“இம்புட்டு ஆகாது உனக்கு. நான் சொல்லிட்டேன். உனக்கு இம்புட்டு திமிரு ஆகாது” அங்கை மகளை பார்த்து கத்த,
“உன் புருஷன் ரொம்ப ஃபீல் பண்றார். அவரை போய் கவனி மா” என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்ன மகளை சட்டென அவர் நெருங்க, அவரை தடுத்து நிறுத்தியது கணவரின் குரல்.
“ஏய் அங்க, வா இங்க. பொம்பளை புள்ளையை அடக்க ஒடுக்கமா வீட்ல உட்கார வைக்காம படிக்க வச்சது தான் தப்பா போச்சு. படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னா.. மேல படிக்கிறேன் வந்து நின்னு, அவ ஆடுன எல்லா ஆட்டத்துக்கும் தலையாட்டின என்னை சொல்லணும். அன்னைக்கு அந்த ஆள் சொன்ன பேச்சை கேட்டு தான் இவ்வளவு படிக்க வச்சேன். எங்க வீட்டு மருமகள்ன்னு பெருமையா சொல்லிப்போம் சொன்ன அந்த ஆள், இன்னைக்கு மாத்திப் பேசி அரசியல்வாதின்னு அவன் புத்தியை காட்டிட்டான் இல்ல?” என்று அவர் கத்த, இங்கிருக்கும் மகளை கவனிக்கவா, இல்லை வெளியில் சென்று கணவரை பார்க்கவா என்று புரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தார் அங்கயற்கண்ணி.
அவளோ காலாட்டிக் கொண்டு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தாள். வெள்ளம் தலைக்கு மேலே போன பின்பு, என்ன செய்து என்ன பலன்? என்ற விரக்தி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.
“நாம நேர்ல போய் தலைவரை பார்த்து பேசிட்டு வரலாம். வாங்கப்பா” மகன் அழைக்கவும், அம்மா, அப்பா, மனைவி என அனைவரிடமும் மகளை பார்த்துக் கொள்ள சொல்லி எச்சரிக்கை செய்து விட்டு மகனுடன் வெளியேறினார் சொக்கநாத பாண்டியன்.
அம்மா இளகா விட்டாலும் அப்பத்தா, அப்புச்சியை கொண்டு காரியம் சாதித்து விடலாம். வீட்டுச் சிறையில் இருந்து தப்பி விடலாம் என்று திட்டமிட்டிருந்தவளுக்கு அவர்கள் இருவரும் உதவாதது அத்தனை அதிர்ச்சி அளித்தது.
“நீ பேசாதத்தா. என்ன காரியம் பண்ண இருந்துருக்க. உங்கப்பன் வந்தா எங்களை வெட்டி போட்டுடுவான்” என்றவர்களை ஏமாற்றத்துடன் பார்த்தாள் அவள்.
மகனுடன் தலைவரை பார்க்க சென்றவரும் ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்தார்.
“மதுரைக்கே விஷயம் தெரிஞ்சுடுச்சு. இவன் தான் தேவையில்லாம கை நீட்டி காட்டி கொடுத்துட்டான்” என்று மகன் மேல் பாய்ந்தார் சொக்கநாதர்.
“என்னப்பா இப்போ? குடியா முழுகி போச்சு? நாம வேற நல்ல இடமா பார்த்து கட்டிக் கொடுக்கலாம்.”
நெப்போலியன் கோபமாக சொல்ல, “முட்டா பயலே, வேற சாதி பயலை உன் தங்கச்சி லவ் பண்றான்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சுடான்னு சொல்றேன். உங்கப்பன் நான் சாதி சங்க தலைவன் டா. ஒத்த பய இனி நம்ம வீட்ல பொண்ணு எடுக்க மாட்டான். அப்படியே எவனாவது வந்தாலும், பணம், காசு, சீரு, செனத்தின்னு நம்மளை மொட்டையடிக்க தான் பார்ப்பான். உனக்கு புரியுதா இல்லையா? நீயெல்லாம் என்ன படிச்சு, கிழிச்சன்னு எனக்கும் தெரியல”
மகனை வார்த்தையால் அவர் விளாசி தள்ள,
“ஆனாலும், படிப்பை பத்தி எப்படிம்மா இவரால அசால்டா பேச முடியுது? நானும் தான் படிச்சேன். பெரிய வேலை பார்த்தேன். ஆனா, இந்தோ என் கையை கட்டி மூலையில் உட்கார வைக்கல நீங்க? ம்ம், இதுல மகனை பேசுறார் பாரு” என்ற மகளை அடித்து விடுவதை போல முறைத்தார் அங்கயற்கண்ணி.
“ஏய் அங்க..” என்ற குரல் வரவும், “போம்மா” என்று நக்கலாக சொன்னாள்.
“ஏத்தா இப்படி பண்ண? போன மாசம் வரைக்கும் நல்லா தானே இருந்த? திடீர்னு எப்படி இந்த லவ்வு, கிவ்வுலாம் வரும்?” என்று அவளின் அப்புச்சி மாயாண்டி அக்கறையுடன் கேட்க,
“உங்ககிட்ட இருந்து தப்பிக்கணும்னா லவ் என்ன எல்லா எழவும் வரும்” என்று முணுமுணுத்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
காதல் என்ற பேச்சு வந்ததும் அவளுக்காக காத்திருப்பவனின் ஞாபகம் வந்தது.
இந்நேரம் சென்னை ரயில் நிலையத்தில் அவளுக்காக காத்திருப்பான். அவனிடம் சென்றிருந்தால் அவளின் எதிர்காலத்தையும் காத்திருப்பான். இரண்டே நாட்களில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் பதிவு திருமணம். அவளை அவளுக்காக காதலித்தவன். இரண்டே நாட்களுக்குள் அவனிடம் போய் விட்டால் போதும். அவனிடம் என்ன, இந்த ஊரை தாண்டி விட்டால் போதும், அவன் இல்லாமலும் வாழ்க்கையை அவளால் எதிர்கொள்ள முடியும்.
ஆனால், இனிமேல் அவளால் அத்தனை சுலபமாக இந்த ஊரை மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுக் கூட வெளியில் செல்ல முடியாது.
சொக்கநாத பாண்டியன் இந்நேரம் அவளைச் சுற்றி கோட்டையை எழுப்பி இருப்பார்.
“இத்தனையும் எதற்கு? இது என் வாழ்க்கை இல்லையா?” நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது.
முதலில் தனக்காக காத்திருப்பவனுக்கு தகவல் சொல்ல விரும்பினாள் அவள்.
அவளின் கைப்பை, பயண பை இரண்டும் அண்ணன் வசம் இருப்பது நினைவில் வர தலையில் அடித்துக் கொண்டாள். கூடு கட்ட சிறு சிறு குச்சியாக சேர்க்கும் குருவியைப் போல வீட்டில் இருந்து தினமும் ஒவ்வொரு துணியாக பணியிடத்துக்கு எடுத்துச் சென்று சேர்த்து வைத்து பயண பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
அவளது கைப்பையில் தான் அவளின் ஒட்டு மொத்த அடையாளமும் இருந்தது. அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம் தொடங்கி, அவளின் வங்கிக் கணக்கு விவரம், அதன் அட்டைகள், அவளின் படிப்பு சான்றிதழ்கள், அதை நினைக்கையிலேயே அவளுக்கு தொண்டையடைத்துக் கொண்டது. அவளின் சேமிப்பு பணம் என மொத்தமும் அண்ணன் வசம் சிக்கியிருக்க, தான் இங்கிருந்து தப்பித்தாலும் எங்கு சென்று என்ன செய்வது என்ற பயம் மெல்ல மெல்ல மேலேழுந்து நெஞ்சை அழுத்தியது.
நண்பர்கள் யாரையாவது அழைத்து உதவி கேட்கலாம் என்றால், அலைபேசியில் தான் அனைவரும் இருக்கிறார்கள். அதன் உதவியின்றி எவரின் எண்ணும் அவளுக்குத் தெரியாது.
“ஐயோ..” என்று சத்தமாக அவள் அரற்ற, அம்மாவுடன் அறைக்குள் நுழைந்தான் நெப்போலியன்.
அண்ணனை நேர்ப்பார்வை பார்த்து, “என் போன் குடுண்ணா” என்று கேட்டாள்.
“ஜெகபதி பாபுக்கு நீ வரலைன்னு இன்பார்ம் பண்ணியாச்சு” என்ற அண்ணனை திடுக்கிடலுடன் பார்த்தாள் அவள்.
“நான் சொல்லல ரஞ்சி. நீயே தான் சொல்லிட்ட, பிளீஸ் என்னை மறந்துட்டு உங்க வேலையை பாருங்கன்னு அவர்கிட்ட நீயே சொல்லிட்ட” அதைக் கேட்டதும் கோபத்துடன் அவள் எழ, “மாப்பிள்ளையை பிடிக்கலன்னா, எங்கிட்ட வந்து கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கணும் நீ. அதை விட்டு வேற ஒருத்தனை லவ் பண்றேன்னு போய் பிரச்சினைல மாட்டுவியா?” என்ற அண்ணனை சலிப்புடன் பார்த்து,
“உன்கிட்ட நான் சொல்லலையா ண்ணா?” என்று கத்தினாள்.
“அது இப்போ தேவையில்லாத பேச்சு. நான் அவரை.. நாங்க லவ்..” என்று அவள் தடுமாற, “ஜெகபதி பாபு, உன்னை மன்னிக்கவும், மறக்கவும் டிரை பண்றதா சொல்லிட்டு போய்ட்டார். சோ..” என்று அவளை பார்த்து குறிப்பாக சொல்லி தோளை குலுக்கி விட்டு வெளியே சென்றான் நெப்போலியன்.
“அண்ணா..” என்று கத்தியவள், திரும்பி அம்மாவை பார்த்தாள். அவர் உதவுவதாக இல்லை.
அடுத்த இரண்டு நாட்களையும் அந்த அறையிலேயே தான் கழித்தாள் அவள். இந்த உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்ட இந்த காலத்தில் வெளி உலகத்தை தொடர்பு கொள்ள முடியாமல் கண்ணை கட்டி வீட்டில் விட்டது போல வழி தெரியாமல் அமர்ந்திருந்தாள். வீட்டில் இருந்த ஒருவரும் அவளுக்கு உதவ தயாராக இல்லை.
“நான் வேலைக்கு போறேன் பிளீஸ்” என்று வீட்டினரிடம் கெஞ்சி தப்பிக்கலாம் என்று பார்த்தால், அதுவும் முடியாது. அவள் வேலையை ராஜினாமா செய்ததை எப்போதோ கண்டுபிடித்திருப்பார்கள்.
அந்த அறையை விட்டு தனது அறைக்கு செல்லலாம் என்றாலும், கூடவே வழித் துணை போல வந்து நின்று எதையும் எடுக்க விடாமல் காவல் காத்த அம்மாவை பார்க்கையில் அப்படியே பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
மூன்றாவது நாள் முடிவில் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. வீட்டினர் அனைவரும் கூடத்தில் காத்திருக்க, அவளும் சென்றாள்.
அண்ணனின் மனைவி கௌரி மனோகரி அங்கே அண்ணனுடன் அமர்ந்திருக்க, அவர்களுடன் அமர்ந்திருந்த அண்ணியின் குடும்பத்தை பார்த்து, நலம் விசாரித்து புன்னகைத்தாள்.
“உட்காரும்மா” அப்பா சொல்லவும் அனைவரின் பார்வையும் அவள் மேல் விழ, அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தாள்.
அவளின் பார்வை வட்டத்தில் யாரோ வேக எட்டுக்கள் வைத்து வீட்டினுள் வருவதை அவளால் ஓரக் கண்ணில் காண முடிந்தது. யாரென்று திரும்பி பார்க்க விரும்பவில்லை அவள். ஆனால், அதற்கு அவசியமின்றி அது யாரென்று மகளிடம் சொக்கநாதரே சொல்லி விட்டார்.
“அடுத்த மாசம் பத்தாம் தேதி உனக்கு கல்யாணம்.” என்றவர் மாப்பிள்ளை யாரென்று சொல்ல பட்டென்று திரும்பிப் பார்த்தாள் அவள்.
அவனைக் கண்டதும் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். அவளைப் போலவே நெப்போலியனும் எழுந்து அவளுக்கு பக்கத்தில் வந்து நின்றான்.
“என்ன?” என்று அவன் கேட்க,
“இந்த குடிகாரனை நான் கல்யாணம் பண்ணணுமா?” என்று அவள் அடிக் குரலில் சீறலாக கேட்டது அவளிடம் இருந்து சில அடிகள் தூரம் தள்ளி நின்றிருந்தவன் காதில் துல்லியமாக விழுந்தது. அனிச்சையாய் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். ஆனால், அவனை முந்திக் கொண்டு, அவன் செய்ய நினைக்காததை செய்திருந்தான் நெப்போலியன்.
பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியை கண்ணை மட்டும் சிமிட்டி வாங்கிக் கொண்டு தனக்கு பக்கத்தில் நின்றவனை அசட்டையாக ஏறிட்டாள்.
அந்த அடிக்கு அவன் முகம் வலியில் சுருங்கியது.
“எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் மாமா” என்று அவளையே பார்த்தபடி அழுத்தமாக ஆழ்ந்த குரலில் சொன்னான் அவன்.
அவன் தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகன் ஜெயதேவன்.
அவனுக்கு எதிரே முராரி ராகம் வாசித்து நின்றது, அவனின் பிரிய ராகம், ‘சிவரஞ்சனி’.