சிலநொடிகள் ஒருவரும் அசையவில்லை. ஸ்தம்பித்து சிலையாய் நின்றுவிட்டனர் அவன் சொல்லிய உண்மையில்.
அதிலும் கதிர்வேலன், சாந்தாதேவி மனமெல்லாம் அத்தனை வேதனை அலை.
அவர்களின் மௌனத்தில் பெருமூச்சுடன் தலையசைத்த அழகர் திரும்பி விருஷ்திகாவை பார்த்தான்.
“உனக்கு மாமான்னு கூப்பிட வேற நேரம் காலமே இல்லையாடி?…” என்று அந்தநிலையிலும் ரகசியம் பேச, அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது.
“ஏன் இப்படி பண்ணுனீங்க?…” என்றாள் கோபமும், ஆற்றாமையுமாய்.
வாழ்க்கையின் அவன் வெறுத்த இருநாட்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இப்படியா இன்றைய நாள் அமையவேண்டும் என சஞ்சலம் கொண்ட மனதுடன் அவளை கைபிடித்து தன் அருகில் இழுத்து நிறுத்தினான்.
“ப்ச், எதுக்குடி அழற. அதும் இன்னைக்கு?…” என்று கன்னம் தொட்டு கண்ணீர் துடைத்தவன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.
“ஆனா லக்ஷ்மிக்கு பிடிக்காம எதுவும் நடக்கலை. அவளோட சம்மதத்தை அத்தனைதடவை கேட்டு அவளுக்கும் விருப்பம்ன்னு தெரிஞ்சதும் தான் கல்யாணம் செஞ்சேன். என்ன ஒண்ணு அப்பவே கல்யாணம்ன்னு அவளுக்கு தெரியாது…” என்றும் தெளிவு படுத்தினான் அவன்.
“சரியான கிரிமினல். சொன்னவரை போதும் சாமி. மத்ததையும் சேர்த்து சொல்லி தொலையாதீங்க…” அப்பட்டமான மிரட்டல் அவளிடம்.
“அதெல்லாம் முடியாது….” என்று இவளும் பேச, என்ன நடக்கிறதென்று அவன் கூறி கேட்டதிலிருந்து, இருவரின் ரகசிய சம்பாஷனை என்ன என்று பார்த்தனர்.
அனைவரின் பார்வை குறுகுறுப்பில் இருவருமே மற்றவர்களை நோக்கி திரும்ப,
“அழகரு…” என்று அம்மையப்பன் அருகில் வரும்முன்,
“பிராடு ராஸ்கல்…” என கதிர்வேலன் அழகரின் மேல் பாய வர, இடை புகுந்தாள் விருஷ்திகா.
“அப்பா, அவ்வளோ தான்…” என்றவளின் ஆவேச பார்வையில் கதிர்வேலன் நிதானித்தார்.
“எனக்கு பிடிச்சு தான் கல்யாணம் நடந்துச்சு. அந்தநிமிஷம் அது நடக்க போறதுன்னு தெரியலைன்னாலும், மாமா கேட்டிருந்தா அதுக்கும் நான் சரின்னு தான் சொல்லியிருந்திருப்பேன்….” என்றவள்,
“இதுக்கு மேல அவரை மரியாதை இல்லாம பேசவோ, இது சம்பந்தமா கேட்கவோ கூடாது நீங்க…” என்றவள்,
“எப்போ எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னீங்களோ அப்படியே இருக்கட்டும்…” என்று சொல்லிவிட்டாள் விருஷ்திகா.
“விருஷ்தி…” என சாந்தா பதற அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை மகள்.
“உங்க சொத்து இங்க யாருக்கும் வேண்டாம். தேவையும் இல்லை. அதை நீங்க யாருக்கு குடுத்தா எனக்கு என்ன? அதான் தலைமுழுக போறேன்னு சொன்னீங்களே. அதை செய்ங்க. சந்தோஷம். இப்ப தயவு செஞ்சு கிளம்புங்க ப்ளீஸ்…” என கையெடுத்து கும்பிட்டுவிட கண்கலங்கினார் கதிர்வேலன்.
தான் சொல்லியபோது உரைக்காத ஒன்று மகள் கூறியபொழுதில் சுரீரென தாக்கியது.
“லக்ஷ்மி, பேசாம இரு…” அழகர் கூற,
“ஏ எம்பேத்தி பேசினதுல என்ன ராசா கொற? நீ பேசுத்தா…” என்று அழகுமீனாள் முன்வர, அவரை ஒரு முறை முறைத்தாள் விருஷ்திகா.
“இப்ப மட்டும் பேத்தி…” என்றவள்,
“ம்மா, இவரை கூட்டிட்டு கிளம்புங்க. இனிமே இந்த வீடு, சொத்து சம்பந்தமா இந்த வீட்டுல இருந்து யாரும் பேசமாட்டாங்க. முக்கியமா நான். சும்மா பெத்துட்டோம்ன்னு யாரும் எனக்கு பிச்சை போடவேண்டாம். தேவையும் இல்லை…” என்று சாந்தாவிடம் கூறி,
“இது உங்களுக்கும் தான். யாரும் என்னவும் செய்யட்டும். உங்களுக்கு என்ன வந்துச்சு? நீங்க காப்பாத்த போறீங்களா?…” என்று அத்தனைபேரின் முன்பும் அழகரையும் ஒரு போடு போட,
“யாத்தே ஏ மன்னவர போய்…” என்று அழகுமீனாள் வர, அழகர் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவரை ‘வராதே’ என தலையசைத்தான்.
“சொல்லியாச்சு. இப்ப நீங்க கிளம்புங்க…” என்ற விருஷ்திகா கீழே கிடந்த அந்த வக்கீல் நோட்டீஸை எடுத்து கிழித்து குப்பை கூடையில் போட்டுவிட்டு,
“இந்த முகத்துமேல வீசி எரியிறதெல்லாம் வேண்டாம். முதல்ல யார்க்கிட்ட பேசறோம், என்ன பேசறோம்ன்னு பார்த்து பேசுங்க. நாளைக்கு அதுவே உங்களுக்கு எதிரா நிக்கலாம். அப்போ உங்க முகத்தை எங்க வச்சுப்பீங்க?…” என்றவள் இப்போது அப்பா என்ற அழைப்பை நிறுத்தி இருந்தாள்.
“இவ ஒருத்தி ஆவூனா உறவுமுறைய நிப்பாட்டி வச்சிருவா…” என்றவன் பார்வையில் மயில்வாகனன் சந்தோஷமாக நிற்க கண்டு இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.
“அப்பறம் தம்பி வாகனம், ஏறுவோமா?…” என்றான் அழகர் விருஷ்திகாவை விட்டு முன் வந்து.
“ஏய் என்ன மரியாதை இல்லாம பேசற?…” என்ற மயில்வாகனன்,
“கதிரு, அதான் எல்லாம் பேசியாச்சே. உம்மகளுக்கு அவன் கிறுக்கு புடிச்சிருக்கு. அதுதான் பெத்தவன்னு பார்க்காம உன்னை தூக்கி எரிஞ்சு பேசறா. வா நம்ம போகலாம். நாளைக்கு கண்ணை கசக்கிட்டு வரும்போது தெரியும்…” என்று கதிர்வேலன் கையை பிடித்து இழுக்க,
“அதெப்படி போகவிட்டுடுவேன். கொஞ்சம் இரு வாகனம், உனக்கான வண்டிக்கு சொல்லிருக்கேன். போலாம்…” என்றவன், விருஷ்திகா புறம் திரும்பி,
“லக்ஷ்மி, அமைதியா இருக்கனும். எதாச்சும் இதை பேசாதீங்க, அது இதுன்ன…” என்றவன் தான் எடுத்து வந்திருந்த காகிதங்களை பார்த்தான்.
“உங்களோட பேச எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. ஆனாலும் பேசித்தானே தீரவேண்டியிருக்கு. தீர்க்கவேண்டியதுமிருக்கு. அதுவும் நீங்க இவ்வளோ பேசின பின்னாடியும் விட்டுட்டு போக நான் என்ன…” என்று வார்த்தைகளை நிறுத்தி,
“உன்னால மனசுல நினைச்சதை கூட பேசமுடியலை…” என்று அவளை உறுத்து விழித்துவிட்டு,
“நாம பேசலாம். எங்க கல்யாணம், அது நடந்த விதம் எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்போ அதை பத்தி பேசறதுக்கு எதுவும் இல்லை. ஆனா உங்க குடும்பத்துக்குள்ள நடக்கறதுக்கெல்லாம் என்னை காரணம் காண்பிச்சோ, இல்லை என்னாலன்னு சொல்றதையோ நான் பொறுத்து போகனும்ன்னு அவசியம் இல்லை…”
“இங்க நீங்க என் பொண்டாட்டியை பெத்தவர் மட்டும் தான். அதுவும் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தலையை முழுகிட்டேன்னு சொல்லி முடிச்சாச்சு. நல்லது…”
“இப்ப நடந்ததுலையே தெரிஞ்சிடுச்சு, சின்னவிஷயத்துல புரிதலும், பகுத்தாராய்வும், தீர விசாரிப்பும் இல்லைன்னா எத்தனை ஒற்றுமையா இருந்தாலும் நொடில பிரிஞ்சிடத்தான் செய்வாங்க. இங்க அதுதான் நடந்திருக்கு….”
“இங்க எல்லாருக்குமே புரிதல் கம்மி தான். அவசரம் அதிகம் தான். மனவருத்தங்கள், தீரா காயங்கள் மட்டுமே மிச்சம். இங்க பாதிப்பு லக்ஷ்மிக்கு மட்டுமே. அவ ஒருத்தி தான் இதுல கஷ்டப்பட்டது. ஒவ்வொருத்தரோட அனுமானங்கள் எங்க கொண்டுவந்து விட்டிருக்கு….”
“இது என்னையும் சேர்த்து தான். அரைகுறையா கேட்டுட்டு என்னன்னு விசாரிக்காம கிளம்பி போய் முடிவை மாத்தின மிசஸ் சாந்தாதேவியாகட்டும், உங்க முடிவு மாறிடுச்சுன்னு தெரிஞ்சதும் அதுல கோவப்பட்டு பாடம் புகட்டறேன்னு நான் எடுத்த முடிவாகட்டும் எல்லாமே அவசரக்கோலம் தான்…”
“நானாவது விசாரிச்சிருந்திருக்கனும். இல்லை விசாரிக்க சொல்லியிருந்திருக்கனும். எதுவுமில்லாம அப்படி முடிவுக்கு வந்துட்டேன். இல்லைன்னா உங்க முடிவே மாறியிருந்தாலும் லக்ஷ்மிக்கு வேற வரனை என்னை மீறி கொண்டு வந்திருக்கமுடியாது…” என்றான் அத்தனை திருமிருடன்.
‘இப்ப எதுக்கு இதெல்லாம்?’ என விருஷ்திகா பார்த்திருக்க, மற்றவர்களிடம் மௌனம் மட்டுமே.
மயில்வாகனன் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தார் என்ன பேச போகிறானோ என்று.