“என்னமோ, நீ சொன்னா சரியாத்தேன் இருக்கும். பாப்பம். ஆனா இன்னொருவாட்டி யாரையும் கேக்காம, கொள்ளாமா எந்த பேச்சும் வேணா. இப்பிடி ஒரு அப்பனுக்கும், தம்பிக்கும் நடுவுல இம்புட்டு நல்ல புள்ளை….” என்றும் சுடர்மணி ஆதங்கம் பொங்க கூற,
“இன்னும் அந்த விசாலு பயல வீட்டுல தான வச்சு பாக்குதாங்க…” என குறைபட்டார் ஞானசேகரன்.
“வேற என்ன செய்யனும்ன்னு நெனைக்குதீங்க?…” என்ற அழகர்,
“வாகனமும் ஸ்டேஷன்ல. அரவிந்தும் இங்க இல்லை. அப்போ அவனை யார் பார்க்க? அதான் நர்ஸ் போட்டுட்டாங்களே? சாந்தாத்தை தான் அப்பப்ப பேசும் போல. எம்மாமனார் இப்ப அந்தபக்கம் முறுக்கிட்டு சுத்துதாரு…” என்று சிரித்தவன்,
“வச்சா குடுமி, எடுத்தா மொட்டை கதை தான் அப்பாவுக்கும், பொண்ணுக்கும்…” என்று கூறியவன் சட்டென்று எழுந்து சென்று மனைவி இங்கே எங்கும் இருக்கிறாளா என்றும் ஒருபார்வை பார்த்துகொண்டான்.
விஷயம் அரவிந்த் வரை கதிர்வேலனால் தெரியப்படுத்தப்பட மொத்தமாய் வாழ்க்கையே வெறுத்துவிட்டது அவனுக்கு.
வெகுவாய் யோசித்து இரண்டுநாட்கள் கழித்தே தான் அழகருக்கு அழைத்தான் அரவிந்த்.
“பார்ரா, துபாய்ல விடியுது…” என்று கேலியாய் எடுத்ததும் பேசிய அழகர்,
“சொல்லுங்க அரவிந்த்…” என்றான்.
“மாப்பிள்ளை…” என்றவனுக்கு பேச்சே எழவில்லை.
அவமானத்திற்கு மேல் அவமானம். இதனை எந்தவகையிலும் தன்னால் சரிக்கட்ட முடியாதே என குமைந்து போனான்.
துபாய் சென்ற பின்னர் தான் புகளின் எண்ணம் இன்னும் வலுவாய் அவன் மனதில் வேரூன்றியது.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசமுடியும் என தன் நினைப்பை தனக்குள் புதைத்துக்கொண்டவன் வலியின் மீது சமாதியையே எழுப்பிவிட்டாரே அவனின் தகப்பன்.
“அப்பறம் அரவிந்த், எப்போ அடுத்த லீவ்?…” என்று அவனை இலகுவாக்க முயன்றான் அழகர்.
“மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை…”
“எதுக்கு தாய்மாமாவா இன்னும் நீங்க வாழ்த்து சொல்லாததுக்கா?…” என்றே பேச, அந்தவகையிலும் சட்டென அழகரிடம் பேசிவிடமுடியவில்லை அரவிந்தால்.
“அதுக்கும் தான். ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் மாப்பிள்ளை. அதுவும் இப்பவும் எனக்கு அந்த தாய்மாமன் ஸ்தானத்தை நீங்க குடுத்ததுக்கு. பெரிய மனசு உங்களுக்கு…” என்றான்.
“ரொம்ப பெரிய மனசு. அதுதான் உங்கப்பாவை உள்ள தள்ளிருக்கேன்…”
“தப்பு செஞ்சவங்க தண்டனையை அனுபவிச்சு தான் ஆகனும் மாப்பிள்ளை. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை…”
“அப்போ வேற எதுல வருத்தம்? சொல்லுங்களேன்…” என்று இலகுவாய் அவன் கேட்க தடுமாறி போனான் அரவிந்த்.
“உங்க சொந்தம், இந்த உறவு எனக்கு இல்லாம போயிருமோன்னு தான்…” என ஒருவாறு பூடகமாக சொல்லிவிட,
“சொந்தமும், உறவும் எங்கயும் போகாது. உரிமைக்கான நேரமும் வரும்….” என்றதுமே அரவிந்திற்கு குழப்பம் ஒருபுறம், என்ன நினைத்து கூறுகிறான என்றும் புரியவில்லை.
“சரிங்க மாப்பிள்ளை…” என்றவன்,
“வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?…” என்றான் வெகுவாய் தயங்கியே.
இவன் என்னதான் சொல்ல வருகிறான் என்று தலை கிறுகிறுத்தது அரவிந்திற்கு.
தனக்கொரு யூகம் கொடுத்து, அதனை இல்லை என்றும் தவிர்க்கும் சாமர்த்தியத்தினை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“வேறென்ன? லக்ஷ்மிகிட்ட பேசறீங்களா?…”
“நான் பேசறேன். நீங்க ஹோட்டல்ல இருப்பீங்க…”
“ஹ்ம்ம், ஆமா. சரி கால் பண்ணி பேசுங்க…” என்று வைத்துவிட்டான் அழகர்.
அதன்பின்னர் அவ்வப்போது அரவிந்த் பேசினாலும் பொதுவாய் அனைவரையும் விசாரிப்பானே தவிர்த்து புகழை பற்றி தனியே கேட்டுக்கொள்வதில்லை.
அதை அழகருமே உணர்ந்திருந்தான். நாள்கள் செல்லட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனப்பான்மையோடு.
விஷால், மயில்வாகனன் என்னும் இருவரை தன் வாழ்வில் இருந்து அறவே ஒதுக்கி இருந்தான் அரவிந்த்.
“வீட்டுல ஒரே சண்டை போல. அம்மா சொன்னாங்க. அரவிந்த் அண்ணா பேசறதில்லைன்னு விஷால் கேட்டிருப்பான் போல. இனிமே எனக்கு அப்பாவும் இல்லை, தம்பியும் இல்லைன்னு சொல்லி பேசவேமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்…” என்றிருந்தாள் அவனிடம்.
அவளும், அழகருக்குமே தெரியாத ஒன்று, அரவிந்த் அவனிடம் பகிர்ந்திருந்ததில் செத்திருந்தான் விஷால்.
“உனக்கு அண்ணியா வர வேண்டியதா இருந்த பொண்ணு புகழ். அம்மா ஸ்தானம்ன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு பொண்ணை. ப்ச், இதை சொன்னலும் உனக்கும், உன் வக்கிர புத்திக்கும் உரைக்குமான்னு தெரியலை. இதுவே லாஸ்ட் நான் உன்கிட்ட பேசறது….” என்று அவனோடு பேச்சை நிறுத்தியிருந்தான் அரவிந்த்.
எதற்குமே அடங்காத விஷாலுக்கு இந்த வார்த்தையும், அரவிந்த் வார்த்தையில் மிதமிஞ்சி தெரிந்த வலியும் சுரீரென்று உரைக்க, தான் செய்துவிட்ட அனர்த்தத்தில் மொத்தமாய் சுருண்டுவிட்டான்.
தாயின்றி தவித்த நாட்கள் ஏராளம். சாந்தாதேவி எத்தனைதான் அன்பாய் பார்த்துக்கொண்டாலும் தாயை தேடாமலில்லை.
இப்போது அரவிந்த் சொன்ன சொல்லில் உள்ளம் மட்டுமல்லாம, தன் எண்ணங்களுமே அவனை பொசுக்கியது.
கதிர்வேலன் அவனின் முகம் பார்ப்பதை கூட நிறுத்தியிருந்தார். சாந்தா மட்டுமே என்ன என்னும் அளவில் பார்த்துக்கொள்வது.
தனது உடல் உபாதைகள், இயற்கை அழைப்பு என்று ஒவ்வொன்றிற்கும் இன்னொருவரை எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம்.
முதலில் அழகரின் மேலிருந்த கோபம் இப்போதும் உள்ளதுதான். ஆனாலும் தனக்கு இது தேவைதான் என்பதை போல ஒருபக்கம் அவனின் மனசாட்சி குத்தி கிழித்தது.
தகப்பன் பேச்சை கேட்டு இன்று அவரும் இல்லை, தன் அண்ணனும் இல்லை. யாருமற்ற அநாதை போல் உணர்ந்திருந்தான் விஷால்.
சட்டென்ற மாற்றம் அத்தனை சாத்தியம் இல்லை என்றாலும், அரவிந்தின் வார்த்தையும், ஒதுக்கமும், தன் நிலையம் என அவன் சிந்திக்க அநேக சாதகங்களையும் ஏற்படுத்தி தந்திருந்தது.
மயில்வாகனனை பத்துநாள்களில் தானே நேரில் சென்று தான் சொல்லியதை போல வாக்குமூளும், எழுத்துப்படிவமும் வணகிக்கொண்டு வெளியேற்றினான் அழகர்.
“இப்பவும் உன்னால திருந்தவோ, வருந்தவோ முடியாது வாகனம். கண்டிப்பா இதுக்கும் என்ன செய்யலாம்ன்னு தான் யோசிப்ப நீ. முடிஞ்சா வாயேன். பார்த்துக்கலாம்…” என்றவனின் இறுமாப்பை இயலாமையுடன் தான் பார்க்க முடிந்தது அவரால்.
வேறு என்ன செய்ய முடியும்? எப்போதோ பூர்வீக வீட்டையும் கதிரையே எடுத்துக்கொள்ள சொல்லி அதற்கான தொகையை வாங்கி தொழிலில் போட்டாகிற்று.
இப்போது கதிர்வேலனை ஏமாற்றி வாங்கிய சொத்துக்களை திருப்பி தரவேண்டிய சூழ்நிலை.
எல்லாம் கதிர்வேலனிடம் சேர்ந்துவிட்டதில் சொற்பமே மிஞ்சியிருந்தது. மூத்தமகன் தொடர்புகொள்ளவே முடியாதென்றுவிட்டான்.
“அவங்கப்பா வந்ததும் அவன அனுப்பிவிட்டுடு…” என்று கதிர்வேலனின் பேச்சை மயில்வாகனன் கேட்க, தன்னால் தனித்து பார்க்க முடியுமா என்ற பயம்.
செலவுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றாலும் காலத்திற்கும் பார்த்துக்கொள்ள முடியாதே.
தன் நிலையே இப்படி இருக்க இளையமகனை எவ்வாறு பார்க்க முடியும் என்றவர்,
“நீயே பார்த்துக்கொமா. எழுந்து நடமாடுனா அனுப்பிவிடு…” என்று சொல்லிவிட்டு சென்றதில் விஷால் இன்னும் உடைந்துபோனான்.
உண்மையில் அவனால அங்கிருக்கமுடியவில்லை. மயில்வாகனன் செய்ததில் முன்பெல்லாம் சந்தோஷமாய் எதிர்பார்த்திருந்தாலும் சிலநாட்களாய் எங்கே அதை வைத்து தன்னை தனியே விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான் இருந்தான்.
இப்போது தகப்பனே தன்னை பாரமாய் நினைத்து விட்டு சென்றுவிட அத்தனை திமிரும் சுண்டிவிட்டது.
யாருமற்ற அனாதையாக அவன் உணர்ந்த தருணம் அது. அரவிந்தும் இன்றி, அடைக்கலம் புகுந்திருந்தவர்களின் பாராமுகத்தோடு அங்கே இருக்கவேண்டிய நிலையை அறவே வெறுத்தான் விஷால்.
வாழ்க்கை தான் எத்தனை வேகத்தில் தவறு செய்தவர்களை தண்டித்துவிடுகிறது என்று மருக மட்டுமே முடிந்தது.
அடுத்தநிமிடம் வாழ்க்கை என்ன வைத்திருக்கிரதேன்று யாருக்கும் தெரியாது. அவரவர் செய்த வினைகளின் பலனாய் சங்கடங்களோ, சந்தோஷமோ அவர்களை சேராமல் ஒருபோதும் மறைவதில்லை.
—————————————————
“எதுக்கு இவ்வளோ கூச்சல்?…” என்று பைக்கை நிறுத்திவிட்டு அழகர் உள்ளே வருகையில் பாட்டாய் பாட ஆரம்பித்துவிட்டார் அழகுமீனாள்.
“ஆத்தீ எம் வம்சத்த தழைக்க வந்தவ வாச்சொல்ல கேட்டீயளா?…” என்று அவர் துவங்க விருஷ்திகா முகத்தில் கேலி சிரிப்பு.