சொந்தங்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்பது ஒருரகம் என்றால், ஏமாளியாய், அடிமுட்டாளாய் நிற்பது இன்னொரு ரகமாகிற்றே.
கதிர்வேலன் வந்துகொண்டிருந்தார் மனதிற்குள்ளேயே. இத்தனை தூரம் தன் நிலை கீழிறங்கும் என்று துளியும் நினைத்ததில்லை அவர்.
இத்தனை நாட்கள் அழகரின் செயலால், மகள் செய்த காரியம் என்று அவர்களை அவர் தண்டிப்பதாக ஒதுங்கி இருந்தார்.
அதற்கு பலனாய் வார்த்தைகளையும் விட்டு அத்தனை அவமானம் செய்து பேசிவிட்டார் மருமகனையே.
இப்போது எல்லாவற்றையம் ஒன்றுமில்லாமல் செய்ததோடு தன் முகத்தில் பூசப்பட்ட கரியையுமே காண்பித்துவிட்டானே.
கண்ணீர் பொங்கி நிற்க, யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அதையும்விட இனி மகள் முகத்தில் எப்படி விழிப்பது? தவறே செய்யாமல் எத்தனை தூரம் அவளை விலக்கி வைத்ததோடு அத்தனைக்கும் உச்சமாய் தலைமுளுகிவிடுவேன் என்று வார்த்தையால் கொண்டுவிட்டாரே.
“ஐயோ…” என்று சட்டென முகத்தில் அறைந்துகொண்டு அழுதுவிட்டார் கதிர்வேலன்.
“கதிரு, என்னய்யா?…” என அம்மையப்பன் தான் வந்து அவரை தாங்கி பிடித்தது.
ஞானசேகரன் மனம் வருந்தினாலும் சட்டென்று நெருங்கி போய் பேசவில்லை.
சுடர்மனிக்கு வருத்தம் எதுவும் இல்லை. இவருக்கு தேவைதான் என்று நின்றிருந்தார் அவர்.
வல்லியும், அழகுமீனாளும் கண்கள் கலங்க பார்த்திருக்க, சாந்த அதான் அவரின் அருகில் நின்றிருந்தார்.
“மன்னிச்சிடுங்கன்னு கேட்க கூட அருகதை இல்லாம நிக்கிறேன் மாமா. நான் பேசினதையும், செஞ்ச பாவத்தையும் எங்க போய் கழுவ? ஏமாந்து நின்னேன், ஆனா இப்ப என் பொண்ணையும் சேர்ந்துல இப்ப இழந்துட்டு நிக்கிறேன். இனிமே அவ முகத்துல என்னன்னு முழிப்பேன்?…” என்று கதற,
“சரிய்யா, சரிய்யா. விடு…” என்று எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டார்.
மீண்டும் அழகர் குளித்து முடித்து உடைமாற்றி வரும் வரையிலும் கதிர்வேலன் அங்கே அழுதபடி இருக்க, சாந்தாவை அழகுமீனாள் வசைபாடியபடி பார்க்க கண்டவன்,
“ப்ச், அப்பத்தா…” என்று ஒரு அதட்டல் தான்.
“ஆத்தமாட்டாம பேசிட்டேன் ராசா…” என்று கண்ணீரை துடைத்தார்.
“மன்னிச்சிடும்மா…” என்று அவரின் கால்மாட்டில் அமர்ந்து சாந்தாவும் கண்ணீர் சிந்த,
“போடி அங்கிட்டு, ஒன்னிய அப்படித்தான் வளத்தோமா நாங்க?…” என்று அவரின் கையை தட்டிவிட்டார் அழகுமீனாள்.
“இங்காரு கதிரு, கண்ண தொட மொதல்ல. மனுசன்னா தப்பும் தவறுமா இருக்கத்தான் செய்யுவான். அதுக்கென்ன? போதாத நேரமின்னு நெனச்சிக்குவோம். இனிமே ஒரு விசயத்த பேசமுன்னையோ, செய்யமுன்னையோ பாத்து முடிவுக்கு வாய்யா…” என்ற அம்மையப்பன்,
“மனசுக்குள்ள என்னத்தையும் வச்சிக்கிட்டு மருவாம, என்னவும் கேக்கனுமின்னா கேட்டுட்டு. இப்பிடி விசாரிக்காம நீயி ஒன்னு செய்ய, அது எங்க வந்து நிக்குது பரு…” என்று கூற மற்றவர்கள் மௌனமாய் இருந்தனர்.
“மொத போயி அந்த தொடப்பக்கட்டைய குப்பையில வீச சொல்லும். இங்கினியே அழுதா ஆச்சா?…” என்று அழகுமீனாள் மயில்வாகனனை பற்றி சொல்லவும் தான் கதிர்வேலனும் கண்ணை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தார்.
“நீ வெசனப்படாத கதிரு. நீரடிச்சு நீர் வெலகிடுமா? காலப்போக்குல சரியா போவும்…” என்று சொல்லவும்,
“விடுத்தா. அதான் ஐயா சொன்னாருல. போதாதநேரம். அம்புட்டுத்தேன்…” என்று விட்டார் ஞானசேகரன்.
“இனியாச்சும் புத்தியோட பொழைக்க பாரு…” என்று சுடர்மணி ஒரு குட்டு வைத்தார்.
அனைத்தையும் பார்த்து நின்ற அழகர், அம்மையப்பனிடம் தலையசைத்துவிட்டு விருஷ்திகாவை தேடி சென்றான்.
“இன்னும் எழுந்துக்கலையா இவ?…” என உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்து கேட்க,
“கெறக்கமா இருக்குன்னு கண்ணை மூடியிருந்தா. குடிக்க கொண்டுவர்றேன். நீ பேசிட்டிரு அழகரு…” என்று தில்லை நகரவும் கட்டிலின் நுனியில் அமர்ந்தான் அழகர்.
“லக்ஷ்மி…” என்று அவன் அழைக்கவும் மூடியிருந்த விழியோரம் கண்ணீர் உருண்டோடியது.
“இப்ப எதுக்கு இந்த அழுகை? எழுந்து என்னை பாருடி…” என்றான் கோபமாய்.
சட்டென்று விழி திறந்தவள் எதிரே மெலிதாய் புன்னகையுடன் அவன் அமர்ந்திருந்த தோரணை கண்டு மேலும் கீழும் பார்த்தாள்.
“எப்படி, மாப்பிள்ளை மாதிரி இருக்கேனா?…” என்று கண் சிமிட்ட,
“நினைப்பு தான். பேசாதீங்க ஆமா…”
“அப்போ அந்த மாமா?…”
“ரொம்ப முக்கியம். ஒரு வேகத்துல சொன்னது. இனிமே சொல்லவே மாட்டேன்…” என்றவளின் தோளை பிடித்து எழுப்பி அமரவைத்தான்.
அவன் எழுப்பியதுமே அவன் மீது சாய்ந்தவள் கைகள் இறுக்கமாய் பற்றிக்கொள்ள, அழகரும் அவளை ஆதுரமாய் தட்டிக்கொடுத்தான்.
“அதான் எதுவும் நடக்கலைல. அழுதிட்டிருக்காத லக்ஷ்மி. எல்லாரும் வெளில இருக்காங்க….” என்றும் கூறியும் அவளின் கண்ணீர் சத்தமின்றி அவனை நனைத்தது.
“சரி, போய் குளிச்சு கிளம்பி வா. ஹாஸ்பிட்டல் போவோம்…” என்றதும்,
“எதுவுமே நடக்காத மாதிரி எவ்வளோ அசால்ட்டு? நீங்களாம் என்ன மனுஷன்?…” என கோபமாக கேட்டாள்.
“என்னடி, சண்டை போடனுமா? ஒருநாளைக்கு எத்தனை சண்டை? போதும்…” என்றான் அவளின் கன்னம் தட்டி.
அதற்குள் தில்லை அவர்கள் இருவருக்கும் குடிக்க குளிர்வாய் எடுத்து வந்து தந்தவர்,
“நல்லநேரம் பாத்துட்டு போவலாம்ன்னு சொன்னாங்க அழகரு. இப்ப வேணாம்ய்யா. சாயங்காலம் ஆவட்டும்…” என்று நேரத்தையும் சொல்லிவிட்டு அவர் செல்ல,
“சரி நம்ம ரூம்க்கு வா…” என்றான் மனைவியிடம்.
“ம்ஹூம். வேண்டாம். எல்லாரும் போகட்டும். வர்றேன்…”
“எல்லாரும்ன்னா?…”
“எல்லாரும் தான்…” மீண்டும் கண்ணீர் பொங்கிவிட்டது.
“உன் அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருக்காங்க….”
“ஹ்ம்ம்…” என்றுமட்டும் முணங்க, அதற்குள் குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்துவிட்டனர். உடன் சாந்தாவும்.
ஆளாளுக்கு அவளை கொஞ்சி கொண்டாடிவிட, சாந்தா தயங்கி முன் வந்தார் மகளிடம்.
“என்னம்மா, எல்லாம் முடிஞ்சதா?…” என இலகுவாக கேட்டதற்கு நொருங்கிவிட்டார் அவர்.
“ப்ச், விடுங்க, அவர் பேசினதுக்கு நீங்க என்ன செய்வீங்க?…” என்ற்றவளால் தாயை தள்ளிவைக்க முடியவில்லை.
அதனை அனுபவித்து பார்த்தவளால் அதனை மற்றவர்களுக்கு கொடுக்க முடியவில்லை.
“ஆனா அப்பாக்கிட்ட நான் பேசவே மாட்டேன். ஆமா…” என்று சிறுபிள்ளையாய் உதடுபிதுக்கு கேவிவிட,
“மன்னிச்சிடுடா விருஷ்தி…” என்றார் சாந்தா.
பார்த்தவர்களுக்கும் கண்ணீர் உடைப்பெடுக்க அதனையே நினைத்துக்கொண்டிருந்தால் வேதனையே மிஞ்சும் என்று வரவிருக்கும் குழந்தையை பற்றி பேச துவங்கி பேச்சை மாற்றினார்கள்.
மருத்துவமனை சென்றுவிட்டு வந்த பின் சுடர்கொடி, திருமகளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தனர்.
காவல்நிலையத்தில் இருந்து அழகருக்கு அழைப்பு வந்துவிட்டது. கதிர்வேலன் வந்து புகார் கொடுத்திருப்பதாக.
அதனை பற்றி வீட்டினரிடம் கலந்து பேசியவன் மனதெங்கும் அரவிந்தின் எண்ணம் தான்.
“அரவிந்த்க்காக இதை செஞ்சுதான் ஆகனும்…” என்று அழகர் சொல்லியதில் அம்மையப்பன், சுடர்மணி, ஞானசேகரன் மூவரும் திகைத்து, கேள்வியாய் பார்த்தனர்.
“வாகனத்தை சும்மா பத்துநாள் ஸ்டேஷன்ல வைக்க சொல்லிருக்கேன். அவர்கிட்ட ஒப்புதல் வாக்குமூலம், எழுத்தாவும், வீடியோவாவும் வாங்கியாச்சு. ஆனா கேஸ் எதுவும் போடலை. ஆனா அந்த ஹோட்டல் கொண்டுவர நினைச்சவர், பில்டர் மேல கம்பளைன்ட் குடுத்திருக்கேன்….”
“அதெப்படி அழகரு?…” என்று சுடர்மணி கோபமாய் கேட்க,
“இருங்க சித்தப்பா, பத்துநாள் கழிச்சு வாகனத்தை ஒரு மிரட்டு மிரட்டனும். அவரை கட்டாயப்படுத்தி மிரட்டி தான் எல்லாம் செய்ய வச்சாங்கன்னு அப்ரூவர் மாதிரி கொண்டுவந்து கேஸை திருப்பனும். அப்பத்தான் இந்தாளுக்கும் பயமிருக்கும்…” என்றிருந்தார்.
“இதுவும் அந்த அரவிந்துக்காகவா?…” என்று சுடர்மணி கேட்க,
“கற்பூரம் சித்தப்பா…” என்று புரிந்துகொள்ளமுடியா புன்னகையுடன் இருந்துகொண்டான்.
“இது சரிப்பட்டு வருமின்னு நீ நெனைக்கிதியா?…” அம்மையப்பனும், ஞானசேகரனும் கண்டுகொண்டனர்.
“பார்க்கலாம். உடனேன்னா, உடனேவா? புகழ் படிக்கட்டும். அவளுக்கும் இன்னும் புரிஞ்சுக்கற பக்குவம் வரட்டும். பார்க்கலாம்…” என்றிருந்தான்.
ஆனால் உறுதியாகவே கூறியிருந்தான். அரவிந்தை நன்கு அறிந்திருந்தவனுக்கு இதைவிட வேறு முடிவை தேட தெரியவில்லை.
“என்னடா பேசற நீ? அந்த பொறுக்கி நாயி அங்க தான இருக்கான்? அவன் இருக்கற வீட்டுல நம்ம பொண்ணா?…” என்று சுடர்மணி கொந்தளிக்க,
“அவன் இனிமே புகளை எந்தவிதத்துலையும் பார்க்க முடியாது. காலம் முழுக்க புகளை நிமிர்ந்தே பார்க்க முடியாதபடிக்கு அவன் உக்கி போயிருப்பான் சித்தப்பா. அரவிந்தே பார்த்துப்பார்…” என்று சொல்லியவனை மீறவும் முடியவில்லை.