மாங்குளத்தில் வைத்து கார் ஓட்ட கற்றுத் தருகிறேன் என்று மகேந்திரா ஜீப்பில் மனைவியை வற்புறுத்தி அமரச் செய்து சொல்லிக் கொடுத்தான் அவன். அவள் பதட்டத்தில் ஜீப்பை செலுத்தி அந்த சமமற்ற பாதையில் தடுமாறியதை இப்போது நினைக்கையிலும் அவனுக்கு இதயத் துடிப்பு எகிறியது.
“கார் ஓட்ட கத்து தர்ற இடமா இது? என்ன விளையாடுறீங்களா தேவன்? ஹில் ஸ்டேஷன்ல யாராவது டிரைவிங் சொல்லித் தருவாங்களா?” என்று தொடங்கி பத்து நிமிடத்திற்கு மேல் அவனிடம் கத்தியிருந்தாள் சிவரஞ்சனி
“ஹேய் இது நார்மல் கிரவுண்ட் தான். அது போக ஆள் நடமாட்டம் இல்லாம தானே இருக்கு?” என்று அவன் சொல்லவும், அன்று அவளுக்கு வந்த கோபம் இருக்கிறதே.
இப்பொழுது மனைவியை பார்த்தபடியே, “நீங்க சொல்லிட்டீங்க இல்லம்மா. பாருங்க இன்னைக்கு ஈவ்னிங்கே உங்க மருமகளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்துட்டு தான் நான் மறுவேலை பார்ப்பேன்” என்றான் தேவன்.
“டிரைவிங் இவர்கிட்டயா? வேணாம்த்த. இந்த மாசம் முழுக்க இவருக்கு வரிசையா ரெக்கார்டிங் இருக்கு. அதுனால நான் டிரைவிங் கிளாஸ் போறேன்” பதறிக் கொண்டு பதில் சொன்ன மனைவியை பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.
“அப்போ இன்னைக்கே டிரைவிங் கிளாஸ்ல சேர்ந்திடும்மா” என்று சேதுராமன் சொல்ல,
தேவன் காலை உணவை முடித்து எழுந்துக் கொண்டான்.
“நாங்க டூவீலர் ஷோரூம் வரை போய்ட்டு வர்றோம்.” என்று பெற்றோர் இருவரையும் பார்த்துச் சொன்னவன், மனைவியை திரும்பிப் பார்க்க, அவள் தயாராக நின்றாள்.
“கார் இருந்தா பக்கத்துல இருக்க இடம்னாலும் பத்திரமா போய்ட்டு வந்துடலாம்னு தானே நான் சொல்றேன்” மனது கேட்காமல் மீண்டும் ஆரம்பித்தார் சேதுராமன். சீதாலட்சுமி கணவரை முறைத்து மகனிடம் தண்ணீரை நீட்டினார்.
“அப்பா, அதான் என் கார் வீட்ல இருக்கேப்பா. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போகும் போது அதுல தானே போகப் போறோம். ஸ்கூட்டி அவ வேலைக்கு போக வாங்குறோம்ப்பா. நாளைக்கே கார் ஓட்ட கத்துக்கிட்டா அவளே கார் வாங்கிப்பா” என்று தேவன் சொல்ல, சேதுராமன் மனமின்றி தலையசைத்தார்.
“டெய்லி நானே அவளை ஹாஸ்பிட்டல்ல பிக் அப், ட்ராப் பண்ணிடுறேன் ப்பா. அது ஓகேவா?” என்று அவன் கேட்க, பெற்றோர் சிரிக்க, மனைவி முறைத்தாள்.
“சரி, சரி. நேரத்தோட போய் நல்ல வண்டியா வாங்கிட்டு வாங்க” என்று அவர்களை வழியனுப்பி வைத்தார் சீதாலட்சுமி.
தேவன் அவர்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பிரபல இரு சக்கர வாகன விற்பனையகத்தை நோக்கி காரை செலுத்தினான்.
“மாமா ஏன் இப்படி கார் கார்னு சொல்றாங்க? சேஃப்டி, சேஃப்டின்னு அவங்க திரும்ப திரும்ப அழுத்தி அதையே சொல்லும் போது தான் எனக்கு அவரை விட பயமா இருக்கு. அப்படி எனக்கு என்ன ஆகிடும்னு நினைக்கிறார் மாமா?” என்று சிவரஞ்சனி கேட்க, ஒரு நொடி அவன் கைகளில் கார் தடுமாறியது.
“கேட்கிற கேள்வியை ஒழுங்கா கேளு சிவரஞ்சனி. மாமா ஏன் கார் வாங்க சொல்றாங்கன்னு கேளு. அதை விட்டு எனக்கு என்ன ஆகும்னு, என்ன பேச்சு அது?” என்று கோபமாக அதட்டினான் தேவன்.
“என்ன நீங்களும் மாமாவை மாதிரியே..” என்று அவள் ஆரம்பிக்க,
“நோ” என்று கத்தினான் தேவன்.
“மாமனார் வீட்ல இருந்து கார் வாங்கிட்டு வான்னு பொண்டாட்டியை மிரட்டுறவனுக்கு தான் இன்னைக்கு மரியாதை போல. கார் வாங்கிக் கொடுடான்னு மகன்கிட்ட சொல்ற மாமனாரை சந்தேகமா பார்க்கற நீ?”
“நீங்க பேச்சை மாத்துறீங்க தேவன்”
“தெய்வமே” என்று அங்கலாய்த்தவன், “சத்தியமா அப்பா அக்கறையா தான் சொன்னார். வேற ரீசன் எதுவும் இருக்காது” என்று அவன் அழுத்திச் சொல்லவும் தான் தெளிந்தது அவள் முகம்.
இரு சக்கர வாகனம் வாங்குகையிலும் எப்போதும் போல இருவருக்கும் முட்டிக் கொண்டது.
“எனக்கு ஜூபிட்டர் பிடிச்சிருக்கு. அந்த ஒயின் கலர் வண்டி நல்லாருக்கு இல்ல?” என்று அவள் சொல்ல, “அது ரொம்ப பழைய மாடல். யமஹா, ஹீரோ, விடா இதெல்லாம் தான் பெஸ்ட் வண்டிங்க. இதுல ஒன்னை செலக்ட் பண்ணு” என்றான் அவன்.
“வண்டி எனக்கா, உங்களுக்கா?”
“நீ ஓட்டும் போது பின்னாடி நான் தானே உட்கார்ந்து வரணும்? அப்போ வண்டி எனக்கு பிடிச்சதா இருக்கணும் இல்ல?” என்று கேட்டான் தேவன்.
“என்ன லாஜிக் இது காதல் தேவன்? நீங்க ஆடிக்கு ஒருநாள், அமாவசைக்கு ஒருநாள் என் வண்டியில ஏறுவீங்களா? அதுக்காக உங்களுக்கு பிடிச்ச வண்டியை நான் வாங்க முடியாது.” என்று திட்டவட்டமாக அவள் சொல்ல, “நான் சொன்னதுக்காவே வேணாம்னு சொல்வியா நீ?” என்று முகம் காட்டினான் அவன்.
“இல்லயே” என்றவள் முடிவாக அவன் கைக் காட்டியதில் இருந்து ஒரு வண்டியை தேர்வு செய்ய, அவனோ, அவள் பிடித்ததாக சொன்ன வண்டியை முடிவு செய்திருந்தான்.
“இவ்வளவு நேரம் என்னை மூச்ச பிடிச்சு பேச வச்சுட்டு, இப்போ என்ன பண்ணியிருக்கீங்க?” சிவரஞ்சனி சினம் மிக கேட்க, தேவன் மட்டுமல்ல அவர்களோடு நின்றிருந்த விற்பனை பிரதிநிதி பெண்மணியும் சிரித்து விட்டார்.
அவர்களே வண்டியை வீட்டில் கொண்டு வந்து தருவதாக சொல்ல, பணம் கொடுத்து, பதிவு செய்து, மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடித்து வீடு வந்தார்கள் இருவரும்.
சேதுராமன் இரண்டு நாள்களில் மதுரை கிளம்ப, அப்பாவை தனியாக பிடித்தான் தேவன்.
“ஏதாவது பிரச்சினையாப்பா?” என்று அவன் கேட்கவும், “நெப்போலியனுக்கு தலைவர் கட்சியில சீட் வேணுமாம்” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் அவர்.
“ஓ, என்னப்பா திடீர்னு? என் மாமனார் ஜாதி கட்சியை விட்டு வர மாட்டாரே?”
“உன் மாமனார் இப்பவும் அந்த கட்சியில தான் கிடந்து உருளுறார். உன் மச்சினனுக்கு தான் இப்போ கட்சி மாறுற எண்ணம் போல”
“அவங்க தலைவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாதே ப்பா”
“உனக்கு இன்னும் அரசியலே தெரியல ஜெய். அதெல்லாம் மேலிடம் நினைச்சா ஒரே நாள்ல எல்லாம் சாத்தியம் தான்”
“சரிதான். ஆனா, நெப்போலியன் மாமாவுக்கு ஏன் திடீர்னு கட்சி ஆசை? அவர் ஃபோகஸ் எல்லாம் பிசினஸ் மேல தானே இருந்தது?”
“பிஸினஸுக்கு பணம் வேணும் இல்லப்பா? அரசியலுக்கு போனா பணத்தை எவன்கிட்டயும் மிரட்டி வாங்கலாம்னு நினைக்கிறான் போல. எல்லாம் மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்குற கதைதான்னு அவனுக்குத் தெரியல”
“நீங்க என்னப்பா பண்ண போறீங்க?”
“நீ தானே தம்பி அவனுக்கு ஹெல்ப் பண்ண சொன்ன? அவனுக்கும் ஏதோ இக்கட்டு போல. நல்லா சிக்கிட்டு முழிக்கிற மாதிரி தெரியுது. இத்தனைக்கும் அந்த கர்ணா, அவங்கப்பனை விட தொழிலை நல்லா பார்க்கறான். நெப்போலியன் கிட்ட சுமூகமா தான் இருக்கான். பணமும் அதிகம் புழங்குது. ஆனா, கர்ணா நம்ம தலைவர் மகன் கூட சேரவும், அதைப் பார்த்து உன் மச்சினனுக்கும் ஆசை வந்தது போல தெரியுது” யோசனையுடன் தாடையை தடவியபடி சொன்னார் சேதுராமன்.
“என்ன செய்யலாம் தம்பி. நீயே சொல்லு” அவர் கேட்கவும், தேவன் அது பற்றி யோசிக்கும் முன்னே மனைவியின் முகம் தான் அவன் கண் முன்னே வந்தது.
“நாம பண்றது நெப்போலியனுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி தான். உங்க அக்கா கௌரிக்காவும் நான் பார்க்கணும் தம்பி”
“ஏன் பெரியப்பா என்ன பண்றார்? மருமகனுக்கு அவர் செய்ய வேண்டியது தானே?”
“அவர்கிட்ட பெரிய தொகை வாங்கி நெப்போலியன் அதை பிசினஸ்ல விட்டுட்டான்னு சொன்னேன் இல்ல ஜெய்? நம்மகிட்ட கேட்கிறான்னா அதுக்கும் சரியான காரணம் இருக்கும் தம்பி”
சேதுராமன் சொல்ல, ஜெயதேவனுக்கு தெரிந்தது எல்லாம் பெரியப்பாவை விட அப்பாவிடம் இருக்கும் பணமும், தொழிலும், அவரின் நற்பெயரும் அது ஏற்படுத்தி தந்த நல்ல நட்புகளும் மட்டுமே.
“சரி, செய்ங்கப்பா. ஆனா, வெளில தெரியாத மாதிரி பார்த்துக்கோங்க” என்றான் அவன்.
ஆனாலும், அவனுக்கு உள்ளுக்குள் மனைவியை நினைக்க பயமாக தான் இருந்தது.
மறுவாரத்தில் இருந்து மருத்துவமனை செல்லத் தொடங்கியிருந்தாள் சிவரஞ்சனி.
முதல் நாள் மட்டும் ஜெயதேவன் மனைவியுடன் மருத்துவமனை சென்றான்.
அவர்கள் இருவரும் அவரவர் பணியில் மூழ்க, சீதாலட்சுமி மதுரை சென்றிருந்தார்.
மூன்று வாரங்கள் அவசரமாக ஓடி மறைய, ஞாயிறு அன்று காலை அவதி அவதியாக மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
“வெயிட் நான் ட்ராப் பண்றேன்” உறக்கம் முற்றிலும் கலையாத கண்களுடன் தலையை மட்டும் உயர்த்திச் சொன்னான் தேவன்.
“நீங்க தூங்குங்க தேவன், நான் பத்து நிமிஷத்துல போய்டுவேன்.” என்று கைப் பையுடன் அவள் அவசரமாக அறையில் இருந்து வெளியேற, புவனா வரவேற்க வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி. அவரைப் பின் தொடர்ந்து அவளின் அப்புச்சி வர, வாசலின் கடைசி படியில் நின்றிருந்தான் நெப்போலியன்.
“அம்மா, அப்புச்சி. வாங்க, வாங்க” என்று உண்மையான மகிழ்வுடன், எதிர்பாரா ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்றாள் சிவரஞ்சனி.
நெப்போலியன் தங்கை அழைக்காமலேயே அவள் வீட்டுக்குள் வந்தான். அவன் அழைக்கையில் எந்தக் கேள்வியும் இன்றி அவனோடு தாய் வீடு சென்றாள் சிவரஞ்சனி.