விருஷ்திகா ஓரிரு வார்த்தைகள் தவிர்த்து கதிர்வேலனிடம் இன்னுமே தள்ளி நின்று தான் பேச்சுகள்.
அதுமட்டுமல்லாது இன்றுவரை அவரிடம் சீர் என்று எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.
மனமுவந்து தந்துவிட எண்ணி கதிர்வேலன் போராடி பார்த்துவிட்டார் மகளிடம்.
“உறவாவது மிஞ்சட்டும்ன்னா பேசாம இருக்க சொல்லுங்க. காலம் வேணா மாறலாம். சொன்ன வார்த்தைகள் என்னைக்குமே அழியாது. எப்பவும் மனசுல சுருக்குன்னு அப்பப்ப தைச்சிட்டு தான் இருக்கும். என்ன ஒன்னு சொந்தத்துக்காக அதையும் முழுங்கிட்டு இருக்கோம்…” என்றுவிட்டாள் விருஷ்திகா.
அவள் சொல்லியது கதிர்வேலனுக்கு மட்டுமல்லாது தனக்குமானது என்று அழகருக்கு புரிந்தது.
அந்தநொடி அவள் முகத்தில் காண்பித்த அந்த வலியை ஜென்மத்திற்கும் மறக்கமுடியாது.
கதிர்வேலனிடம் அழகரும் அறவே பேசுவதில்லை. ஆனால் வேண்டுமென்றே அவரின் முன்னிலையில் தான் அத்தனை முறை ‘லக்ஷ்மி’ அழைப்பை விடுப்பது.
வம்புக்கு செய்கிறான் என அனைவரும் பார்த்ததும் உணரும் வண்ணம் தான் இருக்கும்.
இந்தளவிற்காவது வம்பிழுக்க நடந்துகொள்கிறானே என்று அதை நினைத்து நிம்மதியாகிக்கொள்வார்.
மற்றபடி குடும்பத்தினர் எந்தவித பாராபட்சமும், முன்னால நடந்ததை வைத்தும் அவரை மரியாதையின்றி நடத்துவதில்லை.
இப்போதும் கூட அழகர் வரும்வரை அங்கே இருந்த கதிர்வேலன் எதிர் வீட்டிற்கு சிரிப்புடன் கிளம்பிவிட இங்கே பஞ்சாயத்து தொடர்ந்தது.
“செஞ்சு குடுங்கம்மா…” என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
ஹாலில் தான் அமர்ந்திருந்தனர் அம்மையப்பனும், சுடர்மணியும். அழகர் வரவுமே கையிலிருந்த நோட்டை பார்த்துவிட்டு,
“என்னய்யா என்ன செய்யலாமின்னு லிஸ்ட் எடுத்தாச்சா?…” என்றார் சுடர்மணி.
“ஆமா சித்தப்பா….” என்று தான் கொண்டுவந்ததை பற்றி விரிவாய் கூறிக்கொண்டிருந்தான்.
வெளியே பிரச்சனை முடிந்து விருஷ்திகா வீட்டினுள் வர கையில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஊறிய பச்சரிசியும், வெல்லமும், துருவிய தேங்காய் பூவும் சேர்ந்து கலந்திருந்தது.
“இப்ப சந்தோஷமா?…” என்றான் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே.
“சரி, நடந்துட்டே இருக்காம செத்த ஒக்காருத்தா…” என தன்னருகில் இடம் காண்பித்தார் அம்மையப்பன்.
“என்ன தாத்தா பன்றீங்க? முக்கியமான விஷயமா?…” என்று அவள் கேட்க,
“ஆமாய்யா. சல்லிக்கட்டு வருதுல. நம்ம கடை சார்பா பரிசு குடுக்கனுமில்ல சாமி. அதுக்குத்தேன். எந்தெந்த காளைக்கு என்னென்ன பொருளு எல்லாம் பாக்குதோம்….” என்று கூற விருஷ்திகாவின் கண்கள் மின்னியது.
“வாவ், ஆமால. அதுக்கான லிஸ்ட்டா…” என்று அம்மையப்பன் கையில் இருந்ததை எட்டி பார்க்க,
“நல்லா பாரு தாயி…” என்று நீட்டினர்.
கிண்ணத்தை மேஜையில் வைத்துவிட்டு வேகமாய் பார்வையை ஒட்டியவள் கண்கள் அந்த பெயரை தேட,
“யாருத்தா, என்ன பாக்குத?…” என்றார் சுடர்மணி.
“அலங்காநல்லூர் சொக்கநாதபாண்டியன் வீட்டு காளை மருது பேரை தான் தேடறா எங்கன்னு….” என்று அழகர் சொல்லவும், விழிகள் விரிய திரும்பி பார்த்தாள் அவனை.
“நீ தான் ஊருக்கே தெரியற மாதிரி ஸ்டேட்டஸ் வச்சு குதிப்பியே…” என்றான் கிண்டல் பார்வையுடன்.
“அதெல்லாம் பார்க்க முடிஞ்சதோ? இதுல இவரு நோட் பண்ண மாட்டாராம்…” என்று முணுமுணுத்து வாயசைக்க,
“இங்க இருக்கு பார்…” என்று பெயரை காண்பித்தார் அம்மையப்பன்.
“நம்ம குடுக்குற பரிசுகள்ல அதிகமா, விலையுயர்ந்த பரிசு மருதுவுக்கு தான். உனக்கு தான் தெரியுமே…” அழகர் அதற்கும் உனக்கு தெரியும் என்று கேலியாய் கூற, தலையசைத்துக்கொண்டாள் விருஷ்திகா.