“இப்ப என்னடி நடந்திருச்சு? தலையில அடிச்சுக்கற?…” என்று சென்றவேகத்தில் அவளை இழுத்து நிறுத்தியிருந்தான் தன் முன்னே.
இப்படி வந்து நடந்துகொள்வான் என்று எதிர்பாராதவள் மொத்தமாய் அவன் மேல் மோதி நிற்க விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டான்.
“இவ்வளோ நீ அழற அளவுக்கு எதுவும் தப்பா நடக்கலை. உனக்கு பிடிச்ச, நீ ஆசைப்பட்ட வாழ்க்கை…” என்று சொல்லி மேலும் பேசும்முன் அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள்,
“பிடிக்கலை. இப்ப சுத்தமா உங்களை பிடிக்கலை. நான் ஆசைப்படவும் இல்லை. அனுப்பிருவீங்களா?…” என்றவள் சத்தம் அந்த அறையை நிறைக்க,
“இனி அதுக்கு வாய்ப்பில்லை. அழகர் பொண்டாட்டி நீ. என்னை தாண்டி எங்க போவ?…”
“போவேன், ஏன் போகமாட்டேன்னு நினைப்பா?…” என்றாள் அவனின் இந்த அலட்சியத்தை அடித்து நொறுக்கும் பொருட்டு.
“என் புத்தியை சொல்லனும். என்னை செருப்பால அடிக்கனும். தாலி கட்டறதுக்கு முன்னாடி அத்தனைதடவை கேட்டீங்களே, எனக்கு ஏன் அந்த நினைப்பு வராம போச்சு? அப்போ தப்பு என் பேர்ல தானே?…” என்றாள் உணர்வற்ற பார்வையோடு.
அவனை கண்டாலே பட்டாம்பூச்சியாய் சிலிர்த்துக்கொண்டு படபடக்கும் பார்வை பார்ப்பவளின் விழிகளில் அவன் மீதான நேசம் கிஞ்சித்தும் இப்போது இல்லை.
அழகர் அதனை கவனிக்கவே செய்தான். இப்போது விஷயம் தெரிந்து இத்தனை கோபம். சரியாகிவிடும் என்று அலட்சியமாய் தான் பார்த்தான் ‘இது ஒரு விஷயமா?’ என்று.
“அந்த நிமிஷம் நான் கேட்டிருந்தா என்ன சொல்லிருப்பீங்க நீங்க?…”
“நிச்சயமா உண்மையை சொல்லியிருப்பேன்…” என அப்போதும் திமிர்ந்து பேசியவன்,
“திரும்பவும் சொல்றேன். என்னை அடிக்கடி சொல்ல வைக்காத லக்ஷ்மி. நம்ம கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமே நம்ம வாழ்க்கையை வாழ பார்ப்போம்…”
“அப்போ என்னோட அம்மாப்பா?…” என்றதுமே அழகரின் முகம் இறுகியது.
“அவங்களை எவ்வளோ அவமானப்படுத்திட்டேன். என்னோட அவசரத்தால. அதுவும் இப்போ ஆசை ஆசையா வாங்கின வீட்டை விட்டு வெளில போற அளவுக்கு அவங்களை வேதனைப்படுத்திட்டேன். அதுக்கு என்ன சொல்லுவீங்க?….”
“என்ன சொல்லனும்? இதெல்லாம் உங்கம்மாவுக்கு வாக்கு குடுக்கறதுக்கு முன்னாடி இருந்திருக்கனும். சும்மா இருந்தவங்க மனசுல நீ பிறந்ததுல இருந்து எனக்குன்னு சொல்லி நீதான் இந்த வீட்டு மருமகன்னு நினைப்பை குடுத்திருக்காங்க. திடீர்ன்னு மாத்த நினைச்சா? என்ன நினைச்சாங்க எங்களை?…” என்றவன் ஆவேசத்தில் விருஷ்திகாவின் முகம் வேதனையில் கசங்கியது.
“அப்போ இதுல நான் என்ன பண்ணினேன் மாமா? என்னை ஏன் இப்படி கல்யாணம் செஞ்சீங்க?…”
“ஆஹ்ஹ்,…” என்று கத்தியவன்,
“என்னடி ஏமாத்தியா கல்யாணம் பண்ணுனேன். என்னை நீ விரும்பின தான? அதுவும் அஞ்சு வருஷமாம். நினைச்சுட்டே இருந்தேன்னு நேத்து வார்த்தைக்கு வார்த்தை எத்தனை சொன்ன? இப்ப என்னோட கல்யாணம் உனக்கு கசக்குதா?…” என்றவனின் கேள்வியில் இன்னுமே குன்றி போனாள் விருஷ்திகா.
“நீங்க இப்படி இருந்தா புடிக்கும் மாமா. இப்படி பார்த்தா புடிக்கும். இப்படி சிரிச்சா புடிக்கும் மாமான்னு எவ்வளோ பேசின. இப்போ என்னவாம்?…”
“நீங்க இப்படியெல்லாம் இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என்ன மனுஷன் நீங்க? நான் எப்போ சொன்னதை போய்….” என்று கோபத்தில் முகம் சிவக்க அவள் மொழிய அழகரின் கைகள் அவளை நோக்கி நீண்டது.
“ஓகே, ஆனா நான் சொன்னது உண்மை தானே? நீ சொன்னதை தானே பேசினேன். எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. பொண்டாட்டிக்கு புருஷனை இந்தளவுக்கு புடிக்கும்ன்னு தெரிஞ்சா சந்தோஷப்படத்தான் செய்வாங்க…” என்றான் அவளின் இடையை பற்றி வளைத்து.
“தள்ளி போங்க நீங்க…” என்றவளின் பலம் அவனின் முன்னால் எடுபடவே இல்லை.
மீண்டும் கண்ணீர் சுரக்க ஆரம்பிக்க பல்லை கடித்துக்கொண்டு அவனின் கைகளை விலக்க முயன்றாள்.
“முன்னாடி நான் லவ் பண்ணினது புடிக்கலை. இப்போ மட்டும் புடிக்குதோ?…” என்று எரிச்சலும், ஆத்திரமுமாய் அவள் கேட்க மீண்டும் அவளின் கன்னம் பற்றினான் அழகர்.
“எப்படி புடிக்கும்? என் வீட்டுல என்னோட மூணு பொம்பளை புள்ளைங்க பிறந்திருக்காங்க. அவங்க எப்படி இருக்கனும்னு நான் நினைப்பேனோ அப்படித்தான் நானும் இருக்க நினைப்பேன். எனக்கு வர்றவளும் இருக்கனும்ன்னு நினைப்பேன்….” என்றான்.
“உறவா இருந்தாலும் நீ விருப்பம்ன்னு வந்தா பல்லை காட்டிட்டு சரின்னு சொல்லனுமோ? அதுக்கு நான் சரிப்படமாட்டேன். எனக்கு உன்மேல கோவம். இந்த வீட்டுல தானே நீயும் பிறந்து வளர்ந்த. உனக்கேன் இப்படி ஒரு எண்ணம்ன்னு பிடிக்காம போச்சு…” என்றான் அவளிடம்.
“அப்போ உங்களுக்கு சாதகமா நீங்க சாதிக்க நினைக்கும் போது என்னோட காதல் உங்களுக்கு சரியா படும் இல்ல?…” அவனின் கைகளுக்குள் அவள் கன்னம் சிறைபட்டிருக்க இன்னும் நெருங்கினான் அழகர்.
“அப்படியே வச்சுக்கோ. உன்னோட விருப்பம் என் மேலன்றதால மட்டும் தான் உன்னை கேட்டு நீ சரின்னதும் தாலி கட்டினேன். தப்பிச்சேன்னு நினை. இல்லை, உன்னோட அம்மா செஞ்சதுக்கு…” என்று பல்லை கடித்தவன்,
“இந்த வீட்டுல ஒவ்வொரு மனுஷங்களும் கலங்கி நின்னாங்க. பார்த்துட்டு போனா போகட்டும்ன்னு உன்னை தூக்கி குடுக்க சொல்றியா? உன்னை எனக்காகவேன்னு பார்த்து நினைச்சிருக்காங்க. எனக்கும் என் வீட்டுல பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்க ஆசை….” என கூறி,
“அது நீயா இருந்த. என் மேல விருப்பத்தோடவும் இருந்த. ப்ராப்ளம் சால்வ்ட். உங்கம்மா ஏமாத்த நினைச்சாங்க. இப்ப அவங்களையும் தான் இந்த கல்யாணம் காப்பாத்தி இருக்கு…” என்றான் இறுக்கத்துடன்.
கர்வமாய், திமிரோடு சொல்லவில்லையே தவிர அவனின் இயல்பே அதுவாக தான் இருக்க அப்படித்தான் வெளிப்பட்டது.
விருஷ்திகாவுக்கு அவனை அடித்து துவசம் செய்யும் வேகம். ஒன்றும் செய்யமுடியாமல் மலை போல் நின்றவனை பார்த்தவள் அதே ஆவசத்துடன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட ஆரம்பித்தாள்.
அதில் அவன் அவளுக்கென வாங்கிவந்திருந்த கைப்பேசியுடன் ஒரு பார்சலும் கீழே விழ போக சட்டென பிடித்தான் அவன்.
“லக்ஷ்மி…” என்று கோபத்துடன் அவளை உறுத்து விழித்தவன்,
“ச்சை…” என்று தலையில் அடித்தான்.
அவனின் ஆத்திரமும், கோபமும் கண்டு உடல் விதிர்விதிர்க்க நடுங்கி நின்றாள் விருஷ்திகா.
அவளின் வெடவெடத்த பார்வையில், தொண்டையை கனைத்துக்கொண்டு தன்னை நிதானத்திற்கு கொண்டுவந்தவன் மீண்டும் விழி திறந்து அவளை தன்னருகில் இழுத்து அமர்த்தினான்.
சட்டென அவன் பிடித்த கையை உதறிவிட்டு இன்னும் விலகி பின்னால் தள்ளி நிற்க,
“என்னால உன் பக்கம் வரமுடியாதா? இல்லை உன்னை என் கைக்குள்ள கொண்டுவர முடியாதா? சும்மா சைல்டிஷா பிஹேவ் பண்ணாம மெச்சூர்டா நடந்துக்க பழகு லக்ஷ்மி…” அதட்டல் அத்தனை காரத்துடன்.
“அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணுனீங்க? மெச்சூர்டான பொண்ணை தேடிருக்க வேண்டியது தானே?…” என்றாள் உதடு துடிக்க கண்ணீருடன்.
“இந்த பொண்ணை கட்டிக்கிட்டேனே? அடுத்த ஜென்மத்துல பார்க்கலாம். இப்ப வந்து சாப்பிடு…” என்றான்.
“எனக்கு வேண்டாம்….” பட்டென்று அவள் பதில் சொல்ல,
“ஏன்?…”
“பிடிக்கலை…”
“அதுதான் ஏன்? இது உன்னோட பேவரெட் தானே? நம்பி சொன்னான் நம்ம ஹோட்டல்ல நீ எப்போ வந்தாலும் இதை தான் சாப்பிடுவன்னு….”