அழகுமீனாள் மூச்சுவாங்க பேரனிடம் அனைத்தையும் ஒப்புவிக்க பல்லை கடித்தான் அழகர்.
“இப்போ உன்கிட்ட நான் இருக்க சொன்னேன்னு சொல்ல சொன்னேனா?…” என்று அவர் மீதுதான் பாய்ச்சல்.
“ராசா….” என அழகுமீனாள் பாவம் போல் பார்க்க,
“ப்ச்…” சலிப்புடன் உள்ளே சென்றுவிட்டான்.
மனைவி மீதிருக்கும் கோபத்தை அவரிடம் எவ்வாறு காண்பிக்க முடியும் என்று கை முஷ்டியை மடக்கியவன் உறுத்து விழிக்கும் பார்வையுடன் உள்ளே சென்றுவிட அதனை பார்த்துக்கொண்டே வந்தாள் திருமகள்.
“என்னவாம் கெழவி? உம்பேரன் என்னமோ காய்ச்சிட்டு போறியான்?…” என்று நக்கலாக கேட்க,
“ஒனக்கு என்னதேன் தெரிஞ்சது. கூறுகெட்டவளே…” என அவரின் கன்னத்தில் இடித்தவர்,
“ஒத்த வார்த்த சொன்னதுக்கு பத்துமழையா பெய்ஞ்சிட்டு போய்ட்டா. இவளோட எம்பேரன் என்னன்னு கஞ்சி காய்ச்சி குடிக்க? ஆத்தே…” என நெஞ்சில் கை வைக்க,
“வெசனப்படாதீக த்தே…” என்று அவரை தேற்ற பார்க்க, அழகுமீனாள் கண்கள் அப்படியே நின்றுவிட்டது.
உக்கிரமாய் தன்னை பார்த்துக்கொண்டு கைகட்டி நின்ற பேரனை பார்த்ததுமே பேசிக்கொண்டிருந்தவர் வாய் பூட்டு போட்டுக்கொள்ள வல்லிக்கு புரியவில்லை.
“அவ சின்ன புள்ள தானத்தே. போவ போவ சரியாகிரும்…” என சொல்லவும்,
“ம்க்கும்…” என்று அழகர் கனைக்கவும் சரியாக இருந்தது.
“ம்மா…” என அவன் அழைக்கவும் அவனை கவனித்தவர்,
“வாய்யா, சாப்பாடு எடுத்து வெக்கட்டா?…” என்று மகனிடம் கேட்டார்.
“ஒன்னும் வேணா. உள்ள போங்க…” என்றவன் அவர் செல்லும்வரை பார்த்திருந்துவிட்டு, அழகுமீனாள் அருகில் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தான்.
“ஒங்கிட்ட சொல்லிட்டுத்தான போனேன்…”
“ராசா, ஆமாய்யா…”
“இப்ப என்ன சோலி பாக்குத அப்பத்தா?…” என்றான் பல்லை கடித்து.
“அது ஆத்தமாட்டாம…”
“அதுக்கு ஆறுதலுக்கு பேசுவியோ? அதுவும் எம்பொண்டாட்டி பத்தி…” என்றான் நெற்றிக்கண்ணை திறக்காத குறையாக.
“ஆத்தீ நா ஆறுதலா?…” என்றவர் கண்ணை மூடி திறக்க,
“ஹ்ம்ம், வேற யாரு…”
“இனிமே சொல்லமாட்டேன் ராசா…” என்று தானாய் முன்வந்து சரணடைய,
“நெசமாவே அவ சொன்னாளா? இல்ல நீயா சொல்லுதியா?…” என்றானே பார்க்கலாம்.
“ஆத்தீ…” என நெஞ்சில் கைவைத்துவிட்டார் அழகுமீனாள்.
‘என் புருஷன் என்னை தான் நம்புவாரு’ என கண் சிமிட்டி கிண்டலாய் சொல்லி சென்றவள் குரல் காதினுள் கேட்டது.
‘அவ சொன்னமாரியே பேசுதானே? நா எங்க போயி இந்த கொடுமைய சொல்ல?’ என புழுங்கிக்கொண்டு பேரனை பார்த்தார்.
அழகருக்குமே நிச்சயம் விருஷ்திகா பேசி சென்றிருக்க கூடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எப்படியும் தான் சொல்லியதற்காகவே அவள் விரைவில் கிளம்ப கூடும் என்றுதான் அவனுமே வேகமாய் வந்தது.
ஆனால் இத்தனை சீக்கிரம் சென்றுவிடுவாள் என்று நினைக்கவில்லை. அதனை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டவனுக்கு இன்னுமே மனைவியின் மீது கோபம் தான்.
ஆயிரம் பிரச்சனைகள் இருக்கட்டும். இப்படியெல்லாம் பேசுவதா? என்ன பழக்கம் இது? என்று தான் எரிச்சல் கூடியது.
“நெசமாவே தான் அவ….” என்று அழகுமீனாள் அவனிடம் துவங்க,
“ராத்திரி சரியா ஒறங்கலையா? இல்ல கனவு கினவு கண்டியா?…” என்றான் அடுத்ததாக.
“நானா? கனாவா?…” அழகுமீனாள் யோசிக்க,
“பின்ன பிடிச்சு அவ விருப்பத்தோட தான் எங்க கல்யாணமே நடந்துச்சு. பொறவு எப்படி அவ இந்தமாதிரி பேசுவாத்தா?…” என்றவன்,
“என்ன என் மாமியார் மேல இருக்கற கோவத்த லக்ஷ்மி மேல காமிக்குதியோ?…” என்றான் மீண்டும் அழகுமீனாள் நெஞ்சில் கைவைக்கும்படி.
“இந்தாய்யா ராசா, நா சொல்லுதத நம்பு சாமி. நெசமா அந்த வவுசுல கூடினவ மேல செமிக்காத கோவந்தேன். அதுக்குன்னு ஒன்னுக்கு ரெண்டா நான் என்னத்துக்கு சாமி சொல்ல போறேன்?…” என்றார்.
“ஓஹ். செரி போய் சாப்பிட்டு தூங்கு…” என்றவன்,
“இனிமே இன்னொருக்கா இத…”
“ஆருக்கும் சொல்லமாட்டேன் ராசா. நீ போயிட்டு வா…”
“எங்க?…”
“அதேன், அந்த துபாய்க்காரன பாக்க…”
“ஹ்ம்ம்…” என்றவன் வெளியே செல்லாமல் உள்ளே தான் சென்றான்.
ஒருவழியாய் சமாளித்துவிட்டோம் என்பதை போல் உள்ளே வந்தவன் வந்த வேகத்தில் உணவு மேஜையில் அமர வல்லி மூத்தமகளுடன் பேசிக்கொண்டிருக்க மகன் வந்தமர்ந்ததை கவனிக்கவில்லை.
“ம்மா…” என்றவன் சத்தத்தில் அவர் மெல்ல திரும்ப அவனால் பசி தாங்க முடியவில்லை.
அவனே தனக்கு தேவையானதை பார்த்து எடுத்து வைத்துக்கொள்ள பதறி ஓடிவந்தார் மாணிக்கவல்லி.
“இதோ வந்துட்டேன் அழகரு. என்னய்யா? நா வெக்கிதேன்…” என்று கூற,
“ப்ச், வச்சிட்டேன். விடுங்க…” என்றவன் உண்ட வேகத்தில் அவனின் பசியை வல்லியால் உணரமுடிந்தது.
இரவே சொல்லவேண்டும் என்று நினைத்தார் தான். மகன் தான் அறையை விட்டு வெளியே வரவில்லையே.
அந்தநேரத்தில் சென்று கதவை தட்டவும் தயக்கமாக இருக்க அழைக்கவும் செல்லவில்லை.
இப்போது மகன் உண்ட வேகம் கண்டு மனம் பதைபதைத்தது. இப்படி என்றுமே நடந்ததில்லை.
“அழகரு…” என்றவருக்கு தலையை மட்டுமே அசைத்தான்.
சாப்பிட்டு முடித்தவன் அந்த இருக்கையிலேயே சாய்ந்தமர்ந்து அண்ணார்ந்து பார்க்க சுடர்கொடி, திருமகள், அவர்களின் பிள்ளைகள் என்று அனைவருமே இவனைத்தான் பார்த்திருந்தனர்.
“என்னவாம்?…” என்றவன் எழுந்து கை கழுவ சென்றுவிட்டு வர அனைவரிடமும் அமைதி.
“காபி கொண்டுவாங்க…” என சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்றவன் அங்கே தளர்ந்து அமர்ந்துவிட்டான்.