“சித்தி எழுந்து உள்ள போங்க…” என்று எழுப்பி நிற்கவைக்க பார்க்க அவரிடம் அசைவில்லை.
பிடிவாதமாய் அமர்ந்திருந்தார் சாந்தாதேவி. இத்தனை வருடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததே இல்லை.
அப்படி இருக்க இன்றைக்கு வார்த்தைகளின் எல்லை மீறலில் சந்தாதேவியும் கோபத்தில் பேச விளைவு கதிர்வேலன் கை ஓங்கியிருந்தார்.
“பார்த்தியா எவ்வளோ பிடிவாதம்ன்னு? இப்படி இருக்கறவ மகளுக்கு சொல்லிருக்கமாட்டாளா? தெரிஞ்சே கூட அமைதியா இருந்திருப்பா…” என மயில்வாகனன் பேச,
“வீட்டுக்கு பெரியவங்கன்னு இருக்கறது பிரச்சனையை வளர்க்காம அதை சரி பன்றதுக்கு தான். நீங்க என்னடான்னா இப்படி தீயை வளர்க்கற மாதிரி சித்தி, சித்தப்பாக்குள்ள சண்டையை பெருசு பன்றீங்க. ஏன் சித்திக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன?…” அரவிந்த் மட்டுமே சாந்தாதேவியின் பக்கம் நின்றான்.
“எப்படி இருக்கும்? அவ ஆசைப்பட்ட மாதிரி மகளை அந்த குடும்பத்துக்கு மருமகளா ஆக்கிட்டா இல்ல? மனசெல்லாம் குளுகுளுன்னு இருக்கும். வெளில காமிச்சுக்காம இருக்கா…” வஞ்சத்துடன் பேசினார் மயில்வாகனன்.
“அப்பா..”
“என்னடா அப்பா? நான் இந்த சம்பந்தத்தை கொண்டுவரும்போது என்ன சொன்னாங்க உன் சித்தியும், சித்தப்பாவும். பொண்ணை அம்மையப்பன் வீட்டுக்கு தான் தரப்போறதா சொன்னாங்க இல்ல. திடீர்ன்னு வந்து நீங்க சொன்ன சம்மந்தத்துக்கு சரின்னு சொல்லவும் நானும் என் தம்பி மகளாச்சேன்னு இறங்கி வந்தேன்…” என்றவர்,
“இப்ப திருவிழா முடிஞ்சதும் நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாம்ன்னு வந்த இடத்துல எவ்வளோ பெரிய காரியத்தை செஞ்சுட்டா உன் தங்கச்சி. ச்சீ…” என்றார் முகம் சுளித்து.
கதிர்வேலன் மனம் ஆறவில்லை. குன்றி போய் அமர்ந்திருந்தார் தன் அண்ணனின் பேச்சில்.
ஆனால் அரவிந்தனுக்கு தான் தன் தகப்பனின் கோபத்தில் கிஞ்சித்தும் உடன்பாடில்லை.
தாய்க்கு தாயாய் தங்களை கவனித்து வளர்த்த சாந்தாதேவிக்கு இப்படி ஒரு நிலையை நினைக்க முடியவில்லை.
விருஷ்திகா செய்ததில் கோபமிருந்தாலும், அதனை பேசி அதற்கு காரணியாக சாந்தாவை காண்பிப்பதில் அவன் சற்றும் உடன்பட மறுத்தான்.
“செய்யிறதையும் செஞ்சிட்டு அந்த வீட்டை பேசினா கோபம் வேற வருது. வேற எப்படி நினைக்க?…” என கதிர்வேலன் வேறு சொல்லவும்,
“எப்படிடா காமிக்காம இருக்க முடியும்? காலையில கூட அவங்க வீட்டுக்கு போய் எல்லாரும் இருக்கும்போது தான் சொல்லிட்டு வந்தேன். இப்படி என் மகளுக்கு வரன் வந்திருக்கு. நீங்க எல்லாரும் தான் நடத்தி குடுக்கனும்ன்னு. ஒருத்தரும் ஒருவார்த்தை இப்படி ஒரு நினைப்பிருக்குன்னு சொல்லியிருப்பாங்களா?…” என்ற கதிர்வேலன்,
“அப்பவும் இவ என்னடான்னா என் அண்ணனை பேசாதீங்க. அண்ணன் மகனை பேசாதீங்கன்னு அவங்களுக்கே வரிஞ்சு கட்டிட்டு வர்றா. உனக்கு தெரியாது அரவிந்த், உன் சித்திக்கு இந்த கல்யாணம் நடந்த விதம் வேணா பிடிக்காம இருக்கலாம். ஆனா கல்யாணத்துல பரம சந்தோஷம் தான்…” என்றார் கோபமாய்.
“சித்தப்பா ப்ளீஸ்…” அரவிந்த் இறைஞ்சும் பார்வை பார்த்தான் அவரிடம்.
அவனால் இருவரையும் அப்படி காணவே முடியவில்லை. எத்தனை ஒற்றுமையான தம்பதியினர் என்று நினைக்கையில், தங்கையின் மீதும் ஆதங்கம் மூண்டது.
“அதுமட்டுமா? ஏன் உன் தங்கச்சி, அவ மட்டும் என்னவாம்? தெரியும் தானே வீட்டுல கல்யாணத்துக்கு பேசறோம்ன்னு. எதையும் காமிக்காம இருந்து சாயந்தரம் இப்படி அவனோட நடுவீதில…” என்று சொல்லியவன் நெஞ்சில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டார் மீண்டும்.
அவரால் ஜீரணிக்க முடியவில்லை மகள் இப்படி ஒரு காரியம் செய்வாள் என்பதை நம்பவும் முடியவில்லை.
அத்தனைக்கும் தாங்கள் ஒன்றும் சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கவில்லையே. சொல்லியிருக்கலாமே என்று தான் மனம் மறுகினார்.
எத்தனை கோலாகலமாய் நடத்த ஆசை கொண்டிருந்தார். அத்தனையும் தவிடுபொடியாகிவிட்ட மனவுளைச்சல் அவரை பாடாய் படுத்தியது.
அதிலும் அழகர் தாலியை எல்லாம் தயாராய் வாங்கி வந்திருக்க, மகளின் சம்மதம் இல்லாமலா? முன்பே தெரிந்திருக்க போய் தானே?
தாங்கள் என்ன மறுக்கவா போகிறோம்? மரியாதையுடன் விமரிசையாக திருமணம் செய்துவைத்திருக்கலாமே என ஆற்றாமை அவரை உலுக்கியது.
தன்னிடமாவது மகள் சொல்லியிருக்கலாம். இல்லை அழகரின் வீட்டிலாவது தன்னிடம் தெரிவித்திருக்கலாமே?
எத்தனை தூரம் ஊரெல்லாம் பேசும்படி செய்துவிட்டாளே என மனம் குமைந்தார்.
அதிலும் தொலைகாட்சியில் இருந்து, செய்தித்தாள் வரை விஷயம் பரவியிருக்க, வரும் அழைப்புகளை ஏற்க முடியவில்லை.
தலை நிமிராமல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தன்னை பார்த்து பேசும் அழகரை மனதினுள் கொண்டுவந்தார்.
இதுவரை மகளிடம் ஒருவார்த்தை கூட பேசி பார்த்ததில்லை. மகளிடம் என்றில்ல, அவன் ஒரு தனி ரகம், பிள்ளை என்றால் இப்படி வளரவேண்டும் என்பதை போல் அவர் மெச்சுதலாய் பார்த்த ஒருவன் தன் குடும்பத்திற்கு செய்திருக்கும் இந்த செயலை தாங்கமுடியாமல் தவித்தார்.
அதிலும் இந்த நிலையிலும் கூட அந்த குடும்பத்தினருக்கு தான் மனைவியும் பரிந்துகொண்டு வர எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை போலிருந்தது.
சிலநொடிகள் மௌனம். அங்கே அனைவரும் அமைதியாக மயில்வாகனன் எண்ணிற்கு அழைப்பு.
பார்த்ததும் மீண்டும் உச்சாணிக்கொம்பிற்கு ஏறிவிட்டார் அவர். கோபத்துடன் கைப்பேசியை கதிர்வேலனிடம் காண்பித்துவிட்டு,
“இப்ப இவருக்கு என்ன பதில் சொல்ல நான்? நாளைக்கு அவர் மூஞ்சில எப்படி முழிப்பேன்? எவ்வளோ பெரிய மனுஷன். இப்படி அசிங்கப்படுத்த வச்சிட்டியே?…” என்று தம்பியை சாட,
“என்னண்ணே நீயும் இப்படி பேசற? எல்லாம் தெரிஞ்சும். என் நிலைமை பார்த்த தான? எனக்கு மட்டும் தெரியுமா இப்படி நடக்கும்ன்னு?…” என்றார் பாவமாய்.
“அதெப்படி சித்தப்பா நான் என்ன செய்யன்னு ஈசியா சொல்லிட்டீங்க?…” விஷால் ஒருபுறம் எகிறியதோடு,
“அவன் வீட்டுலயும் பொண்ணு இருக்குல…” என்று துள்ள பளாரென்று ஒரு அறை விட்டான் அரவிந்த்.
“கொன்னுடுவேன் பார்த்துக்க. எங்க இருந்துடா இந்த பழக்கம்? ராஸ்கல்…” என்றவன் கோபத்தில் அனைவரும் மௌனமாக மற்ற உறவுகள் முதல்நாளே கிளம்பிவிட்டனர்.
இவர்களும் இதோ கிளம்புவதற்கு ஆயத்தமாகிய பொழுதுதான் இந்த பேச்சுக்கள்.
“இப்ப விஷால் என்ன சொல்லிட்டான்னு இப்படி பன்ற அரவிந்த்? அவனுங்களுக்கு பதிலுக்கு செஞ்சாதான் புத்தி வரும்…” என்று அவர் இரைய,
“விஷால் நீ அப்பாவை கூட்டிட்டு முதல்ல கிளம்பு…” என்றான் மயில்வாகனத்திடம் பேச்சில்லை என்பதை போல.