“இதை எப்போ வாங்கினீங்க? அப்போ ஏற்கனவே அந்த முடிவோட தான் இருந்தீங்களா?…” என அதனை பார்த்துக்கொண்டே கேட்டபடி மீண்டும் அவனருகில் வந்தவள் தானாய் அவனின் தோளில் சாய்ந்து அவனை போலவே அமர்ந்துகொண்டாள்.
“சொல்லியிருக்கலாம். நான் இன்னைக்கு உங்ககிட்ட வந்து பேசி வீட்டுக்கும் சொல்லலாம்ன்னு இருந்தேன் தெரியுமா?…”
“ஹ்ம்ம்…” அவளோடு கோர்த்திருந்த கைகள் அவனின் அதரங்களின் அருகில் வந்துவிட,
“உங்களுக்கு எப்போ மாமா என்னை பிடிச்சது? சொல்லவே இல்லை நீங்க…” என்றாள் அவனின் முகம் பார்த்து தன் முகம் நிமிர்த்தி.
பதில் இருந்தால் தானே கூறுவதற்கு? அவனின் பதில் வாய்மொழியாக இல்லாது இதழ்வழியாக விருஷ்திகாவின் வார்த்தைகளை, கேள்வியோடு களவாடிக்கொண்டது.
சட்டென்ற ஒரு முத்த பரிமாற்றம். இதனை அவள் எதிர்பார்க்கவில்லை. விழிகள் விரிய திகைத்து அவள் பிரியும் முன், தான் கோர்த்திருந்த இடது கைவிரல்களை அவளின் விரல்களோடு நெரித்தவனின் வலது கை விருஷ்திகாவின் முகத்தினை விலகவிடாமல் பற்றிக்கொண்டது.
முதல் முத்தம் இருவருக்கும் மூச்சு முட்ட, சிறு தவிப்புகள் உள்ளடங்க, போராடி பிரிய முயன்றவளின் விலகல் அவனை வன்மையாய் நெருங்க செய்தது.
மெதுவாய் கண்கள் மயங்க மொத்தமாய் அவனிடம் ஒப்படைத்து தளர்ந்தவளின் தன்மையில் தானுமே மெல்ல விடுவித்தான்.
அவன் முகம் பாராமல் நெஞ்சத்தில் தலைசாய்ந்துகொண்ட விருஷ்திகாவிற்கு இன்னும் பதட்டமும், படபடப்பும் அடங்கவில்லை.
“இன்னும் பிரச்சனை எதுவும் சரியாகலையே மாமா…” மெல்லிய குரலில் நாணத்துடன் அவனிடம் எடுத்துரைக்க சிறிதுநேரம் மௌனம் அவனிடம்.
“கோவமா? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?…” விருஷ்திகா தவிப்புடன்.
“இப்பவும் உன் சம்மதம் தான். சொல்லு. இல்லைன்னா நோ இஷ்யூஸ்….” என்று அவள் முகம் நோக்கி குனிந்து அவன் கேட்க மறுக்க மனமில்லை. ஏற்கவும் தயக்கம்.
“வீட்டுல சொல்லலை. அதோட, கொடி தடை…”
“நம்ம கல்யாணமே மீனாட்சி அம்மன் முன்னாடி அவ ஆசியோட நடந்தது. இதுக்கு மேல என்ன வேணும்? அழகம்மா வேற ஆசிர்வாதம் பண்ணி அனுப்பிச்சு வச்சிருக்கு…”
“அவங்களுக்கும் கோவம் தானே?…” என்றவள் மீண்டும்,
“இப்பவும் என்னால நம்பமுடியலை. உங்களுக்கு என்னை கண்டாலே…” எனும்பொழுது மீண்டும் ஒரு முற்றுகை.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேள்வியை தாங்கிக்கொண்டு வந்து அவனிடம் சிறைபட்டுக்கொண்டது.
“சம்மதமா? இல்லைன்னா சொல்லு லக்ஷ்மி. உன் விருப்பம் இல்லாம நான் உன்னை நெருங்கமாட்டேன்…” என்றவன் பேச்சோடு அவளின் மனதையும் தன் வசப்படுத்தி, மொத்தமாய் தனக்குள் அள்ளிக்கொண்டான்.
‘என் மனைவி இவள்’ என அவள் தவித்து திணறி துவண்டு மறுகும் பொழுதெல்லாம் மடிதாங்கினான் அழகர்.
“எனக்கு சொல்லுங்க மாமா என்னை எப்போ பிடிச்சது….” என்றாள் ஒருவாறு கேட்டுவிட்டாள் அவனுக்கு தன்னை எப்படி, எப்போது பிடித்ததென தெரிந்துகொள்ளும் ஆவலில்.
“நீ சொல்லு. உனக்கு ஏன் என்னை பிடிச்சதுன்னு…” என அவள் புறம் கேள்வியை திருப்பியவன், அவளின் பதில்கள் ஒவ்வொன்று அவனின் அணுகுமுறையில் சிக்கிக்கொண்டு தப்பி பிழைத்து முழுமையடைந்து வெளிவரும் முன் போராடி மன்றாடியது.
எந்த பதிலையும் அவளுக்கு கூற அவன் முன்வரவில்லை. ஆனால் அவளின் சம்மதத்துடன் என வாழ்வை துவங்கிவிட்டான்.
அவனை கண்ட நாட்கள், காணும் பொழுதுகள் என்று அவள் அவனிடம் ரசித்த ஒவ்வொன்றையும் மொத்தமாய் உள்வாங்கிக்கொண்டவன் உள்ளம் கர்வத்திலும், மகிழ்ச்சியிலும் ஆர்ப்பரித்தது.
அதன் பிரதிபலிப்பு விருஷ்திகாவிடம் எதிரொலிக்க அவள் தான் அவனின் வேகத்தில் வெட்கம் கொண்டு பின்வாங்கினாள்.
“உங்களை இப்படி நினைக்கவே இல்லை…” என்றவளின் சிணுங்களில்,
“பொய்…” என்றான் அழகர் கரகரப்பான குரலில்.
ஆயிரமாயிரம் இரவுகள் காணவேண்டிய தேவரகசியங்கள் மொத்தத்தையும் அன்றைக்கே கண்டு களித்துவிடும் பேராவல்.
அவளுள் நிறைந்து நிறைந்து அவன் தான் அவளிடம் மொத்தமாய் மிச்சமின்றி தீர்ந்துகொண்டிருந்தான்.
எந்தவித கேள்விகளும் கேட்கமுடியாமல் அவனின் கைவளைவினுள் அவள் உலகம் மறந்து அவனின் நினைவில் மட்டுமே உயிர் கூச சிலிர்த்து கிடந்தாள்.
விரல்கள் தீண்டியவை எல்லாம் மொழிகளும் படர்ந்து செல்ல காய்ச்சலும் காய்ச்சல் கொள்ளும் வெம்மையில் உயிர்கள் தகித்து உறவை வளர்த்தது.
முத்தமிடா இமைகளுக்கு உறக்கத்தை விலக்களித்தவன் ஆளுமையில் சிறுபெண்ணின் வதனம் குங்கும நிறம் கொண்டது.
அவள் அறிந்த அழகருக்குள் இத்தனை மென்மையாய் வன்மைகள் கரம் கோர்த்திருக்கும் என்பதை இப்போது அறிந்தவள் அவனின் நெஞ்சத்தில் முகம் மறைக்க,
“தூக்கம் வருதா?…” என்று கேட்டு கேட்டு அவளை அனுசரித்து தனக்குள் ஸ்வீகரித்துக்கொண்டான் அழகர்.
ஆரம்பம் என்னவோ தயக்கங்களின் வாசலில் தான். ஏக்கங்கள் தேங்கி நிற்க, இரவின் முற்றுதல் என்பதை முடிவெடுக்க விடவில்லை இருவரின் அருகாமையும்.
அவள் தலை கோதி உச்சந்தலையில் முத்தமிட்டவன் கண்கள் ஆராய்ச்சியாய் கனிவோடு அவளில் பதிய, தன்னில் அலைந்த அழகரின் விழிகளை கை கொண்டு மூடியவள் அவனின் மார்பில் முகம் புதைத்தாள்.
சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என்று எதையும் முன்னிறுத்தாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாகவே துவங்கிவிட்டிருந்தது.
அழகர் துவக்கிவிட்டான். இதுவரை எப்படியோ, இனி அவள் மட்டுமே தனக்கு என்பதில் அவன் ஸ்திரமாய் இருந்தான்.
இதனை அறியாமல் இரவெல்லாம் உறக்கமின்றி, தன் அறைக்கும் செல்லாமல் அவ்வப்போது புகழ்மதியை இரண்டு வசைபாடியபடி புலம்பிக்கொண்டிருந்தார் அழகுமீனாள்.
“ஒன்தாத்தன் ரூமுக்கு போனா அம்புட்டுத்தேன். மூட்டையா என்னிய தூக்கி வீசனுந்தேன்….” என்று பேத்தியிடமும்,
“ஆறுதல் சொல்லத்தேன் போயிருப்பான். என் பேரனுக்கு தெரியாத வெவரமா, சமாச்சாரமா? அதெல்லாம் அவென் பாத்துக்கிடுவியான்…” என்றும்,
“ரொம்பத்தேன் ஆத்துவானோ? அவ முந்தானையில முடிய போறா. பாத்துக்கிடு…” என்று மருமகள்கள் இருவரிடமும் கூறியவர் பார்வை எல்லாம் மாடிப்படியில் தான்.
“ஆறுதல் சொல்லுவானாட்டம்…” என்றுதான் ஒவ்வொரு பார்வைக்கும் அவர் சொல்லிக்கொண்டது.
மாணிக்கவல்லி, தில்லை இருவருக்கும் அவரின் அலம்பலில் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
ஆனாலும் சிரித்துவிடமுடியாதே. அடக்கி வாசித்தனர் மாமியாருடன் அமர்ந்துகொண்டு.
விடிந்ததும் தில்லை எழுந்து செல்ல பார்க்க அவரின் கை பிடித்து நிறுத்திய அழகுமீனாள்,
“எங்கடி போறவ?…” என்றார்.
“அவகளுக்கு குடிக்க டீ வெக்கனும்த்தே…” என்ற தில்லை சுடர்மணியை தேடி வர,
“கெழவிக்கு வேற சோலிக்கழுதை கெடையாது. எள்ளுதேன் காயுதுன்னா அங்கின உனக்கென்ன சோலி?…” என்று அவர் காய்ந்தார் மனைவியிடம்.
வழக்கம் போல ஒன்றுமே சொல்லாமல் அவர் டீயை கொடுத்துவிட்டு வர பின்னோடே சுடர்மணியும் வெளியே வந்தார் கையில் அன்றைய நாளிதழுடன்.
வந்தவர் பார்வை தாயை கோபமாய் பார்க்க அழகுமீனாள் தொண்டையை கனைத்துக்கொண்டு,
“தாலிய கட்டிக்கிட்டு வந்ததுல இருந்து அவ உசும்பிக்கிட்டே இருந்தா எம்பேரனுக்கு பொறுக்குமா? அதேன், ஆறுதல் சொல்லுதியான்…” என்று சொல்லிக்கொண்டே திரும்ப, அழகர் மெலிதான புன்னகையுடன் கீழே இறங்கி வர ஆவென்று பார்த்தார் அழகுமீனாள்.
“அப்பத்தா ஓடு ஓடு…” என சுடர்கொடி சொல்லியும் அவரால் அசைய முடியவில்லை.
“ஆத்தீ என்னிய நவுத்துடி…” என அலற தொண்டைக்குள் இருந்து வார்த்தை வரவில்லை.
அதற்குள் கீழே இறங்கி வந்தவன் வந்தவேகத்தில் அழகுமீனாள் காலில் விழுந்து எழுந்துவிட்டு தலையசைத்து செல்ல, மாணிக்கவல்லி ஒரு திசை, தில்லை ஒரு திசை என்று ஓட்டம் பிடித்தனர்.
“சோலிய முடிச்சிட்டியான்…” என்று நெஞ்சில் கை வைத்து தளர்ந்துவிட்டார் அழகுமீனாள்.
“அப்பத்தோவ், நீ ஆரு சோலிய சொன்ன?…” நமுட்டு சிரிப்புடன் சுடர்கொடி கேட்க,