பின் மாலைப் பொழுதில் இருவரும் விமான நிலையம் சென்றார்கள்.
அப்போதே அவர்களை அலைபேசியில் அழைத்து விட்டார் சீதாலட்சுமி. அவரிடம் பேசிக் கொண்டே விமான நிலைய நடைமுறைகளை முடித்த தேவனின் பார்வையில் மனைவியின் பாதம் படவில்லை.
“கௌரி போன் பண்ணி உங்களை அங்க அனுப்ப சொன்னா, நான் அவகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன் ரஞ்சனி. நீங்க நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க” என்று அவளிடம் சொன்னார் சீதா.
‘அண்ணனுக்கு இப்போது என்ன வேண்டுமாம்’ என்று கேள்வியே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
“உனக்கு உங்க வீட்டுக்கு போகணுமா?” விமான பயணத்தின் போது மனைவியிடம் கேட்டான் தேவன். மறுப்பாக தலையசைத்து அவனை முறைத்தாள்.
இரவு எட்டரை மணிக்கு மதுரை சென்று விட்டார்கள் அவர்கள். ஒன்பதரைக்கு தேவன் வீடு சென்றார்கள். சேதுராமன், சீதாலட்சுமி இருவரும் வாசலிலேயே அவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.
சிவரஞ்சனிக்கு கால் வலி இப்போது அதிகமாகி இருந்தது. மதிய உணவு உண்ணாததின் காரணமாக பசியும், மயக்கமுமாக இருந்தவளை, பயண சோர்வு தந்த உறக்கமும் சேர்ந்து அழுத்தியது.
“வாம்மா” என்று சேதுராமன் அவளை அழைக்க, முகத்தில் எதையும் காண்பிக்காமல் புன்னகையுடன் அவருக்கு பதில் சொன்னாள்.
அவர் நெப்போலியனுக்கு உதவி இருக்கலாம். அதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் கேள்வி கேட்க விழையவில்லை அவள். அதனால் அவரிடம் வழக்கம் போல பேசினாள்.
“நீங்க ரெண்டு பேரும் முகம் கழுவிட்டு வாங்க. நான் டின்னர் எடுத்து வைக்கறேன். சாப்பிடலாம்” என்று சீதாலட்சுமி சொல்ல, பயண பெட்டிகளுடன் தங்களின் அறைக்குச் சென்றான் தேவன். சிவரஞ்சனி கணவனைத் தொடர்ந்து தங்களின் அறைக்கு சென்றவள் தன் கைப்பையை காணாமல் காரில் இருக்கிறதா என்று பார்க்க திரும்பிச் சென்றாள்.
அவள் வீட்டு வாசலில் கால் பதித்த கணம், நெப்போலியனின் கார் வாயிலை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தது.
சிவரஞ்சனி அப்படியே நிமிர்ந்து நின்று விட்டாள். அண்ணனை எதிர்கொள்ள தயாரானாள்.
காரில் இருந்து இறங்கிய நெப்போலியன் கண்களில் தங்கை விழ, அவன் முகம் பிரகாசமானது.
“எப்படியிருக்க ரஞ்சி?” அன்பாய் வினவினான்.
“அதான் பார்க்கறியே” அசட்டையாக பதில் சொன்னாள்.
“நல்லா இருக்கேன்னு சொல்லு ரஞ்சி. அது கேட்க நல்லாருக்கும் இல்ல? ம்ம், உன்னால நானும் ரொம்ப நல்லாருக்கேன்” அவளை நெருங்கி சொன்னான். சட்டென பின்னே நகர்ந்தாள் சிவரஞ்சனி.
அதில் நெப்போலியனின் முகம் சுருங்க, “என்ன?” என்று கோபமாக கேட்டான் அவன்.
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க? என்ன வேணும் உனக்கு?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு பதில் கேள்வி கேட்டாள்.
“என்ன வேணுமா? நான் உன்னை பார்க்க வந்தேன் ரஞ்சி.” அவன் சொல்ல, நம்பாத பார்வை பார்த்தாள் அவள்.
“அம்மா உன்னை நேரா நம்ம வீட்டுக்குத் தானே வரச் சொன்னாங்க? ஏன் வரல நீ? உங்கண்ணிக்கு உன்னை பார்க்கணுமாம். அதான் உங்களை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன். வா, வீட்டுக்கு போகலாம். மாப்பிள்ள எங்க? அவரையும் கூப்பிடு” என்று அதிகாரமாக சொன்னான் நெப்போலியன்.
“அந்த வீட்டுக்கு நான் ஒருநாளும் வர்றதா இல்ல”
“ஏய் ரஞ்சி, என்ன பேசுற?”
“ஏன் கத்துற? நான் என்னமோ புதுசா இன்னைக்கு தான் அந்த வீட்டுக்கு வரலைன்னு சொல்றது போல ரியாக்ட் பண்ற? என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்போ இங்க வந்திருக்க? என்னை வச்சு இன்னும் என்ன பிளான் பண்ற நீ?” கோபமாக கேட்டாள்.
“ரொம்ப பேசாத ரஞ்சி. என்ன விட்டா ரொம்ப பேசிட்டே போற? என்ன பிளான் பண்ணிட்டேன் நான்? ஒரு எழவு பிளானும் பண்ணல” அவனும் கோபமாக சொல்ல,
“நம்பிட்டேன். நீ கிளம்பு” என்றாள் எரிச்சலுடன்.
“உன்னை மதிச்சு வந்து வீட்டுக்கு கூப்பிட்டா..”
“அதான் வர முடியாது சொல்றேன். இல்ல? கிளம்பு” கடுமையாக சொல்லி விட்டு, கைப்பையை எடுக்காமல் வீட்டினுள் செல்ல திரும்பினாள்.
“உன் மாமனார், மாமியார் கிட்ட பேசிக்கிறேன் நான்.”
“அவங்க சொன்னா மட்டும் வந்துடுவேனா என்ன?” நக்கலாக கேட்டாள்.
“ஹா, வந்து தானே ஆகணும் ரஞ்சி. உனக்காக எல்லாம் செய்றவங்க பேச்சை பதிலுக்கு நீயும் கேட்டு தானே ஆகணும்?” அவன் திமிராக கேட்க, திரும்பி அவனை முறைத்தாள்.
“நாங்க சும்மாவா ஜெய்க்கு உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்? என் பிசினஸ் இன்வெஸ்ட்மென்ட், அப்பாவோட அரசியல் ஆசை, எனக்கு பெரிய கட்சியில போஸ்டிங்னு நாங்க நினைச்சது எல்லாம் நடத்திக் கொடுத்துட்டார் உன் மாமனார்.” இந்த செய்தி அவளுக்கு புதிது. இவர்களின் அரசியல் பிரவேசமும் எப்படி நிகழ்ந்ததென இப்போது புரிய, மனத்தின் அதிர்ச்சியை கண்களில் காட்டவில்லை அவள்.
சீதாலட்சுமி மூலமாக ஏற்கனவே செய்தி தெரிந்திருந்ததால், பெரிதான அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்படவில்லை.
“வாங்க, தம்பி. எப்போ வந்தீங்க? உள்ள வாங்க” சீதாலட்சுமிக்கு அப்போது தான் நெப்போலியன் வந்திருக்கும் செய்தி வீட்டு பணியாளர் வாயிலாக சென்று சேர, விரைந்து வந்திருந்தார் அவர்.
“இப்போ தான் வந்தேன்த்த” என்று நெப்போலியன் வீட்டுக்குள் வர,
“ஜெய்..” என்று மகனை உரக்க அழைத்து, கண்களால் கணவரைத் தேடினார் சீதாலட்சுமி.
“அண்ணா எங்களை இப்போவே வீட்டுக்கு வரச் சொல்லி கூப்பிடுறான் அத்த. ஆனா, இப்போ வர முடியாது, நாங்க கல்யாணம் முடிஞ்சதும் வர்றோம்னு சொல்லிட்டேன்” என்று சீதாவிடம் சொன்னாள் சிவரஞ்சனி.
“எப்படியும் கல்யாணத்துக்கு எல்லாரும் வருவாங்க. அப்போ பார்க்க தானே போறோம். இல்லண்ணா?” என்று நெப்போலியனிடம் கேட்டு விட்டு தங்களின் அறைக்கு நடந்து விட்டாள் அவள். சீதாலட்சுமி அவளின் நடையில் இருந்த வித்தியாசத்தை அப்போது தான் கவனித்தார். நெப்போலியன் முன் எதுவும் கேட்கவில்லை அவர்.
“ஜெய், உங்கப்பாவை கூட்டிட்டு இங்க வா தம்பி” மகனை மீண்டும் அழைத்தார் சீதாலட்சுமி
சிவரஞ்சனி அறைக்குள் நுழைய தேவன் அங்கில்லை. நேராக சென்று படுக்கையில் அமர்ந்தாள்.
“நாங்க நினைச்சது எல்லாம் நடத்திக் கொடுத்துட்டார் உன் மாமனார்” நெப்போலியனின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவள் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தது.
“ஏன் என்னிடம் சொல்லவில்லை? எதற்காக உதவினார்கள்?” அவளின் கேள்விகள் கோபமாக வளர்ந்து நின்றது. ஏன், எதற்கு என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு குழப்பமே மிஞ்சியது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்த குழப்பங்கள் தலைவலியை தர பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.
அவளுக்கு வலது காலை நகர்த்தி வைப்பதே சிரமமாக இருந்தது. அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்து வந்தாள். இங்கிருந்து பார்க்கையில் வீட்டு கூடத்தில் நெப்போலியன் இல்லை என்றதும், அப்பாடா என்று ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டவளின் காதில் மாமனாரின் பேச்சு விழுந்தது.
அவர் குரல் வந்த திசையில் திரும்பினாள்.
“என்னை ஏன் சத்தம் போடுற ஜெய்? நெப்போலியன் உரிமையா நம்ம வீட்டுக்கு வர்ற அளவுக்கு வச்சிருக்கோம்னா, நாங்களா அவனை வளர்த்து விட்டோம்? நான் அவனுக்கு இஷ்டப்பட்டு எதுவும் செய்யல தம்பி. நீ சொன்னதுக்காக மட்டும் தான் செஞ்சேன் நான். இல்லைனா நான் ஏன் அவனுக்கு செய்ய போறேன்? உனக்காக தான், பிசினஸ், அரசியல்ன்னு எல்லாத்துலயும்..” அதைக் கேட்டதும், அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை அவள். அந்த நிலையை கடந்து, மனம் மரத்து போய் விட்டது போல செயலற்று போனாள். அப்படியே திரும்பி தங்களின் அறைக்கு சென்று படுத்து விட்டாள்.
அந்த ஒற்றை நாள் அவளின் வாழ்க்கையையே தலை கீழாக புரட்டிப் போட்டது போலிருந்தது அவளுக்கு.
தேவன் கோபத்தில் சொன்ன கடுஞ்சொற்களையும், மருத்துவமனை நிகழ்வையும் எளிதாக கடந்திருப்பாள். ஆனால், அவள் சற்று முன்னர் கேட்ட செய்தி ஏற்படுத்திய தாக்கத்தின் முன் மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
இந்த ஆறு மாத திருமண வாழ்க்கையில் தேவனை மனதார நேசித்திருந்தாள். அவன் மீதிருந்த நேசம் வளர்ந்து கொண்டே போனதே தவிர குறையவில்லை. ஆகையால், இப்பொழுது அவன் மேல் அதீத கோபம் ஏற்பட்டாலும், அவனை வெறுக்க முடியவில்லை அவளால்.
அவளுக்கு ராஜாவும், ராணியும் தற்போது எதிரெதிரே நிற்பதான பிரம்மை உண்டானது.
ராஜா இல்லாமலும் ராணியால் போரிட முடியும். ஆனால், அதை கற்பனையாக நினைக்கையிலேயே அவளுக்கு தொண்டையடைத்தது.
“சிவரஞ்சனி சாப்பிட வரல நீ? தூங்கிட்டியா?” அவளைத் தேடி அறைக்கு வந்தான் தேவன்.
சிவரஞ்சனி தன் காலை உள்ளிழுத்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
“அண்ணாக்கு பிசினஸ்ல நீங்க ஹெல்ப் பண்ணீங்களா தேவன்?” மனதை அரித்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்டாள்.
“நான் கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட என்ன கேட்டேன்? அதையும் மீறி அவனுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?”
“சிவரஞ்சனி..” தேவன் சொன்ன எதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அவங்க ஆதாயத்துக்காக என்னை யூஸ் பண்ணாங்க தேவன். சொந்த தங்கச்சியை.. ப்ச், எனக்கு எப்படி இருந்திருக்கும்னு உங்களுக்கு சத்தியமா புரியலையா?” ஆதங்கத்துடன் கேட்டாள். தேவன் பதிலின்றி அவளையே பார்த்திருக்க, “இதுவே உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தி..” என்று அவள் சொல்லி கூட முடிக்கவில்லை.
“ஏய்…” என்று ஆத்திரத்துடன் மனைவியை அடிக்க கை ஓங்கினான் ஜெயதேவன். அதை கனவிலும் எதிர்பார்த்திராதவள் ஒரு நொடி மிரண்டு, முகத்தை அனிச்சையாக திருப்பி, கண்களை பயத்துடன் மூடித் திறந்தாள் சிவரஞ்சனி.
அந்த ஒற்றை நொடியில் தன் வாழ்க்கை தொடங்கிய இடத்திற்கே வந்து விட்டதாக உணர்ந்தாள் அவள்.
மதுரை ரயில் நிலையத்தில் வைத்து அனைவரின் முன்பும் நெப்போலியன் அவளை ஓங்கி அறைந்தது, இதே ஜெயதேவனை அவள் திருமணம் செய்ய மறுத்த போது அறைந்தது என வலிக்க வலிக்க அவள் வாங்கிய அடிகள் அனைத்தும் அந்த நொடி பின்னே போய் விட தேவனின் ஓங்கிய கரம் மட்டுமே அவள் முன் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது.
அன்றைக்கு அவளை நெப்போலியன் அறைந்த போது அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காண்பிக்கவில்லை சிவரஞ்சனி. அப்படியொரு அழுத்தத்துடன் நின்றிருந்தாள். ஆனால், இன்றோ கலங்கிய கண்களுடன் கணவனை ஏறிட்டாள்.
அன்றைய தினம் போலவே இன்றைக்கும் சிவரஞ்சனிக்காக தேவனின் முகம் வலியில் சுருங்கியது. ஆனால், இம்முறை அந்த வலிக்கு காரணமும் அவனே.