அழகரின் நியாயம் ஒன்றாக இருக்க விருஷ்திகாவின் நியாயம் வேறாக இருக்க இருவரும் முரண்பட்டு நின்றனர்.
‘எனக்கு பிடிக்குதோ இல்லையோ. என்னை பிடிச்ச பொண்ணு தானே? என்னை விரும்பின பொண்ணு தானே?’ என மனசாட்சியை அலட்சியம் செய்தவன் அதன்வழியில் சிந்தனையை செல்ல அனுமதிக்கவில்லை.
அவன் நிலைப்பாடு அதுவாக மட்டுமே இருந்தது. விருஷ்திகாவின் தவிப்புகள் ஏன் என்று கூட அவன் யோசிக்கவில்லை.
அதை ஒரு விஷயமாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் அவளின் விருப்பப்படி இந்த திருமணம் நடந்து வாழ்க்கையும் ஆரம்பித்தாகிவிட்டதே என்பது தான் அவனின் நினைப்பாக இருந்தது.
“கொஞ்சம் கூட மரியாதை தெரியாதா லக்ஷ்மி? இப்படி பேசறது இதுவே லாஸ்ட்டா இருக்கனும். இல்ல தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ…” என்று எச்சரிக்க, அவன் அழுத்தியதில் கன்னத்தில் நீர்.
விசும்பாமல் அவனை எரிக்கும் பார்வை பார்த்தவளை தானாய் மெதுவாய் விலக்கினான்.
சிலநொடி மௌனம். அவன் அவளை இலகுவாகவே எதிர்கொண்டான். எந்தவிதத்திலும் இப்படி செய்துவிட்டோம் என்னும் சிறு சஞ்சலம் கூட இல்லை அழகரின் முகத்தில்.
அதுவே விருஷ்திகா மனதில் பேரிடியாக வலிக்க வலிக்க இறங்கியது. ‘இவன் என்னை நினைக்கவே இல்லையா?’ என்னும் கேள்வி பெரிதாய் வியாப்பிக்க,
“ப்ச், கேளு. அதுக்கு முன்ன…” என்றவனின் முன் கையமர்த்தி தடுத்தவள்,
“பதில் சொல்லுங்க. ப்ளீஸ். இவ்வளோ இந்த துளியளவு, கொஞ்சம் கூட என் மேல விருப்பப்பட்டு, என்னை பிடிச்சு என்கிட்ட சம்மதம் கேட்கலையா நீங்க?…” என்றவள் கண்ணில் நீர் வழிந்தது.
அழுதுகொண்டே கேட்டவளின் முகம் பார்த்தவன் மனதினுள்ளும் அவள் கண்ணீரினை கண்கொண்டு காணமுடியாத எரிச்சல்.
“பொய் சொல்லாம உண்மையை சொல்லுவீங்கன்னு நம்பறேன். ஏனா இனிப்பான பொய்யை விட விஷமான உண்மை எவ்வளவோ மேல். ப்ளீஸ். இந்த ஒரு நம்பிக்கையை காப்பாத்துங்க…” என்றவளின் கெஞ்சலில் தலையை கோதியபடி ஆயாசமாய் பார்த்தவன் பெருமூச்சுடன் தலையசைத்தான்.
“ஆமா, உன்னை கல்யாணம் பண்ணிக்கவேண்டிய அவசியம். அதுக்காக தான் கேட்டேன். உன்னோட விருப்பமும், முழு சம்மதம் எனக்கு தேவையா இருந்தது…”
“அப்போ உங்க விருப்பம், உங்களோட முழு சம்மதம்? எனக்கு அது தேவை இல்லையா?…” என்றாள் உடனடியாக.
அதற்கு அவனிடம் சுத்தமாய் பதில் இல்லை. வெறித்தபடி பார்த்துக்கொண்டு நின்றான் அழகர்.
“சொல்லுங்க மாமா. நீங்க நினைச்ச மாதிரி என்னை உங்களுக்கு பிடிச்சது. கல்யாணம் செஞ்சுட்டீங்க. அப்போ எனக்கும் தோணுமே?…” என்றாள் விருஷ்திகா.
“இவ்வளோ ஏன் யோசிக்கிற நீ? வீட்டுல கல்யாணம் பண்ணிக்க பார்க்கிறவங்களை என்ன காதலிச்சு தான் கல்யாணம் பன்றோமா என்ன? பார்க்கறோம். ஒத்துவந்தா சரின்னு சொல்றோம் தானே?…” நியாயம் பேசினான் அநியாயமாய்.
“அப்ப கூட பொண்ணு பார்க்க வரும்போது அவளை பார்த்து, கொஞ்சமாவது பிடிச்சு, ஒருநிமிஷம் ரசிச்சு நமக்கு மனைவியாக போறவன்ற எண்ணத்தோட உரிமையா கவனிச்சு தானே அந்த கல்யாணமும் நடக்கும். உங்க மனசுல அப்படி இருந்துச்சா?…” என்று அவனுக்கு எதிர்கேள்வி கேட்க மீண்டும் மௌனமானான்.
“பதில் இல்லைல. எங்கம்மா சொன்னாங்க, அந்த வார்த்தையை காப்பாத்தலை. உங்க வீட்டுல வருத்தப்பட்டாங்க. ஏமாந்துட்டாங்க. அதை சரிக்கட்ட இந்த கல்யாணம்…” என்றவள்,
“அப்போ நேத்து நைட், நீங்க என்னோட….” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.
கண்ணீர் மீண்டும் அருவியாய் கொட்ட ஆரம்பிக்க உடலெல்லாம் உதறியது அவன் அதே பதிலை சொல்லிவிடுவானோ என்று.
அழகருக்கு அவளின் உணர்வுகள் புரியவில்லை. அவனின் நியாயத்தில் தான் நின்றான், பார்த்தான், பேசினான்.
அவள் விரும்பினாள். தனக்கு திருமணம் செய்யவேண்டிய அவசியம். அவள் விரும்பிய வாழ்க்கை தானே என்று தான் நினைத்தானே தவிர அவளின் எதிர்பார்ப்பு புரியவில்லை, என்பதை விட புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை போல் தான் இருந்தான்.
“ப்ச், என்ன தெரியனும்? கல்யாணம் ஆகிடுச்சு. நீ என்னோட வொய்ப். ஸோ நெக்ஸ்ட் ஸ்டெப் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது தானே? தாலி கட்டின பின்னாடி தள்ளி நிக்கனும்ன்ற அவசியம் என்ன?…” என்றான் வெகு இலகுவாய், இயல்பாய் அழகர்.
மொத்தமாய் உடைந்துபோனாள் விருஷ்திகா. அவன் பேசிய ஒவ்வொன்றும் பசுமரத்து ஆணியென மனதினுள் பதிந்து போனது.
முதல்நாளிரவு அவனோடு கூடிய பொழுதுகள் எல்லாம் நினைக்க நினைக்க விழிநீர் வற்றிவிட்டது.
எத்தனை காதலாய் அவனை அணுகியிருந்தோம், அணைத்திருந்தோம். அவனுள் மொத்தமாய் தன்னை ஒப்புக்கொடுத்து அடங்கி இருந்தோம் என்று நினைக்க நினைக்க ஆறவில்லை.
அவன் மீதான பிடித்தங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருந்தோமே. பைத்தியமே தான்.
மடித்து தரையில் அமர்ந்துவிட்டாள் அவள். காதலே இல்லாமல், குறைஞ்சபட்சம் பிடித்தமும், அவள் மீது பிடிப்பும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் அவனை என்ன செய்து தன் ஆதங்கத்தை தீர்க்க முடியும்?
விழிகளில் நீர் வற்றுமளவு மொத்தமாய் அழுது முடித்தாகிற்று. இன்னும் அழுவதற்கும் தெம்பில்லை என்பதை போல் அமர்ந்திருந்தாள் விருஷ்திகா.
“இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே இருப்ப நீ?…” என்றான் வெகுநேரம் கழித்து.
திருமணமான சந்தோஷம் முற்றிலும் தொலைந்து ஏன் திருமணம் செய்தோம் என்னும் நிலைக்கு அவள் வந்து நிற்கும்படியாக தான் இருந்தது அவனின் பேச்சுக்கள்.
பதிலேதும் சொல்லாமல் நெற்றியில் இருகைகளையும் வைத்து கண் மூடியபடி அமர்ந்திருந்தவள் அழகரின் முகம் காண கூட மறுத்தாள்.
எத்தனை இலகுவாய் தான் நினைத்ததை நடத்தி இருக்கிறான். அதற்கும் தானுமே அறிவில்லாமல் உடன்பட்டுவிட்டோமே என்னும் கழிவிரக்கம்.
அதுவும் அன்றைய நாளில் அவன் கேட்டவை மீண்டும் மீண்டும் மனதை குத்தியது.
“ப்ச், லக்ஷ்மி…” அழகர் மீண்டும் அழைக்க, அப்போதும் பேசினாள் இல்லை.
நினைவெல்லாம் தனக்கெங்கே போனது அறிவு என்று தன்னை தானே மட்டுமே குறை கூறி நிந்தித்தபடி இருந்தாள்.
ஆள நினைக்கின்றவன் ஆட்டையும் பிடிப்பான், மாட்டையும் பிடிப்பான். அதற்கு ஆவனவும் செய்வான்.
தானல்லவா முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும். இப்போதும் அன்றைய நாளில் சந்தோஷத்தில் உடலெல்லாம் எரிந்தது.
எத்தனை குதூகலம், ஆர்ப்பாட்டம், மனமெல்லாம் ஆர்ப்பரிப்பு. அவன் திருமணம் செய்துகொள்ள கேட்டதும் ஒருவார்த்தை என்னை பிடிக்கிறதா என தான் கேட்காமல் போனோமே என மானசீகமாய் நெற்றியில் அறைந்துகொள்ள அழகரின் பொறுமை பறந்தது.