“உன்னை தான் லக்ஷ்மி, இங்க வா…” என்று மீண்டும் அவன் அழைக்கவும் அவள் திரும்ப, மேல் சட்டை இன்றி உள்பனியனோடு கால் நீட்டி கட்டிலில் அமர்ந்திருந்தவன் கைகள் இரண்டும் தலைக்கு பின்னால் கோர்த்திருந்தது.
“இல்லை இருக்கட்டும்…” என்றவள் மீண்டும் திரும்ப,
“நீ இன்னும் நாலு நாளைக்கு நின்னாலும் அந்த வீட்டுல இருந்து ஒருத்தரும் வெளில வரப்போறதில்லை. அதுக்காக கால் கடுக்க நின்னுட்டே இருக்க போறியா நீ?…” என்றான் அழகர்.
அவன் சொல்லியதில் சற்றே கோபமும் எழ, அவனருகில் வந்து நின்றவள் பார்வை அவன் மீது அழுத்தமாய் பதிந்தது.
“ஏன் மாமா இப்படி செஞ்சீங்க?…” என்றாள் அவனிடம் நேரடியாக.
“என்ன பண்ணிட்டேன்? இப்ப வரைக்கும் தப்பா எதுவும் செய்யலை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அழுது கண்கள் கன்னமெல்லாம் வீங்கியிருந்தது விருஷ்திகாவிற்கு. அதனை பார்வையிட்டபடி பதில் கூறியவனின் இந்த கவனமும் கூட புதிதுதான் அவளுக்கு.
இப்படி என்றுமே நின்று நிதானமாய் அவளிடம் ஒருவார்த்தையும் அவனாக பேசியதும் இல்லை. கேட்டதும் இல்லை.
எல்லாம் முதல்நாள் மாலை தலைகீழாக மாறி இருந்தது. விருஷ்திகாவிற்கு ஒரு எண்ணம்.
ஒருவேளை தன் திருமண செய்தி அறிந்து காதலை உணர்ந்து தன்னை கரம் பிடித்திருப்பானோ என்று.
நினைத்ததோடு பெற்றோரின் நினைவும், அவர்களின் அதிர்ந்த முகமும் வலம் வர, கண்ணீரும் வந்தது.
“உட்கார்…” என்றான் அவளிடம் மீண்டும்.
இம்முறை மறுக்காமல் அவள் அமர்ந்ததும் தானுமே நிமிர்ந்தமர்ந்தான். எப்படி சமாதானம் செய்வதென்று தெரியவில்லை.
அந்த கண்ணீரை நிறுத்தும் வழியும் புரியவில்லை. ஒருவிதமான பதட்டமான மனநிலை தான் இப்போதும்.
புகழ்மதியிடம் என்ன செய்கிறாள் என்று விசாரித்ததற்கு பகலெல்லாம் அழகுமீனாள் அவளை போட்டு தாளித்ததும், எதிர்த்து ஒருவரும் அவரை கேட்காததும் புகழின் மூலம் தெரியவந்ததோடு நிற்காத அழுகையும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
“சரி நான் வரேன். வந்து கூப்பிட்டுக்கறேன்…” என்றவன் தன்னோடு அழைத்தும் வந்துவிட்டான்.
நிச்சயம் இரவெல்லாம் உறங்கியிருக்கமாட்டாள் தான். அதனை அவளின் கண்களே காண்பித்தது.
போதாததிற்கு விடாது கண்ணீர். சரியாக உண்டிருக்கவும் முடியாதென்றும் புரிந்தது. சற்றே எரிச்சலும் கூடியது.
“ப்ச், இந்த அழுகையை முதல்ல நிறுத்து லக்ஷ்மி…” என்றான் பொறுக்காமாட்டாமல்.
அவனின் சலிப்பான பேச்சில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் இன்னுமே வாட தன்னை நிதானித்துக்கொண்டான்.
“நீ விரும்பி தானே என்னை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொன்ன?…” என்று கேட்க,
“என்ன மாமா இப்படி கேட்கறீங்க? என்னை உங்களுக்கு தெரியாதா?…” என்றவளின் முகமும், பார்வையும், அந்த கேள்வியும் அவனை என்னவோ செய்தது.
“இனிமே தெரிஞ்சுக்கலாம். நீ சொல்லு, உன்னோட சம்மதத்தோட தான் இந்த கல்யாணம் நடந்துச்சு. நீ என்னன்னா அது தப்புன்ற மாதிரியே அழுதுட்டு இருந்தா?…” என்றான் அழகர்.
இதற்கு என்ன பதில் சொல்லிவிட முடியும் என அவள் பாவமாய் விழித்தாள் அவனிடம்.
இத்தனை வருடங்கள் சொந்தமாய் அவள் வளையவந்த வீடு தான். ஒரே நாளில் அந்நியமாகிவிட்டதை போன்றொரு தோற்றத்தை காண்பித்துவிட்டது.
எப்போதும் தன்னோடு பாசமாய் பேசும் அழகுமீனாள், மாணிக்கவல்லி, தில்லை, என்று ஒவ்வொருவரும் ஒதுக்கம் காண்பித்திருக்க அங்கே தான் யார் என்னும் கேள்வியே வந்துவிட்டது.
அதிலும் அத்தனை வருடங்களின் தேடலும், காத்திருப்பும் கை சேர்ந்துவிட்ட ஆசுவாசமும், ஆனந்தமும் எழுவதற்கு பதில் அழுகை மட்டுமே.
இப்போது அழகரும் இப்படி கேட்க பதறி போனாள் விருஷ்திகா. இந்த நாளுக்காக அவள் காத்திருந்ததென்ன? அது கையகத்தில் கனிந்த நேரம் கல்லடி பட்டத்தை போலானதென்ன?
மனம் இன்னுமே மறுகியது. அதிலும் கதிர்வேலன் தன்னை பேசியவை எல்லாம் உயிரை உருக்கியது.
அந்தநொடி அழகரை தான் தேடியது அவளுள்ளம். அவனிடம் சொல்லி அழவேண்டும் என்றிருக்க வந்ததும் அவளின் அழுகையில் அவனின் அதிருப்தி.
“உன்கிட்ட நம்ம கல்யாணம் நடந்த சின்ன சந்தோஷத்தை கூட பார்க்க முடியலையே லக்ஷ்மி?…” என்றான் அடுத்ததாய்.
“அப்படியெல்லாம் இல்லை மாமா…” அவசரமாய் அவள் மறுக்க,
“பின்ன?…”
“அம்மாவும், அப்பாவும். அப்பறம் இங்க…”
“ப்ச்…” என சலித்தவன்,
“லுக் லக்ஷ்மி இப்படி கல்யாணம் நடந்தா எல்லா வீட்டுலையும் இப்படித்தான் பிரச்சனை ஆகும். இது யூஸ்வல் தானே? உன்னோட திங்கிங் தான் அன்யூஸ்வல். இப்படி ஆகிடுச்சேன்னு புலம்பாம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. தானா சரியாகிடும்…” என்றவன்,
“ஆமா டின்னர் சாப்பிட்டாச்சா நீ?…” என்றான்.
பேசிக்கொண்டே தன் கைப்பேசியை பார்க்க என்னவோ ஒரு குறுஞ்செய்தி நம்பியிடம் இருந்து.
அதனை பார்த்துவிட்டு பதில் அனுப்பியவன் மனதிற்குள் என்னவோ தோன்ற சட்டென கைப்பேசியை அணைத்துவிட்டான்.
“எப்படி கான்டேக்ட் பண்ணின உன் அம்மாவுக்கு?…” என மீண்டும் சாதாரணம் போல அவளிடம் கேட்க,
“புகழ் மொபைல்ல இருந்து தான்…”
“ஹ்ம்ம், நாளைக்கு உனக்கொரு மொபைல் அன்ட் சிம் வாங்கிடலாம். இப்போ படுத்து தூங்கு. எல்லாம் நார்மலாகும்…” என்றவன்,
“உனக்கு நான் இருக்கறது டிஸ்டர்ப்பா இருந்தா நீ ரெஸ்ட் எடு. நான்…” என்றபடி அவன் எழுந்துகொள்ள,
“இல்ல, நீங்க இருங்க மாமா…” என்றாள் அவனின் கை பிடித்து நிறுத்தி.
அழகரின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அன்றே அவனுக்கும் மனம் வரவில்லை.
அதுவும் அவளின் அழுதமுகம். நிச்சயம் மீண்டும் எரிச்சல். ‘சூனியபொம்மை படுத்தறா’ என்றான் மனதிற்குள்.
“கூட இருங்க மாமா. ப்ளீஸ், மதியமே நான் உங்களை ரொம்ப தேடிட்டிருந்தேன். நீங்க பக்கத்துல இருந்தா பெட்டரா இருக்குமேன்னு…” என அவள் சொல்ல சொல்ல இவனுக்கு தான் உள்ளுக்குள் என்னவோ சுழன்றது.
“எதையாவது நினைச்சுட்டு குழப்பிக்காத. ஜஸ்ட் ரிலாக்ஸ். நல்லா தூங்காம கூட அப்படி இருக்கும்…”
“நீங்க போய்ட்டா தனியா தோணும் மாமா….” மீண்டும் அவளின் விழிகளில் நீர் நிறைந்து உடைப்பெடுக்க,
“ஊஃப்…” என தலையை உலுக்கிக்கொண்டவன் கட்டிலோரம் அமர்ந்தான்.
“இப்போ படுத்துக்கோ. சீக்கிரம் தூங்கிரு….” என்று சாய்ந்தமர அவனருகில் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள் விருஷ்திகா.
இருவருக்குமே அது முதல் தனிமை. அவளை பொறுத்தவரை இருக்கும் கவலையில் அன்றைய நாளையும், அவர்களின் முதல் தனிமையையும் பற்றிய எந்தவித எண்ணமும் இல்லை.
இந்த சூழல் எப்போது சரியாகும் என்பது மட்டுமே. ஆனால் அழகருக்கு அப்படி இல்லை.
அவள் என் மனைவி என்னும் உணர்வு கடவுளின் முன் ஊரறிய தன்னுடையவளாக்கியதுமே விருட்சம் பெற்றிருந்தது.
அந்த உரிமையும், விருஷ்திகாவின் அருகாமையும் அவனை கட்டுக்குள் நிற்கவிடாமல் செய்ய மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்தான்.
இங்குமங்குமாய் அவள் அசைவுகள் வேறு அவனை இம்சிக்க மௌனமாய் விழி திறந்து பார்த்தவன் விழிகள் அவளின் முகத்தில் பதிய அவன் பார்வையின் உள்ளுணர்வில் விருஷ்திகாவும் விழி மலர்ந்தாள்.
பார்த்ததும் மெலிதாய் ஒரு புன்னகை. அவனை அப்போதும் மலை போல் நம்பும் பாவனையும், தன்னை நேசிக்கிறான் என்னும் சந்தோஷமும் அதில் தெரிந்தது.
‘பிடிச்சு கட்டலை. ஆனா இனி பிடிப்பு வரும்’ அவன் மனம் சொல்லிக்கொள்ள மீண்டும் கண்களை மூடினான் அழகர்.
வெகுநேரம் சென்றும் அவள் உறங்கவில்லை என்று புரிந்தது. எழுந்து செல்லும் அரவமும் உணர்ந்தவன் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.
மறுபடியும் அந்த ஜன்னல் புறம் தான் சென்று நின்றாள் விருஷ்திகா. ஏக்கத்துடன் தன் பிறந்தவீட்டினை தேடியவளை ஆயாசத்துடன் பார்த்தான் அழகர்.