“நல்லா கேளுங்கப்பா. இவங்க குடும்பத்தை பெருசா நினைச்சு எவ்வளோ பெருமையா பேசினாரு சித்தப்பா. ஆனா இவ்வளோ மட்டமானவனா இருப்பான்னு நினைக்கலை. பார்க்க ஆளு ஓங்குதாங்கா இருந்தா போதுமா? இவனெல்லாம்…” என்று விஷாலும் பேச,
“அதான அவளும் இவன் ஆட்டத்துக்கு மயங்கி பெத்தவங்களை தூர வீசிட்டு வந்துட்டா. பொண்ணா அவ. என் பொண்ணா இருந்தா கழுத்தை திருகி போட்டிருப்பேன்….” என்ற மயில்வாகனம்,
“இங்க பாரு உன்னையெல்லாம் ஏத்துக்க விடவேமாட்டேன் நான். என் மானத்தையே வாங்க வச்ச உன்னை நீ என்ன மன்னிப்பு கேட்டாலும் உன்னை மன்னிக்கமாட்டேன். உன்னை தேடி ஓடிவந்த அவளையும் மன்னிக்கமாட்டேன்….” என்று கூற,
“ஷ்ஷ் இவிங்க வேற…” என்று பல்லை கடித்த அழகரின் பார்வை இங்கே இவர்களிடம் இல்லை.
சற்று தள்ளி எங்கேயோ பார்த்தபடி தாடை இறுக நின்றவனின் விழிகள் சட்டென மயில்வாகனன் பக்கம் திரும்பிய நொடி இடியாய் அவரின் கன்னத்தில் இறங்கியது.
“ஏய்…” என்ற விஷாலின் கன்னத்தில் அடுத்த அடி.
சுருண்டு விழுந்துவிட்டான் அழகரின் ஒற்றை அறையிலேயே. கீழே கிடந்த மகனை தூக்க பார்த்த மயில்வாகனனின் சட்டையை பிடித்த அழகர்,
“நில்லுய்யா. என்ன பேசின, இப்ப பேசு. என்னை பார்த்து நான் பார்க்கும்போது எங்க சொல்லு இப்போ சொன்ன எல்லாத்தையும் சொல்லு…” என்றான் அவன் ஆக்ரோஷமாய்.
“என்னடா மட்டுமரியாதை இல்லாம என் வயசுக்கும் பார்க்காம கை நீட்டற?…” என மயில்வாகனம் கேட்க மீண்டும் ஒரு அறை.
மயில்வாகனம் அதிர்ச்சியில் பேச்சை மறந்தார். அதிகமாய் அழகரை பார்த்து பழகியதில்லை என்றாலும் பார்த்த சமயங்களில் கூட கதிர்வேலனின் அண்ணன் என்னும் முறையில் அவருக்கு சிறு புன்னகையும், தலையசைப்பும் மட்டும் தந்திருகின்றான் முன்பு.
அவனிடம் இப்போது அசிங்கமாய் அடிவாங்கி நிற்பதை எண்ணி அவமானத்துடன் அவனை வெறித்தார் மயில்வாகனம்.
“உன் வாய்னா நீ என்னவேணா பேசு. அதுக்குன்னு என் குடும்பத்தை என் பொண்டாட்டியை, மாமனார பேசுவியா? பல்லை தட்டி கைல குடுத்திருவேன்….” என்று இன்னும் சட்டை காலரை பிடித்து நெறுக்கியவன்,
“அதுவும் அவ்வளோ பேர் இருக்கோம். என் மாமியாரையே நீ அதிகாரம் பண்ணுவியோ? எங்க குடும்பத்து முன்னாடி? ஓய் என்ன துளிர்விட்டு போச்சா?…” என்றான் இன்னுமே கீழுதட்டை மடித்து மயில்வாகனத்தை சுவற்றோடு சாய்த்தபடி.
“எங்க குடும்பத்துக்குள்ள ஆயிரம் இருக்கும். எனக்கு பொண்ணை குடுக்கனும்ன்னு பேசின இடத்துல நீ மூக்கை நுழைச்சு ஆட்டையை களைப்பியா?…” என்றவன்,
“எனக்கு பேசி வச்ச என் பொண்டாட்டிக்கு வரன் பார்த்தப்பவே உன்னை வாயோட கிழிச்சிருக்கனும். அந்த மனுஷனோட அண்ணனாச்சேனு மதிச்சு போனா போகட்டும்ன்னு விட்டா ஏத்தமாடி உனக்கு?…” என்று அவரின் கழுத்தில் கைகொடுத்து நெம்பினான் அழகர்.
“நாங்க இருக்கும்போது, அதுவும் நான் இருக்கும்போதே லக்ஷ்மியை பேசுவியா நீ? எங்க இப்போ இப்போ பேசு. கழுத்தை திருகி போடறதுன்னா என்னன்னு தெரியுமா? சொட்ட சொல்லுய்யா….” என்று அழகர் கேட்க கேட்க மயில்வாகனன் பார்வை எல்லாம் அழகரின் அதரங்களிலும், கோபம் தெறிக்கும் கண்களிலும் தான் மாறி மாறி விழுந்தது.
கதிர்வேலன் திருமணத்தின் பின் அழகரை தான் பார்த்த தருணங்களை எல்லாம் மொத்தமாய் சேர்த்தால் கூட அவன் பத்துவார்த்தை அவரிடம் பேசியிருப்பானா என்றால் இல்லை.
மற்றவர்களிடம் கலகலத்து பேசுபவனா என்றால் அதையும் ஒருமுறை கூட பார்த்ததில்லை.
இப்படி எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாய் தன்னை சாய்த்து நிற்பவனை அச்சத்துடன் பார்த்தார் மயில்வாகனன்.
“வாய்க்கு வந்தபடி உன் இஷ்டத்துக்கு பேசுவியோ? பிச்சு வீசிருவேன் பார்த்துக்கோ. யாரை பேசறோம், என்ன பேசறோம்னு இருக்கு. இனிமே வார்த்தை தப்பா வந்துச்சு வாயிருக்காது உனக்கும் உன் மகனுக்கும்…” என்றவன் மெல்ல தன் பிடியை தளர்த்தினான்.
இரண்டடி பின்னால் நகர்ந்து நின்ற அழகர் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு தீர்க்கமாய் அவர்களை பார்த்தான்.
“இங்க இருந்து வீட்டை காலி பண்ணி போறளவுக்கு என்னாச்சு?…” என்ற கேள்வி வர விஷால் எழுந்து நின்றான்.
அழகர் கவனம் முழுதாய் மயில்வாகனம் பக்கம் திரும்ப, விஷால் மெல்ல அங்கிருந்து நகர பார்த்தான்.
“எங்கடா ஓடற?…” என அவனின் சட்டையை பிடித்து இழுத்து மயில்வாகனத்தின் மேல் சாற்றினான்.
“வீடுன்னா ஆயிரம் இருக்கும். அதுவும் பிரச்சனைன்னும் போது இப்படி பேசத்தானே செய்வோம்…”
“செய்வோம்ன்னா என்ன செஞ்சீங்கன்னு தெரிஞ்சதா? பேசி பேசி ஒருத்தரை படுக்க வைக்கிறது தான், இல்ல?…” என மீண்டும் கை ஓங்கினான் அழகர்.
“இல்ல இல்ல. இப்படி பொண்ணை தர்றோம்ன்னு சொல்லி இன்னொருத்தர்கிட்ட நான் வாக்குக்குடுத்து அசிங்கப்பட்டு நிக்கவேண்டியதா போச்சேன்னு தான்…” என்று சொல்லவும் அழகரின் விழிகள் மேலும் சிவந்தது.
“என்கிட்டையே உன் வேலையை காமிக்கிறியா நீ. ராகினி யாரு?…” என்றான் அழகர் அடுத்ததாக.
மயில்வாகனன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். விஷால் புரியாமல் தகப்பனை பார்க்க அழகரின் முகம் இன்னும் இறுகியது.
“நீ பார்த்து குடுத்த வரன். இன்னும் பொண்ணையே பார்க்கலை. வெறும் பேச்சளவுல இருக்கிற இந்த விஷயம் தடையானதுல உனக்கேன் இம்புட்டு எரியுது? வாயில வயித்துல அடிச்சுக்கிற அளவுக்கு?…” என்றான் அழகர் அடுத்ததாய்.
“என்னைய்யா, என்ன சொல்லி சரிக்கட்டன்னு யோசிக்கிற போல? மதுரைக்குள்ள இருக்கறவனுக்கு இதெப்படி தெரியும்ன்னா பார்க்க?…” என்றான் அழகர்.
“இல்ல அது…” மயில்வாகனம் திணற,
“லக்ஷ்மிக்கு நீ பார்த்த வரனோட தங்கச்சி ராகினி. உன் கணக்கு உன் தம்பி பொண்ணோட கல்யாணம் இல்லை. உன் பிஸ்னஸ் பாட்னருக்கு உன் தம்பி பொண்ணை குடுத்து உன் மகனுக்கு பொண்ணெடுக்கறது. சரியா?…” என்று கேட்க, இன்னும் முகம் வெளிறியது.
“அது இப்ப நடக்காதுன்னு இம்புட்டு ஆட்டமும். நீ என்னை ஆடறேன்னு சொல்லுவியா?…” என்று மீண்டும் கையை ஓங்க மயில்வாகனம் அவமானத்துடன் ஒடுங்கினார்.
“இப்ப இங்க விழுந்த அடி அங்க எல்லார் முன்னாடியும் உனக்கு விழாம இருக்கனும்னா…” என்றவன் அவரின் கையை எடுத்து அவரின் வாயில் மேல் வைத்து சைகை காண்பித்து,
“போ…” என்றான் உதட்டை படித்து எச்சரிக்கை பார்வை பார்த்துக்கொண்டே.