“ஹைய்யோ, ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா எப்படி?…” என்று மீண்டும் அவன் மிக்ஸியில் சேர்த்தவற்றை யோசித்து பார்த்தாள்.
நான்கைந்து புதினா இலைகள். கொஞ்சம் தட்டி எடுத்த வெல்லம். ஒரு துளி உப்புக்கல். சிறிய அரை எலுமிச்சை பழசாறு. முதலில் ஒரு அடி அடித்து, பின் ஐஸ் துண்டுகள் இரண்டு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அடித்து வடிகட்டி தர, அப்படியே கரும்பு சாறின் சுவை.
“மாமா, உண்மையை சொல்லுங்க. உங்க ஹோட்டல்ல எப்பவுமே கரும்புசாறு அல்டிமேட் டேஸ்ட் தான். அது இந்த டுபாக்கூர் ஜூஸ் தானா?…” என்று கிண்டலாய் கேட்க,
“கொழுப்புடி உனக்கு…” என்றவன் அவள் குடித்து வைத்த மிச்சத்தை தானுமே பருகினான்.
“போதும், இன்னொருநாள் குடிக்கலாம். வா. யாரும் எழுந்துக்காம…” என்று அவளை இழுக்காத குறையாக கூட்டிக்கொண்டு வர, மாணிக்கவல்லி, தில்லை, அழகுமீனாள் மூவரும் நின்றிருந்தனர்.
“எம்மன்னவரே…” என அழகுமீனாள் மூக்கை உறிஞ்ச,
“உம்மன்னவரு எனக்கு மட்டும் தான் ஜூஸ் போடுவார் கிழவி. அழுதுட்டே இரு…” என்று அவரின் தண்டட்டியை பிடித்து ஆட்டிவிட்டு வேகமாய் செல்ல அழகுமீனாள் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“இன்னைக்கு தூங்கின மாதிரி தான். மிக்ஸி சத்தம் கேட்குதேன்னு வந்தேன்…” என வல்லி கூற,
“நானும் அதுக்குத்தேன் வந்தேம்க்கா…” என்று தில்லையும் கூறினார்.
“என்ன இது நேரம் கெட்ட நேரத்துல. போய் படுங்க…” என விரட்டினான் அழகர்.
——————————————–
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். மதுரையே கூட்டத்தில் திண்டாடிக்கொண்டிருந்தது சந்தோஷ கூச்சல்களுடன்.
“எங்கடி இங்கதான நின்னாக?…” என்று சுடர்கொடி தங்கை திருமகளிடம் கேட்க,
“இப்பத்தேன் புகழ் அவ புருசனோட நவந்தா. அதுக்குள்ள காணுமே….” என்றாள் திருமகள்.
“போச்சு கெழவி கூடவே போவனும்னு சொல்லி சொல்லி அனுப்பி வச்சது…” என்று தேட,
“அக்கா, இங்க இருக்கேன்…” என்று அவர்களின் பின்னிருந்து தட்டினாள் புகழ்மதி.
“அடிக்கழுத, உன்னை காணுமேன்னு தேடிட்டிருக்கோம். நீ எங்கடி போன?…” என்று திருமகள் கேட்க,
“என் கூட தான் இருந்தா…” என்றான் அரவிந்த் புன்னகையுடன்.
மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தேறி இருந்தது பெரியவர்களின் ஏற்பாட்டின் பெயரில்.
அரவிந்த் அதனை எதிர்பார்க்கவே இல்லை. கனவிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்க அம்மையப்பன் மூலம், கதிர்வேலனிடம் கேட்டு அரவிந்தின் சம்மதம் வேண்டி வந்திருந்தது விஷயம்.
“புகழுக்கு சம்மதமா…” இதுதான் அவன் தெரிந்துகொள்ளவேண்டியதாக இருந்தது.
“அவ விருப்பமில்லாமையா உங்க காதுவரைக்கும் விஷயம் வந்திருக்கும் மாப்பிள்ளை…” என்று அன்றைக்குத்தான் முதன்முதலாய் அரவிந்தை மாப்பிள்ளை என்று அழைத்திருந்தான் அழகர்.
இத்தனைக்கு பின்னரும் கூட தனக்கு எப்படி புகழை தர நினைத்தனர் நம்பவே முடியவில்லை.
மயில்வாகனன் தான் அதற்கொருபாடு கொந்தளித்தார் யாருக்கும் தெரியாமல்.
அரவிந்த் கூட பெற்ற கடமைக்கு என்று மயில்வாகனனை என்னவென்றால் என்ன என கேட்டுக்கொள்வதுண்டு.
ஆனால் விஷால் அத்தனை மூர்க்கமாய் நடந்துகொண்டான் அவரிடத்தில். உன்னால் தான் நான் கெட்டேன் என்று சொல்லியே அத்தனை சண்டை.
தான் செய்த காரியம் அரவிந்திற்கு தெரிந்திருக்கிறது. அதுவும் அவனுக்கான பெண்ணிடம் தனக்கு அண்ணியாக வரவிருப்பவளிடம் போய் என்று உள்ளுக்குள் அவமானத்தில் சிறுத்து போனான்.
இருவரிடத்திலும் இருப்பதில்லை. அவனாக ஒரு வேலையை தேடிக்கொண்டு மயில்வாகனனுடன் வசிக்கிறான். உடன் இருந்தாலும் ஒத்துப்போவதில்லை தகப்பனுக்கும், மகனுக்கும்.
அரவிந்த், புகழ்மதி திருமணம் கேள்விப்பட்டதன் பின்னர் இன்னுமே ஒடுங்கிவிட்டான்.
எப்படி புகழின் முகத்தில் விழிக்க? அதுவும் அரவிந்தின் முன்னிலையில் சாதாரணமாக புகழை பார்த்தால் கூட தன் பார்வையை சந்தேகப்படக்கூடுமே. எத்தனை தவித்து போவான் அவன் என்று மொத்தமாய் நொறுங்கி போனான்.
எந்த காலத்திலும் தன்னை பின் தொடரும் அந்த கருப்பு நாள்களை நினைக்கவே அருவருப்பாக இருந்தது. தன்னையே வெறுத்து ஒரு வாழ்வு.
திருமணத்திற்கும் கூட அன்றைக்கு மட்டும் வந்திருந்து திருமணம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட்டான் விஷால்.
அதிலும் அழகரின் பார்வை முழுவதும் விஷாலிடம் தான். ‘இப்போது தான் அப்படி அல்ல’ என்று கத்தவேண்டும் போலிருந்தது.
ஆனாலும் முடியவில்லையே. அரவிந்தும் இருக்க சொல்லியோ அதட்டியோ எதையும் காண்பிக்கவில்லை.
உறவுகளை விட்டு வெகுதூரத்திற்கு அவன் சென்றுவிட்டது புரிந்தது. காரணமின்றி கண்ணீர். யாருமற்றதை போல தான் செய்ததற்கான பலனாய் அதனை ஏற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான்.
திருமணம் முடிந்ததும் துபாய்க்கு அழைத்துக்கொண்டு சென்றவன் சித்திரைத்திருவிழாவிற்கு மீண்டும் அழைத்து வந்தாகிற்று.
இதோ மொத்த குடும்பமும் வைகை ஆற்றில் தான் இருந்தனர். மூத்த தலைமுறையினரை தாண்டி, இளையபட்டாளங்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இவர்களை எல்லாம் கவனித்துக்கொள்ள கதிர்வேலன் வந்து நின்றிருந்தார் அங்கே.
குழந்தை பிறந்த மறுவருடத்தில் இருந்தே விருஷ்திகா சுடர்கொடி, திருமகள், புகழ்மதி மூவரையும் சேர்த்தே அழைத்து வர ஆரம்பித்திருந்தாள்.
ஒவ்வொரு வருடமும் அதுவே தொடர இதோ மஞ்சள் நீரின் மழை ஊற்றில் வெண்பட்டுடுத்தியிருந்த அழகர் ஓரத்தில் நனைந்திருந்த வேஷ்டியை எடுத்து கட்டியபடி தலையசைத்தான் மனைவியிடம்.
“குடு லக்ஷ்மி…” என்று கை நீட்ட அவனின் மகள் துள்ளிக்கொண்டு தகப்பனிடம் பாய்ந்தாள்.
குழந்தையை தூக்கியவன் தனது தலைக்கு மேல் வைத்துக்கொண்டான் அழகர்.
“பார்த்து மதுரா…” என மகளை விழுந்துவிடுவாளோ என தடுமாறி வந்து பிடித்தாள்.
“பார்த்து நடடி. எப்ப பாரு மேல வந்து விழறது. என் பொண்ணை விட்டுடுவேனா என்ன?…” என்று கேட்டு மகளை அண்ணார்ந்து பார்க்க, ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் அவர்கள் வீட்டு இளவரசி மதுரமீனாட்சி.
பச்சை பட்டுப்பாவாடை சட்டையில் குட்டியாய் போடப்பட்டிருந்த குடுமியின் இரு புறமும் மல்லியை சரம் சுற்றி வைக்கப்பட்டிருக்க, கொழுகொழுவென்று இருந்தவள் முகத்தில் மஞ்சள் நீரின் திவலைகள்.
தலையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, கை தட்டியபடி ஓவென்று சத்தம் போட்டு, ‘அழகரு அழகரு’ என மழலையாய் அழைத்தாள் அந்த கள்ளழகரை.
“தங்கப்பிள்ளை…” என்று கை உயர்த்தி மகளின் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,
“அங்கயே கொஞ்சிக்கோங்க…” என்று தோளை குலுக்கிக்கொண்டாலும் கண்கள் அத்தனை சிரித்தது.
“ஆரம்பிச்சிட்டா…” என அழகரும் விழிகளால் அவளை களவாடியவன் மனமெங்கும் பூஞ்சோலை.
அத்தனை தூரம் அவனை நேசிக்க வைத்தாள் விருஷ்திகா. இத்தனைக்கும் காதல் சார்ந்த வார்த்தைகள் எல்லாம் எதுவும் இல்லை.
இபோதுமே அவளை வம்பிழுக்க அவன் சொல்வது தான். ‘உனக்கு பிடிச்சு நீ சரின்னு சொன்னதால தான் நம்ம கல்யாணம்’ என்று அவளை வெறுப்பேற்றி குளிர்காய்வதில் அத்தனை ஆனந்தம்.
கொண்டாடி கொள்ளும் அவனின் நேசத்தில் உருகி கரையும் மனதோடு தான் அவனோடு இந்த வாழ்க்கை.
பாதிநாட்கள் வாக்குவாதத்தில். சண்டை எங்கு ஆரம்பித்தாலும், ‘ஏமாத்தி தான கல்யாணம் செஞ்சீங்க’ எனும் குத்திக்காட்டல்களும் இடம் பெயராமல் இல்லை.
‘உனக்கு புடிச்ச வாழ்க்கை. இதுல என்ன ஏமாத்தினேன்’ என்று அவனும் பதிலுக்கு எகிறினாலும் ஒற்றை பார்வையில் இருவருமே அதனை விடுத்து சமாதானமும் செய்துகொள்வதுண்டு.
இதில் சண்டை என்றால் உடைபடுவது அழகுமீனாள் மண்டை தான். அவரை பிடித்து உருட்டிவிடுவார்கள்.
‘என்ன உங்கப்பத்தாட்ட ஆசிர்வாதம் வாங்கியாச்சா?’ என்று சொல்லியே அவரை ஓடவிடுவாள் விருஷ்திகா.
நாளும் பொழுதும் நேசத்தில் வளர்பிறையிலும், கோபத்தின் தேய்பிறையிலும் தான் கழிந்தது.
புரிதல்கள் குறைந்து அரங்கேறிய அனர்த்தகங்ள் அனைத்தும் சுவையான, சுகமான அர்த்தம் பெற்றிருக்க இதோ வாழ்க்கை அழகோவியம்.
நடந்துமுடிந்த ஒவ்வொன்றுமே அவரவர் வாழ்க்கையில் ஏதோனும் ஒரு பாடத்தை அனுபவமாக மாற்றி இருந்தது.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், இருவருக்குல்லுமான நெருக்கமும், மற்றவர்களின் உணர்வுகளின் புரிதளுமாய் அழகர், விருஷ்திகாவின் வாழ்க்கை பயணம் பூரிப்பாய் பூத்து குலுங்கியது.