“பளார்” என்ற சத்தத்துடன் கன்னத்தோடு காதிலும் சேர்த்து விழுந்த அறையில் நிலைக்குலைந்து போனாள் அவள்.
ஒரு கை அவள் தோளை இரும்புப் பிடியாய் பற்றித் திருப்பியிருந்தது. ஒற்றைக் காலை ரயிலின் படிக்கட்டிலும், மற்றொரு காலை தரையிலும் வைத்திருந்தவள், சமநிலையின்றி தடுமாற, அவளின் இரண்டு கைகளிலும் இருந்த பைகள் திசைக்கொன்றாய் சிதறி விழுந்தன.
‘ஐயோ’ என்று மனதில் அலறி, கண்கள் அலைபாய முதலில் கைப்பையை கைப்பற்ற குனிந்தாள் அவள்.
அவளின் முயற்சியை முறியடித்து, அவளை இறுகப் பற்றி இன்னொரு அறையை கொடுப்பதற்கு கையை ஓங்கினான் அவளின் அண்ணன் நெப்போலியன்.
வலது கால் ரயிலின் படிக்கட்டில் சிக்கியிருக்க, “ஆ…” என்று மெலிதாக கத்தியவளுக்கு தனக்கு நடப்பது புரிந்தாலும், அதற்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு புத்தி ஒத்துழைக்கவில்லை. ஓர் அதிர்ந்த பார்வையுடன் தன் முன் நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தாள் அவள். வெள்ளைக் கரை வேட்டி சட்டை ஏழெட்டு அவளையே எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.
அதில் மையமாக நின்றிருந்தவரை முன்னெப்போதையும் விட அந்த நொடி மொத்தமாய் வெறுத்தாள் அவள்.
அவரின் வெள்ளை வேட்டி சட்டையை விட அதிகமாக அவரின் பெயர், குடும்ப கௌரவம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் துளி கூட கறை பட்டு விடக் கூடாது என்று உயிரை கொடுத்துக் காப்பவர். அதிலும் அவரின் சாதி பிரதாபம் இருக்கிறதே, அதற்காக மற்றவர் உயிரை மட்டுமல்ல தன் உயிரையே கொடுக்கத் துணிவார் அவர்.
சொக்கநாத பாண்டியன், சாதி சங்கத் தலைவர். மதுரை மாநகரம்.
அவர் பெருமையாய் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ளும் தொழில் அதுதான். அவர் பார்க்கும் மற்ற உப தொழில்கள் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அவை பணத்தை சம்பாதிக்கும் வழி மட்டுமே. ஆனால், சாதி அடையாளம், அதுதான் அவருக்கு எல்லாமும்.
இத்தனை எளிதாக என்பதை விட, இத்தனை விரைவாக இவர்களிடம் பிடிபடுவோம் என்று எதிர்பார்த்திராதவளின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
“அ..ண்ணா..” என்ற அவளின் அழைப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு, கோபத்தில் கொடூரமாக மாறியிருந்த முகத்துடன் அவளை நோக்கி கையை வீசினான் அவன். தந்தை சொல் தட்டாத தனயன், நெப்போலியன். அண்ணனை கண்ணை சுருக்கி கசப்பாய் பார்த்தாள் அவள்.
“டேய், போதும். விடு. பூரா கூட்டமும் நம்மள தான் பார்க்குது. கூட்டம் சேர்க்காம உன் தங்கச்சியை கூட்டிட்டு வீட்டுக்கு போற வழியை பார்ப்போம். ம்ம்” என்று சொக்கநாதர் மகனின் கைப் பிடித்து, தடுத்து எரிச்சரிக்க,
“இவள..” என்று அப்போதும் கோபம் குறையாமல் குதித்தான் தமையன்.
இதுவே வேறொரு சூழலாக இருந்திருந்தால், “இவன..” என்று போட்டிக்கு தானும் பல்லைக் கடித்திருப்பாள். ஆனால், இப்பொழுது அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை.
சடக்கென்று அவளைப் பிடித்திழுத்தான் நெப்போலியன்.
“என் கால் மாட்டிட்டு இருக்கு” அவள் வலியை மறைத்து கோபத்துடன் அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கத்த, “நல்லா மாட்டி அப்படியே உடையட்டும்னு சொல்றேன். வீட்டுக்குச் சொல்லாம ஓடப் பார்க்கற கழுத, உன் கால நீயே உடைச்சுக்கிட்டா எங்களுக்கும் வேலை மிச்சம் பாரு” என்று இரக்கமின்றி சொன்ன அண்ணனின் கையை வெறுப்புடன் உதறினாள். அவனின் அசுர பலத்தின் முன் அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
“இப்போ நீ என் கையை விடலன்னா, கத்தி ஊரை கூட்டுவேன்” என்பதையே கத்தி தான் சொன்னாள் அவள்.
“என்னடா..?” என்று திரும்பிய தந்தையை முறைத்து, திமிராக நின்றாள்.
“பூரா பயலும் இங்கனா தான் பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. ம்ம்” என்று மகனிடம் அவர் கர்ஜிக்க, “நீங்க போங்கப்பா. நான் கூட்டிட்டு வர்றேன்” என்று தந்தைக்கு வாக்குக் கொடுத்தவன், திரும்பி தங்கையை முறைத்து அவளைப் பிடித்திருந்த கையை சற்றே தளர்த்தினான்.
மெல்ல கீழே குனிந்து காலை கவனமாக விலக்கி, உதறி வெளியில் எடுத்து, காயங்கள் ஏதும் இருக்கிறதா என்று ஆராய்ந்து, வலி தந்த அவஸ்தையை விழுங்கி, தரையில் தன் கைப்பையை தேடினாள். அது அங்கில்லை. மெல்ல அவள் நிமிர பத்தடி முன்னே அவளின் பயண பையுடன் நடந்துக் கொண்டிருந்தான் அப்பாவின் அல்லக்கை.
சட்டென கண்களை சுழற்றி கைப்பையை துழாவினாள். அதில் தானே எல்லாமும் இருக்கிறது. அவளின் எதிர்காலமே அதில் தான் இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக பற்றியிருக்க வேண்டுமோ என்ற ஆதங்கத்துடன் அவள் அண்ணனை பார்க்க, அவன் தோளில் இருந்தது அவளின் கைப்பை.
“இதெப்படி இவன் வசமானது?” என்ற கேள்வியுடன் அவள் வெறிக்க, “நட..” என்று அவளை அதட்டி இழுத்தான் நெப்போலியன்.
“விடுண்ணா. கத்தி, ஊரை கூட்டி என்னால என் வழில போக முடியும்” என்பதையே பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுக்க தான் செய்தாள். ஆக, கத்த மாட்டாள் என்பது அவனுக்கும் உறுதியாக தெரியும்.
அப்பாவின் பெயர், புகழ், பணம் எதைக் குறித்தும் அவளுக்கு கவலையில்லை. ஆனால், தன்னைக் குறித்தும், தன் வீட்டுப் பெண்களைக் குறித்தும் அவளுக்கு நிறைய அக்கறை இருந்தது.
“பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. மதுரையில் இருந்து சென்னை எக்மோர் செல்லும்” என்று ரயில் நிலைய அறிவிப்பு கேட்கவும் உடல் இறுக அப்படியே நின்றவளின் கையை ஒடித்து விடும் வேகத்தில் இழுத்துக் கொண்டு நடந்தான் நெப்போலியன்.
மதுரை சந்திப்பு ரயில் நிலையம் மக்களால் நிறைந்து, பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அவளைச் சுற்றிலும் மக்கள் திரள். அவளுக்கு நடந்ததையும் வேடிக்கை பார்த்தபடி அவரவர் வழியில் விலகி நடந்தார்கள். அப்படியே மனம் வந்து எவரேனும் உதவ நினைத்தாலும், சொக்கநாதரின் கரை வேட்டி அவர்களை தடுத்து நிறுத்தி விடும். இதெல்லாம் வாடிக்கை என வேடிக்கைப் பார்த்து செல்பவர்களே அதிகம். அதிலும் அவள் உதவி கேட்க முனையாத போது தானாக வந்து யாரும் தலையை கொடுக்க விரும்ப மாட்டார்கள்.
அவளுக்கு முன்னேயும், பின்னேயும் பாதுகாப்பாய் ஆட்கள் நடக்க, தலையை நிமிர்த்தி பார்வையை எல்லா பக்கமும் சுழற்றிக் கொண்டே நடந்தாள்.
அவளையே கூர்ந்த அத்தனை கண்களில் எதுவுமே அவளுக்கு உதவாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.
“என் சோலி முடிஞ்சது” மனதினுள் அரற்றிக் கொண்டாள்.
அண்ணனின் கையை உதறி விட்டு ஓடிப் போய் நகரும் ரயிலில் ஏறி விடத் துடித்தாள் அவள். ஆனால், ரயிலில் ஏறுவதால் மட்டும் தப்பித்து விட முடியுமா என்ன?
இந்த ரயிலை பிடிப்பதற்கே எத்தனை திட்டமிடல்கள், எத்தனை திருகு தாளங்கள் செய்திருப்பாள்? சரியான நேரத்திற்கு வந்து நின்று முறியடித்து விட்டார்களே.
அப்பாவிற்கு, அண்ணனிற்கு எப்படி தெரிந்தது? அவள் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது.
“ஏறு..” அவளை காருக்குள் திணித்தான் நெப்போலியன்.
“ம்ம், வண்டியை நேரா வீட்டுக்கு விடு” கட்டளையிட்டார் சொக்கநாதர். கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். அதே காருக்குள் அமர்ந்திருந்த அப்பா, அண்ணன் என யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை அவள் மனம்.
அன்றிரவு அவளுக்காக சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் காத்திருக்கப் போகும் அப்பாவி ஜீவனை நினைத்து மருகிக் கொண்டிருந்தாள்.
“டிரெயின் இஸ் ரிஸ்க்கி ரா. நான் ஃப்ளைட் டிக்கெட் போட்டுடுறேன். நீ ஒன் அவர்ல சென்னை வந்திடு. நாம அப்படியே ஹைதராபாத் போய்டலாம்” அவன் சொன்னதை மறுப்பின்றி கேட்டிருக்கலாமோ?
“இல்ல, ட்ரெயின்னா தான் ஈஸியா கண்டுபிடிக்க முடியாது” என்று திட்டமிட்ட தன்னை என்னச் சொல்லி திட்டிக் கொள்வதென தெரியாமல் தலையை எதிரே இருந்த இருக்கையில் ஓங்கி முட்டினாள்.
“என்ன பண்ற?” நெப்போலியன் அதட்ட, ‘என்ன பண்றேன்? உன்கிட்ட மாட்டிக்கிட்ட என் மடத்தனத்தை நினைச்சு சீட்ல முட்டிக்கிறேன்.’ எரிச்சலுடன் மனதில் சொல்லிக் கொண்டாள்.
“நிமிர்ந்து உட்காரு ரஞ்சி”
“ரஞ்சி, கிஞ்சின்னு கொஞ்சினியனா, பல்லை உடைச்சுடுவேன் ண்ணா” பல்லைக் கடித்து வார்த்தைகளை துப்பிய தங்கை, அவன் பல்லை உடைக்கும் சாத்தியங்கள் அதிகம் இருந்ததால், ஒரு முறைப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான் நெப்போலியன்.
“புள்ளை வளர்க்க சொன்னா, அடங்கா பிடாரியை வளர்த்து விட்டிருக்கா உங்காத்தா. அவளுக்கு இருக்கு இன்னைக்கு.” கார் வீட்டை அடைந்ததும் மகனைத் திரும்பிப் பார்த்துக் கத்தியவர், “ஏய், அங்க..” என்று உள்நோக்கி குரல் கொடுத்தார்.
அவர் குரல் வாசலை எட்டும் முன்னே அங்கு அரக்க பரக்க மூச்சு வாங்க வந்து நின்றிருந்தார் அவரின் மனைவி அங்கயற்கண்ணி.
“இறங்கு..” தங்கையின் கையை மீண்டும் இறுகப் பற்றி கட்டளையிட்டான் நெப்போலியன்.
“விடு.” என்று அவன் கரத்தை மூர்க்கமாக உதறி விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தாள்.
“அப்படியே தேராட்டம் அசஞ்சு வாம்மா அங்கை. உன் மக பண்ணியிருக்க காரியத்தை பார்த்தியா? எம்புட்டு தைரியம் இருக்கணும் அவளுக்கு? எல்லாம் நீ கொடுக்கிற தைரியமா? உன் மாமியார் கெழவி எங்காத்தா எங்க? அதை கூப்பிடு கேட்கறேன். உன் மகளுக்கு யார் கொடுத்த தைரியம் இது? நாங்க மட்டும் டயத்துக்கு அங்க போகலன்னா, நாளைக்கு நம்மள பார்த்து ஊரே சிரிச்சுருக்கும்.”
“இல்லங்க. எனக்கு எதுவும் தெரியாதுங்க..” கையை பதட்டத்துடன் பிசைந்துக் கொண்டு பதில் சொல்ல வார்த்தைகள் வராமல் அரண்டு போய் கணவரைப் பார்த்தார் அங்கயற்கண்ணி.
“ஆமா, கத சொல்லு. உனக்கு எதுவும் தெரியாதுன்னா, எதுக்கு இந்த வீட்ல இருக்க? உங்கப்பன் முனியாண்டி வீட்டுக்கு போக வேண்டியது தானே? இங்க இருந்துட்டு புள்ளை ஒழுங்கா வளர்க்கத் தெரியாம என் மானத்தை வாங்கப் பார்க்கறியா? நீ கொடுக்கிற தைரியம் தான் இவளை இப்படி செய்ய சொல்லுது.”
“தைரியம், எனக்கு யாரும் குடுக்கத் தேவையில்லப்பா. அது என்கிட்ட நிறைய இருக்கு. நீங்க யாரும் கொடுக்காமயே” அவர் முன் வந்து நின்று முகத்துக்கு நேராக சொன்ன மகளை அடித்து நொறுக்கும் வேகமும், வெறியும் அவருக்கு வந்தாலும், அதைச் செய்யாமல் கையை இறுக மூடிக் கொண்டார்.
“உள்ள போ. வாய் பேசாம வீட்டுக்குள்ள போ” மகளிடம் கர்ஜித்தார். அவளோ அசராமல் முகம் நிமிர்த்தி நின்றாள்.
“பத்து நாள்ல மதுரையை கூட்டி நிச்சயம் பண்ணி, உன் பொண்ணுக்கு பூ வைக்கறோம்னு வாக்கு கொடுத்துட்டு போய் இருக்கார் தலைவர். அவருக்காக பார்க்கறேன்” என்ற அப்பாவை கோணல் சிரிப்புடன் பார்த்தாள் அவள்.
சாதி அரசியலின் அடையாளமான பிரபல குடும்பத்தின் பெயரை சொல்லி, “தலைவர் காதுக்கு செய்தி கசியாம சூதானமா பார்த்துக்கணும் டா நெப்போலியா.” என்று மகனிடம் ஆணையிட்டவர்,
“உன் தங்கச்சி கல்யாணம் முடியற வரைக்கும், அவ எங்கேயும் போக கூடாது. இந்த வீட்டை விட்டு அவ வெளியில் போறதா இருந்தா அது நம்ம ரெண்டு பேர் கூடவா மட்டும் தான் இருக்கணும். உங்க ஆத்தா, அப்பத்தா, அப்புச்சின்னு யார் கூட அவ வந்து நின்னாலும் அனுப்பாத. கேட்டுச்சா?”
“சரிங்கப்பா”
“வீட்ல எப்பவும் நம்ம ஆட்கள் இருக்கட்டும்” அடுத்தடுத்த ஆணை பிறப்பித்தவரின் எண்ணம் முழுவதும் அவரின் அரசியல் வாழ்க்கையை சுற்றியே இருந்தது.
“எப்பே, என்னாச்சு? ராசாத்தியை பத்திரமா கூட்டிட்டு வந்துட்டியா?” என்றபடி வந்து நின்ற தன் அம்மா சுந்தரவல்லியை, “ஏ கெழவி, ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத” என்று அவர் கத்தவும் தான், கண்ணாடியை சரி செய்து பேத்தியை பார்த்தார் அவர்.
“என்ன காரியம் பண்ண இருந்தத்தா? கொஞ்சமாச்சும் நெஞ்சுல பயம் இருக்கா உனக்கு? உன் அப்பன், ஆத்தா பேரு கெட்டு..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு, “ஏ அப்பத்தா, இந்த விஷயம் வெளில போச்சு? உன் கொர வளைய கடிச்சு துப்பிருவேன், பார்த்துக்கோ” என்று மிரட்டினான் நெப்போலியன்.
“நான் ஏன் வெளில சொல்லப் போறேன். நீங்க தான்டா வாசல்ல நின்னு கத்தி ஊருக்கே செய்தி சொல்லிட்டு இருக்கீங்க” என்று அவர் சொல்லவும், தடதடவென வீட்டினுள் நுழைந்தார்கள்.
நெப்போலியன் மறக்காமல் தங்கையின் கைப் பிடிக்க, அதுவரை தப்பிக்கும் வழி வகை தேடி வீட்டின் மதில் சுவரையே ஆராய்ந்து கொண்டிருந்தவள், சட்டென உணர்வு பெற்று அண்ணனின் கையை உதறி முதல் ஆளாக வீட்டினுள் நுழைந்தாள்.
“இந்தா அங்கை, உன் மகளை நம்ம ரூமுக்கு கூட்டிட்டு போ. நான் சொல்ற வரைக்கும் அவள வெளில விடாத. உன் பொண்ணு ஓடிப் போக இருந்த விஷயம் வெளில கசியறதுக்கு முன்னாடி தலைவர் கிட்ட பேசி, அவங்களை பூ வைக்க வரச் சொல்லணும். நமக்கு ஆகாதவன் எவனாவது எப்படா போட்டுக் கொடுத்து காரியத்தை கெடுக்கலாம்னு காத்துட்டு இருப்பான். அதுக்குள்ள நானே நேர்ல போய் தலைவர் கிட்ட பேசணும்.” கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி அங்கிருந்த அனைவரையும் கண்ணால் வலம் வந்து கத்திக் கொண்டிருந்தவரின் அலைபேசி அவருக்கு இணையாக கத்தவும், நடையை நிறுத்தி விட்டு அலைபேசியை கையில் எடுத்தவரின் கண்கள் அதிர்ச்சியில் தெறித்து விடுவதை போல விரிந்தது.
“நெப்போலியா, தலைவர் கூப்பிடுறார் தம்பி”
அவர் குரலில் ஓடிய நடுக்கத்தை கண்டு புன்னகையை மறைத்தவள், மெல்ல நடந்து சென்று அங்கிருந்த சோஃபாவில் சட்டமாய் அமர்ந்தாள்.
“என்னடா சும்மா சும்மா கையை நீட்டுற பழக்கம்? ஏற்கனவே அவளை அடிச்சுருப்ப போலவே. பிள்ளை மூஞ்சி வீங்கி போய் கிடக்கு” என்ற தாயை தயவின்றி முறைத்தான்.
“நீ வா” அடமாக, அழுத்தமாக அமர்ந்திருந்த மகளை அடிக்காத குறையாக உள்ளே இழுத்துக் கொண்டு போனார் அவர்.
“இல்ல தலைவரே. எவன் சொன்னான்? யாரோ தெரியாம பார்த்துட்டு என்னத்தையோ உங்ககிட்ட வந்து உளறி இருக்கானுங்க. அவனுங்க பேச்சை கேட்டு நீங்க என்னை கேள்வி கேட்கறீங்க பாருங்க. நாளைக்கு என் பொண்ணு உங்க வீட்டு மருமக..” அந்த பக்கமிருந்து மின்னல் வேகத்தில் வந்த பதிலில் தடுமாறி, “வீடியோவா? யார்.. யார் அனுப்பினது?” என்று சந்தேகமாக கேள்வி கேட்டார். அதற்கும் தகுந்த பதில் வர,
“அது.. அது வந்து.. இல்ல, தலைவரே. உங்களுக்கு தெரியாததா? பொண்ணு சென்னைக்கு ஒரு வேலை விஷயமா தான்…” என்று சமாளிக்க பார்த்தார் சொக்கநாதர்.
“ஏலே பாண்டியா, வேலை விஷயமா போன பொண்ணை என்ன மயித்துக்கு ரயில்வே ஸ்டேஷன்ல அத்தனை பேர் முன்னாடி அடிச்சு இழுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க அப்பனும், மகனும்? பதில் சொல்லுடா. பரம்பரை அரசியல்வாதி டா நானு. எனக்கே காது குத்த பாக்கறீங்களா?” அலைபேசி வழியே காதில் அறைந்த குரலுக்கு கண்ணை மூடி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றார்.
“சாதி அரசியல் பண்றவன்டா நான். எம் மவனுக்கு, எவனையோ லவ் பண்ணி, அவன் கூட ஓடிப் போக இருந்தவள கட்டி வைப்பேன்னு சொப்பனம் கண்டியோ நீ? உன் குடும்பத்தை கூண்டோட ஒழிச்சு கட்டிடுவேன், ஜாக்கிரதை”
“தலைவரே..” என்று இறுதியாய் ஒரு முயற்சி செய்தவரின் காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் குன்றிப் போய் அலைபேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டார் அவர்.
“டேய்..” என்று அவர் கர்ஜிக்க, “அப்பா” என்று வேக எட்டுக்கள் வைத்து அவர் முன் வந்து நின்றான் நெப்போலியன்.
“என் மானம் மரியாதை எல்லாம் போச்சு. உன் பொண்ணு ஒரு ஆந்திராகாரன் கூட ஓடிப் போக இருந்தாளாமே? நீயெல்லாம் சாதி சங்க தலைவன். உனக்கெல்லாம் அந்த பதவி ஒன்னு தான் கேடுன்னு அசிங்க அசிங்கமா கேட்டுட்டான்பா அந்தாள். எங்க உங்கம்மா.. இன்னைக்கு அவள..” அப்பாவின் கதறலை கேட்டு உள்ளே சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் மகள்.