அதையும் நம்பி சொல்லி தெரிந்துகொண்டு வாங்கி வந்திருக்கிறான். ‘என்ன இவன் என்னை கவனித்து?’ என நினைக்கையில், ‘அவன் என்ன விரும்பியா உன்னை தேடி வந்தான்?’ என்ற உண்மையும் முகத்தில் அறைபட்டது.
அவன் மேனி உரசாமல் சிறு இடைவெளி விட்டே நின்று அவளை பார்க்க விருஷ்திகாவிற்கு மீண்டும் அழுகை பொங்கியது.
‘இதுவா அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை?’ என அவளுள்ளம் எள்ளி நகையாட அழுகையை குறைக்க முயன்றாள்.
“சாப்பிட்டு அழு. யார் வேண்டாம்ன்னு சொன்னா? உன்னோட அம்மாப்பா அவங்களா கிளம்பி போனா நீ பட்டினி இருக்கனுமா?…” என அப்போதும் சாதாரணமாகவே வந்தது கேள்விகள்.
“கீழ யாருக்கும் சொல்லாம எடுத்துட்டு வந்திருக்கேன். நீ சாப்பிடாம இருந்து மட்டும் என்னவாகிடும்? எல்லாம் சரியா போகுமா? இப்படி உன்னை தாங்கனும்ன்னு நினைக்காத லக்ஷ்மி. ஏதோ உன் பேரன்ட்ஸ் கிளம்பின கவலையில இருப்பன்னு பார்க்கறேன்…” என்றான்.
“நீங்க செஞ்சது உங்களுக்கு உறுத்தவே இல்லையா? ஏன் மாமா, ஏன் இப்படி செஞ்சீங்க? உங்களை எவ்வளோ நம்பினேன்…” என மீண்டும் தாளமாட்டாமல் அவள் கேட்க,
“தப்பா எதுவும் செய்யலை. இதுவே உன்னை வீட்டுல பேசி செஞ்சிருந்தா அப்போவும் இப்படித்தான் இருப்பேன் நான். என்னை தெரிஞ்சு தானே விரும்பின நீ…” என்றவன்,
“இப்போ உன் நம்பிக்கைக்கு என்ன? என்ன கெட்டு போச்சு? உன்னை ஒன்னும் நான் கல்யாணம் செஞ்சுட்டு ஏமாத்தலையே…” என்றான்.
“திரும்பவும் சொல்றேன். நான் உன்னோட பெத்தவங்களை பழிவாங்க உன்னை கல்யாணம் செஞ்சு கஷ்டப்படுத்த நினைக்கலை. உன் வயசு என்னை பெத்தவங்க என் குடும்பத்துல இருக்கிறவங்க ஆசையோட அளவு. நீ இந்த வீடு மருமகளா அவங்க மனசுல இருக்கும்போது இன்னொருத்தர் முன்னாடி நிக்க விடற அளவுக்கு நான் ஏமாளி இல்லை…” என்றவன்,
“அய்யோ அதையே சொல்லாதீங்க…” என தன் காதுகளையும் மூடிக்கொண்டவள் குரல் அறையை கிடுகிடுக்க செய்தது.
“உங்களை காதலிச்ச பாவத்துக்கு நான் என்னவோ பண்ணிட்டு போறேன். விடுங்க. என் அம்மாப்பா என்ன செஞ்சாங்க? எவ்வளோ துடிச்சு போயிருப்பாங்க….”
“கொஞ்சமும் அச்சமில்லாம என் சட்டையை பிடிச்சார் தானே உங்கப்பா? எங்கருந்து வந்துச்சு அவ்வளோ துணிச்சல்? ஆனாலும் மாமனாராச்சேன்னு பேசாம விட்டேன். அதுவுமே பொதுவெளி, அன்னைக்கான சூழ்நிலைக்கு பார்த்து…” என்றான் அவனும் பல்லை கடித்து.
“வேற எப்படி நடந்துக்கனும் அவங்க? நீங்க இதுக்காக தான் தாலி கட்டியிருக்கீங்கன்னு அன்னைக்கே அப்பவே தெரிஞ்சிருந்தா போய்ட்டே இருந்திருப்பேன்…”
“லக்ஷ்மி…”
“எனக்கு பயமெல்லாம் இல்லை. கண்டிப்பா செஞ்சிருப்பேன். நம்பிக்கையும், விருப்பமும் இல்லாத இடத்துல நான் ஏன் இருக்கனும்? என்னை விரும்பி, என்னை புடிச்சு கல்யாணம் செஞ்சிருந்தா அதுவேற. அப்படியா செஞ்சீங்க? இல்லையே….” என கண்ணீரை துடைத்தவள்,
“நான் பண்ணினது எவ்வளோ பெரிய தப்புன்னு இன்னைக்கு அனுபவிக்கறேன். உங்களுக்கு எவ்வளோ கோவம் இருக்கட்டும், எதிர்வீடு தானே? விஷயம் தெரிஞ்சதும் வந்து, குடுத்த வார்த்தை என்னாச்சுன்னு கேட்டிருந்தா கூட சந்தோஷமா உங்க பக்கம் நின்னிருப்பேன். அப்படியா செஞ்சீங்க?…..” என்றாள்.
“எவ்வளவு ஆசையா, நம்பிக்கையா, உங்களை ஒருவார்த்தை கூட கேட்காம கல்யாணம் வரை வந்தேன். அப்போ கூட என்கிட்ட நீங்க எதை நினைச்சு கேட்கறீங்கன்னு புரியாம சம்மதம் சொல்ல, அதைவச்சே நீங்க அத்தனைபேர் முன்னாடியும் என் சம்மதத்தோட தான் இந்த கல்யாணம்ன்னு சொன்னீங்களே. இல்லை இப்படி செய்வாங்கன்னு தெரியாதுன்னு நான் சொல்ல எவ்வளோ நேரமாகிடும் எனக்கு?…”
“ஏன் இப்போ போய் சொல்லேன்…” என்றான் இறுமாப்பாய் அழகர்.
“ஏன் சொல்லனும்? நீங்க ஏமாத்தினத்தை விட நான் ஏமாந்துட்டேன். அதுதான் அசிங்கம். அதை நான் சொல்லனுமா? என் வாழ்நாள் முழுக்க அது என் பின்னாடி வரனுமா?…”
“எது அசிங்கம்? உன்னோட விருப்பம் என்னோட வாழனும்ன்றது. இப்போ அதுதானே நடந்திருக்கு. அதுக்கேன் இவ்வளோ ஆர்ப்பாட்டம்? இந்த கல்யாணம் இப்படி நடக்காம உன் வீட்டுல சொல்றபடி வேற ஒருத்தனோட நடந்திருந்தா சந்தோஷமா?…” என்றான் சற்றே நக்கலாய்.
“வொய் நாட்? காதலிச்சா எல்லாமே ஒன்னு சேரனுமா என்ன?…” என்றவளை வெறித்து பார்த்த அழகரை அவள் அலட்சியம் செய்தாள்.
“இன்பேக்ட் இந்த கல்யாணம் இப்படி நடக்காம உங்களுக்கு என்னை பிடிக்காமலே போயிருந்தா என் வீட்டுல பார்த்த வரனுக்கு என்மேல பேஸிக் ஒபீனியனும், கொஞ்சம் பிடித்தமும் இருக்குமே. அது போதாது நான் வாழ?…” வேடுமென்றே தான் அவனை காயப்படுத்த அவள் பேச,
“ஓஹ், இஸ் இட்?…” கொஞ்சமும் அவன் அசரவில்லை அப்போதும்.
“எஸ், அப்கோர்ஸ். உங்களையே காலத்துக்கும் நினைச்சிட்டு என்னை பிடிக்காதவன் நினைப்போட வாழ நான் என்ன பைத்தியமா? அந்த பைத்தியம் இப்போ தெளிஞ்சிருச்சு….” என மிஞ்சி மிஞ்சி பேசியவளின் வார்த்தைகளுக்கு எதிராய் அவளின் முகமும், விழிகளும் அதனை பேசும்முன் அவளுள்ளம் படும் பாட்டை அவனுக்கு எடுத்துரைத்துவிட்டதே.
கள்ளம் புகா மனதில் அவனை கோபப்படுத்தவும் முடியாமல் பேசும் மனைவியை கண்டவன் இதழோரம் குறுஞ்சிரிப்பு.
விருஷ்திகா திகைப்பும், ஆத்திரமுமாய் அவனை எதிர்கொள்ள அழகர் கொஞ்சமும் இறங்காமல் அவளுக்கென வாங்கிவந்த கைப்பேசியை எடுத்து கட்டிலில் வைத்தான் மீண்டும்.
“இது உனக்காக நான் வாங்கினது. இனி நீன்றது அழகர் வொய்ப். புரியுதா? உன்னோட உளறல் எல்லாம் இந்த ரூமோட வச்சுக்கோ. அதேநேரம் எல்லா நேரமும் நான் இப்படியே இருக்கவும் மாட்டேன். ஹ்ம்ம்…” என்று அமர்த்தலாய் கூற,
“நீயெல்லாம்…” என அவள் ஏக வசனத்தில் ஆரம்பிக்க,
“அடிங்…” என்றவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட அவளின் விலகலும், அவனின் விருப்பமுமான ஒரு போராட்டம்.
அழகரை அத்தனை அடி அடித்தவள் கைகள் அவனை காயப்படுத்த பார்க்க அனாயாசமாய் அதனை முறியடித்தவன்,
“எனக்கு பொண்டாட்டியை கை நீட்டறது புடிக்காத விஷயம் லக்ஷ்மி. உன்னோட பேச்சுக்கு என்னோட எதிர்வினை என் விருப்பமா தான் இருக்கும்…” என்றவன்,
“இனிமே உனக்கு என்னை பிடிக்கலனா என்ன? எனக்கு இப்போ மிஸஸ் அழகரை புடிக்கும். புரிஞ்சு நடந்துக்கோ…” என்றான் அவளின் முகத்தோடு இழைந்தபடி.
அவனின் இந்த பேச்சை சத்தியமாய் விருஷ்திகா எதிர்பார்க்கவே இல்லை. அவனின் ஆளுமை, தோரணை, அழுத்தத்தில் மனதை பறிகொடுத்தவள் தான், இப்போது அதற்கு எல்லாம் உச்சமாய் இருக்கும் இந்த அலட்சியமும், திமிரும் அவனை விட்டு விலக செய்தது.
அதற்குள் கதவு தட்டப்பட ஸ்தம்பித்து நின்றவளை பார்த்து மென்புன்னகை புரிந்தவன் மீண்டும் அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விலகி சென்று கதவை திறந்தான்.
வெளியே பதட்டத்துடன் நின்றது திருமகள் தான். அவளின் முகத்தில் அத்தனை கவலை.
“என்ன க்கா?…” என்றான் அழகர் சுவாதீனமாய்.
“லச்சுமி எங்கடா அழகரு? கதிரு மாமாவுக்கு மாரடப்பாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போறாக…” என்று திருமகள் சொல்லவும் அழகர் என்னவென்று கிரகிக்கும் முன் பொத்தென்று சப்தம்.
திரும்பி பார்க்க விருஷ்திகா மயங்கி சரிந்திருந்தாள். சட்டென அழகர் அவளை நெருங்க, என்னவென்று பார்க்க திருமகளும் உள்ளே நுழைய சடுதியில் ஒரு ஆராய்ச்சி.
அவளின் கண்கள் ஸ்கேன் செய்வதை போல அறையின் அத்தனையையும் கவனிப்பில் எடுத்துக்கொண்டது.
அறையின் அலங்கோலமும், பிரிக்கப்பட்டிருந்த உணவும், புது கைப்பேசியும் என்று அனைத்தும் தெரிய கூடவே விருஷ்திகாவின் கோலம்.
“தண்ணிய கொண்டா, அங்க என்ன பார்க்கற நீ?…” என்றான் இரையும் குரலில்.
திருமகள் தண்ணீரை எடுத்து தர அதனை வாங்கி மனைவியின் முகத்தில் தெளித்தான்.
திருமகள் விருஷ்திகா கண் விழிக்கவும் குடிக்க தண்ணீரை தர வாங்கி பருகியவள் அருகிலிருக்கும் அழகரை பார்த்தாள்.
சட்டென்று சடுதியில் ஒரு ஒதுக்கம். அவனை விட்டு பின்னால் நகர்ந்தமர்ந்தவள் பார்வையே அவனை குற்றம் சாட்ட அழகரின் மனதினுள் ஊசியாய் அவளின் எண்ணம் குறித்தான வருத்தம்.
“அப்பா…” என்று முகம் மூடி கதறியவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை கிளம்பினார்கள் அனைவரும்.
அழகுமீனாள் தவிர்த்து மற்ற எல்லோருமே மருத்துவமனைக்கு சென்று சாந்தாவுடன் தான் இருந்தனர்.
விருஷ்திகா சாந்தாவின் அருகில் கூட செல்லவில்லை. வெறித்த பார்வையுடன் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டாள்.