“ஒனக்கு என்ன ராசா? ஏய்யா இந்தமாரி சோலிய செஞ்சிட்ட? நா கேக்குதது வெளங்காத மாதிரி பதில சொல்லாத ஆமா…” என்றதும் ஆழ்ந்த பெருமூச்சுடன் அவரை அழுத்தமாய் பார்த்தான்.
“கல்யாணம் பண்ணிக்க தோணுச்சு. பண்ணிட்டேன்…”
“அழகரு…”
“ஏம்ய்யா, எனக்கு நீங்க எல்லாம் பேசி வச்சவ தான? பண்ணிக்கிட்டா என்ன? இந்த வீட்டுல எல்லாருக்கும் அதான நெனப்பும், ஆசையுமா இருந்திருக்கு? நடந்துருச்சுல. பொறவென்ன?…” என்றான் அப்போதும் வெகுசாதாரணமாக.
“அழகரு, செரியில்ல சாமி. என்ன பேசுத நீ? சாந்தா செஞ்சதுக்கு பழிக்கு பழியா? நாம பலியாகி போவோம்ய்யா. தப்பு…” என்றவரிடம் தன் மனைவிக்கு தன் மீதிருக்கும் விருப்பத்தினை சொல்லிவிடலாமா என யோசித்தான்.
யோசித்த நொடியே சட்டென தலையை உலுக்கிக்கொண்டவன் அதனை தனக்குள் மட்டுமே வைத்துக்கொண்டான்.
இதற்கு முன்னும் அவன் எந்த சூழ்நிலையிலும் அதனை வெளிப்படுத்தி இருக்கமாட்டான். இப்போது மனைவியாகிவிட்ட பின் அது தங்களுடைய தனிப்பட்ட விஷயம் என்று நினைத்தான்.
“லக்ஷ்மியோட சம்மதத்துல தான் தாலியை கட்டுனேன்…”
“என்ன சொல்லி அவளை சரின்னு சொல்ல வச்ச? என்னமும் மெரட்டி தலையாட்ட வச்சியா?…” என்றவர்,
“நான் வெளையாடலை. பழிக்கு ஆராச்சும் கல்யாணத்த பண்ணுவாங்களா? இந்த வீட்டுல ஆசைப்பட்டிருக்கீங்க. லக்ஷ்மியோட அம்மாவும் அவங்களா தான் வாக்கு குடுத்திருக்காங்க. நம்ம மனசுல ஆசைய வெதச்சிட்டு அவக சௌகரியத்துக்கு மாத்த பாப்பாங்களா? இது தான் வெளையாட்டா அவக மாத்த நெனச்சது…” என்றவன்,
“எனக்கு பேசினவள எனக்குன்னு நீங்க முடிவு செஞ்சவள இன்னொருத்தன் முன்னாடி கொண்டுபோய் நிப்பாட்ட நெனச்சா இந்த அழகர்கிட்ட அது நடக்காதுய்யா…” என்றான் அவன்.
“நான் என்ன சொல்லுதேன். நீ என்ன பேசுத சாமி? மொத எங்கக்கிட்ட சொல்லிருக்க வேணாமா? நாங்க தான் போனா போவட்டும்ன்னு விட்டுட்டோம்ல…”
“விட்டுட்டா? எனக்கானவளா தான லக்ஷ்மியை இவ்வளோ வருஷமா பார்த்தீங்க நீங்க? அந்த நெனப்பை உண்டு பண்ணிட்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண நெனச்சா?…” என்றவன் கோபத்தில் தனது வலதுகையை தொடையில் தட்டினான்.
“அதுக்குன்னு தாலியை கட்டிடறதா சாமி? அந்த புள்ளை பாவமில்லையா? உன் நெனப்பு தெரியாம உங்கூட வாழ வந்திருச்சு. தப்புய்யா அழகரு….”
“நீங்க தான் புரியாம பேசறீங்க? உங்களோட ஆசையை, அவங்க அம்மா குடுத்த வாக்கை நான் நிறைவேத்திட்டேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அது ஒன்னும் பழி வாங்க இல்லை. சொன்ன சொல்லை காப்பாத்த அவங்க தயாரில்லை. இந்த வீட்டுக்குள்ள அவங்க வளர்த்த நெனைப்பை ஊர்ஜிதம் பண்ணிருக்கேன்…” என்றவன்,
“அழகரு, நீ என்ன தப்பு செஞ்சன்னு உனக்கு புரியலையா?…”
“சரி புரிய வைங்க. என்ன பண்ணுனேன்?…” என மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு காலை அகற்றி நின்றவன் கேட்ட கேள்வியில் அம்மையப்பன் பேச்சற்று பார்த்தார்.
“அந்த பொண்ணை நான் விரும்பி முடிக்கலை தான். ஆனா இனிமே அவ தான என் பொண்டாட்டி. நான் ஒன்னும் விருப்பம் இல்லாத பொண்ணு கழுத்துல தாலி கட்டலையே….”
“அதுக்குன்னு…” அம்மையப்பன் பேச வர,
“லக்ஷ்மி எனக்கு முறை தானே?…”
“ஆமா அழகரு…”
“எனக்கு முடிக்கனும்ன்னு நீங்க பேசி வச்சது தானே?…”
“நெசம் தான் அழகரு….”
“நான் ஒன்னும் யாரோ ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யலையே…”
“ஆனாலும்…”
“நான் நடுரோட்டுல கல்யாணம் பண்ணுனேன்னு பேசறீங்க? அம்மன் சப்பரம் வர்ற வீதி. அதுவும் கோயில் மாதிரின்னு தான எப்பவும் சொல்லுவீங்க. உங்கள பொருத்தவரைக்கும் மதுரை மண்ணே கோவிலுக்கு சமம்ன்னு சொல்லுவீங்க தான?…”
“அதுக்குன்னு பெத்தவக…”
“என்னை பெத்தவங்களும், நம்ம குடும்பமான நீங்களும், லக்ஷ்மி குடும்பமும் எல்லாத்துக்கும் மேல எங்க கல்யாணத்துக்கு நம்ம மீனாட்சி தாயே தேடி வந்து நின்னுச்சு. இதைவிட மண்டபத்துல நடத்திருந்தா கூட இப்படி ஒரு சந்தோஷமா இருந்திருக்குமா?…” என்று வாதாடினான் அழகர்.