“நிஜமாவா ம்மா…” என்றவள் முகம் உடனடியாக சுருங்கியது.
“நாங்கன்னா, நீங்களும் அப்பாவும். இல்ல?…” என்று கேட்கையில் அதில் தானில்லை என்னும் உண்மையும், இப்போது தான் வாழும் வாழ்க்கையும் அவளை அலைகழித்தது.
தொண்டையை வேதனை இறுக்கி பிடிக்க கண்களை சிமிட்டி தன்னை நிதானித்துக்கொண்டவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
“ஹ்ம்ம், ஆமாடா. அதனால நீ எதுக்கும் வருத்தப்படாம இருக்கனும். புரியுதா?…” என்ற சாந்தா,
“நீ ஆசைப்பட்டு அமைச்சிக்கிட்ட வாழ்க்கை. சந்தோஷமா வாழனும் நீ. அதை பார்த்தாலே போதும் எங்களுக்கு. எல்லாம் சரியாகிடும்…” என்று சொல்லவும் அவரை அணைத்துகொண்டாள் லக்ஷ்மி விருஷ்திகா.
அவள் தில்லையோடு வீடு வந்து சேர ஞானசேகரன், அம்மையப்பன், மாணிக்கவல்லி, திருமகள் என நால்வரும் மேலூருக்கு சென்றனர் கதிர்வேலனின் வீட்டிற்கு.
சென்றவர்கள் மாலை வரை அங்கே தான் இருப்பு. சங்கடம் என்றாலும் பேசவேண்டியதை பேசித்தானே ஆகவேண்டும் என அம்மையப்பன் தான் பேச்சை துவங்கினார்.
“எல்லாம் எல்லாரோட விருப்பத்தோட நடந்திருந்தா இப்படி ஒவ்வொருத்தரும் தள்ளி நின்னு பாக்க வேணாம் பாரு…” என்று அம்மையப்பன் துவங்க, கதிர்வேலன் சாய்ந்து அமர்ந்திருந்தவர் அமைதியாக பார்த்தார்.
“இப்பவே இதை சொல்லுதேன்னு நெனைக்காதப்பா. சின்னபுள்ளைங்க, என்னமோ அவசரப்பட்டுட்டாங்க. அதுக்குன்னு நாம அப்படியே விடறதா? அது நமக்கு அழகில்லைல…” என்று சொல்ல,
“நீங்க என்ன சொல்ல வரீங்க ஐயா…” என்றார் சாந்தாதேவி அம்மையப்பனிடம்.
“சாந்தா கலியாணம் தான் இப்படி வீதில முடிஞ்சது. ஆனாலும் எனக்கப்படி தோணலத்தா. தாய் மீனாச்சி முன்னாடி நடந்திருக்கு. அவ நடத்திருக்கா. சாமானியப்பட்டதா நெனைக்க வேணாம் பாரு…” என்றவர்,
“எம்மனசுல பட்டத சொல்லிடறேன். இன்னும் மூணுநாள்ல மீனாச்சி திருக்கலியாணம். அன்னிக்கு கோவில்ல கலியாணத்த பார்த்துட்டு அங்கினவே சம்பிரதாயத்துக்கு புள்ளைங்களுக்கு மாலைய மாத்த சொல்லலாம்ன்னு பாக்குதேன். என்ன நான் சொல்லுதது?…” என்றார் அம்மையபப்ன்.
கதிர்வேலனும், சாந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அரவிந்திற்கு அத்தனை சந்தோஷம்.
“நடந்த விசயம் அப்படியப்பு. தயங்காம என்னத்த? சேரி போவட்டும். இப்ப இருக்கற நெலமைய வச்சு நாம வரவேற்பு மாதிரி எதுவும் பண்ணமுடியாது பாரு. அதுக்குத்தேன் இப்படி செய்யலாம்ன்னு சொல்லுதேன். சொல்லிட்டேன். செரின்னா சேரி. இல்லன்னா வருத்தமெல்லாம் இல்லப்பா…” என்றார் அம்மையப்பன் கதிர்வேலனின் கையை பிடித்துக்கொண்டு.
“அட என்னங்கய்யா?…” என்று சாந்தா பதற,
“இந்தா என்ன கழுத? எம்மருமவன் தான? அடுத்தவக கையய்யா புடிச்சேன்…” என்று கதிர்வேலன் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்த அம்மையப்பன்,
“இங்காருய்யா, உன்னைய நாங்க ஒன்னுத்துக்கும் கட்டாயப்படுத்தல. ஒனக்கு செரின்னா ஒத்த போன போடு. மத்த அம்புட்டையும் நாங்க பாத்துக்கிடுதோம். இல்லன்னாலும் சடவில்ல…” என்று சொல்லித்தான் கிளம்பினார் அம்மையப்பன்.
சொல்லியதோடு வீட்டில் வந்து அவ்விஷயத்தை அனைவரின் முன்னும் பகிர்ந்திருக்க விருஷ்திகாவிற்கு இது எல்லாம் எதற்கு என்று தோன்றியது.
மனைவியின் முகமாற்றங்களை படித்தவன் மனதிலும் பெரிதாய் எதிர்பார்ப்பில்லை.
‘என்னடா இது கல்யாண வாழ்க்கை?’ என்றுதான் சலித்து போனான். இன்னும் பேச்சுக்கள் வைத்துக்கொள்ளவில்லை.
‘அப்படி என்ன இவளுக்கு திமிர்? போடி. எங்க போய்டுவ?’ என்று இறுமாப்பாய் இருந்துகொண்டான்.
அவனால் இருக்க முடிந்த அளவிற்கு விருஷ்திகாவால் இருக்க முடியவில்லை.
அறைக்குள் அவனை கண்டுகொள்ளாது இருந்தவளால், வெளியில் மற்றவர்கள் முன் அப்படி இருக்க முடியவில்லை.
இருக்க விடவில்லை என்பது நிச்சயமோ நிச்சயம். மாணிக்கவல்லி, தில்லை, திருமகள், அம்மையப்பன், சுடர்மணி என்று மாற்றி மாற்றி அவளை அவன்புறமே தள்ளினர்.
இடையில் நின்றுகொண்டு அவளையும் நகரவிடாமல் இழுத்து பிடித்து இருவரையும் பேச செய்ய பற்றிக்கொண்டு வந்தது விருஷ்திகாவிற்கு.
அவளின் அவஸ்தையில் உள்ளுக்குள் அழகருக்கு அத்தனை குதூகலம். முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
“அழகருக்கு வேணுமான்னு கேளு லச்சுமி…”
“அழகருக்கிட்ட இத கொண்டுபோய் குடுத்தா லச்சுமி…”
“அழகரு எத்தனமணிக்கு போறதா சொன்னான்னு கேட்டுட்டு வா லச்சுமி…”
“இது அழகருதா பார்த்து குடுத்துட்டு வா லச்சுமி…”
“அழகருக்கு இத வெய்யி லச்சுமி…”
இப்படியாக அறையின் வெளியே விருஷ்திகாவை அழகரின் பக்கம் நெருக்கி கொண்டிருந்தனர் குடும்பத்தோடு.
அழகுமீனாள் மட்டுமே பொடுபொடுவென்று இருந்தார். அதிலும் தான் ஒன்று கேட்டாலே அதற்கு ஆயிரம் பேசுபவள் மீது இன்னுமே கோபம்.
மாணிக்கவல்லியும், தில்லையும் இதனை செய்ய, சுடர்கொடிக்கு அதில் உடன்பாடில்லை.
“அவகளுக்குள்ள என்ன சடவா இருந்தா ஒங்களுக்கென்ன? ஒங்கள கேட்டா கலியாணம் முடிச்சாக?…” என்று சுடர்கொடி பேச,
“என்னக்கா, நாத்தனார் வேல பாக்குதியோ? அவ நம்ம தம்பி பொண்டாட்டியா இருந்தா, நாம இன்னொரு வீட்டுல இன்னொருத்தவகளுக்கு தம்பி பொண்டாட்டி தான். பார்த்துக்கோ…” என்றாள் திருமகள்.
“நா இப்ப என்ன சொல்லிட்டேம்ன்னு நீ உசும்புத?…” என கழுத்தை வெட்டிக்கொண்டாள்.
இப்படியாக குடும்பம் மொத்தமும் இருவரையும் எப்படியும் சமாதானம் செய்துவைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது.
அவர்களின் எண்ணமெல்லாம் இந்த திருமணத்தினால் கதிர்வேலனுக்கு வந்த மாரடைப்பும், அதனால் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை என்றும் மட்டுமே.
மகனின் தகிடுதத்தங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவர்களின் யூகம் இந்தளவிற்கு தான் இருந்தது.
ஆனாலும் அந்த முயற்சியின் விளைவு பிடிக்கவில்லை என்றாலும் ஓரிரு வார்த்தைகள் என்னவென்றால் என்ன என்று பேசிக்கொண்டனர்.
அம்மையப்பன் பேசி சென்ற மறுநாளே சாந்தா அரவிந்துடன் அம்மையப்பனின் வீடு வந்து பேசி சென்றிருந்தார்.
திருக்கல்யாணம் அன்று அம்மையப்பன் சொல்லியதை போலவே செய்யலாம் என்று சம்மதித்துவிட்டார்.
அன்றைக்கே மறுவீடு போல மேலூருக்கு மணமக்கள் சென்று திரும்பவேண்டும் என்றும் முடிவானது.
அதற்கு புதிதாய் முகூர்த்த உடுப்புகள் அனைத்தும் குடும்பங்களுக்கே எடுத்தாகிற்று.
சில சொந்தங்களுக்கும் இதனை சொல்லியிருக்க விருந்திற்கு அவர்களுமே வந்து சேர்ந்தனர்.
மாப்பிள்ளை, பெண்ணிற்கான திருமண பட்டுக்களும் எடுத்து அனைத்தும் ஏற்பாடுகளும் மடமடவென்று அரங்கேறியது.
மறுநாள் காலை திருக்கல்யாணம். முதல்நாள் மாலை காபியை குடித்துவிட்டு அப்போதுதான் தன் அறைக்கு வந்திருந்தாள் விருஷ்திகா.
மறுநாளுக்கு அவள் உடைக்கான வேலைபாடுகள் நிறைந்த ப்ளவுஸ் தைக்கப்பட்டு வந்திருக்க அதனை சரிபாக்க வந்தவள் உடையை எடுத்து உள்ளே வைக்க அழகர் வந்துவிட்டான்.
வந்தவன் இங்குமங்குமாய் துழாவியபடி இருக்க விருஷ்திகாவும் கண்டுகொள்ளாமல் மற்றவற்றையும் எடுத்து உள்ளே அடுக்கினாள்.
“மொபைல் இங்க தான் வச்சேன். ப்ச்…” என சலிப்புடன் தேட, விருஷ்திகா கண்டுகொள்ளவில்லை.
அவள் கவனம் தன்னிடம் இருக்காதென்று தெரியும் தான். ஆனாலும் கைப்பேசி இப்போது அவசியமே. வேறு வழியும் இருக்கவில்லை.
“உன் மொபைல் தா லக்ஷ்மி…” அழகர் கேட்க, அசட்டையாக இருந்தவள் விழிகள் உருண்டது.
“லக்ஷ்மி உன் மொபைல்…” என்றபடி அவன் அவள் புறம் திரும்ப, உண்மைக்கும் பதட்டம் அவளிடம்.
“ப்ச், வேற வேலை இல்லை…” என்று அங்கிருந்து கிளம்புவதை போல கைப்பேசியை எடுத்துக்கொள்ளவும்,
“ஹேய் என் மொபைலை காணும். இங்க தான் இருக்கும். போன் பண்ணு…”
“என் போன்ல இருந்து உங்க நம்பருக்கா? முடியவே முடியாது….”
“நீ பண்ணவேண்டாம். நானே பன்றேன். மொபைல் தா…” என அவளிடம் வந்தான் அழகர்.
“போன் எல்லாம் தரமுடியாது. கண்ட இடத்துல இவர் இஷ்டத்துக்கு போனை வைப்பாராம். நான் எடுத்து தரனுமாம்…” என அவசரமாய் சொல்லியவள் அதே வேகத்தில் கதவை திறந்து வெளியே செல்லும்முன் அவளையும் பிடித்தான், அவள் கைபேசியையும் பிடித்தான்.
“என்னடி ஓட்டம்? என்ன பண்ணியிருக்க?…” என்று அழகர் பல்லை கடிக்க,
“எனக்கும் உங்களுக்குமே ஆகாது. எதுக்கு என் போன்? விடுங்க…” என விலக பார்த்தாள்.
இன்னொரு கையால் அவளின் கைப்பேசியில் இருந்து தன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க முகப்பில் அவன் எண்ணின் பெயர்.
‘ராங் நம்பர்’ என பதிந்து வைத்திருந்தாள் விருஷ்திகா.
அழகர் பல்லை நறநறவென்று கடித்தபடி அவளை தன் புறம் திருப்பி தீயாய் முறைக்க விருஷ்திகா திணறி போனாள்.
நெருக்கத்தில் அவள் முகம் பார்த்த அழகர் விருஷ்திகாவின் காதோரம் சுருண்டிருந்த கூந்தல் இழைகளில் முகம் பதித்தான்.
“சத்தமில்லாம இருந்தா சலம்பல் பண்ணுவியோ? அத்தனை சீக்கிரம் என்னை விட்டு போக விட்டுடுவேனா உன்னை…” என்றவனின் பேச்சில் முகம் திருப்பி அவனை பார்த்தவள் கண்கள் சிவந்தது.
“அதுவும் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கியே?…” என்று வெகுநாளைக்கு பின் மீண்டும் சீண்ட, எரிமலை எப்படி பொறுக்கும்?!!!!