனர்.
“ஆத்தா…” என்று சாந்தா வர,
“போயிடுத்தா. கண்டமேனிக்கு பேச போறேன்…” என்று முகம் திருப்பினார் அழகுமீனாள்.
மாணிக்கவல்லி, தில்லை இருவரும் கூட இதனை எதிர்பார்க்கவே இல்லை. தங்களிடமாவது கேட்டிருக்கலாமே என்று பார்த்திருந்தனர்.
விருஷ்திகாவிற்கு ஒன்றுமட்டும் புரிந்துபோனது. தவறான புரிதல்களினால் உண்டான விளைவே இந்த சங்கடங்கள் என்று.
அவள் ஒருபுறம் பேச்சற்று நிற்க எங்கே குடும்பம் சேர்ந்துவிட்டதோ என்று பதறிவிட்டார் மயில்வாகனன்.
“அதுக்காக இவன் எங்க வீட்டு பொண்ணை வீதில வச்சு தாலி கட்டுவானா?…” என கேட்டு,
“இவளும் என்ன? பெத்தவனை ஏமாத்திட்டு போனவ தான? அதுக்கு அனுபவிக்க வேண்டாம். இந்த குடும்பத்தையே நான் சும்மா விடமாட்டேன். என் தம்பியை இப்படி நிக்க வச்ச ஒருத்தரையும் விடமாட்டேன்…” என்று கதிர்வேலனின் கோபத்திற்கு தூபம் போட,
“வாயை மூடுய்யா. இது என் குடும்ப விவகாரம். நீ வெளில போ…” என்று அழகர் எகிற,
“அழகர், என் அண்ணன் என்ன தப்பாவா சொல்றாரு….” என்றதுமே விருஷ்திகா தளர்ந்து போனாள்.
“ஆமா, தப்பா தான் சொல்றான். இந்த பன்னாடை தப்பா தான் பேசறான். தப்பு தான். எல்லாமே தப்பு தான்…” என அழகர் இரைய, ஆத்திரத்தில் எங்கே சொல்லிவிடுவானோ என்று விருஷ்திகா அவனின் கையை பிடிக்க,