ஐந்து நாட்கள் என திட்டமிட்டு அங்கு வந்திருந்தார்கள். சிவரஞ்சனி அந்த சூழலை மிகவும் ரசித்திட, மேலும் மூன்று நாட்களை அங்கே கழித்து விட்டே சென்னை திரும்பினார்கள்.
அவர்கள் சென்னை வந்த மறுநாளே சீதாலட்சுமியும் வீடு வந்து விட்டார்.
ஒரு வாரம் கடந்த பின்னர்,
“அங்க அப்பா தனியா இருப்பார் இல்லம்மா?” என்று தேவன் கேட்க,
“எங்கம்மாக்கு பாசத்தை பாருங்களேன். ஏன்மா, இத்தனை வருஷமும் நான் தனியா தானே இருந்தேன்? அதுவும் இதே சென்னையில் தானே இருந்தேன்? அப்போ மட்டும் அப்பா தனியா இருக்கார்ன்னு சாக்கு சொல்லிட்டு மாசத்துக்கு ரெண்டு நாள் வந்து எட்டி பார்த்திட்டு போய்ட்டு, இப்போ மருமக வந்ததும், இங்கேயே இருக்கியே? என்னா விஷயம்?” என்றான் அவரை சந்தேகமாக பார்த்து.
“உனக்கு வீட்டை சரி பண்ணி கொடுப்போம்னு நான் வந்தா, மாமியார் கொடுமை பண்ண வந்தா மாதிரி பேசுற டா நீ? என்னை பார்த்தா அப்படியா இருக்கு உனக்கு?”
“ஆமா. அப்படித்தான் இருக்கு மா.” என்றான் கிண்டலாக.
“நான் ஊருக்கு போறேன், போடா” என்று கோபமாக சொன்ன சீதாலட்சுமி, அசையாமல் அங்கேயே நிற்க, “சரிம்மா. நான் டிக்கெட் போட்டுட்டு அப்பாக்கு சொல்லிடுறேன்” என்ற மகனை சிரிப்பும், கோபமும், அதிர்ச்சியும் கலந்து பார்த்தார் சீதா.
இந்த திருமணத்திற்காக அவனை வற்புறுத்தும் போதிருந்த அம்மாவின் மேல் அதிக கோபமும், நிறைய வருத்தமும் அவனுக்கிருந்தது. அது மொத்தமாக மறையவில்லை என்றாலும், அவர் மேல் தற்போது அவனுக்கு பெரிதான கோபங்கள் ஏதுமில்லை.
அவரும் தன்னால் இயன்ற வரை மகனிடம் அன்பாக, மருமகளிடம் சுமூகமான உறவையே பேணினார். அதனால், ஒருவேளை இந்த கட்டாயத் திருமணம் தோல்வியுற்றிருந்தால் என்னவாகி இருக்கும், என்ற எண்ணத்தையே விட்டொழித்தான் தேவன். ஆனால், அதனாலேயே அம்மாவின் மேலிருந்த கோபமும், வருத்தமும் மொத்தமாய் மறைய மறுத்தது.
அவன் தன் எண்ணங்களுடன் நிற்க, மகன் கைப் பிடித்து சோஃபாவில் அமர செய்து அவனுடன் தானும் அமர்ந்தார் சீதா.
“அப்ப நான் ஊருக்கு கிளம்பவா தம்பி? நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போற வரைக்கும் இங்க இருப்போம்னு நினைச்சு நான் வந்தேன்” கரிசனத்துடன் அவர் சொல்ல,
“என் மேல உனக்கு அக்கறையே இல்லம்மா. இல்ல?” என்று பதில் சொன்ன மகனை ஆச்சரியமாய் பார்த்தார் சீதா.
தேவனுக்கு எப்பொழுதும் மனைவியுடன் வார்த்தைப் போரிட்டு, இப்பொழுது அதுவே அவனின் இயல்பாகி, அவளைப் போலவே, அவளிடம் பேசுவது போலவே பேசினான் அவன். இப்போது அதை உணர்கையில் அவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
“நிஜமா என் மேல கோபமா இருக்கியா தம்பி?” குரல் உடைய கேட்டார் சீதாலட்சுமி.
“அச்சோ, இல்லம்மா. சாரி” உணர்ந்து சொன்னான்.
சீதாலட்சுமி மகனைத் திட்டி சில நிமிடங்களில் சமாதானம் ஆனார்.
“உனக்கு வீட்டு வேலை ஒன்னுமே தெரியாது. ரஞ்சனிக்கு என்ன தெரியும்னு எனக்குத் தெரியாது. அதான் நான் இங்க கொஞ்ச நாள் இருந்து வீட்டு வேலைக்கு இருக்க ஆளுங்களை உங்களுக்கு ஏத்த மாதிரி பழக்கி விட்டுட்டு ஊருக்கு போகலாம்னு நினைச்சேன்”
“தெரியும் மா. நான் சொன்னதை சீரியஸா எடுக்காத” என்று அழுத்தமாக சொல்லி அம்மாவை சமாதானம் செய்தான் தேவன்.
“ம்ம், ரஞ்சனி வீட்டு ஆளுங்க யாரும் இங்க வர்ற மாதிரி தெரியல. அதான் அவங்களை எதிர்பார்க்காம நானே வந்துட்டேன்”
“நீங்க இருக்கும் போது அவங்களை எதுக்கும்மா தொல்லை பண்ணிட்டு..”
“நாம அவங்களை கூப்பிடல தான். ஆனா, அவங்களுக்கா வரணும்னு தோனுச்சா பாரு” என்று புலம்பினார் சீதா.
“பேசல விடுடா” என்று சத்தமாக சொன்னவர், “கௌரி அடிக்கடி எனக்கு கால் பண்றா. ரஞ்சனி பெருசா அவங்க வீட்ல யார் கிட்டயும் பேசல போல தம்பி. அம்மா, அப்பத்தா, அப்புச்சி கிட்ட மட்டும் பேசுறான்னு பேச்சு வாக்குல கௌரி சொன்னா”
“அப்படியா? அத அக்காவே சொன்னாளா?” அவன் கேட்க, தலையசைத்தார் சீதா.
“அக்கா ஏன் என்கிட்ட பேசுறது இல்ல? முன்னாடி எல்லாம் எனக்கும் கால் பண்ணுவா தானே?” தேவன் புருவம் சுருக்கி தீவிரமாக கேட்க,
“நானும் அதைத்தான் சொன்னேன். ஜெய்க்கு நீயே போன் பண்ணி பேசு கௌரி. ரஞ்சனிகிட்டேயும் நீ ஏன் பேசுறதில்லன்னு கேட்டா டக்குனு பேச்சை மாத்திடுறா. ரஞ்சனிக்கு மட்டுமா, எனக்கும் தான் கௌரி மேல கோபம் இருக்கு, முன்னாடி நிறைய இருந்தது. ஆனா, அதையே இழுத்து பிடிச்சுட்டு இருக்க முடியுமா? இப்போ உனக்கு பொண்டாட்டி வழியிலயும் உறவாகிட்டா உங்கக்கா. நீ கோபத்தை விட்டு அவகிட்ட பேசுற வழியை பாரு தம்பி. அது கஷ்டம் தான், என்ன பண்ணுறது வேற வழியில்லயே” என்று அவரே சொல்ல, அமைதியாய் அமர்ந்திருந்தான் தேவன்.
“அவ வீட்டுக்காரரை வேற நீ முன்ன மாதிரி மாமான்னு சொல்லி கூப்பிடாம, நெப்போலியன்னு ரெண்டு மூனு தடவை பேர் சொல்லி கூப்பிட்டுட்டியாம், பாவம் புலம்புறா மனுஷி” என்றார் வருத்தத்துடன்.
“அந்நேரம் ஏதோ கோபத்துல அப்படி வந்திடுச்சு மா. அப்புறம் மரியாதை கொடுத்து தான் பேசினேன் நான்” என்பதையே கடுப்பாக தான் சொன்னான் அவன்.
“என்ன இருந்தாலும் உன் ஒரே மச்சான்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவரஞ்சனி அறைக்குள் இருந்து வெளியில் வர, சட்டென அம்மாவின் கைப் பிடித்து பேச்சை நிறுத்த முயன்றான் தேவன்.
“கௌரியை இங்க நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன் நான். நீங்க பேசி சரியாகுங்க, என்ன?” என்று சீதாலட்சுமி கேட்க, அதைக் கேட்டு தேவனை முறைத்தபடி நேராக சமையல் அறை சென்றாள் சிவரஞ்சனி.
இரவு உணவு முழுவதிலும் அவள் கண்கள் அவனையே கூர்ந்தது. சீதாலட்சுமி அவர்கள் இருவரிடமும் மும்முரமாக வேறு பேச்சுக்கள் பேசினார். மனைவியை பாராமல் பொறுப்பாக அம்மாவுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் தேவன்.
அவன் வேலையை காரணம் காண்பித்து இரவு உணவை முடித்த உடனேயே அறைக்கு சென்று விட, அத்தையுடன் உணவு பாத்திரங்களை ஒதுக்கி, அவருக்கு பாலை காய்ச்சி கொடுத்தாள் சிவரஞ்சனி.
ஒரு மணி நேரம் கழித்து சீதாலட்சுமி உறங்கச் செல்லவும் தங்கள் அறைக்கு வந்தாள்.
அறையின் கதவை திறந்ததும், “மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை…” தொலைக்காட்சியில் இருந்து கசிந்த அவள் குரல், அவர்களின் அறையெங்கும் எதிரொலித்தது.
“என் வாய்ஸ் தானே இது? என்ன பண்ணீங்க? எப்படி?” எதையும் ஆராயாமல் அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்துக் கேட்டாள் சிவரஞ்சனி.