“ஆமா. எனக்காக தான் யோசிச்சேன். என்ன இப்போ? நீ மட்டும் இப்போ எனக்காகவா யோசிக்கிற? உனக்காக யோசிக்கிறதுனால தானே இவ்வளவு கோபம் வருது உனக்கு?” தேவனின் அந்தக் கேள்வி அவளின் கோபத்தை இன்னுமே வளர்த்து விட்டது.
“என் பயம் உன்னால வந்தது. உனக்காக வந்தது சிவரஞ்சனி. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?”
“என் அண்ணா நெப்போலியன் அப்படியொன்னும் பெரிய மாவீரன் இல்ல. அவன் என்னை என்ன பண்ணிடுவான்னு நீங்க இப்படி பயப்படுறீங்கன்னு சத்தியமா எனக்குப் புரியல” அலுப்பும் சலிப்பும் மிக கேட்டாள்.
“அவன் எதுவும் பண்ண மாட்டான்னா நீ ஏன் அவனுக்கு சொத்துல உன்னோட பங்கை எல்லாம் வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டு வந்த?” தேவன் கேட்க, பல்லைக் கடித்தாள் சிவரஞ்சனி.
“நான் அவனோட உறவே வேணாம்னு எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தேன். ஆனா, நீங்க எனக்குத் தெரியாம வேணும்னு அவனுக்கு உதவி பண்ணி நம்மளோட உறவை நெருக்கமாக விட்டுருக்கீங்க. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. உங்களுக்கு புரியுதா?” அவள் எரிச்சலுடன் கேட்க,
“கீப் யுவர் ஃப்ரெண்ட்ஸ் க்ளோஸ் பட் யுவர் எனிமீஸ் க்ளோஸர், கேள்விப்பட்டதில்லை நீ? என்னோட எதிரியை என் கைக்குள்ளயே வச்சுருக்கேன் நான்.” என்றான் தேவன்.
“என்னது எதிரியை கைக்குள்ள வச்சிருக்கீங்களா? யாரு நீங்க? நெப்போலியனை? குட் ஜோக். அவன் உங்க எல்லோரையும் சுண்டு விரல் அசைவில ஆட்டுறதா நினைச்சு ஆடிட்டு இருக்கான். அது தெரியாம நீங்களும் அவன் ஆட்டத்துக்கு துணை போய்ட்டு இருக்கீங்க” என்று கடுமையாக சொன்னாள். தேவன் தன்னிலை விளக்கம் கொடுக்க இயலாமல் கண் மூடிக் கொண்டான்.
கணவனுக்கு ஏன் தன் மனது புரியவில்லை என்ற ஆதங்கம் மட்டும் ஆலமரமாக அவளுள் வளர்ந்து கொண்டே போனதை தேவன் அறியவில்லை.
உண்மைக்கும், நேர்மைக்கும் எந்தவொரு உறவிலும் உயர்வான இடம் உண்டு. அதிலும் திருமண வாழ்வின் அடிப்படையும், ஆதாரமும் அது தானே. அதை மீறிய பின்னர் கணவன் என்ன காரணம் சொன்னாலும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேவனின் பயம் உண்மை. ஆனால், அதை மனைவியிடம் மொழி பெயர்க்க அவனுக்கு தைரியமில்லை. தெரியவும் இல்லை.
“ம்க்கும்” என்று தொண்டையை செருமியவன், தன் பிரிய ராகத்தின் தோள் சேர்ந்தான். அந்த நிமிடம் அவளின் அண்மை அவனுக்கு தேவையாக இருந்தது.
அவன் தொண்டையை செருமினாலே, “என்ன பாடப் போறீங்களா?” என்று எப்போதும் நக்கலாக கேட்பவள் இந்த முறை அதைச் செய்யவில்லை. அவன் பாடல் கேட்டு பல நாள்கள் ஆகியிருந்தது. இந்த சண்டையின் காரணமாக மேலும் அவன் குரல் வளையை நெரிக்க விரும்பாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.
“எவ்வளவு நேரம் இந்த பட்டு புடவையிலயே இருப்ப?” அவளின் தோள் சாய்ந்தபடி தேவன் கேட்க, “ம்ம், நீங்க தள்ளிப் போனதும் மாத்தணும்.” என்று அவனைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள் அவள்.
அந்த அவசர வேகத்தை தாங்க முடியாது தடுமாறியது அவள் கால்கள். அப்படியே பின்னே விழ போனவளை தாங்கிப் பிடித்தான் தேவன்.
“என் மேல இருக்க கோபத்தை எல்லாம் உன் கால் மேல காட்டாத, வெயிட் பண்ணு. நான் ஹெல்ப் பண்றேன்” அவளைப் படுக்கையில் அமரச் செய்து, அவள் காலை தூக்கி தன் முழங்காலில் வைத்து பரிசோதித்தான் தேவன்.
கடந்த இரண்டு நாள்களின் அலைச்சலை தாங்க முடியாமல் நன்றாக வீங்கியிருந்தது அவளின் கணுக்காலைச் சுற்றிய பகுதி.
“என்னாச்சுன்னு இப்பவாவது சொல்லேன் சிவரஞ்சனி” என்று அவன் குரல் மன்றாட, அவளால் பேசவே முடியவில்லை.
அந்த மருத்துவமனை தாக்குதல் அவளுக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது இப்போது.
அப்பா, அண்ணனிடம் இல்லாத பாதுகாப்பு தனக்கு மருத்துவமனையில் இருப்பதாக அவளுக்கு பலமான நம்பிக்கை இருந்தது. ஒரு வாரம் முன்பு வரை அதுதான் உண்மையும் கூட. ஆனால், இன்றோ அவளின் பாதுகாப்பு குறித்த பார்வையே மாறியிருந்தது.
ஒட்டு மொத்தமாக ஆண்கள் அனைவரையும் ஒரே பார்வையில் பார்த்து விடுவோமோ என்று பயந்தே போனாள் அவள். கணவனும் அவளை அடிக்க கை ஓங்கியதின் விளைவே அது.
“இந்த பேண்டேஜ் மாத்திடலாமா?” தேவன் கேட்க, மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள்.
“நம்மை சுத்தி நடக்குற எல்லா விஷயத்துக்கும், நாம பார்க்கற ஒவ்வொரு காட்சிக்கும், நிறைய கோணங்கள் இருக்கு சிவரஞ்சனி. நான் பண்ணதை உன்னோட கண்ணோட்டத்துல மட்டுமே நீ பார்க்கிற.” அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, “உச்” என்றாள்.
“ஜஸ்ட் லிசன் டு மை சைடு ஆப் த ஸ்டோரி, ஓகே? அதுக்கு அப்புறமும் நீ கோபப்பட்டா..”
“எனக்கு கோபமில்ல தேவன். என் வார்த்தையை மீறி ஒரு விஷயத்தை நீங்க பண்ணியிருக்கீங்கன்னும் போது, உங்க மேல நான் வச்சிருந்த நம்பிக்கை உடைஞ்சு போய்டுச்சு. உங்களுக்கு தெரியும் தானே? எனக்கு ஏற்கனவே ட்ரஸ்ட் இஸ்யூ இருக்கு. அவ்ளோ சீக்கிரம் என்னால யாரையும் நம்ப முடியாது. ஆனா, ஒன்ஸ் நம்பிட்டேன்னா..” என்று இழுத்தவள் தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை. ஆனாலும், அவனுக்கு புரிந்தது.
அவன் மேல் அவள் வைத்த நம்பிக்கை தான் அவர்கள் இருவரையும் திருமண வாழ்விற்குள் பிணைத்தது என்ற உண்மை தேவனுக்கும் தெரியும்.
என்ன சொல்வெதென தெரியாமல் இடக் கரத்தால் கண்களை தேய்த்து விட்டான் தேவன். சட்டென மாறிப் போனாள் சிவரஞ்சனி.
“தூங்குங்க தேவன். இப்படி சரியான தூக்கம் இல்லாம இருக்கிறது தான் எல்லா துக்கத்தையும் நமக்கு பெருசாக்கி காட்டுது.” அவன் கண் பார்த்துச் சொன்னாள். மன்னிப்பு எனும் மனதை ஆற்றும் வார்த்தையை உச்சரிக்க இயலா பரிதவிப்புடன் மனைவியின் முகம் பார்த்தான் தேவன்.
“எனக்கு ட்ரெஸ் சேன்ஜ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ்” சிவரஞ்சனி அவளே இறங்கி வந்தாள். தேவனின் முகம் சடுதியில் சரியானது. அவன் உதடுகள் புன்னகையில் பிரிந்தது.
அதற்கான எதிர்வினை அவளிடம் இல்லை. அதை தேவன் எதிர்பார்க்கவும் இல்லை.
அவள் இரவு உடைக்கு மாறி உறங்கத் தயாராக, “பிளீஸ், டேப்லெட் எங்க இருக்குன்னு சொல்லு. எடுத்துத் தர்றேன்” என்று தேவன் கேட்க, இன்று மறுக்காமல் வலி நிவாரணி மாத்திரையை விழுங்கி விட்டே உறங்கினாள். நேற்றை போல அல்லாமல் இன்று படுக்கையின் இடைவெளியும் குறைந்திருந்தது. மூச்சுக் காற்று தொடும் தூரத்தில் இல்லை என்றாலும், முகம் பார்க்கும் தூரமே இரவிற்கான இதத்தை தந்தது. தேவன் முழுதாக ஒரு வாரத்திற்கு பின்னர் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்தான்.
“காதல் கதை என்றும் தோற்றதில்லை. தேவனின் விதியில் மாற்றமில்லை.” அந்த அதிகாலையில் தேவனின் தேவ கானம் தான் அவளை கண் விழிக்கச் செய்தது.
தூக்கம் சுமந்த கண்களுடன் கணவனை ஏறிட்டாள்.
“நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான், எதிர்பார்த்திருக்கும் உந்தன் பூ முகம் தான்” வசீகரிக்கும் அவன் குரல் அந்த வரிகளை உச்சரிக்கும் போது சற்றே கரகரத்தது அவளுக்கு அத்தனை இதத்தைத் தந்தது.
அவள் படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து அமர, “காதல் கதை என்றும் தோற்றதில்லை” என்று மீண்டும் பாடினான் தேவன்.
“ஆனா, தேவனின் விதியில் மாற்றம் வந்திடப் போகுது. பார்த்து மிஸ்டர் காதல் தேவன்” என்று கிண்டலாக சொன்னாள் அவள்.
“உன்ன..” என்று உருமினான் தேவன்.
“ம்ம், வழியை விடுங்க. பாட்டு பாடி கரெக்ட் பண்ண பார்க்காதீங்க” அப்பொழுது தான் வேண்டுமென்றே அவளின் வழி மறித்து நின்றான்.
“நீங்க நேத்து நைட் நல்லா தூங்கி எழுந்துட்டீங்க தேவன். சோ சண்டையை இன்னைக்கு வச்சிப்போம். ஓகே?” என்று அவள் கேட்கவும் அயர்ந்து போய் அமர்ந்து விட்டான் தேவன்.
ஒரே அறைக்குள் இருந்தாலும் இருவரும் எதையும் பேச, விவாதிக்க முனையவில்லை. ஒற்றை வார்த்தை போதும் திரியை பற்ற வைக்க என்பது புரிந்து மிக கவனமாக பேச்சை தவிர்த்தனர்.
அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது. அதனால் சீதாலட்சுமி தம்பியின் வீட்டிலேயே தங்கி விட்டார்.
தேவன், சிவரஞ்சனி இருவரும் காலை உணவுக்கு செல்லும் போது அவர்களுக்காக காத்திருந்தார் சேதுராமன்.
மூவரும் ஒன்றாக காலை உணவை உண்ணும் போது, “இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் வீட்லயே இருங்க ஜெய். சாயங்காலம் ரிசப்ஷனுக்கு நீங்க வந்தா போதும். என்ன?” என்று மகனிடம் கேட்டார் சேதுராமன்.
“எனக்கு கொஞ்சம் வெளி வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு உங்கத்தை கூட தான் இருப்பேன். நீங்களும் அங்க வரலாம். ஆனா, ஒரே சொந்தக்கார கூட்டமா இருக்கும். அதுக்கு நீங்க வீட்லயே ரெஸ்ட் எடுக்கலாம்” என்று அவர் சொல்ல, “ம்ம், என்கிட்ட அத்தையும் அதேதான் மாமா சொன்னாங்க.” என்றாள் சிவரஞ்சனி.
“நேத்து கல்யாண வீட்ல என்னால கௌரி அண்ணிகிட்ட சரியா பேசவே முடியல. அவங்களும் வந்த உடனே கிளம்பிட்டாங்க. நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வர்றேன் மாமா. அப்படியே மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் போய்ட்டு மதியத்துக்குள்ள வீட்டுக்கு வந்துடுறேன். நீங்க அத்தைக் கிட்ட சொல்லிடுங்க மாமா.” என்று சிவரஞ்சனி சொல்லவும் சேதுராமன் திரும்பி மகனை முறைத்தார்.
“அது வந்தும்மா..” என்று அவர் இழுக்க, “ரிசப்ஷனுக்கு கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன் மாமா” என்று அவரின் தயக்கம் பார்த்து அவள் உத்திரவாதம் அளித்தாள்.
“அதில்லம்மா, நாளைக்கு காலைல சென்னை கிளம்பணும் நீங்க. எதுக்கு வீண் அலைச்சல்னு பார்த்தேன்”
“வீட்டுக்கும், கோவிலுக்கும் தானே போறோம் மாமா?” அதிர்ச்சியை மறைக்காமல் கேட்டாள்.
“கௌரிக்காவை நான் நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேன். இங்கேயே மீட் பண்ணுங்க ரெண்டு பேரும்” என்று தேவனும் சொல்ல, மீண்டும் அவளுள் சூழ்ந்தது குழப்பமும், அது தந்த எரிச்சலும்.
“அவங்க அலைய கூடாதுன்னு தான் நாம அங்க போவோம்ன்னு சொன்னேன். சரி விடுங்க. கோவிலுக்கு மட்டுமாவது போய்ட்டு வரலாம்” என்றாள்.
“என்னம்மா இன்னைக்கு தான் மீனாட்சியை புதுசா பார்க்கப் போறியா? அடுத்த முறைவரும் போது போங்க. உனக்கு வேற கால்ல அடிபட்டு இருக்குன்னு உங்கத்தை சொன்னா. எதுக்கு வீண் அலைச்சல்…” என்ற சேதுராமனை இப்போது விழிகளில் நிரம்பிய சந்தேகத்துடன் பார்த்தாள் சிவரஞ்சனி.
என்னமோ சரியில்லை என்றது அவளின் உள்ளுணர்வு.
மனைவியின் முகம் பார்த்த தேவனுக்கு அவளின் மனதை படிக்க முடிந்தது.
“இங்க இருக்க கோவில் தானேப்பா? ஒரு மணி நேரத்துல போய்ட்டு வந்திடுறோம்.” என்று தேவன் அழுத்தமாக சொல்ல, மகனை அதிருப்தியுடன் பார்த்த சேதுராமன், “ஓகே. அப்போ என் காரை எடுத்துட்டு போங்க. நீ ட்ரைவ் பண்ண வேணாம். நம்ம டிரைவரை விட்டுட்டு போறேன். அவர் கூட போங்க” என்று முடிவாக சொன்னார்.
தேவன் சட்டென சம்மதித்தான். ஆனால், சிவரஞ்சனியால் அப்படியிருக்க முடியவில்லை.
“அப்பாவும், அண்ணனும் என்னை என்ன பண்ணிடுவாங்கன்னு இப்படி பயப்படுறீங்க மாமா” மனதின் எண்ணத்தை அவளையும் அறியாமல் உரக்க கேட்டு விட்டாள்.
“நான் அவங்களுக்கு பயந்தேன்னு யார் மா சொன்னா?” அந்த குரலில் இருந்தும், கேள்வியில் இருந்தும் எதையும் கண்டறிய முடியவில்லை. சிவரஞ்சனி திரும்பி தேவனை பார்க்க, “நீங்க கிளம்புங்க ப்பா. நாங்க எங்கேயும் போகல. வீட்ல தான் இருக்கோம்” என்று அவளை பார்த்தபடி பதில் சொன்னான் தேவன்.
அந்நேரம் சேதுராமனுக்கு அலைபேசியில் அழைப்பு வர, உணவை முடித்திருந்தவர் அப்படியே எழுந்து கொண்டார். பத்து நிமிடங்கள் கழித்து மருமகளை பார்த்து புன்னகைத்து விட்டு, மகனிடம் ஒற்றை தலையசைப்புடன் வாயிலை நோக்கி நடந்தார். தேவன் வேகமாய் எழுந்து அப்பாவுடன் இணைந்து நடந்தான்.
“நாங்க கோவிலுக்கு டிரைவரை கூட்டிட்டு போய்ட்டு வர்றோம் ப்பா. ஓகே?” என்று அவன் சொல்ல, “மூளையை அடகு வச்சுட்டியா டா முட்டாள்” என்று மகனிடம் கோபமாக கத்தினார் அவர்.
“புரியாம என்ன ஜெய். எனக்கு நல்லா புரியுது. அதுக்குத்தான் உன்னை மருமக கிட்ட உண்மையை சொல்லுன்னு அத்தனை தடவை சொன்னேன். நீ என் பேச்சை கேட்டியா? இல்ல மருமகள் கிட்ட உண்மையை தான் சொன்னியா சொல்லு? நீ அன்னைக்கே உண்மையை சொல்லி இருந்தா, இன்னைக்கு நீ அவஸ்தைப்பட தேவையில்ல.” என்றார் கோபமாக.
தேவன் பதிலின்றி அப்பாவை சங்கடமாக பார்க்க,
“சரி. நீங்க கோவிலுக்கு போய்ட்டு வாங்க. ஆனா, பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க. வேறேங்கயும் போகாம, நேரா வீட்டுக்கு வந்துடுங்க” என்று அவர் சொல்லவும், சரியென்று தலையசைத்தான் தேவன்.
அப்பா சென்றதும், தேவன் தங்களின் அறைக்குள் வர, சிவரஞ்சனி அங்கில்லை.