சிவரஞ்சனியை அதிகம் சிந்திக்க விடவில்லை அவளுக்காக காத்திருந்த குழந்தைகள். நேரம் மதியம் ஒன்றை கடந்திருக்க, அவளுக்காக காத்திருந்த கடைசி குழந்தையையும் பார்த்து முடித்திருந்தாள் அவள்.
இடையில் தேவன் இரண்டு முறை அவளை அலைபேசியில் அழைத்திருந்தான்.
“கொஞ்சம் பிஸி” என்ற அவளின் பதிலுக்கு பின் மீண்டும் அழைக்கவில்லை அவன்.
இப்பொழுது அவனிடம் பேசும் மனநிலையும் அவளுக்கில்லை. அவனது வார்த்தைகள் தந்த வலி இன்னமும் ஈரமாய் நெஞ்சில் இருக்கையில், அவனிடம் இயல்பாய் பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
அதேநேரம் அவனையே சுற்றி வரும் மனதை அமைதிப்படுத்தும் வழியும் அவளுக்கு கை வரவில்லை.
அதிக வேலை பளு, பாடல் ஒலிப்பதிவு, தூக்கமின்மை என கணவனின் நிலை அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தாலும் கூட, அவனது கோபமும், பேச்சும் அவளை காயப்படுத்தி இருந்தது. அதை ஜீரணிக்க பெருமுயற்சி செய்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் செவிலி சந்தியாவிடம், வீடு செல்கிறேன் என்று சொல்லியிருந்தாள். ஆனால், இருக்கையில் இருந்து நகர விடாமல் பற்றிக் கொண்டது தயக்கம்.
தேவனின் காரணமற்ற கோபம் இந்நேரம் மறைந்திருக்கும். ஆனால், சேதுராமன் தன் அண்ணனுக்கு தொழிலில் உதவியதை எப்படி கணவனிடம் விசாரிப்பது?
மாமனார் செய்தது தன் கணவனுக்கு தெரியுமா? அவனுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக அவளிடம் சொல்லியிருப்பானே. ஒருவேளை அவனுக்கு தெரியாமல் நடந்திருக்குமோ? ஆனால், மாமனார் தொழிலை கணவனும் தானே பார்க்கிறான்?
அண்ணன் தொழிலில் பங்குதாரர்களாக இணையாமல் பண உதவி மட்டும் செய்திருப்பாரோ சேதுராமன்? அதனால் தான் தேவனுக்கும் அதுப் பற்றி தெரியாமல் போனதோ? அவளின் எண்ணங்கள் வரிசையாக கேள்விகளை எழுப்ப, பதிலை யாரிடம் கேட்பது என்ற யோசனையில் மூழ்கினாள் அவள்.
அந்நேரம் அவளின் அறைக்கு வெளியில் இருந்து வந்த சத்தம் அவளை கலைத்தது.
மருத்துவமனையின் அமைதியை அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் கலைப்பது வாடிக்கை தான் என்றாலும், இம்முறை சத்தம் அதிகமாக இருக்க அறையை விட்டு வெளியில் வந்தாள் அவள்.
சில நாள்களுக்கு முன் சந்தித்த அதே சிறுவனின் பெற்றோர் தான் இப்போதும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர். பியூலா, சந்தியா மற்றும் தேவராஜனின் செவிலி லீலா என மூவர் நின்று அவர்களை சாந்தப்படுத்த முயற்சித்து கொண்டிருந்தார்கள்.
அந்த தாயின் தோளில் கண் மூடிக் கிடந்தான் சிறுவன்.
“சிஸ்டர்ஸ்” என்று குரல் கொடுத்தாள்.
“சாரி டாக்டர்” என்று அவளிடம் ஓடி வந்தார் சந்தியா.
“தேவா டாக்டர் பேஷண்ட் தானே அவங்க? என்னாச்சு? டாக்டர் பார்க்கலையா இன்னும்?”
“எமர்ஜென்சின்னு கால் பண்ணிட்டு இப்போதான் வந்தாங்க, டாக்டர் பேஷண்ட் பார்த்திட்டு இருக்கார். ஒரே நிமிஷம் வெயிட் பண்ணுங்க சொன்னா கேட்காம கத்தினாங்க. இப்போ அவங்களுக்குள்ள சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க டாக்டர்” என்றார் சந்தியா. அப்போதும் அவர்களின் வார்த்தை போர் ஓய்ந்த பாடில்லை. சிறுவனின் தாய் கண்ணீருடன் நிற்க, தந்தை கத்திக் கொண்டிருந்தார்.
“நீ பையனை ஒழுங்கா கவனிச்சுருந்தா இப்படி ஆகியிருக்குமா?” என்று தந்தை கத்த, “நான் ஹாஸ்பிடல் கூப்பிட்டப்பவே நீங்க வந்திருந்தா..” என்று அழுகையின் ஊடே தவறை தந்தையின் பக்கம் திருப்பினார் சிறுவனின் தாய்.
அங்கிருந்த சொற்ப மனிதர்களின் கவனமும் அவர்களின் மேலேயே பதிந்திருந்தது. எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவர்கள்.
சிவரஞ்சனி அவர்களை நோக்கி நகர, “டாக்டர்” என்று சிறு குரலில் அழைத்து அவளை தடுத்தார் சந்தியா.
“என்ன சிஸ்டர்?” என்று அவள் கேட்க, மிகுந்த தயக்கத்துடன் அவளைப் பார்த்தார் சந்தியா.
“அந்த குட்டி பையனுக்கு தேவா டாக்டர் சில டெஸ்ட்ஸ் எழுதி கொடுத்திருக்கார். அந்த ரிசல்ட் வந்ததும் பக்கத்துல இருக்க டாக்டரை பார்த்திருக்காங்க”
“ஓ, அந்த டாக்டர் என்ன சொன்னாராம்?”
“கேன்சர்னு..” அத்தனை அருகில் நின்றதால் மட்டுமே சந்தியா சொன்னது சிவரஞ்சனியின் காதில் விழுந்தது. அதிர்ச்சியுடன் சந்தியாவையும், அந்த சிறுவனையும், அவன் பெற்றோரையும் பார்த்தாள் அவள்.
அவர்களை சற்றே சாந்தப்படுத்தி பியூலா பேசிக் கொண்டிருக்க, “இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? எமர்ஜென்சின்னா உடனே பார்க்க மாட்டாங்களா உங்க டாக்டர்ஸ்” என்று கத்தினார் அந்த தந்தை. சிவரஞ்சனி அவர்களை நோக்கி நடந்தாள்.
“சார், பிளீஸ். உட்காருங்க. சத்தம் போடாதீங்க” என்று அவள் சொல்ல, நொடியில் அவள் மேல் திரும்பியது அவரின் கவனம்.
“என்னது சத்தம் போடுறேனா? உங்க பிள்ளைக்கு உடம்பு சரியில்லாம போனா அப்போ தெரியும்” என்றவர், “நீங்க தானே இவனை முதல்ல பார்த்த டாக்டர்? நீங்க ஒழுங்கா பார்த்திருந்தா..” என்று குற்றம் சாட்டுதலை இப்போது அவள் மேல் திருப்பினார் அவர்.
“அப்போ இந்த ரிப்போர்ட் பார்த்திட்டு என் பிள்ளைக்கு கேன்சர்ன்னு சொன்ன டாக்டரும் உங்களை மாதிரியே பொறுப்பில்லாத டாக்டர்ன்னு சொல்றீங்களா?” அவளை பேச விடாமல் கத்தினார் அவர். செவிலிகள் மூவரும் அவளைச் சுற்றி நின்றார்கள்.
சிறுவனின் தாய், கணவரின் கைப் பிடித்து இழுக்க, அவரை வேகமாக உதறினார் அவர்.
“உங்க டாக்டர் என்னன்னா தப்பை அவங்க மேல வச்சுட்டு அமைதியா இருக்க சொல்றாங்க. நீங்க என்னன்னா செக்யூரிட்டியை கூப்பிட சொல்றீங்க? எங்களை பார்த்தா எப்படியிருக்கு உங்களுக்கு?” என்று கத்தியவர், கோபமாக அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தார். கணவரைத் தடுக்க அவர்களுக்கு இடையே சிறுவனின் தாய் வர, மனைவியை தாக்கப் போனார் அவர். செவிலி பியூலா அந்தப் பெண்ணை பாதுகாப்பாக அவர் பக்கம் இழுக்க, இடையில் சிவரஞ்சனி மாட்டிக் கொண்டாள்.
அவளுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை உணரும் முன் கணுக் காலில் சுரீரென்று வலி பரவியது. தன் உடலைத் தாங்கும் பலமின்றி கால்கள் நிலைத்தடுமாற கீழே விழப் போனாள்.
“டாக்டர்” என்று சந்தியா பதற, “ஆ..” மெலிதாக முணுமுணுத்தாள்.
அவ்வளவுதான், கீழே விழுந்து விட்டோம், கால் பிசகி விட்டது என்று அவள் நினைக்கையில் பின்னிருந்து அவளைத் தாங்கிப் பிடித்திருந்தார் தேவராஜன்.
இந்தக் கலவரத்தை கண்டு மிரண்டு விழித்த சிறுவன் சத்தமாக அழத் தொடங்கியிருந்தான். மகனின் அழுக்குரலை கேட்டதும் அந்த தந்தையின் கோபம் கூடியது.
“என் பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு..” என்று மீண்டும் ஆக்ரோஷத்துடன் அவளை தாக்கப் போனார்.
“சார்..” என்று அதட்டி, அவரின் தோளில் கை வைத்து அவரைத் தடுத்து நிறுத்தினார் தேவராஜன்.
சிவரஞ்சனியால் சரியாக நிற்க முடியவில்லை. அவளுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது.
மருத்துவமனை பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த தந்தையை ஆளுக்கொரு பக்கமாக நகர விடாமல் பிடித்துக் கொண்டார்கள்.
“பிளீஸ், அவரை விடுங்க.” சிவரஞ்சனி சொல்ல, “அவங்களை என் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க சிஸ்டர்” என்றார் தேவராஜன்.
“உங்களுக்கு அடி எதுவும் படலையே சிவரஞ்சனி?” கரிசனத்துடன் கேட்டார் அவர்.
“இல்ல டாக்டர். ஐ அம் ஓகே” என்று அவள் சொல்லவும், அவளின் தோளில் இருந்து கையை விலக்கினார். அவள் நேராக நிற்க முடியாமல் தடுமாற, சந்தியாவிற்கு கண் காட்டி விட்டு, சிறுவன் மற்றும் அவனின் பெற்றோருடன் தன் அறைக்கு போனார் தேவராஜன்.
சிவரஞ்சனியால் வலது காலை நகர்த்தவே முடியவில்லை. திடிரென்று கணுக்காலில் எடை கூடிய உணர்வு. ஆனாலும், முகத்தில் வலியை காண்பிக்கவில்லை அவள். சந்தியா தன் அனுபவத்தில் அவளின் கண்களைப் பார்த்தே அவளின் வலியை கண்டுக் கொண்டார்.
“வாங்க, டாக்டர். பத்து நிமிஷம் உங்க ரூம்ல உட்கார்ந்துட்டு வீட்டுக்கு போவீங்க” என்று அவர் சொல்ல, மனத்தின் திடத்தை கால்களுக்கு கடத்தி வலியை பொருட்படுத்தாமல் தனதறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தாள். அதற்கே முகமெல்லாம் வியர்த்து விட்டது.
சந்தியா எடுத்து நீட்டிய தண்ணீரை குடித்து விட்டு கண் மூடிக் கொண்டாள். அவளுக்கான தனிமையை தந்து வெளியேறினார் சந்தியா.
மனிதர்களின் வலியை போக்கும் மருத்துவமனையில் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறாள் சிவரஞ்சனி.
ஒருவரின் உயிரை காப்பாற்றினால் மருத்துவர்களை கடவுளாக பார்க்கும் அதே மனிதர்கள்தான், ஒரு உயிரிழப்பு ஏற்படும் போது கடவுள் பிம்பம் உடைத்து மருத்துவர்களை குற்றம் சாட்டுகிறார்கள், கோபம் கொள்கிறார்கள்.
சிவரஞ்சனி பயிற்சி மருத்துவராக பணிபுரியும் போதே இது போன்ற பல நிகழ்வுகளை சந்தித்திருக்கிறாள். அதே போல் உயிர் கொல்லி நோய்களும், இறப்பும் அவளுக்கு புதிதல்ல. ஆனாலும், அவள் மனது மரத்து போகவில்லையே. ஒவ்வொரு முறையும் மனது கலங்கித்தான் போகிறது.
இப்பொழுதும் அந்த சிறுவனின் முகம்தான் அவள் கண்களுக்குள் நின்றது.
அவளையும் அறியாமல் அவளின் குடும்பத்தினர் நினைவும் அப்போது வந்தது.
அந்த சிறுவனுக்காகவா, இல்லை தனக்காகவா என்று தெரியாமலேயே கண்கள் கலங்கினாள்.
கால் வலி வேறு மூளைக்கு செய்தி அனுப்பி, என்னை கவனி என்று சொல்ல, வலது காலை நன்றாக நீட்டினாள். மெல்ல குனிந்து கணுக்காலைப் பார்த்தாள். லேசாக வீங்கியிருந்தது. மெல்ல அசைத்துப் பார்த்தாள், நன்றாகவே அசைக்க முடிந்தது. ஆனாலும், எழுந்திருக்கவில்லை அவள். அவள் மனத்தின் பலவீனம், உடலுக்கும் பரவி அவளை மேலும் பலவீனப்படுத்தியது.
“டாக்டர்..” என்று உள்ளே வந்தார் சந்தியா. அவருடன் தேவராஜனும் வர, வேகமாக எழுந்தவளை தடுத்தார் அவர்.
“பிளீஸ், உட்காருங்க சிவரஞ்சனி” என்றபடி அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
அவர் முகத்தைப் பார்த்தே அவளுக்கு செய்தி தெரிந்துப் போனது. ஏனோ அழுகையாக வந்தது. கண்கள் கலங்க கண்ணீரை வழிய விடாமல் கண்களுக்குள் அடக்கினாள்.
சந்தியா வந்து அவள் பாதங்களை பரிசோதிக்க, “நீங்க மூனு நாள் லீவ் தானே? நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க, ஓகே?” என்றார் தேவராஜன். அவள் தலையசைக்க, அவளின் பாதம் பற்றி கணுக்காலை ஆராய்ந்தார் சந்தியா.
“ஸ்வெல்லிங் இருக்கு தேவா சார்” என்றதும் பதறி எழுந்து வந்தார் அவர்.
“டாக்டர் எனக்கு ஒன்னுமில்ல. இட்ஸ் ஜஸ்ட் அ ஸ்ப்ரெயின் ஒன்லி” சிவரஞ்சனி மறுத்து சொல்ல, “டாக்டர்ஸ் ஆர் த வொர்ஸ்ட் பேஷண்ட்ஸ் சிவரஞ்சனி” புன்னகையுடன் சொல்லி, காரியத்தில் கண்ணானார்.
“ம்ம், ஸ்ப்ரெயின் போல தான் இருக்கு. ஆனா, கவனமா இருங்க. வீக்கம் அதிகமானா ஒரு எக்ஸ்ரே எடுத்திடுங்க. ஓகே?” தேவராஜன் கேட்க, சரியென்று தலையசைத்தாள்.
அவருக்கு சந்தியா தேவையானவற்றை எடுத்துத் தர, தேவராஜனே அவளின் கணுக்காலில் இறுக்கமாக கட்டு போட்டு விட்டார். அவளிடம் வலி நிவாரணி மாத்திரையும் தர, வேண்டாம் என்று மறுத்தாள் அவள்.
“நான் தான் சொன்னேனே. நாம டாக்டர்ஸ் தான் மோசமான நோயாளிங்கன்னு.” என்றார், பற்கள் தெரிய சிரித்து.
“இப்போ வலிக்கலன்னு கேர்லெஸ்ஸா இருக்காதீங்க. கொஞ்ச நேரத்துல வலிக்க ஆரம்பிச்சிடும். சோ, பிளீஸ். டேப்லெட் போடுங்க” என்று அவர் அறிவுறுத்த, வேறு வழியின்றி அதை வாங்கி விழுங்கினாள் சிவரஞ்சனி.
அவர் திரும்பிப் பார்க்க, சந்தியா வெளியேறினார்.
“நீங்க ஓகே தானே சிவரஞ்சனி?” கனிவாக அவர் கேட்க, அவர் குரலில் இருந்த கனிவுதான் அவளை கலங்கடித்தது.
“அந்த குழந்தையோட அப்பா, அப்போ எமோஷனலா இருந்தார். உங்களை அட்டாக் பண்றது அவரோட இன்டென்சன் இல்ல சிவரஞ்சனி. அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இட்ஸ் அ கோப்பிங் மெக்கானிஷம், உங்களை பிளேம் பண்றது மூலமா, உங்க மேல அவரோட கோபத்தை காட்டுறது மூலமா தன் மேல தப்பில்லன்னு தனக்குத்தானே சொல்லிக்கிறார் அவர். அந்த செகண்ட் ரியாக்ஷன் அது. அதை அவர் பிளான் பண்ணியெல்லாம் பண்ணல. அதுனால நீங்களும் அதை மனசுல போட்டு வருத்திக்காம, கடந்து வர டிரை பண்ணுங்க. ஓகே?” அதற்கும் மௌனமாய் தலையசைத்தாள் அவள்.
“இதெல்லாம் உங்க மனசை பாதிக்க விடாதீங்க. அப்புறம் நாம டாக்டரா பிராக்டிஸ் பண்ணவே முடியாது” என்றார். அவள் அமைதியாக அமர்ந்திருக்க, “மனசு விட்டு பேசுங்க சிவரஞ்சனி. இல்லனா திஸ் இண்சிடென்ட் வில் அஃபெக்ட் யூ பேட்லி” என்று அவர் சொல்ல, அதுவரை அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்ததை படபடவென அவரிடம் பகிர்ந்துக் கொண்டாள் அவள்.
நான்கு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக அந்த சிறுவனை அவளிடம் அழைத்து வந்ததை சொன்னாள். இப்போது அவனின் உடல் நல குறைவிற்கும் தன்னையே குற்றவாளியாக்கினாள் அவள். ஒரு மருத்துவராக தன்னால் அந்த சிறுவனுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை அதிகம் தாக்கியது.
இதில் அவள் தவறு எதுவுமில்லை என்று தேவராஜன் அழுத்தமாக சொல்லியும், அவள் இயல்பாகவில்லை.
“நாம டாக்டர்ஸ் தான் சிவரஞ்சனி. கடவுள் இல்ல. உங்க வேலையை நீங்க ரொம்ப சரியா செஞ்சிருக்கீங்க. அதுனால மனசை போட்டு குழப்பிக்காம வீட்டுக்கு கிளம்புங்க. லீவ் முடிஞ்சதும் பார்க்கலாம். ஓகே? டேக் கேர்”
“தேங்க்ஸ் டாக்டர்” என்றவளின் கைப் பிடித்து எழுந்து நடக்க உதவினார் தேவராஜன்.
தனது இரு சக்கர வாகனத்தை சமாளித்து செலுத்தி வீடு வந்தவள், புவனாவிடம் மதிய உணவு வேண்டாம் என்று தகவல் சொல்லி விட்டு நேராக அறைக்கு சென்று விட்டாள்.
தேவன் அப்போதும் ஏதோ முக்கிய வேலையாகத்தான் இருந்தான். அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான். சட்டென மொழி மறந்து போனது போல மனைவியிடம் என்ன பேசுவதென்றே அவனுக்கு புலப்படவில்லை.
அவளைக் காயப்படுத்தி விட்டோம் என்ற தவிப்பில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து விட்டு தலைக் குனிந்து கொண்டான்.
“சாப்பிட்டீங்களா?” அவள் கேட்க, “மூனு மணியாக போகுதே. நான் எப்பவோ சாப்பிட்டேன்” என்றான்.
அவன் சொல்லவும் தான் நேரத்தையே கவனித்தாள் அவள்.
உடலின் சோர்வையெல்லாம் உதறி தள்ளிவிட்டு எழுந்து கொண்டாள். ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த பயண பெட்டிகளை மீண்டும் ஒருமுறை சரி பார்த்து, விடுபட்ட தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டாள்.
அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் இருவரின் கண்களும் ஒன்றையொன்று அடிக்கடி தொட்டுக் கொண்டது.
அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சண்டைக் கோழிகளாக சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருநாளும் வலிந்து மற்றவரை வார்த்தைகளால் காயப்படுத்தியதில்லை. அன்று காலைதான் தேவன் முதல் முறையாக தெரியாமல் என்றாலும், அவள் வரையில் தெரிந்தே செய்தது. அவனது வேலை, உறக்கமின்மை என்று ஓரளவு தன்னைத்தானே அவள் சமாதானம் செய்துக் கொண்டாலும், கணவன் சொன்னதில் இருந்த உண்மையின் வீரியம் அவளை அதிகம் தாக்கியது.
அது மட்டுமா தாக்கியது? இன்றைக்கு பார்த்தா அவளுக்கு மருத்துவமனையிலும் தாக்குதல் நிகழ வேண்டும். ஒட்டு மொத்தமாக மனதளவில் நிரம்ப சோர்ந்து போய் இருந்தாள் அவள்.
அந்த நிமிடம் அவள் விரும்பியதெல்லாம் நிம்மதியான உறக்கத்தை மட்டுமே. விசித்திரமாக அந்த உறக்கத்திற்கு துணையாக தன் துணையை தேடியது அவள் மனது. கணவனை திரும்பிப் பார்த்தாள். மடிக் கணினியில் இருந்து கண்களை நிமிர்த்தி அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான் தேவன்.
மாமனார் செய்தது பற்றி அவனிடம் தெரியப்படுத்த, விசாரிக்க அவளுக்கு ஒற்றை நொடி போதும். ஆனால், மதுரை சென்றதும் அப்பாவிடம் இதுகுறித்து தேவன் பேசினால், அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகுமே என்ற யோசனையே அவளை பேச விடாமல் தடுத்தது. அதற்குரிய சரியான நேரம் வரட்டும் என ஒத்தி வைத்தாள் அவள்.