“கர்ணாவோ, கசாப்பு கடைக்காரனோ, இல்லை இந்த காதல் தேவனோ.. ம்ம், எவனும் எனக்குத் தேவையில்ல.” என்றாள்.
அவனை காதல் தேவன் என்றதில், அவனுக்கு லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது. அவனின் ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர் அது.
“ஹலோ, என்ன ஸ்மைல் எல்லாம் பலமா இருக்கு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்று கிடுக்குப்பிடி போட்டாள்.
“நீங்க எனக்காக பாவம் பார்க்கவும் தேவையில்ல. எங்கப்பா கெஞ்சி கேட்டதால என்னை காப்பத்தவும் தேவையில்ல. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்” என்றாள் திமிராக.
“ஆனா, பாவம். உங்களுக்கு தான் சிங்கம் இல்லைன்னா, சிறுத்தை சிட்டுவேஷன் போலவா? காதல் தேவனுக்கு, காதல் வரும் முன்னேயே முன்னெச்சரிக்கை கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க போல உங்கம்மா. பாவத்த. ஐ ஃபீல் ஃபார் யூ பாடகரே” அவளின் வார்த்தைகளில் மட்டுமல்ல குரலிலும் அப்படியொரு நக்கல் தொனி.
அவனுக்கு கோபமும், எரிச்சலும் எல்லை மீற, “ஷப்பா..” என்றான் சலிப்பாக. ஆழ்ந்த மூச்சுக்களை அவசரமாக எடுத்தான். அவனுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தவள் மேலும் சில அடிகள் பின்னே வைத்து சுவரில் மோதி நின்றாள். அவளை எரிச்சலுடன் பார்த்து, “உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் நான்.” என்றான்.
“எதே? என்னையெல்லாம் உங்களால ஒன்னும் பண்ண முடியாது. எலும்பை எண்ணி சரி பார்த்திடுவேன் ஞாபகம் வச்சுக்கோங்க. எங்க வீட்டு மாவீரனை திருப்பி அடிக்கலைன்றதுக்காக நான் மருத்துவர் இல்லைனு ஆகிடாது. ஓகே?”
“இந்த வாய் சவடால் எல்லாம் என்கிட்ட மட்டும் தான் போல.”
“ஆமா. என்ன இப்போ? நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க”
“சொல்லித் தொலைக்கிறேன். வேற வழி? எல்லாம் எங்கம்மாவால, அவங்களை சொல்லணும். இல்லைனா உனக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருப்பேனா?”
“அதானே, எனக்கு ஏன் பதில் சொல்ல போறீங்க? புலம்ப தான் செய்வீங்க” அவளும் அசராமல் அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?” என்று எரிந்து விழுந்தான்.
“பேசாமயா? ஹா, என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டது யாரு? நீங்க தானே?” அவள் கேட்கவும், இரு கைகளையும் இறுக மூடி, கண்களை மூடித் திறந்தான்.
“அப்புறமா கோபப்படலாம். இப்போ காரணத்தை சொல்லுங்க” அவள் கேட்க, நீ கேட்டு நான் பதில் சொல்வதா என்ற வீம்புடன் முகம் திருப்பி நின்றான்.
“மிஸ்டர் காதல் தேவன், போன முறை நீங்க லவ் பண்ணது வீட்டுக்கு தெரியாது. சரிதான். இந்த முறை மாட்டிக்கிட்டீங்களா என்ன? அதுக்குத்தான் உங்களை என் தலையில் கட்டப் பார்க்கறாங்களா?”
“ஹலோ, அரசியல் வாதி ஆஸ்பத்திரி கட்டித் தருவான்னு போய் மாட்டினது நீ. உன்னைக் காப்பாத்த வந்திருக்கறது நான். முதல்ல அதை மனசுல பதிய வச்சுக்கோ”
“பதிய என்ன தேவன் சார். நல்ல ஆழமா பதியமே போட்டு வச்சுடுறேன். நீங்க காரணம் சொல்லுங்க” என்றவளை கோபம் கனன்ற கண்களுடன் வெறித்தான் ஜெயதேவன். சமீப காலங்களில் அவனை யாரும் இப்படி நடத்தியதில்லை.
அவன் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து, அவனை வியந்து பார்த்தார்கள் என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவனை பார்த்து வியக்க, விரும்பி புகைப்படம் எடுக்க, அவன் பாடிய பாடலை சொல்லி கொண்டாட என்று தனித் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவனது சோஷியல் நெட்வொர்க்கிங் கணக்குகளில் காதல், கல்யாணம் என்ற தனிப்பட்ட செய்திகள் வருவது எல்லாம் சாதாரணம், சகஜம். அடிக்கடி நடக்கும் செயல்கள். ஆனால், அவனுக்கு எதிரே நிற்பவள்?
அவனறிந்த வரையில் அவளும் அவனது தீவிர ரசிகை தான். இந்த நிமிடம் அதை ஒப்புக் கொள்ள மாட்டாள் என்பதுவும் அவனுக்குப் புரிந்தது.
“காரணம் கேட்டேன்?” என்றவள்,
“உங்களுக்கு சிறுத்தை சார் சிட்டுவேஷன் தான் போலயே?. ஆக்ட்ரஸ் யாரையாவது கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னு நீங்க சொல்லிடுவீங்களோன்னு உங்கம்மா பயப்படுறாங்க. சரியா?”
“இல்லைன்னு சொன்னா என்ன பண்ண போற? உன்கிட்ட பேசுறதே டைம் வேஸ்ட்”
“இல்லன்னு சொன்னா, பொய்னு சொல்வேன். வேற என்ன? அப்படியே இவரை கல்யாணம் பண்ணத்தான் நடிகைங்க எல்லாம் வரிசையில் நிக்குறாங்க” அவளின் பேச்சில் விளைந்த ஆத்திரத்தை மறைத்து,
“அப்படியே வச்சுப்போமே” என்றான் கண் சிமிட்டி மந்தகாச புன்னகையுடன். அவனை ஆவென்று பார்த்தவள்,
“ரொம்ப நல்லது. நான் தப்பிச்சேன். அதான் வரிசையில் நிக்குறாங்க இல்ல? அதுல இருந்து ஒருத்தரை செலக்ட் பண்ணிக்கோங்க. ஓகே?” என்று முடிவாக சொன்னவள், விலகி நடக்கப் போக, அவளை வழி மறித்து நின்றான் ஜெயதேவன்.
“எப்பா முடியல டா சாமி. நாம ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ அவ்வளவு நல்லா பேசின. இப்போ இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசுற?”
அவன் கோபமும், மிகையான எரிச்சலுமாக கேட்க,
“நாம ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ, சார் முழு போதையில் இருந்தீங்களா, அப்போ நான் பேசினது எல்லாம் ரொம்ப நல்ல மாதிரியா தான் உங்களுக்கு கேட்டிருக்கும்.” கிண்டலாக சிரித்தபடி ராகம் இழுத்து சொன்னாள்.
“என்னைப் பார்த்தா உனக்கு குடிகாரன் மாதிரி இருக்கா? மது என் குரலை பாதிக்கும்னு அடிப்படை அறிவு கூட இல்லாம இருப்பேனா நான்? ஐ அம் அ சிங்கர். சோ, குடிகாரன்னு திருப்பி திருப்பி சொல்லாத இடியட்” என்று அவன் கத்தவும், நொடி பொழுதில் உடல் இறுக கண்களை மூடித் திறந்து அமைதியானாள்.
குழந்தையில் இருந்தே அப்பாவின் கத்தலை, அவர் அடிக்கடி கோபப்பட்டு கை ஓங்குவதை, அம்மா மிரளுவதை, அவரின் அழுகையை பார்த்தே வளர்ந்தவளின் மனதில் அதன் தாக்கம் மறையாமல் இருந்தது. அவளே மருத்துவரான பின்னும் மறையாத வடுவாக மாறி நின்றது அது.
அவளின் நிலைக் குத்திய பார்வையை அப்போது தான் கவனித்து சுதாரித்தான் ஜெயதேவன்.
“எங்கம்மா ரொம்ப மும்முரமா, அவசரமா எனக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க. நடிகைன்னு இல்ல, அம்மாவுக்கு அவ்வளவு சீக்கிரம் யாரையும் பிடிச்சிடாது. நான் வீட்டுக்கு ஒரே பையன், அவங்க ரீசன் தப்புன்னும் என்னால சொல்ல முடியல” என்று விளக்கம் கொடுத்தான்.
“ம்ம், உங்கம்மா சொக்கனின் இன்னொரு வடிவம். அம்புட்டு தான். ஆக மொத்தம் சாதி, மதம், மொழின்னு காதலுக்கு முட்டுக் கட்டை போட ஆயிரம் காரணங்கள்” தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ஆனால், அவனுக்கும் தெளிவாக கேட்கவே செய்தது.
“சிவரஞ்சனி?” அதுவரை அவன் குரலில் மறைந்திருந்த கோபத்தை மறைத்து, அவள் பெயரையே கேள்வியாக இழுத்து நிறுத்தினான்.
“உங்கம்மாகிட்ட, உங்களுக்கு வேற பொண்ணு பார்க்க சொல்லுங்க”
“அதான் உங்கப்பா பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்லி கெஞ்சுறாரே..”
“அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. நீங்க எனக்கு வாழ்க்கையும் கொடுக்க வேணாம், வாழைக்காயும் கொடுக்க வேணாம்னு எத்தனை முறை சொல்றது. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. அவ்ளோதான், டாட்” என்றாள்.
“நல்லது. நான் தப்பிச்சேன்” என்றான் நமுட்டு சிரிப்புடன் அவளை வெறுப்பேற்றும் விதமாக. “உனக்கு நாளைக்கே உங்கப்பா வேற ஒரு நல்லவனை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவார். அப்போ என்ன பண்றதா உத்தேசம்?” என்று கேட்டவன், “எதுக்கும் அவனுக்கே ஓகே சொல்லிடு” என்று முடித்தான்.
“அதைப் பத்தி நான் கவலைப்பட்டுக்கறேன். நீங்க கிளம்புங்க” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“சிவரஞ்சனி..”
“முடியாது, நமக்கு செட்டாகாது” என்றாள் அழுத்தமாக அவன் கண்களைப் பார்த்து.
“அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். ஒருவேளை நீ மனசு மாறி எனக்கு ஓகே சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்” என்றவன், “டாக்டர் மேடத்துக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்க வேணாம். ஆனாலும், உங்களுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லிடுறேன்” என்று ஒட்டு மொத்த பற்களையும் காட்டி புன்னகைத்து சொன்னான் ஜெயதேவன்.
அவள் கோப மிகுதியில் சட்டென்று அவன் முன்னே வந்து நின்று, “தமிழ் நாட்டுக்கே தெரிஞ்ச ஃபேமஸ் சிங்கர் நிலைமையே இங்க பரிதாபமா தான் இருக்கு. இதுல இவர் என்னை சொல்ல வந்துட்டார். போவீங்களா” என்று அவள் அசட்டையாக சொல்லவும், கடுமையாக முறைத்தான் அவன்.
“ஜெய், ரஞ்சனி” என்று இருவரின் பெயரையும் அடுத்தடுத்து அழைத்து, மெல்ல தலையை நீட்டி அவர்களை எட்டிப் பார்த்தாள் கௌரி.
“என்னக்கா?” என்று ஜெயதேவன் கேட்க, அருகருகே நின்றிருந்த இருவரையும் ஒற்றைப் பார்வையில் ஆராய்ந்து திருப்திப்பட்டுக் கொண்டாள் கௌரி.
“நேரமாகும் அண்ணி” வீம்பாக பதில் கொடுத்தாள் சிவரஞ்சனி.
“ஓகே. பொறுமையா பேசிட்டு வாங்க. அதுக்கு அப்புறம் பொண்ணு பார்க்கும் படலத்தை வச்சுக்கலாம். சரியா? ஆனாலும், கல்யாண தேதியே முடிவானதுக்கு அப்புறம் பொண்ணு பார்க்கற முதல் ஜோடி நீங்களா தான் இருப்பீங்க” என்ற அண்ணியை வெறுப்புடன் வெறித்தாள் ரஞ்சனி.
“நீ போக்கா. நாங்க பேசிட்டு வர்றோம். ஃபைவ் மினிட்ஸ் பிளீஸ்” என்றான் ஜெயதேவன். கௌரி அங்கிருந்து நகர, “பிளீஸ்..” என்று அவனைப் போலவே பேசிக் காட்டினாள் சிவரஞ்சனி. அவளிடம் சிக்கிய பலியாடு அவன் தானே.
குடும்பத்தினர் மீது காட்ட முடியாத ஆத்திரத்தை எல்லாம் அவனிடம் பேசி தீர்த்துக் கொண்டாள்.
“இவ்வளவு நேரமும் என்னை கேள்வி கேட்ட நீ, உன் பிரச்சினை என்னன்னு சொல்லவே இல்லையே?” அவள் கண்களை கூர்ந்து கேட்டான். திடீரென்று வந்த அந்தக் கேள்வியில் திணறிப் போனாள்.
அவளால் அப்பா சொன்ன காரணத்தையே அவனிடம் சொல்ல முடியவில்லை. அவனிடம் மெய் சொல்லவும் முடியாமல், பொய் சொல்லவும் விரும்பாமல் மௌனமாய் நின்றாள்.
அவனைத் தவிர்த்து அவனுக்குப் பின்னால் இருந்த பூக்களை பார்த்தபடி யோசனையில் மூழ்கினாள். முன்னர் அவன் சொன்னது போல, இன்று இவனை மறுத்தால் நாளையே வேறு ஒருவனை கொண்டு வந்து நிறுத்துவார் சொக்கநாதர்.
நாளை வருபவன், நல்லவனாக இருப்பான் என்பதில் எந்தவித நிச்சயமும் இல்லை.
அப்பாவின் சுய லாபத்திற்காக எந்த அளவிற்கும் இறங்கத் தயாராக இருப்பார் அவர்.
அவர்களின் பிடியில் இருந்து மொத்தமாக அவள் விலக, இந்த திருமணம் உதவும் என்றால், இவன் உதவுவான் என்றால், இந்த திருமணத்தில் அவளுக்கு சம்மதமே.
“இந்த சிறுத்தையை காப்பாத்த நான் தான் வரணும்னு இருந்திருக்கு பாருங்களேன்” என்றவள், பரபரவென உள்ளே நடந்து விட்டாள்.
“என்னது? என்ன சொன்ன? என்னை நீ காப்பாத்த போறியா? குட் ஜோக்” என்று பின்னிருந்து கத்தினான்.
“சிங்கத்தை விட சிறுத்தை தான் மா வேகமா ஓடும். சிறுத்தை எவ்வளவு வேகமாக ஓடினாலும், சிவரஞ்சனிகிட்ட சிக்காது, சிவரஞ்சனி போலவும் சிக்காது”
அவன் கேலியாக சொன்னானா? இல்லை, உண்மை தெரிந்து சொன்னானா என்று கேள்வி மனதில் உதிக்க அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள் சிவரஞ்சனி.
அவளை பின் தொடர்ந்து வேகமாக உள்ளே வந்தவன், அவளை இடித்து விடாமல் இருக்க, அவளின் தோள் பிடித்து தடுமாறி நின்றான்.
“இந்த சிவரஞ்சனி என்னைக்கும் உங்ககிட்ட சிக்க மாட்டா” என்றாள் அவனுக்கு கேட்கும் குரலில்.
“இந்த காதல் தேவனுக்கு இன்னையில இருந்து பிடிக்காத ராகம் என்ன தெரியுமா? சிவரஞ்சனி” என்றான் சற்றே முன்னே சாய்ந்து அவள் கண்களை ஊடுருவி.
இருவரும் பார்வையாலும் பேச்சாலும் மோதிக் கொண்டிருக்க, அங்கே அவர்கள் இருவரின் குடும்பமும் அவர்களின் திருமணம் குறித்த தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, முடிவுகளை எடுத்து முடித்திருந்தது.