ஆனால் கோபம் அவனின் முகம் முழுவதும் ஜூவாலித்தது. அம்மையப்பனுக்குமே பேரனை காண உள்ளுக்குள் பதட்டம்.
“அழகரு, லச்சுமி…”
“அவ இப்ப இந்த குடும்பத்தோட மருமக. உள்ள வந்துட்டா. அந்த கவலையை விடுங்க நீங்க…” என்றவன் வெளியே அழகுமீனாள் சப்தம் அதிகம் கேட்க திரும்பி பார்த்தான் அழகர்.
“அண்ணே…” என புகழ்மதியும் வர,
“என்ன புகழ்?…” என்றான் அவளிடம்.
“வெளில மதினியோட அண்ணே வந்திருக்காக…” என்றவளை பார்த்து தலையசைத்தவன்,
“பேசாம கண்டதையும் நெனைக்காம இருங்க. எல்லாம் செரியா போவும்…” என்றுவிட்டு வெளியே வர புகழுக்கு முன் அங்கே கன்றி சிவந்த விழிகளுடன் நின்றிருந்தாள் விருஷ்திகா.
சிலை போல நின்றவளின் தோற்றமே அவனுக்கு அவளாக எதையும் சொல்லாமலே விளக்கிவிட்டது.
கொஞ்சமும் மனம் அசையவில்லை அழகருக்கு. அவளை பார்த்துவிட்டு தாண்டி சென்றவன் வாசலுக்கு செல்ல,
அழகர் விறுவிறுவென்று வேகமாய் முன் முற்றம் தாண்டி திண்ணையை கடந்து வந்து நிற்க புகழ்மதியுடன் அவளின் அழைப்பில் தானுமே வெளியே வந்தாள் விருஷ்திகா.
அங்கே அரவிந்தை பார்த்ததும் கண்கள் உடைப்பெடுக்க தானே விழிகள் அவளின் வீட்டை கண்டது.
அப்போதுதான் வீட்டின் முன் நின்ற லாரியும் அதில் விஷால் அமர்ந்திருப்பதும் புரிந்தது.
ஏன் எதற்கு என புரியாமல் மனம் பதற புகழை தாண்டி விருஷ்திகா அரவிந்தை நோக்கி வர அவளை பார்த்துவிட்டு அழகரிடம் திரும்பினான் அரவிந்த்.
“நாங்க மேலூர்ல இருக்கிற எங்க பூர்வீக வீட்டுக்கே போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். சித்தப்பாக்கு இங்க இருக்க விருப்பமில்லை. அதான்…” என்றவன் தயங்கி தங்கையை பார்த்தான்.
“எப்படி இருக்க விருஷ்தி…” என்றவன் விசாரிப்பில் என்ன பதில் சொல்லமுடியும்?
கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. துடைக்க முடியாமல் அவனிடம் அழுகையுடன் பேசவும் முடியாமல் விசும்ப,
“அழாதடா. சீக்கிரம் சரியாகிடும். இருந்தாலும் நீ செஞ்சது தப்பில்லையா?…” என்றான் மென்மையாய்.
“இதை சொல்ல தான் வந்தீங்களா அரவிந்த்?…” அழகர் கேட்க,
“இதையும் சொல்லனும் தானே? இப்ப நாங்க கிளம்பரறதை சொல்ல கூடாதுன்னு தான் சித்தப்பா சொன்னாங்க. ஆனா உங்களுக்கு எப்படியோ, என் தங்கச்சி தேடுவாளே. அதுக்காகவாவது நான் சொல்லனும்…”
“தேடுறதை பத்தி எல்லாம் கவலைப்படறவங்க தான் மொத்தமா வேண்டாம்ன்னு போறீங்களா? வாவ்…” என்றவனின் குரலில் தொனித்த எள்ளல் அரவிந்தின் முகத்தினை வாட செய்தது.
“சில சூழ்நிலைகள் இப்படித்தான் கொண்டுவந்து நிறுத்தும். தவிர்க்க முடியாது. உங்க கல்யாணமும் அப்படி நடந்தது தானே? தவிர்க்க முடியாதுன்ற சூழ்நிலையில கொண்டுவந்து நிறுத்தின மாதிரி…”
“எல்லா சூழ்நிலைகளையும் நமக்கு சாதகமா மாத்திக்க முடியாதே? வெல், சொல்லியாச்சு. ஓகே…” என்றான் அழகர் அவனிடம் வேறு என்ன என்பதை போன்ற பாவனை காண்பித்து.
“இனிமே இங்க வேற என்னன்னு எல்லாம் போயிடமுடியாது. அவ என் தங்கச்சி. ஸோ நான் எப்பவும் அவளுக்கு இருப்பேன்….” என்ற அரவிந்த்,
“டேக் கேர் விருஷ்தி. பை…” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் அரவிந்த்.
அவன் செல்லும் வழியை பார்த்தபடி நின்றவள் நிலையை அங்கே ஒருவரும் உணரவில்லை.
அரவிந்த் சென்றதுமே அங்கே நின்றிருந்த இரு லாரியும் கிளம்பிவிட அதன்பின் அழகரும் தன் புல்லட்டை நோக்கி நடந்தான்.
“இன்னும் சாப்பிடலையே அழகரு…” என சுடர்கொடி தன் தம்பியிடம் கேட்க,
“வருவேன். நீங்க பாருங்க…” என்றுவிட்டு வண்டியை கிளப்பியவன், திரும்பி விருஷ்திகாவை பார்த்தான்.
“போய் சாப்பிட்டு வெய்ட் பண்ணு. வந்திடுவேன்…” என அலட்டிக்கொள்ளாமல் கூறிவிட்டு செல்ல அவனின் இந்த செயலில் அவள் தான் விக்கித்து போனாள்.
எப்படி கொஞ்சமும் அசராது அவன் நடந்துகொள்கிறான் என்று மலைத்து பார்த்தவளுக்கு இன்னும் அழுகை வெடித்தது.
‘அப்போ தான் தன் உணர்வு எல்லாம் இவனுக்கு ஒன்றுமே இல்லையோ’ என்ற எண்ணம் வியாப்பிக்க அதன் நிஜத்தில் முழுதாய் துவண்டு போனாள் விருஷ்திகா.
உணவை மறுத்து தங்களின் அறைக்குள் வந்தவள் ஜன்னலோரம் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள் எதிர்வீட்டினை பார்த்தபடி.
எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ அழகர் வரும் அரவத்தில் மெல்ல முகம் திருப்பினாள் அவன்புறம்.
வந்தவன் எதுவும் பேசாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கான புது கைப்பேசியை வாங்கி வந்தவன் அதற்கு தனியாய் சிம் ஒன்றினையும் வாங்கி இருந்தான்.
“உன் மெயில் ஐடி சொல்லு லக்ஷ்மி…” என்று சாதாரணமாய் அவளை பாராமலே மொபைலை பிரித்து இயக்கிக்கொண்டே கேட்க விருஷ்திகாவின் முகத்தினில் பெரும் மாற்றம்.
மெதுவாய் எழுந்தவள் அவன் எதிரில் வந்து நின்றாள். காலையில் அவன் கிளம்பி செல்லுகையில் எப்படி இருந்தாளோ அப்படியே தான் இப்போதும் இருந்தாள்.
குளித்து தலையில் கட்டப்பட்டிருந்த துண்டினை கூட இன்னும் அவிழ்க்கவில்லை.
உண்ணவில்லை என்பதும் தெரியும் அவனுக்கு. வந்ததும் விசாரித்துவிட்டான்.
“நீயி போயி சாப்பிட வர சொல்லுதியா? இல்லன்னா புகழுட்ட குடுத்தனுப்புதேன்….” என்று கேட்ட தில்லையிடம்,
எத்தனை கோபமும், வருத்தமும் இருக்கட்டும். சாப்பிடவேண்டியது தானே? இது ஒரு பிடிவாதமா என்று நினைத்து அதனை தவிர்த்துவிட்டான்.
இப்போது தன் முன் வந்து நின்றவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,
“மெயில் ஐடி குடுத்து லாகின் பண்ணிக்கோ. வேற எதுவும் வாங்க வேண்டியதிருந்தா சொல்லு. வேற எதுவும் வேணுமா லக்ஷ்மி?…” என்று அந்த போனை அவள் பக்கம் நகர்த்தி அழகர் கேட்க,
“உண்மையான பதில் வேணும். அதை சொல்லுங்க போதும். இந்த கல்யாணம் எதுக்கு மாமா?…” என்றாள் மீண்டும் அவனிடம்.
முதல்நாள் எல்லாம் அவனோடிருந்த பொழுதுகள் அவளை இன்றைய உண்மைக்குள் தள்ளிவிட்டு எள்ளி நகையாடிக்கொண்டிருந்தது.
அப்போதும் கூட ஒரு குருட்டு நம்பிகை. அம்மையப்பனுக்காக அப்படி எதுவும் சொல்லியிருக்க கூடுமோ என்று.
அவளின் எண்ணமே அந்த நம்பிக்கையின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்க இதோ கேட்டும் விட்டாள்.
ஆழ்ந்த மூச்செடுப்புடன் அவளின் முகம் பார்த்த அழகரின் கண்களில் அத்தனை தீர்க்கம்.
“ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட ஒரு விஷயத்தை ஏன் திரும்பவும் தெரிஞ்சுக்க நினைக்கிற லக்ஷ்மி?…” என்றவனின் கேள்வியில் பொடிப்பொடியாய் தகர்ந்து போனாள் லக்ஷ்மி விருஷ்திகா.
“திரும்ப சொல்லுங்க…” கண்ணில் நீர் நிறைய அவனிடம் கேட்க,
“நீ தான் கேட்டுட்டியே. அதை திரும்பவும் நான் சொல்லனுமா? ப்ச்…” என்றவன்,
“நான் ஒன்னும் என்னை பிடிக்காத பொண்ணு கழுத்துல தாலி கட்டலை. உன் விருப்பத்தோட தானே கட்டுனேன். அதுவும் ஒருதடவைக்கு பலதடவை கேட்டு…” என்றான் அழகர்.
அவனின் தோரணையும், பேச்சின் தொனியும், ‘நீ என்னை விரும்பின. உனக்கு நான் வாழ்க்கை கொடுத்தேன்’ என்பதை போலவே தான் காட்சி தந்தது.
நிஜத்திற்கும் அவனின் எண்ணமும் அதுவாக தானே இருந்தது என்பது தான் கசப்பான உண்மை.
அவள் விரும்பினாள். சூழ்நிலை அவளுக்கு சாதகமாக அமைய இதோ இது அவள் ஆசைப்பட்ட வாழ்வும் தானே? கொடுத்தாகிற்று என்பதை போல் தான் அவன் பேசினான்.
பேச்சின் திசை புயலை கிளப்ப அவளின் எதிர்பார்ப்பும், அவனின் நியாயமும் எதிர் எதிர் திசையில் நின்று முட்டிக்கொள்ள அனைத்திற்கும் உச்சமாய் அந்தநேரம் வந்த அவசர செய்தி.
கதிர்வேலன் மாரடைப்பின் காரணமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று திருமகள் பதறியடித்து வந்து அழகரிடம் கூற, கேட்டுக்கொண்டிருந்த விருஷ்திகா மயங்கி சரிந்தாள்.