“செத்த பொணம். அந்தாளை தொட்டு நீங்க கஷ்டப்படாதீங்க….” என்று கூறியவன், கதிர்வேலனை பார்வையால் துளைத்தான்.
அவனின் பார்வை உணர்ந்தும் அவருக்கு நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. எத்தனை பேசிவிட்டோம் என்று தலைகுனிந்து நின்றவருக்கு தன் அண்ணனை கேள்வி கேட்கவேண்டும் என்று கூட தோன்றவில்லை.
ஏமாளித்தனம் தன்னுடையது. தன்னை பயன்படுத்திக்கொண்ட அவரை சொல்லி நோகமுடியுமா?
முட்டாள் முட்டாள் என்று தன்னை எத்தனை கூறினாலும் தகும் என்றே தோன்றியது.
அதிலும் மனைவியை இழந்து இரு பிள்ளைகளை வைத்து தத்தளித்தவருக்கு, இந்த சமயத்தில் தான் கை தூக்கிவிட முடியும் என அவருக்காகவே பார்த்து கவனிக்க, இப்படி ஒரு குணமிருக்கும் என்று நினைக்கவே இல்லை அவர்.
‘கதிரு, பொண்ணை வச்சிருக்கய்யா. அவளுக்கு எடுத்து வச்சிட்டு மிச்சத்தை தொழில்ல போடலாம்.’ என்று ஒரு நடிப்பு.
‘என் பாட்னர் நான் இன்வெஸ்ட் பண்ணலைன்னு தெரிஞ்சா மதிக்கமாட்டான். நம்ம ஒரு தனி அக்ரிமென்ட் போட்டுப்போம். ஆனா அவன்கிட்ட நான் தான் பாட்னர். நீ சைலன்ட் பாட்னார்னு சொல்லி சைன் அத்தாரிட்டியை எடுத்துக்கறேன். இதுல உனக்குமே சிரமம் இல்லாம உனக்கும் சேர்த்து நான் அங்க உழைக்கேன்டா’ என்றொரு நடிப்பு.
‘இவ்வளோ தான் ப்ராபிட். அது தான் விருஷ்திக்கு இதை வாங்கிட்டு வந்தேன். அடுத்த வீட்டுக்கு போக போற பிள்ளை. என் பசங்களுக்கு தான் நீ இருக்கியே’ என்றொரு நடிப்பு.
இப்படி கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறோமே என நொந்து, வெந்துபோய் அவர் நிற்க, யாரோ வேகமாய் உள்ளே வரும் சப்தம்.
“வாங்க பெருமாள்…” என்ற அழகரின் குரலில் யார் என்று நிமிர்ந்து பார்க்க, காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தான்.
“ஹலோ அழகர்…” என்று வந்ததும் கை கொடுத்தவன்,
“ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியாச்சு. அப்ரூவராகிட்டானுங்க. உள்ளூர் கிடையாது. வெளியூர் பசங்க தான்…” என்று அவன் கூற மயில்வாகனன் பீதியில் உறைந்துகொண்டிருந்தார்.
“என்ன அழகரு? என்ன விஷயம்ய்யா?…” என ஞானசேகரன் கேட்க,
“ஹ்ம்ம், சொல்றேன்…” என்ற அழகர்,
“அக்யூஸ்ட் இதோ…” என்றான் மயில்வாகனனை காண்பித்து.
“நானா? நான் என்ன செஞ்சேன்? டேய் என்ன என்னை பயம்காட்ட பார்க்குறியா? உன் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் பார்த்துக்கோ….” என்று குதிக்க, கதிர்வேலன் இன்னும் என்ன என்று பார்த்தார்.
“அடம்ட் டூ மர்டர். அதுவும் வெளியூர்ல கூலியாளை ஏவி. இதோ…” என்று தன்னை குனிந்து காண்பித்த அழகர் கூறவும், அனைவருக்குமே இதயத்துடிப்பு நின்றுவிட்டது.
“என்ன? கொலை முயற்சியா?…” என்ற விருஷ்திகா அதிர்ச்சியில் மயங்கி சரிய,
“ஹேய் லக்ஷ்மி…” என்று தாங்கி பிடித்தான் மனைவியை.
அனைவருமே பதறி வர, மாணிக்கவல்லியும், தில்லையும் அவளை பிடித்துக்கொள்ள தண்ணீரை கொண்டுவந்து தெளித்தனர் அவள் முகத்தில்.
“சித்தி என்கூட வாங்க…” என்று அவளை தூக்கிக்கொண்டவன் அருகிலிருந்த அறைக்கு கொண்டுசெல்ல, சாந்தாவுமே உடன் வந்தார்.
“சித்தி நீங்க மட்டும் இருங்க…” என்றவன் மாமியாரை முறைக்க, ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டார்.
“அழகர் உங்க மிஸஸ்…” என்று இன்ஸ்பெக்டர் கேட்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை பெருமாள். அதிர்ச்சில வந்த மயக்கம் தான்…” என்றவன், நெற்றியை நீவியபடி,
“தாயாக போறா. இந்தமாதிரி நேரத்தில மயக்கம் சகஜம் தானே?…” என்றும் மெல்லிய சிரிப்புடன் அவன் கூற, மீண்டுமொரு அதிர்வு.
சந்தோஷம் கூடினாலும் இப்படியான சூழ்நிலையிலா இதனை தெரிந்துகொள்ளவேண்டும் என்று மனம் வருந்தி பார்த்தனர்.
கதிர்வேலனுக்கு முகத்தில் அறைந்துகொண்டு அழவேண்டும் போலிருந்தது. மகளின் உறவை இழந்துவிட்டோம் என்றும் புரிந்தது.
“ஓகே, நீங்க பிரசீட் பண்ணுங்க…” என்றான் அழகர்.
“இல்ல, நான் எதுவும் செய்யலை. நான் எங்க செஞ்சேன்?…” என்ற மயில்வாகனன்,
“கதிரு சொல்லுடா. நான் செய்யலைடா. ஆமா உன் சொத்தை புடுங்கி உன்னையும், உன் மகளையும், இவனையும் ஒண்ணுமில்லாம செய்யனும்ன்னு நினைச்சேன் தான். ஆனா நான் ஆளை அனுப்பலை. அந்த பில்டர் தான் அனுப்பினான். எனக்கு அவ்வளோ தான் தெரியும்…” என்று தன் வாயாலேயே உளறிவிட,
“டேய்…” என்று கதிர்வேலன் வெகுண்டுவிட்டார்.
தான் ஏமாற்றப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், தன் மகளை பழிவாங்குவேன் என்றதும், மருமகனை கொலை செய்ய முயன்றதை அறிந்தும் மௌனம் காத்ததும், அவரால் பொறுக்க முடியவில்லை.
“உன்னை போய் என் தகப்பன் ஸ்தானத்துல வச்சு நம்பினேன் பார்த்தியா? சொத்து ஆசைல என் புள்ளையோட வாழ்க்கையையே கெடுக்க பார்த்தியே. நீயெல்லாம் மனுஷனா?..” என்று கதிர்வேலன் வெளுத்துவிட யாரும் விலக முன்வரவில்லை.
எவ்வளவு அடிக்க முடியுமோ அடிக்கட்டும் என்று அழகருமே கைகட்டி வேடிக்கை பார்த்தவன், கதிர்வேலன் மூச்சிரைப்பதை கண்டு,
“பெருமாள்….” என்றான் மூக்கை நீவியபடி.
“ஸார், போதும் செத்துட போறான்…” என்று மயில்வாகனனை கொத்தாக ஒற்றை கையில் அள்ளிக்கொண்ட பெருமாள்,
“அழகர், வேற எதாச்சும் கம்ப்ளைன்ட் இருக்கா? இல்லை இது மட்டும் தானா?…” என்று கேட்க,
“அதை சம்பந்தப்பட்டவங்க குடுப்பாங்க. நீங்க என்னோட கம்ப்ளைண்ட்க்கு அந்த பில்டர்ஸ் மேலையும் சேர்த்து ஆக்ஷன் எடுங்க. சம்பந்தமில்லாத விஷயத்துல நான் தலையிடறதில்லை…” என்று கையை தட்டிக்கொண்டான் அழகர்.
“ஓகே…” என்ற பெருமாள் கதிர்வேலனை பார்க்க,
“நான் குடுக்கறேன் ஸார் கம்ப்ளைண்ட். சீட்டிங், சொத்தை ஏமாத்தி விக்க பார்த்தது. போர்ஜரி டாக்குமெண்ட் இப்படி எல்லாம் சேர்த்து….” என்று வரிசையாய் கதிர்வேலனும் கூற, மயில்வாகனன் மூடிய கண்களை திறக்கமுடியாமல் திறந்து பார்த்தார்.
இப்படியே போனால் எங்கே தன் மொத்த வாழ்கையும் முடிந்துவிடும் என்று பயந்தவர் மனமெல்லாம் நடுக்கம்.
இப்படி மாட்டிக்கொள்வோம் என்று நினைக்கவே இல்லையே. கதிர்வேலனை மலைபோல நம்பியிருந்தவருக்கு, எப்படியும் எந்த சூழ்நிலையையும் சமாளித்துவிடலாம் என்னும் இறுமாப்பு.
இதில் அவர் எதிர்பாராதது அழகர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ். அதனை பார்த்ததுமே கதிர்வேலன் பொங்கிக்கொண்டு இங்கே வந்து இப்போது தன் நிலை கவலைக்கிடம் என்று புரிந்துபோனது.
கெஞ்சவும், கதறவும் கூட முடியாத நிலையில் தான் இருந்தார் மயில்வாகனன்.
“நீங்க எது சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷன் வந்து சொல்லுங்க….” என பெருமாள் கூற,
“மனசு மாறிடும். அந்த கம்பளைன்ட் வராது பெருமாள். நீங்க நான் சொல்ற கம்ப்ளைன்ட்ல உள்ள போடுங்க. இவன் வெளிலையே வர கூடாது…” என்றான் அழகர் கோபத்தில் முகம் இறுக.
அவன் சொல்லியதே கதிர்வேலனை குறுக செய்ய, வார்த்தையின்றி வருத்தமாய் பார்த்தார் அவனை.
கொஞ்சமும் அவர் புறம் திரும்பாதவன் பெருமாளை பார்த்து கண்ணமர்த்தினான். எப்படியும் கதிர்வேலன் செல்வார் தான்.
ஆனாலும் இப்படி பேசவில்லை என்றால் எங்கே பின்வாங்குவாரோ என்றுதான் அவனும் அப்படி பேசியது.
செல்லும்போழுதே அழகரை மயில்வாகனன் கெஞ்சலாய் திரும்பி பார்க்க, கொஞ்சமும் இளக்கமில்லை அழகரின் முகத்தில்.
“பாடையில போவ, கட்டையில போவ. எங்க தெசப்பக்கம் பாத்த…” என்று அழகுமீனாள் தன் பங்குக்கு சென்று கொண்டிருந்த மயிலின் தலையில் தன் ஊன்றுகோலை வைத்து நங்கென்று பலமாய் ஒரு அடி.
அவர்கள் சென்றதும் பெருமூச்சுடன் நின்றவனை ஓடி வந்து மாணிக்கவல்லி அணைத்துக்கொள்ள, அப்படி ஒரு அழுகை.
“ப்ச், நான் நல்லா தான் இருக்கேன் ம்மா…” என்று சொல்லியவன் மற்றவர்களை பார்க்க, அழகுமீனாள் அழுகையோடு பாட்டை ஆரம்பித்துவிட்டார்.