கதிர்வேலன் கண்விழிக்க நேரமாகும் என்பதனால அனைவரும் வெளியே தான் நின்றிருந்தனர்.
அழகரின் பார்வை எல்லாம் மனைவியின் முகத்தினில் தான். அவளை விட்டு வேறெங்கும் அவன் திசைதிரும்பவில்லை.
திருமணத்தின் முன்பு எத்தனைக்கெத்தனை இதுவரை அவளை கண்டுகொள்ளாமல், அவள் கண்களில் படாமல் இருந்தானோ அதற்கு நேர்மாறாய் சட்டமாய் அமர்ந்திருந்தான் உரிமை பார்வையுடன்.
ஒருவாரத்திற்கு முன்பு அவர்கள் துபாயிலிருந்து மதுரை வரும் வரை கூட அவனுக்கு இப்படியான எண்ணங்கள் எதுவும் இல்லை.
ஏன் திருமணம் செய்துகொண்ட அன்றைக்கு முதல்நாள் காலையும் கூட அப்படி ஒரு நினைவே இல்லை.
எப்போதும் போல வந்தால் வரட்டும், போனால் போட்டும் என்னும் மனநிலை தான் வீட்டினரின் பேச்சை கேட்கும் வரை.
சாந்தாதேவி வந்து பேசிவிட்டு ச்நேற்றதில் இருந்து குடும்பத்தில் பெரியவர்களின் கலக்கம் கண்டவன் காத்திருந்து கண்டுகொண்டான்.
அந்த இருபத்திநான்கு மணிநேரத்தில் எடுக்கப்பட்ட முடிவே அவனது திருமணம்.
அதுவரை லக்ஷ்மி விருஷ்திகா சாந்தாதேவியின் மகள் அந்த வீட்டிற்கு பேத்தி முறை. அவ்வளவே அவனளவில்.
இப்போது இந்தநிமிடம் அப்படி நினைக்க முடியவில்லை. அவனின் சரிபாதியாகியிருந்தவள் மீதான உரிமையும், தன்னுடையவள் என்னும் எண்ணமும் அவனை இன்னுமே திமிர் கொள்ள செய்தது.
கணவனின் பார்வையின் வீரியத்தை விருஷ்திகாவுமே உணரத்தான் செய்தாள். அதுவும் வெகுநேரம் கழித்து.
மாணிக்கவல்லி வீட்டிற்கு கிளம்பி சென்றபின் அரவிந்துடன் பேசிக்கொண்டிருந்த பொழுதில் கொஞ்சமே தன்னுணர்வு அடைந்ததும் தான் தன் மீதான அவனின் கவனத்தை கவனித்தாள்.
அவன் முகம் பார்க்கவில்லை என்றாலும் அவன் பார்ப்பதை அவளால் மனதால் அணுக முடிந்தது.
மீண்டும் கோபமும், ஆற்றாமையும் பெருக, பிடிவாதத்துடன் அவன் பக்கம் தன் விழியசைவை கூட அனுமதிக்கவில்லை.
“சேட்டையா காமிக்கிற?…” பல்லை கடித்தான் அழகர்.
விருஷ்திகா தன்னை கண்டுகொண்டதை அவளின் தடுமாற்றத்தினை கொண்டு பிடித்துவிட்டான் அழகர்.
ஆனாலும் அவ்விடம் விட்டு அசையவில்லை. அவ்வப்போது அழகரின் தலை லேசாய் அலைந்தாலும், அண்ணார்ந்து பார்த்து கழுத்தை இங்குமங்கும் விழிமூடி திருப்பினாலும் கூட அரண்டுவிட்டார் மயில்வாகனம்.
விஷால் அந்த திசைக்கே ஒரு கும்பிட்டு என்பதை போல கிளம்பிவிட்டான் மருத்துவமனையில் இருந்து.
ஆனால் மயில்வாகனத்தால் அப்படி கிளம்ப முடியவில்லை. எங்கே கிளம்பினால் மகன் கேட்பானே?
அதுவரை அவ்வளவு நேரம் என் தம்பி என்று தான் ஆட்டம் காட்டியதென்ன? இப்போது அப்படி கிளம்பிவிட முடியாதே என அச்சத்துடன் அழகர் தன்னை பார்ப்பானோ என்று அமர்ந்திருந்தார்.
எழுந்து வீடுவரை சென்றாலும் கூட அதற்கும் இழுத்துவைத்து சாத்திவிடுவானோ என்னும் பயமும், தன்னை மட்டுமரியாதை இன்றி அடித்துவிட்டானே என்னும் கோபமும் அவரை பிடித்தாட்டியது.
இப்படியாக நேரம் கழிய மாணிக்கவல்லி இரவு உணவுடன் வந்துவிட்டார் மருத்துவமனைக்கு.
அம்மையப்பன், ஞானசேகரன், சுடர்மணி அனைவரும் பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட இவர்கள் மட்டும் வந்தனர்.
“என்னத்தே மாமாவுக்கு இப்ப எப்படி இருக்கு?…” என்றாள் திருமகள்.
“ஹ்ம்ம்…” எனும் தலையசைப்பு மட்டுமே சாந்தாவிடம்.
“வாய திறந்து பேசினா என்னவாம? சேரி, சாப்பிடுங்க. சேர்த்து தான் கொண்டுவந்திருக்கோம்…” என்றாள் திருமகள் உரிமையுடன்.
“கொஞ்சம் நேரமாகட்டும்ன்னு சொல்லிருக்காங்க…” என்ற அரவிந்த்,
“விருஷ்தி, நீ போய் சாப்பிட்டு வா…” என்றான்.
மறுப்பாய் தலையசைத்தவள் அப்படியே அமர்ந்திருக்க அரவிந்தை பார்த்த சாந்தா அழைத்து செல்லும்படி கூறினார்.
மகள் பசி தாங்கமாட்டாளே. பெற்றமனம் பதறியது அவருக்கு. முதலில் கணவரின் விழிப்பின் பின்னர் தான் தன் தொண்டையில் உணவிறங்கும் என்று அமர்ந்திருந்தவருக்கு மகள் உண்ணாமல் இருக்க தாளவில்லை.
“ப்ச், அவங்க உனக்காக எடுத்துட்டு வந்திருக்காங்க. என்ன பிடிவாதம் இது? எழுந்து போ…” என்றான் அரவிந்த்.
“ம்ஹூம்…” அவனின் கையை பிடித்துக்கொண்டு விடவில்லை.
‘இவளால தான் எல்லாம். இவ போனதால தான் எல்லாம்’ என்று மயில்வாகனன் சொல்லியது இன்னும் காதில் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.
“ம்மா, சாப்பிட கூப்பிடறதுன்னா லக்ஷ்மியை மட்டும் தான் கூப்பிடுவீங்களா?…” அழகரின் குரல் கண்டனத்துடன் வந்தது.
அவனை திரும்பி பார்த்த திருமகள் என்னவென்று யோசிக்க, அரவிந்தையும் அழைக்கும்படி அழகர் கண்ணை காண்பித்தான்.
சரி என்று தலையசைத்து திரும்பகள் திரும்ப மாணிக்கவல்லிக்கும் புரிந்துவிட அவர் அழைக்கும் முன்பே,
“ப்ச், சரி வா சாப்பிடலாம்…” என அரவிந்த் அழைக்க விருஷ்திகா மட்டுமில்லை, அனைவருமே அசந்து பார்த்தனர்.
“அண்ணா…” விருஷ்திகா திகைக்க,
“பார்த்தா நீதான் என்னை சாப்பிட சொல்லியிருக்கனும். ஆனா நீ கூப்பிடலை. அதனால என்ன? என் தங்கச்சி வீட்டு சாப்பாடு தானே? எப்படி சேர்ந்து சாப்பிடலாமா? இல்லை எனக்கு டின்னர் இல்லையா?…” என்றான் புன்னகையுடன்.
“இன்னொன்னும் நீ புரிஞ்சுக்கனும். வயசானா எல்லாருக்குமே இப்படியான ஹெல்த் இஷ்யூஸ் வரத்தான் செய்யும். என்ன ஒன்னு அதுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையோ, இல்லை யாரோ ஒருத்தரோ காரணமா இருப்பாங்க….” என்றான்.
“இப்போ அந்த காரணம் நான் தானே? என்னால தான் அப்பாவுக்கு…”
“அப்படின்னு நீ நினைக்கிறியா விருஷ்தி?…” என்று கேட்க புரியாமல் பார்த்தாள் விருஷ்திகா.
“நீ செஞ்சதோட அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வரனும்னா உன்னோட கல்யாணம் நடந்த இடத்துலையோ, இல்லை அன்னைக்கு நைட்டோ வந்திருக்கனும். அப்படி இல்லையே…” என்று சொல்ல,
“ஆனா…”
“ப்ச், வெய்ட். சொல்ல போனா சித்தி, சித்தப்பாவுக்கு உன் கல்யாணம் அழகரோட நடந்ததுல எந்த வருத்தமும் இல்லை. நீ அவங்ககிட்ட சொல்லியிருந்தா சந்தோஷமா நடத்தியிருப்பாங்களேன்னு தான் ஆதங்கப்பட்டாங்க….” என்றதும் அவளின் முகம் வெகுவாய் கலங்கியது.
அதைத்தானே அவளும் நினைத்தாள். அதற்கு தானே அத்தனை ஆசைப்பட்டாள்.
அழகர் இப்படி செய்வான் என்று அவளுமே எதிர்பார்க்கவில்லையே. எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்துவிட்ட ஒன்றிற்கு அவள் இப்போது குற்றவாளியாய் நிற்கிறாளே.
முகமெல்லாம் கசங்கி போனது இதுதான் காரணம் என்று கூட வெளிப்படையாய் அவளால் சொல்லமுடியவில்லை.
சொல்லும் மனமும் இல்லை. ஒருவேளை அனைத்தும் நல்லவிதமாய் அனைவரின் சந்தோஷத்துடன் நடந்திருந்தால் என்னும் எண்ணத்தை தவிர்க்கவும் முடியவில்லை.
“நான் அவங்கக்கிட்ட பேசிட்டு சொல்லுவோமேன்னு நினைச்சேன்…” என்றாள் மெல்லிய குரலில் மேலோட்டமாய்.
அப்போதும் கூட தன்னை பெற்றவர்களுக்கு இதில் வருத்தமில்லை, தான் சொல்லாததில் தன் திருமணம் நடந்தவிதத்தில் தான் வருத்தம் என்றால் ஏன் வெளியில் வரன் பார்க்க முனைந்தனர் என்று அவள் யோசிக்கவில்லை.
அந்தநிமிடம் அவளுக்கு அந்த வார்த்தைகள் வேறுவித தாக்கத்தை தான் தந்தது.
“என்கிட்டயாவது இப்படி விருப்பம் இருக்குன்னு சொல்லியிருக்கலாமேடா?…” என்றவனுக்கு பதிலளிக்க முடியாமல் நின்றாள்.
விரும்பியவனின் சம்மதம் இன்றி, அவனுக்கும் தன் மீது விருப்பமில்லாத சூழ்நிலையில் எப்படி தன் எண்ணத்தினை வெளிப்படுத்துவது என திண்டாடி பார்த்தாள் .
“அவங்களோட வருத்தத்தை அதிகமாக்கற மாதிரி அப்பா தான் ரொம்ப பேசிட்டாங்க. வார்த்தைகளை விட்டுட்டாங்க. உன்னை அறவே விலக்கி வச்சிட்டு துபாய் கிளம்ப சொன்னதும் தான் சித்தப்பாவுக்கு என்ன பன்றதுன்னு தெரியலை. எல்லாம் சேர்ந்து பிரஷரை கூட்டி இப்போ அட்டாக்ல கொண்டுவந்து விட்டுடுச்சு…” என்றான் அரவிந்த் வருத்தமாய்.