அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அவள் மேல் தான் இருந்தது. காத்தாடியின், கடிகாரத்தின் ஓசையை கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிரம்பியிருக்க, “நெப்போலியா” என்று மகனை அதட்டி அந்த அமைதியை கலைத்தார் சொக்கநாதர்.
“குடிகாரனா? அவர் குடிச்சதை நீ பார்த்தியா?” என்று தங்கையை மிரட்டி கொண்டிருந்தான் நெப்போலியன். உதட்டில் நக்கல் புன்னகை இழையோட மீண்டும் ஜெயதேவனின் மேல் பார்வையை செலுத்தி விட்டு திரும்பி அண்ணனைப் பார்த்தாள் சிவரஞ்சனி.
“நீ சொன்னது உங்கண்ணி காதுல விழுந்தா என்ன நினைப்பா?” என்று அவன் உறும, அண்ணனுக்கு பின்னால் நின்றிருந்த அண்ணியை பார்த்தாள். ஆக, அண்ணன் எப்போதும் தனக்காக வருந்தப் போவதில்லை என்று வருந்தியவள், அதை கண்களில் காட்டாமல் மறைத்தாள்.
“அண்ணி என்ன நினைப்பாங்கன்னு அவங்ககிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோண்ணா.” அசட்டையாக பதில் சொன்னவளின் கரம் தன்னிச்சையாக தன் கன்னத்தை வருடி விட்டது.
கன்னம் வருடிய கரத்தையும், அவளையும், அவள் பேச்சையும் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் ஜெயதேவன். அவர்களுக்கு பக்கத்தில் நின்றதால் மட்டுமே அவனுக்கு அவள் பேசுவது தெளிவாக கேட்டது. வீட்டின் மற்றவருக்கு அது கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவனால் ஆசுவாசபடக் கூட முடியவில்லை.
அவனைப் பற்றிய அப்படியொரு கருத்தை வீட்டினர் முன் சொல்வாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்காக நெப்போலியன் அடித்தது அதை விட அதிர்ச்சிதான். அதைக் கண்ட அவனுக்கே வலிக்கையில் அவள் அசையாமல், முகத்தில் உணர்ச்சி துடைத்து நின்றதிலேயே அவளின் கோபத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது.
ஆனாலும், அவளின் குடிகாரன் என்ற வார்த்தையில் அவனின் பிரிய ராகத்தின் பெயரை கொண்டவளை அந்த கணம் அவனுக்கு பிடிக்காமல் போனது.
ஒருவித கோபத்துடன் தன் பெற்றோரை திரும்பிப் பார்த்தான். அவன் பெற்றோர் சேதுராமன், சீதாலட்சுமி இருவரும் அவனைப் பார்த்து விட்டு திரும்பி கௌரியை பார்த்தனர்.
கௌரி தன் சித்தப்பா குடும்பத்தையும், தன் பெற்றோரையும் சங்கடத்துடன் பார்த்தாள். அவளின் நாத்தனார் சிவரஞ்சனியை தன் தம்பி ஜெயதேவனுக்கு மணமுடிக்கலாம் என்பது அவளின் யோசனை தான். அவள் பொருட்டே அனைவரும் அங்கிருந்தனர். ஆக, அனைவரின் பார்வையும் அவளையே மொய்த்தது.
“என்னப்பா இது?” அப்பாவிடம் கண்களால் கேள்விக் கேட்டான் ஜெயதேவன். அவரோ சீதாலட்சுமியை கண் காட்டினார். அம்மாவை அவனாலுமே சமாளிக்க முடியாது என்பதால் எரிச்சலுடன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“டீ எடுத்துக்கோங்க” என்று அங்கை வர, “நாம டீ குடிப்போம். பொண்ணும், மாப்பிள்ளையும் அதுக்குள்ள தனியா பேசிட்டு வரட்டும். என்ன சொல்றீங்க?” என்று சீதாலட்சுமி சொல்ல, அங்கை அனிச்சையாய் கணவரை ஏறிட்டார்.
“ம்ம், அவங்க பேசட்டும். நீ கூட்டிட்டு போ நெப்போலியா” என்றார் சொக்கநாதர்.
“எதுக்கு பேசணும்?” என்று எகிறிய தங்கையை நெப்போலியன் முறைக்க, அவனை வெறுப்பேற்றும் நோக்கத்தில் பளிச்சென்று புன்னகைத்தாள் சிவரஞ்சனி.
அண்ணன், தங்கை இருவரும் உள்ளே செல்ல, அவர்கள் பின்னே ஓடினார் அங்கயற்கண்ணி.
“கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் தான் இருக்கு. அதுக்கு முன்னாடி நிச்சயம் போல வச்சுப்போமா?” வீட்டுப் பெரியவர்கள் பேசுவதை அசுவராசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவன் அருகில் வந்து, “ஜெய், நீ போ. அவகிட்ட போய் பேசு” என்றாள் கௌரி.
அக்காவை அதிருப்தியுடன் பார்த்தான். மெல்ல தலையசைத்து வீட்டினுள்ளிருந்து சத்தம் வந்த பகுதியை நோக்கி நடந்தான்.
“நீ முதல்ல என் போனை குடுண்ணா. எனக்கு என் போன் வேணும்னு சொல்லிட்டேன். உனக்கு கேட்குதா, இல்லையா? அப்புறம் என் ஹேன்ட்பேக்கும் வேணும். ரெண்டையும் கொடுத்தா தான் நீ சொல்ற எதையும் செய்வேன் நான். புரிஞ்சுதா?” என்று அடிகுரலில் மிரட்டி கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
“இங்க பார். கை நீட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதன்னு பலமுறை சொல்லிட்டேன். நான் திருப்பிக் கொடுத்தா நீ தாங்க மாட்ட. கையை முறிச்சி, ஒடச்சு, திரும்பவும் ஃபிக்ஸ் பண்ணிடுவேன். ஞாபகம் வச்சுக்கோ” இம்முறை அவளின் மிரட்டலில் அவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது. அவள் சொன்னதை செய்வதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்க, சிரிப்பை சிந்தி விடாமல் இருக்க சிரமப்பட்டான்.
“ஏய்..” என்று நெப்போலியன் அதட்ட, “உன்னை கை நீட்டாதன்னு சொன்னேன் ண்ணா. என்ன எடுத்ததுக்கு எல்லாம் கை நீட்டிட்டு இருக்க? நான் உன் தங்கச்சி, உங்கப்பாவோட அல்லக்கை இல்ல” என்று அண்ணனின் கையை மடக்கி பிடித்து அழுத்தமாக சொன்னாள்.
“இவனுக்கு என்னம்மா அர்த்தமில்லாம, அறிவில்லாம பேர் வச்சுருக்கீங்க? நெப்போலியனாம் நெப்போலியன். பொம்பள பிள்ளயை கை நீட்டி அடிக்கிற மாவீரனுக்கு நெப்போலியன் பேர் ஒன்னு தான் குறைச்சல்” என்று அவள் நக்கலாக சொல்ல,
“ரஞ்சி” என்று பல்லைக் கடித்தான் நெப்போலியன்.
மகனை பின்னால் தள்ளி நிறுத்தி, “இங்க பார் ரஞ்சி. உங்கப்பா மான மரியாதையே இந்த கல்யாணத்துல தான் இருக்கு. சும்மா தேவையில்லாம பிரச்சினை பண்ணாம உங்கண்ணியோட தம்பியை கட்டிக்க சம்மதம் சொல்லு” அங்கை மகளின் முன் வந்து கெஞ்ச,
“ஓ, மான, மரியாதையா? அதெல்லாம் உன் வீட்டுக்காரருக்கு இருக்கா என்ன?” என்றாள் கிண்டலாக.
“இந்தாடி..”
“இதே நீங்க தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி உங்கப்பா அரசியல் வாழ்க்கையே இதுல தான் இருக்குனு அடிச்சு பேசினீங்க. அவ்ளோ ஏன், நாலு மாசத்துக்கு முன்னாடி கூட அதைத்தானே சொல்லி என்னை மிரட்டுனீங்க. இந்தா நிக்குறானே மாவீரன், இவனோட பிசினஸ், இன்வெஸ்ட்டர் பிரச்சினை, அப்பாவோட அரசியல், அந்தஸ்து, ஆசை, கனவு, லட்சியம்னு என்னென்னமோ சொல்லித் தானே அந்த அரசியல் வியாதி பையனுக்கு ஓகே சொல்ல சொன்னீங்க? அதெப்படிம்மா இவங்க எல்லா பிரச்சினைக்கும் தீர்வா நான் தான் இருக்கணும்னு சொல்ற?”
“அடடே அண்ணா. என்ன பாசம் பொங்குதா?” என்று கடுப்புடன் கேட்டவள், “உண்மையை சொன்னா, முகம் சுளிக்குற? ம்ம், மூளையே இல்லாத மழுமட்டை, உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா” என்று முகத்தை திருப்பினாள்.
“ரஞ்சி, அந்தாள் எதுவும் குடைச்சல் கொடுக்குறதுக்கு முன்னாடி உன் கல்யாணத்தை முடிக்கணும்னு அப்பா நினைக்கிறார்.”
“என் பிரச்சினையே நீயும், அப்பாவும் தான். அது புரியாம..” என்று நக்கலாக சிரித்தவள், “எனக்கு எவன் பிரச்சினை கொடுத்தாலும் சமாளிக்கத் தெரியும்மா. உங்க தொல்லையை தான் என்னால தாங்க முடியல. அது உங்க கண்ணுக்கு தெரியுதா, இல்லையா?” மகளையும், மகனையும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தவர், மகளின் அந்த கேள்வியில் ஒரு நொடி திகைத்து நின்றார்.
மறுகணமே சுதாரித்து, “இங்க பார் ரஞ்சி, நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா..” என்று அவர் குரல் உயர்த்த, அடுத்து என்ன ஆயுதம் வரும் என்று தெரிந்த சிவரஞ்சனி, மெல்ல பின்னே நகர்ந்து சுவரில் சாய்ந்து நின்றாள்.
மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டு, “நெட்ல இருந்து ஆர்கன் டொனேஷன் ஃபார்ம் டவுன்லோட் பண்ணித் தர்றேன் மா. மறக்காம ஃபில் பண்ணிடு” என்று மிக நிதானமாக சொன்னாள்.
“உன்ன..” என்று மீண்டும் அவளை அடிக்கப் பாய்ந்தான் நெப்போலியன்.
சட்டென அவள் நகர்ந்து விட, கையை ஓங்கி சுவரில் குத்தினான்.
“பின்ன என்ன? சும்மா அதே பழைய பல்லவியை பாடினா, பயந்து நடுங்கி நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட நான் பாப்பா இல்ல. புரிஞ்சுதா? உங்கப்பா என்னை கொன்னே போட்டுருவார், உன்னை வெட்டிருவார், குத்திருவார்னு பயமுறுத்தின காலமெல்லாம் மலையேறிடுச்சும்மா.”
“இனி நான் செத்து போயிடுவேன்னு யார் என்னை மிரட்டினாலும், சாகுறதுக்கு முன்னாடி நாலு உயிரை காப்பாத்துன்னு ஆர்கன் டொனேஷன் ஃபார்ம் தான் நீட்டுவேன். இல்லையா, போலீஸிக்கு போவேன்.” என்று அவள் தீர்க்கமாக சொல்ல, “எப்படி ஈவு இரக்கமே இல்லாம பேசுறா பாருய்யா” மகளைக் கை காட்டி மகனிடம் புகார் படித்தார் அங்கை.
“உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ” என்று திமிராக சொன்னான் நெப்போலியன். ஒரு நொடி, ஒரே ஒரு நொடி அவள் கண்களில் பயமும், மிரட்சியும் வந்துப் போக, திமிராக சிரித்தான் நெப்போலியன்.
உள்ளூர் காவல்துறையிலும் அவர்களுக்கு ஆட்கள் உண்டு எனும் போது அவன் சிரிக்காமல் என்ன செய்வான். அவளும் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் முயன்று தோற்று ஓய்ந்திருந்தாள்.
“என்ன சவால் விடுறியா? என்னால எதுவும் செய்ய முடியலைனாலும் உங்களை கண்டிப்பா ஜெயிக்க விட மாட்டேன். நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நான் உங்களுக்கு அடங்கிப் போறேன்னா? உங்க கண்ணு முன்னாடியே ஊரை விட்டு போக என்னால முடியும்ண்ணா. நான் ஏன் போகாம இருக்கேன்னு நினைச்ச? உங்களுக்கு பயந்தா? நெவர். உங்க ஜாதி, அரசியல், பதவி வெறி எல்லாம் தாண்டி, இது என் குடும்பம்னு நான் யோசிக்கிறது தப்புன்னு தினம் தினம் ப்ரூப் பண்றீங்க நீங்க எல்லோரும். நான் ஊரை விட்டு ஓடி தான் உங்ககிட்ட இருந்து தப்பிக்கணுமா என்ன? இந்தா இருக்க திருப்பரங்குன்றம் முருகன் கோயில்ல கல்யாணம் முடிச்சுட்டு வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்று அவள் அதிராமல் கேட்டு அங்கிருந்த இருவரையும் அதிர வைத்தாள்.
“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று ஜெயதேவனை அந்தப் பக்கம் இழுத்துச் சென்றிருந்த கௌரி, அறைக்குள்ளிருந்து சிவரஞ்சனியின் குரல் ஓங்கி ஒலிக்கவும், “என்னங்க, அத்த” என்று குரல் கொடுத்தாள்.
“எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட சரின்னு படல.” என்ற ஜெயதேவனிடம் புன்னகைத்து, “அப்படியா, அதைச் சித்திகிட்ட சொல்லேன்” என்றாள் கௌரி. அதைக் கேட்டதும் அவன் முகம் சிறுத்து போனது.
அவனை இப்படி நிற்க வைத்ததே அவன் அம்மா தானே, பின்னர் அவரிடம் எங்கிருந்து முறையிட?
“ரஞ்சனி..” அண்ணி அழைக்கவும் வெளியே வந்தாள் சிவரஞ்சனி. அவளின் பின்னாலேயே வந்த அங்கை, “பின்னாடி தோட்டத்து லைட் போட்டு தான் இருக்கு. நீங்க அங்க போய் பேசுங்க தம்பி. நான் டீ எடுத்துட்டு வர்றேன்” என்றார்.
“சரிங்கத்த” என்றவனை, விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தாள் சிவரஞ்சனி. அவனுக்கு முன்னே அவள் நடக்க, அவளைப் பின் தொடர்ந்தான்.
மாலை மயங்கும் வேளையில் நட்சத்திரங்களை போல மின்னியது தோட்டத்து இருவாட்சி மலர்கள். அன்று மாலை பறிக்காமல் விட்டிருந்த மல்லியும், இருவாட்சி மலர்களும் செடி முழுக்க பூத்துக் குலுங்கியது. அதன் வாசம் அந்த இடம் முழுவதையும் நிறைத்து அவளின் ஓவ்வொரு மூச்சிலும் நாசியை நிறைத்தது.
“ம்க்கும்” தொண்டையை செருமினான் ஜெயதேவன்.
“என்ன பாடப் போறீங்களா?” தலையை மட்டும் திருப்பி அவனிடம் கேட்டவளின் கண்களே கேலியாக சிரித்தது.
உதட்டை இடப்புறமாக சுளித்து, “ப்ச்” என்று மறுப்பாய் ஒலியெழுப்பினான். அவள் முறைக்கவும், “இல்லைங்க டாக்டர் மேடம்” என்றவன் குரலில் ஏகத்துக்கும் நக்கல் கொட்டிக் கிடந்தது.
“நீங்க பாடினாலும் கேட்க இங்க எந்த கழுதையும் இல்லையே. பாவத்த”
“கழுதை கிடைக்கலன்னா கிடக்குது. என் பாட்டை கேட்க, என் தீவிர ரசிகை நீங்க இருக்கீங்களே, அப்புறம் என்ன?”
“நான், உங்க ரசிகை? ஒன்லி இன் யுவர் ட்ரீம்ஸ்” என்றாள் அலட்சியமாக.
“ஓ, ஐ சீ. என்னோட முதல் பாட்டுல இருந்து, நான் அவார்ட் வாங்கின பாட்டு வரைக்கும் ரசிகையின் விருப்பமா கேட்டு ரசிச்சவங்க, என் ரசிகை இல்லையா?” என்று அவன் கேட்கவும், அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள் சிவரஞ்சனி.
“என்ன பார்க்குற? அன்னைக்கு குடிச்சுருந்தது யாரு? நானா, நீயான்னா?” என்று அவன் கேட்கவும் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
“அன்னைக்கு லவ் ஃபெயிலியருன்னு குடிச்சுட்டு சலம்பிட்டு இருந்தவன் தானே நீ? இன்னைக்கு என்னமோ நல்லவன் மாதிரி வந்து நின்னு, எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் மாமான்னு சொல்ற? எப்படி?” அந்த கேள்வியில் அவன் முகமும், உடலும் இறுகிட, கோபத்தை கண் மூடி திறந்து கட்டுக்குள் கொண்டு வந்தான் ஜெயதேவன்.
“லவ் ஃபெயிலியர்னா? அடுத்து கல்யாணமே பண்ணக் கூடாதா என்ன? அப்படிப் பார்த்தா ஊர்ல பாதி பேர் கல்யாணம் பண்ண முடியாது” என்றவன், “மரியாதை கொடுத்து பேசு” என்றான் அழுத்தமாக.
“கட்டிக்க போற பொண்ணுக்கு விருப்பம் இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சுக்காமயே, கல்யாணத்துக்கு ஓகே சொல்ற மகா புருஷர்களுக்குலாம் என்னால மரியாதை கொடுக்க முடியாது” என்றாள் திட்டவட்டமாக.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க பொண்ணுக்கு சம்மதம்னு தான் இந்த கல்யாண பேச்சே ஸ்டார்ட் ஆச்சு. அப்படி பார்த்தா நீ தான் முதல்ல சம்மதம் சொல்லி இருக்க”
“எங்கப்பா சொன்னா? அது நான் சொன்னதா ஆகிடுமா? உங்ககிட்ட வந்து நான் சம்மதம்னு சொன்னேனா? இல்ல நான் சொன்னேனான்னு கேட்கறேன்?”
அவள் கத்த, கோபத்துடன் கண் மூடி திறந்தான்.
“சரி. இப்போ கேட்கிறேன். சொல்லு, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..” அவன் கேட்ட விதத்திலேயே அவனது விருப்பமின்மை தெரிய,
“எனக்கு சம்மதமில்ல.” என்று அவள் பதில் சொன்ன வேகமே அவனை புருவம் உயர்த்த வைத்தது.
“ரொம்ப நல்லதா போச்சு. எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல” என்று காற்றில் கையை வீசி சொன்னவன், “எங்கம்மா தொல்லையால தான் இங்க வந்தேன்” என்றதும்,
“ஹா..” என்றாள் கிண்டலாக. “என்ன உங்கம்மா? ம்ம்?” என்று கேட்டவள், “ஓஹோ, இந்த சிங்கம், தான் லவ் பண்ண கவரிமானை தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நின்னுடுவாரோன்னு உங்கம்மாவுக்கு பயமா?” அவனை சுட்டு விரல் நீட்டி கேட்டாள். பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றான் அவன்.
“ஆமா, உங்களுக்கு அதுக்கு எதுக்கு கட்டாய கல்யாணம்? உங்காளுக்கு, வேற ஆள் கூட கல்யாணம் ஆகிடுச்சுன்னு உங்கம்மாக்கு தெரியாதா என்ன? அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளேன்னு மப்புல பாடி நீங்க மட்டையான கதையெல்லாம் உங்கம்மாக்கு தெரியாதா தேவன்?” அவன் பதில் சொல்லாது நிற்க, மேலும் மேலும் கேள்வி கேட்டாள்.
“உன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல” என்று அவனுக்கு கத்த வேண்டும் போலிருந்தது.
“உங்க காதல் தோல்வி தமிழ் நாட்டுக்கே தெரியும். இதுல உங்கம்மாக்கு தெரியாம இருக்குமா?” என்றாள் தோள் குலுக்கி.
“உனக்கு தெரிஞ்சா, அது தமிழ் நாட்டுக்கே தெரிஞ்சதா அர்த்தமா? என்னை சொல்லணும், உன்கிட்ட உளறி தொலைச்சது தான் தப்பா போச்சு” பல்லைக் கடித்துக் கொண்டு கடுப்புடன் சொன்னான்.
“ஹாஹா, என்கிட்ட உங்க காதல் கதையை சொல்ல சொல்லி நான் உங்களை கேட்டேனா? நீங்க கண்ட்ரோலே இல்லாம குடி போதையில புலம்புனீங்க பாடகரே..”
“என் நேரம்..” என்று கடுப்புடன் தலையில் அடித்துக் கொண்டான். அதைப் பார்த்து அவள் சத்தமாக சிரிக்க, ஒரே எட்டில் அவள் முன்னே வந்து நின்றான். தன்னிச்சையாக இரண்டெட்டு அவள் பின்னே வைக்க, அவள் கண்ணை நேராக பார்த்து, “என் லவ் ஃபெயிலியர் எங்கம்மாவுக்கு தெரியாது. எங்க அம்மாவுக்கு மட்டுமில்ல, யாருக்கும் தெரியாது” என்றான் குரலை தழைத்து.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “கர்ணாவுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க மாமாவுக்கு விருப்பம் இல்லைனு சொன்னார். அவங்க கட்சி, அரசியல், கொள்கை இதெல்லாம் உனக்கு சரி வராதுன்னு சொன்னார். உனக்கும் அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னார். உன்னைப் போல டாக்டரை போய், ஒரு கசாப்பு கடைக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தா, எப்படி சரி வரும்னு நான் பாவம் பார்த்தது என் தப்பு தான்” என்றான் கோபமாக.
“நீங்க கல்யாணத்துக்கு மறுக்கவும் கர்ணாவோட அப்பா பிரச்சினை கொடுக்கிறதா மாமா எங்க வீட்ல வந்து கெஞ்சினார். எங்க வீட்டுக்கு ஆள் அனுப்பி மிரட்டுறாங்க, நீங்க தான் எங்களை காப்பத்தணும்னு அவர் கெஞ்சி கேட்கவும் தான்..” என்று சொல்லிக் கொண்டே போனான் அவன்.
சொக்கநாத பாண்டியனா, கொக்கா? கதையையே மாற்றி விட்டாரே என்று அசந்துப் போய் அவனை இமைக்காமல் பார்த்தாள் சிவரஞ்சனி.
“என்ன?” என்றான் அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, “உங்க லவ் பத்தி உங்கம்மாக்கு தெரியாதுன்னா, இப்போ கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்களை ஏன் ஃபோர்ஸ் பண்றாங்க?” அவனை நிமிர்ந்து நோக்கி கேள்வியை தொடுத்தாள். அவன் அவஸ்தையுடன் தொண்டையை செருமினான்.