தான் செய்தது, அதில் இருக்கும் நிறைகுறை என்று எதையும் பிரித்தாராயும் மனநிலையில் இப்போது அவன் இல்லை.
எத்தனை இருப்பினும் விருஷ்திகா கிளம்பி சென்றதில் மனதினுள் பெரும் அழுத்தம். கூடவே கோபமும்.
தன்னை வேண்டாம் என்பதாக அவள் பேசிய பேச்சுக்களில் நிச்சயம் விளையாட்டில்லை.
அழகுமீனாள் வேண்டுமானால் அதனை வம்பிழுக்க பேசுகிறாள் என்று நினைக்கலாம்.
ஆனால் அதுவே தில்லையின் முன்பு எனும்பொழுது, முதல்நாள் திருமகள் தங்களின் அறைக்கு வந்ததையும், பார்த்ததையும் நினைத்தவனுக்கு பெரிதாய் அடுத்து என்ன எனும் யூகங்கள் தேவை இருக்கவில்லை.
நிச்சயம் அது தாயின் காதிற்கு வந்திருக்கும். கூடவே தில்லையை வைத்துக்கொண்டு அவள் பேசியதும் தெரியவந்தால்?
“அதெல்லாம் வல்லி அனுப்பிட்டா. நீயும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரத்தான அழகரு?…” என்றார் ஞானசேகரன்.
“ப்ச், அதெல்லாம் வேணாம்…” என்றவன்,
“நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். அரவிந்த்கிட்டையுமே பேசியாச்சு….” என்று முடித்துக்கொண்டான்.
அதன்பின் அவனை அங்கே அனுப்பவே முடியவில்லை. விருஷ்திகா மட்டும் காலையே கிளம்பி மருத்துவமனை செல்பவள், இரவு தான் வீடு வருவாள். அவளுடன் குடும்பத்தினர் யாராவது செல்வதுண்டு.
அன்றைக்கு பேசியது. அழகரும் அதன்பின் அவளிடம் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
அவள் இருப்பதை கவனிப்பவன் அருகில் நெருங்கவும், சீண்டவும் என எதுவுமே இல்லை.
விருஷ்திகாவுக்குமே இது ஆச்சர்யம் தான். அவன் தன்னிடம் சண்டையிடுவான், வம்பு பேசுவான் என நினைத்திருக்க சட்டென்று ஒதுக்கம் காண்பித்தவனை அவள் எதிர்பார்க்கவில்லை.
என்ன என்று புரியவில்லை என்றாலும் கூடவே வீட்டின் கவலை வேறு அவளுக்கு.
கதிர்வேலன் அவளை ஏற்றுக்கொண்டாலும் மகளிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
ஆனால் பார்ப்பார், அவளை எதிர்பார்த்திருப்பார் அவ்வளவே. இன்னும் பேச மனம் வரவில்லை அவருக்கு.
எத்தனை இருப்பினும் மகள் சொல்லியிருக்க வேண்டும் தானே என்று மனமெல்லாம் வேதனை.
“கொஞ்சநாள் போகட்டும் விருஷ்தி. அப்பா பேசுவாங்க…” என்று சாந்தா தான் சமாதானம் செய்தார்.
இதில் அழகர் வேறு அவரை பார்க்கவில்லை. விசாரிக்கவில்லை என்பதில் சாந்தாவிற்கு சிறு மனத்தாங்கல்.
“எதுவும் கேட்கவேண்டாம். என்னால சட்டுன்னு பேசவோ, அவர் கேள்விக்கு பதில் சொல்லவோமுடியாது. அப்பறம் அது ஒரு மரியாதை இல்லாதமாதிரி ஆகிடும். விட்டுடு…” என்றுவிட்டார் கதிர்வேலன்.
அரவிந்தின் மூலம் அவன் விசாரித்தது, மருத்துவரிடம் பேசுவது என்று தெரியவர கதிர்வேலன் சின்ன தலையசைப்புடன் கேட்டுக்கொள்வார்.
அவர் தான் பேசவில்லையே தவிர்த்து அம்மையப்பன் எல்லாம் அவர் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
“நீ பேசு, பேசாம போ. நாங்க விலகி இருக்க முடியாது. கோவமா? உனக்கு எப்படி தோணுதோ அப்படி இருந்துக்கோய்யா…” என்று சொல்லிவிட்டார்.
ஞானசேகரன், சுடர்மணி இருவரும் வந்தாலும் சுடர்மணி தலையசைப்பதோடு சரி.
வாய்வார்த்தையாக விசாரிக்கவில்லை. ஆனால் ஞானசேகரன் அப்படி அல்ல. விசாரித்து நன்றாகவே பேசினார்.
கதிர்வேலன் தான் வாய் திறவாமல் சங்கடமும், சஞ்சலமுமாக மௌனம் காத்தார் அவர்களிடம்.
அன்றைக்கு கதிர்வேலன் வீட்டிற்கு செல்லும் நாள். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப ஆவன செய்யப்பட மயில்வாகனன் ஒருபுறம் இப்படி குடும்பம் கூடிவிடும் என எதிர்பார்த்திராததில் கோபத்தில் சென்னை கிளம்பி சென்றிருந்தார்.
அரவிந்த் தான் அனைத்தையும் உடன் இருந்து கவனித்துக்கொண்டது. அவனுடன் ஞானசேகரன் இருக்க அழகர் தான் முன் வராமல், அனைத்தையும் விலகி நின்றே பார்த்துக்கொண்டான்.
“என் வேலையை ஈஸி பன்றீங்க நீங்க?…” என்றான் அரவிந்த் அழகரிடம்.