அன்று மதியம் வீடு வந்த சிவரஞ்சனியுடன் அமர்ந்து காயத்ரிக்கான கல்லூரியை தேர்ந்தெடுத்தார்கள் மூவரும்.
கல்லூரி தொடர்பான அனைத்து வேலைகளையும் தேவனே அவனது உதவியாளர் மூலமாக கவனித்துக் கொண்டான். இரண்டே வாரங்களில் சென்னையின் பெயர் பெற்ற கல்லூரியில் அவள் விரும்பிய மேலாண்மை படிப்பில் சேர்ந்திருந்தாள் காயத்ரி.
அவனுக்கான நன்றியும், “தேங்க்ஸ் பாப்பா” என்று சிவரஞ்சனியிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
“புவனாக்கா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க” என்று அந்த நன்றியை மறக்காமல் கணவனிடம் சேர்ப்பித்தாள் அவள்.
“ம்ம், ஒன்னும் வேணாம் போ. அதென்ன பொம்பளை பிள்ளையை கை நீட்டி அடிக்கிற பழக்கம் அவங்களுக்கு?” என்று கோபித்தான் தேவன்.
“சும்மா அடிச்சுருப்பாங்க” சோர்வுடன் கண் மூடி சோஃபாவில் சரிந்தபடி அவள் சொல்ல, “என்னது சும்மா அடிச்சுருப்பாங்களா? இதையெல்லாம் நார்மலைஸ் பண்ணாத சிவரஞ்சனி” என்று கோபமாக கத்தினான் தேவன்.
அவன் குரலில் தெறித்த கோபம் அவளை நிமிர்ந்து அமரச் செய்தது.
“உங்களுக்கு புவனாக்கா பத்தி தெரியுமே. அவங்க..”
“அவங்க அடிச்சதை நான் பார்த்தேன். அண்ட் இட்ஸ் நாட் ரைட். அவ்ளோதான். இதெல்லாம் சரின்னு பேசாத எனக்கு செம்ம கோபம் வரும்” என்பதையே கடுங்கோபத்துடன் தான் சொன்னான் தேவன்.
“ஓகே. சாரி.” என்றாள்.
“அவங்க பண்ணதுக்கு நீயெதுக்கு சாரி சொல்ற?” என்று அதற்கும் எகிறினான்.
இப்போது மனைவியின் முகம் கோபமாக மாற அவளை இடித்து கொண்டு அமர்ந்தான் தேவன்.
“ம்ம், இவனுங்க அடிக்கிறதுக்கு ஆயிரம் வியாக்கியானம் சொல்லுவானுங்க. ஆனா, அதை வாங்குறவனுக்கு தான் அதோட வலி தெரியும்.” கோபமாய் சொன்னான்.
“தன்னை விட பலங்குறைந்தவங்க கிட்ட காட்டுற அத்துமீறல் இதெல்லாம். நல்லா கவனிச்சு பாரு, திருப்பி அடிக்க முடியற யார்கிட்டேயும் இவங்க வீரத்தை காட்ட மாட்டாங்க. இவங்க டார்கெட் எல்லாம் தன்னை விட உடலளவில் பலவீனமானவங்க தான்”
அவளுக்கு மருத்துவமனை செல்ல நேரமாகவும் எழுந்து கொண்டாள்.
அன்று அவள் குழந்தைகள் நலப் பிரிவிற்குள் நுழையும் போதே பரபரப்பாக தான் இருந்தது. குழந்தைகளின் சிணுங்கல், அழுகை, கத்தல், விளையாட்டு கூச்சல் என சத்தத்திற்கும் குறைவில்லை.
காத்திருப்பு பகுதி முழுவதுமாக நிறைந்திருந்தது.
செவிலியர் நால்வரும் அங்கிருக்க, அவளைப் பார்த்ததும் புன்னகைத்து அருகில் வந்தார் சந்தியா.
“குட் ஈவ்னிங் டாக்டர், இன்னைக்கு தேவராஜன் டாக்டர் பேஷண்ட் ஒரு குழந்தைக்கு முக்கியமான எமர்ஜென்சி சர்ஜரி. சார் மதியத்தில் இருந்து இங்க தான் இருக்கார். நம்ம ஹாஸ்பிடல் பீடியாட்ரிக் சர்ஜன் வேறவொரு ஆபரேஷன்ல பிஸியா இருக்கவும், நம்ம ஹைதராபாத் ஹாஸ்பிட்டல்ல இருந்து பீடியாட்ரிக் சர்ஜனை அவசரமா வர வச்சுருக்காங்க. தேவா சார் குழந்தையோட பேரன்ட்ஸ் கூட இருக்கார். அத்தோட இன் பேஷண்ட் பார்த்திட்டு வர்றேன்னு சொன்னார். இங்க அவரோட பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க. அதான் கூட்டமா இருக்கு” என்று அவளுக்கு விளக்கம் சொன்னார் அவர்.
“ஓகே, சிஸ்டர். பிரகாஷ் டாக்டர் இன்னும் வரலயா?”
“சார் வந்துட்டே இருக்கேன்னு இப்ப தான் கால் பண்ணாங்க டாக்டர்”
“ஓகே” என்றவள், அதற்கு மேல் தாமதிக்காமல் குழந்தைகளை பார்க்கத் தொடங்கினாள்.
மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னர் மருத்துவர் தேவராஜன் மகப்பேறு பகுதியில், புதிதாக பிறந்த குழந்தைக்கு முக்கியமான சிகிச்சையில் ஈடுப்பட்டிருப்பதாக அவளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதனால் அவர் பார்க்க வேண்டிய குழந்தைகளை, அவளும், மருத்துவர் பிரகாஷும் பார்த்தார்கள்.
“தேவா டாக்டர் பார்த்தா தான் இவளுக்கு காய்ச்சல் சரியாகும்”
“டாக்டர் தேவா இல்லயா? அப்பாயின்ட்மெண்ட் வாங்கும் போதே அவர் இல்லைனு சொல்ல மாட்டீங்களா?” குழந்தைகள் நலத்தை பொறுத்தவரையில் ஒரே மருத்துவரிடம் காண்பிக்கவே விரும்புவார்கள் பெற்றோர்கள். ஆக, சிறிய முணுமுணுப்பும், சலசலப்பும் இருந்தது. சிவரஞ்சனி புன்னகை முகத்துடன் அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி, மிக நிதானமான முறையில் அவர்களை அணுகி மருத்துவம் பார்த்தாள்.
இரவு ஒன்பது மணியளவில் தேவராஜன் தன் அறைக்கு திரும்பவும் நிலைமை சீரானது.
அவளுக்காக காத்திருந்த குழந்தைகளை அவள் பார்த்து முடிக்கவும், அவளை தன் அறைக்கு அழைத்தார் தேவராஜன், “சாரி சிவரஞ்சனி” என்றார் புன்னகையுடன்.
“இட்ஸ் ஓகே டாக்டர். சந்தியா சிஸ்டர் எமர்ஜென்சி சர்ஜரின்னு சொன்னாங்க. குழந்தை எப்படியிருக்கு?”
“சர்ஜரி வென்ட் வெல்.” என்றார் அவர்.
“ஓகே டாக்டர்” என்றவளின் பார்வை அவரின் மேஜை மேலிருந்த புகைப்படத்தின் மீது படிந்தது.
தேவராஜன் ஒரு வயதான மகனை கையில் தூக்கி வைத்தபடி தன் மனைவியின் தோள் மீது கைப் போட்டு அணைத்தபடி நின்றிருந்தார். அவர்கள் மூவரின் முகமும் சிரிப்பில் மலர்ந்து அழகாய் வசீகரித்தது.
அவர் கையில் மகனை தூக்கி வைத்திருந்தது போலவே அவரின் அறையை நிறைத்திருந்தது அதே போன்ற புகைப்படங்கள். புன்னகையுடன் அதை பார்வையிட்டு, அவருடன் பேசி விட்டு வெளியில் வந்தாள் அவள்.
அங்கே தேவன் முக கவசம் அணிந்து மனைவிக்காக காத்திருந்தான்.
சிவரஞ்சனி உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
“ஒரு புன்னகை பூவே, சிறு பூக்களின் தீவே” என்று அவன் முணுமுணுக்க, முறைத்தபடி அவனை நெருங்கினாள்.
“என்ன டாக்டர், ஒரே ஸ்மைலா வர்றீங்க?” அவன் கேட்கவும், முக கவசம் மறைக்காத அவன் கண்களை பார்த்தபடி அவனை நெருங்கினாள்.
மீண்டும் ஏதோ வரிகளை பாட வந்தவன், அதை செய்யாமல் சிரிப்பில் பிரிந்த உதடுகளுடன், கண்களில் குறும்பு மின்ன மனைவியை பார்த்தான்.
“டாக்டர் தேவராஜனை ஒரு தடவை மீட் பண்ணனும் நீங்க”
“ஓகே, எதுக்காம்? அவர் ஃப்ரீன்னா இப்போவே பார்த்திடுவோமா?” என்று தேவன் கேட்க, “இல்ல. டாக்டர் இன்னைக்கு பயங்கர பிஸி. நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று அவள் முன்னே நடக்க, அவளைப் பின் தொடர்ந்தான் தேவன்.
“ஆமா, எதுக்கு மீட் பண்ணனும்னு சொல்லவே இல்லையே நீ”
“அவரோட ரூம் பார்க்கணும் நீங்க”
“ஓகே..” என்று அவன் கேள்வியாக இழுக்க, அவளது அலைபேசியை திறந்து ஒரு புகைப்படம் எடுத்து அவனிடம் காண்பித்தாள் அவள்.
“ஹேய், பொதுவா பேபிஸை அம்மா தானே தூக்கி வச்சிருப்பாங்க. இது ரொம்ப அழகாருக்கு. லவ்லி” என்றான் தேவன் ரசனையுடன்.
தேவராஜனின் அறை சுவர் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த புகைப்படங்களில் பச்சிளம் குழந்தைகளை பொக்கிஷமாக தூக்கி வைத்திருந்தார்கள் தந்தையர்கள். அதே போல நடை பழகும் குழந்தைகளின் விரல் பிடித்து நடை பயின்றார்கள் தந்தையர்கள்.
அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அழகும், ஜீவனும் கொட்டிக் கிடந்தது.
சிவரஞ்சனியின் கண்கள் அந்த புகைப்படங்களை இமைக்காமல் பார்க்க, இதழ் பிரிய ரசித்திருந்த மனைவியை ரசித்தான் தேவன்.
“ம்க்கும்” என்று தொண்டையை செருமி, அவன் குறும்பாக ஏதோ சொல்ல வந்த கணம், “ஹாய், சிவரஞ்சனி” என்ற குரல் அவர்கள் இருவரையும் கலைத்து நிமிர்ந்து பார்க்கச் செய்தது.
இருவருக்கும் எதிரில் நின்றவனை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவரஞ்சனி.