காலை வழக்கமான நேரம் அழகர் எழுந்துகொள்ள அந்த சத்தத்தில் விருஷ்திகாவுமே எழுந்துவிட்டாள்.
எழுந்தவேகத்தில் மருத்துவமனை கிளம்ப அவள் தயாராக அதனை பார்த்துக்கொண்டே கடைக்கு கிளம்ப அவனும் ரெடியாகி நின்றான்.
“நான் ஹோட்டலுக்கு போய்ட்டு இப்போ வந்திடறேன். நீ வெய்ட் பண்ணு….” என்றவன் அவள் கேட்காததை போலவே குளித்து மாற்ற உடை எடுக்க பார்த்து அவளருகில் வந்தான்.
“உன்கிட்ட தான் சொன்னேன் லக்ஷ்மி. ஹாஸ்பிட்டலுக்கு நான் வந்து கூட்டிட்டு போறேன்னு. கேட்டுச்சா?…” என்று கேட்க பதில் சொல்வேனா என்பதை போல அவன் முகம் பார்க்க மறுத்தாள்.
“பாருடி. சும்மா சும்மா சுத்தி வருவ. இப்போ பக்கத்துலையே நிக்கறேன். கஷ்டமா இருக்கா என்ன?…” என்று அவளின் கன்னம் பற்றி திருப்ப கண்களை மூடிக்கொண்டாள் விருஷ்திகா.
“ஹ்ம்ம், இடும்பு காமிக்கிறியா? பேசிக்கறேன்….” என்று சொல்லிவிட்டு நகரவும் தான் மெல்ல கண்களை திறந்தாள் விருஷ்திகா.
அத்தனை வேதனையாக இருந்தது அவனிடம் அப்படி நடந்துகொள்வது. ஆனாலும் அப்படித்தான் நடக்க தோன்றியது.
இன்னுமே அவன் எதையுமே புரிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து முகம் இறுகியவள் குளிக்க சென்றாள்.
கிளம்பி கீழே வர ஞானசேகரன் தயாராகி இருந்தார் ஹோட்டலுக்கு செல்ல.
எப்போதும் காலை வேலை அனைத்து கிளைகளுக்கும் சென்று பார்வையிடுவது அவரது வழக்கம். அன்றைக்கும் கிளம்பியவர் மருமகளை பார்த்ததும் நின்றார்.
“இருக்கட்டும் த்தை. நானே போட்டுக்கறேன்…” என்றவள் அவர் மேலும் பேசும்முன் எங்கெங்கே என்னென்ன இருக்கின்றதென தெரிந்திருந்தமையால் எடுத்து கலந்துகொண்டாள்.
அந்த வீட்டில் என்னென்ன உள்ளதென்பது வரை அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது.
இப்போதும் அவள் எல்லாம் செய்துகொண்டு வெளியே வர உச்சகட்ட முறைப்புடன் பார்த்திருந்தார் அழகுமீனாள்.
அவரின் பார்வையை கவனித்தவள் அந்த முறைப்பை பார்த்துவிட்டு வெளியே வந்து நின்றாள்.
முன் முற்றத்தில் இருந்த கைப்பிடி சுவரில் அமர்ந்துகொண்டவள் காபியை பருக, கம்பு ஊன்றி வரும் சப்தம்.
வேறு யார்? அழகுமீனாளே தான். தன்னை அலட்சியம் செய்துவிட்டு வந்த பேத்தியை காண வந்தவர் அவள் அப்போதும் தன்னை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் முகம் திருப்ப கண்டவருக்கு புகைச்சல் கிளம்பியது.
“என்னடி பவுசுக்காரி, உன் பவுச எல்லாம் துபாயில வெச்சிக்க. சிலுத்துக்குற, ஆருக்கிட்ட?…” என்று அவளின் முன் வந்து கண்களை உருட்டினார் அழகுமீனாள்.
‘அம்மாச்சி’ என்று அவரை கட்டிக்கொண்டு சுற்றிவரும் தன் பேத்தியா இப்படி பேசுவது என வாயடைத்து போய் பார்த்தார் அழகுமீனாள்.
“இந்தாடி என்ன பேசுத?…” அழகுமீனாள் சண்டைக்கு கிளம்பிவிட்டார்.
“காதுல விழலையா? இல்லைன்னாலும் ஒன்னு பிரச்சனை இல்லை. திரும்ப சொல்ல முடியாது…” என்றவள் எழுந்து இன்னும் தள்ளி சென்று நின்று காபியை குடித்தாள்.
“யேய், யேய்…” என்ற அழகுமீனாளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
இதுவரை அந்த வீட்டில் அவரின் சொல்லுக்கு மறுபேச்சில்லை. அழகரின் திருமண விஷயத்தில் மட்டுமே அம்மையப்பன் அவரிடம் கோபித்ததும்.
இல்லை என்றால் அங்கே அவர் தான் முடிசூடா ராணி. அவரின் பேச்சு தான் அம்பலத்தில் என்றிருக்க இன்றைக்கு தன்னை இப்படி பேசிவிட்டாளே என்று காதில் தண்டட்டி இங்குமங்கும் ஆட மீண்டும் குச்சியை ஊன்றியபடி அவள் முன் வந்து நின்றார்.
“எம்பேரனை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டோம்ன்னு வவுசா? அவனை இப்படி வீதில தாலி கட்ட வச்சிட்டியே? இந்த குடும்பத்துக்கு அரசன்டி….” என்றதும், அலட்சியத்துடன் திரும்பினாள் விருஷ்திகா.
“கிழவி, மயக்கற அளவுக்கு உன் பேரன்கிட்ட என்ன இருக்கு?…” என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் பேச,
“அடியே…” என்று நெஞ்சில் கை வைத்தார் அழகுமீனாள்.
“அப்பறம் என்ன சொன்ன? நான் வீதில தாலி கட்ட வச்சேனா? நான் கட்ட சொன்னேனா? உன் பேரன்கிட்ட கேட்போமா? ஹ்ம்ம்…” என்று கொஞ்சம் கொஞ்சமாய் சினம் ஏற அழகுமீனாளின் முகத்துக்கு நேராய் அவள் கேட்க,
“பொறவு என்னத்துக்குடி இந்த வீட்டுக்குள்ள இருக்க?…” அவருமே கோபத்தில் வார்த்தைகளை சிதறடித்தார்.
“அதான் சொன்னியே, வீதில தாலி கட்டி. அதுக்கு தான். இப்பவும் ஒன்னும் இல்லை. உன் பேரனை நீயே வச்சுக்கோ. யாருக்கு வேணும்? சரின்னு சொல்ல சொல்லு நான் போய்ட்டே இருப்பேன்…” என்றும் பேச,
“யே, இந்தாடி…” மீண்டும் அழகுமீனாளுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
மேல்மூச்சு வாங்க விருஷ்திகாவின் முன் கோபத்தை அடக்கமுடியாமல், பதில் பேசமுடியாமல் நின்றார்.
தன் கண்முன் வளர்ந்தவளுக்கு இத்தனை பேச தெரியுமா என்பதை போலிருந்தது அவரின் பார்வை.
விருஷ்திகாவும் தன் அமைதியில் இவர் என்னவெல்லாம் பேசுகிறார் என்று தான் பதில் பேசியதும்.
தன்னை அழைத்து வந்த அன்றிலிருந்து எவ்வளவு பேச்சுக்கள்? எத்தனை ஏச்சுக்கள். அவளும் பொறுத்து பார்த்து இதோ பேசியாகிவிட்டது.
“சொல்லுவியா? உன் பேரன்கிட்ட இவ வேணாமின்னு. எங்க சொல்லித்தான் பாரேன்…” என்று பேசிக்கொண்டிருக்க தில்லை வேகமாய் வந்துவிட்டார்.
வரும்பொழுதே மாமியாரின் முகம் உக்கிரமாய் இருக்க கண்டு பயந்துகொண்டே வந்தவர்,
“ஓஹ், அப்போ என்னை பார்த்துக்க சொல்லிட்டு தான் கிளம்பினாரா?…” விருஷ்திகாவும் ராகம்போல் கேட்க,
“ஆமா, போயி அங்கின உக்காரு. வருவான்…” என்றார் திண்ணையை கை காண்பித்து.
“அத்தை, போலாம்…” விருஷ்திகா தில்லையின் கை பிடிக்க,
“யேய் எங்கடி போற?…” அழகு வழி மறிக்க,
“ஹ்ம்ம், மதுரையை சுத்தி பார்க்க. நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்…” என்றாள் நக்கலும் எரிச்சலுமாக.
“எம்பேரன்…”
“உம்பேரனை நீயே சுமந்துட்டு ஊர் சுத்து. எனக்கேன்?…” என்றவள்,
“நீங்க வர்றீங்களா? நான் போகவா த்தை?…” என்றாள் தில்லையிடம்.
அவரை கூட்டிக்கொண்டு காரில் அமர வைத்துவிட்டு மீண்டும் அழகு மீனாளிடம் வந்தாள் விருஷ்திகா.
“உம்பேரன்கிட்ட நான் போய்ட்டேன்னு சொல்லிரு. அப்பறம் நீ அதுக்கு என்ன காரணம் சொல்லுவ கிழவி?…” என்று கிண்டலாய் கேட்க,
“எம்பேச்சை மதிக்காம போனான்னு சொல்லுவேன். அவன் வந்து உன்னிய சாத்துற சாத்துல அடங்குவடி….” என்றார் அழகு.
“நான் தான் உன்னை பார்க்கவே இல்லையே கிழவி. அப்பறம் எங்க உன் பேச்சை நான் கேட்டு மதிக்காம போக?…” என்று புருவம் உயர்த்தி கேட்க அழகுமீனாள் வாயில் கை வைத்தார்.
“பார்ப்போமா? என் பேச்சை நம்பறாரா இல்லை உம்பேச்சையான்னு? பேச்சா பேசற நீ? போய் சொல்லு. என்கிட்ட நானும் கேட்டா சொல்லுவேன். அம்மாச்சிய பார்க்கவே இல்லை. பார்த்து அம்மாச்சி சொல்லிருந்தா இருந்திருப்பேன்னு….” என்று சொல்லி அவர் திகைத்து நிற்கையிலே,
“வர்ட்டா…” என்று அவரின் காதில் ஆடிய தண்டட்டியை பிடித்து இழுத்துவிட்டு கிளம்பினாள் விருஷ்திகா.
அவள் சென்று பத்தேநிமிடத்தில் வீடு திரும்பிய அழகரின் தாடைகள் இறுகியது தன் பேச்சை கேளாமல் சென்றவளை எண்ணி.