“நான் சத்தியமா இதை எதிர்பார்க்கல தேவன். அவருக்கு என் மேல கோபம் இருக்கும்னு தெரியும். ஆனா, அதுக்காக இப்படி என்னை கொலை பண்ற அளவுக்கு இறங்குவார்னு நான் நினைக்கல” தடுமாற்றத்துடன் தேவனின் விழிகளில் விழி பதித்து அவள் சொல்ல, மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் தேவன்.
“உண்மையா கோவிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டு தான் கிளம்பினேன். ஆனா, உங்க பயத்தை உதாசீனப்படுத்தி இருக்கக் கூடாது நான்..” அவள் புலம்ப, “இட்ஸ் ஓகே” என்று அவளின் காதோரம் சொன்னான் அவன்.
அத்தனை நேரமும் அவன் உடலில் இருந்த பதட்டமும், மனதில் இருந்த கொதிப்பும் அந்த நொடி கரைந்து காணாமல் போனது.
அவனின் பிரிய ராகம் எந்தவித பாதிப்பும் இன்றி அவன் வசம் இருக்கிறாள் என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவனின் ஆதார சுதி அவளே என்று அவன் உணர்ந்து கொண்ட நொடிகளை நினைக்க நினைக்க அவனின் அணைப்பு இறுக்கமானது.
“தேவன்..” என்று அவனை விலக்க முயற்சித்தாள் சிவரஞ்சனி. அவனோ விலக மட்டுமின்றி, இடைவெளியே ஏற்படுத்த மறுத்தான்.
அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, தன் மேல் அவளை சாய்த்து, அவளின் பாதங்களுக்கு பளு கொடுக்காமல் அணைத்து பிடித்திருந்தான்.
அவசர அவசரமாக ஆழ மூச்சுகளால் சுவாசித்து தன் ஆழ் மனது வரை அவளை நிரப்பினான்.
“விடுங்க தேவன். எனக்கு மூச்சு முட்டுது” அவன் முதுகில் தட்டிச் சொன்னாள்.
“நல்லா மூச்சு முட்டட்டும். அப்போதான் உனக்கு என் கஷ்டம் புரியும்.” அவளை விலக்காமல் வீம்பாக சொன்னான். அவனின் பின்னந்தலையில் கைக் கோர்த்து தலைமுடியை வலிக்க பிடித்து இழுத்தாள்.
தேவனின் தலை உயர, அவன் கண்களில் கோபத்தின் சாயல். மாறாக, மனைவியின் முகத்தை ஆவேசத்துடன் கையில் அள்ளிக் கொண்டான் அவன். அவளின் கன்னம், நெற்றியில் அழுத்தமாக தன் உதட்டு ரேகையை பதித்தான்.
அவளுக்கு இந்த அதீத அன்பும் ஆறுதலையே தந்தது. அவளின் நடுக்கம் கொண்ட மனத்திற்கு கம்பளி போர்த்தியது அவனின் கதகதப்பு. அவள் இதழ்களில் நெடுநேரம் உரையாடியவனுக்கு அதுவுமே போதவில்லை. உணர்வால் அவளை ஊடுருவி தன் உயிருக்குள் நிறைக்க போராடினான்.
“தேவன்..” என்று அவள் தடுமாற, அவளில் தடம் மாறிக் கொண்டிருந்தான்.
“இங்க பாருங்க. என்னைப் பாருங்க, நமக்கு எதுவும் ஆகல. ஐ ஆம் ஓகே தேவன்..” அவன் முகத்தை கையில் ஏந்தி அவன் கண் பார்த்து சொன்னாள். ம்ஹூம், அவனே ஊர்ஜிதம் செய்துக் கொள்ள விழைந்தான் தேவன்.
“பிளீஸ்..” என்று அவள் கெஞ்ச, “பிளீஸ்..” என்று அவனும் மிஞ்சினான்.
“இப்ப நினைச்சாலும் நடுங்குது எனக்கு. நீ என் கையில தான் இருக்கேன்னு எனக்கு கன்பார்ம் பண்ணணும். பிளீஸ் என்னைப் பாரேன்” என்ற தேவனின் கண்களை கூர்ந்தாள் அவள்.
“உங்க கையில தான் இருக்கேன் தேவன்” அவன் விரலுடன் விரல் கோர்த்து அழுத்தம் கொடுத்து சொன்னாள்.
அவளால் இப்படி அவனை பார்க்கவே முடியவில்லை. எல்லாம் தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி அவளுள் மிக கணவனை கட்டிக் கொண்டாள். மீண்டும் அவளை தன்னுள் புதைத்து விடும் வேகம் அவனுள். அத்தனை அழுத்தமாக அணைத்தான்.
தேவன் அவனின் பிரிய ராகம் பாட விரும்பினான்.
இசைத்தான் தேவன், இசைந்தாள் சிவரஞ்சனி.
அவள் அசதியில் உறங்கிய பின்னும் விழித்தே கிடந்தான் தேவன். அவர்களின் திருமணம் இரண்டு குடும்பங்களின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது. அவளை கண்டதும் காதல் கொள்ளவில்லை அவன். ஆனாலும், பிடிக்கும். அவனின் பிரிய ராகம் சிவரஞ்சனி. இன்று அவளை பிரிய நேரிடுமே என்று நினைத்த கணம் அவனுள் உதித்த உணர்வுக்கு காதல் என்றே பெயரிட விரும்பினான் தேவன்.
மெதுவாக புரண்டு படுத்து மனைவியின் முகம் பார்த்தான். களைத்து, கலைந்து கிடந்தவளின் கன்னம் வருடி முத்தம் வைத்தான்.
“ஹம்ம்..” என்று ஆழ்ந்த தூக்கத்திலும் முகம் சுளித்து சிணுங்கினாள் அவள். விருட்டென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தான் தேவன். மனைவியின் பாதத்தை பரிசோதித்தான். கணுக்கால் வீக்கம் கூடித் தெரிந்தது. அவனே கட்டை மெதுவாக பிரித்து விட்டான்.
சிவரஞ்சனியை அது தொந்தரவு செய்ய உறக்கம் கலைந்து எழுந்து விட்டாள் அவள்.
“சாரி, எழுப்பி விட்டுட்டேனா?” என்று அவன் கேட்க, “செய்யுறதையும் செஞ்சுட்டு என்ன கேள்வி?” என்று நக்கலாக பதில் கொடுத்தாள்.
“நீ தூங்கு. நாம ரிசப்ஷன் போகல” என்றான் தேவன்.
“அதெப்படி போகாம இருக்க முடியும் அத்த கோபிச்சுக்க போறாங்க. ஏற்கனவே உங்க மாமா கோபமா இருக்கார். இப்போ ரிசப்ஷன் போகாம இருந்தா அவ்ளோ தான். உங்ககிட்ட சண்டைக்கு வந்திடுவார்”
“அந்த கவலை உனக்கு எதுக்கு? நான் பார்த்துக்கறேன் அவரை”
“நல்லா பார்ப்பீங்க போங்க” என்று அவள் அலுத்துக் கொள்ள, “ம்ம், பார்ப்பேன், பார்ப்பேன்” என்று அவளையே பார்த்தபடி மந்தகாச புன்னகையும், மயக்கும் குரலுமாக சொன்னான்.
அவள் படுக்கையில் கையூன்றி எழ, அவளைத் தாங்கி குளியலறை செல்ல உதவினான்.
“நீ ஃப்ரெஷ்ஷாகிட்டு வா. நம்ம சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன் நான்” என்று சொல்லிச் சென்றான் தேவன்.
அவள் குளித்து வர அவர்களுக்கான மதிய உணவை அறைக்கே எடுத்து வந்திருந்தான் தேவன்.
இருவரும் உண்டு முடிக்க, அவளாகவே வலி நிவாரணி மாத்திரையை தேடினாள்.
“இப்போ டேப்லெட் போடாத, வெளில டாக்டர் வெயிட் பண்றார். அவர் பார்த்திட்டு சொல்லட்டும், அப்புறமா டேப்லெட் எடு” என்று அவளின் கைப் பிடித்து தடுத்தான் தேவன்.
“நானே டாக்டர்தான், மிஸ்டர் காதல் தேவன்” கடுப்புடன் சொன்னாள்.
“நீ குழந்தைங்க டாக்டர். என் பொண்டாட்டி குழந்தை இல்ல தெரியுமா? அதுனால அவளுக்கு நீ பார்க்க முடியாது” என்று வியாக்கியானம் பேசினான் தேவன்.
சுளீரென்று அவன் தோளில் அடித்தாள் சிவரஞ்சனி. அவளை எழுப்பி விட்டு அணைவாக பிடித்து கூடத்திற்கு அழைத்து சென்றான் தேவன்.
அவர்களுக்காக காத்திருந்த மருத்துவர் அவளைப் பரிசோதித்து, எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்தார். தேவனின் முகத்தில் கவலை ரேகைகள்.
“நீங்க ப்ரெக்னன்ட்டா இல்லை தானேம்மா?” அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு மனைவியை பார்த்தான் தேவன். “இல்ல டாக்டர்” என்று அவள் பதில் சொல்ல, தேவன் முகத்தில் ஏமாற்றம் ஏராளமாக பரவியது.
அவளுக்கான மருந்துகளை பரிந்துரைத்து விட்டு மருத்துவர் வெளியேற, வீடு வந்தார் சேதுராமன்.
“நாங்க ரிசப்ஷனுக்கு வரலப்பா” என்று அவரிடம் தேவன் சொல்ல, “நானும் அதையே தான் சொல்ல வந்தேன் தம்பி. நீங்க வீட்லயே இருங்க. உங்கம்மா கிட்ட நான் ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சுக்கறேன்” என்றார் அவர்.
“நாம எதுக்கு மாமா பயந்து ஒளியணும்? நாம பயப்படுறோம்னு தெரிஞ்சா, அது அவங்களுக்கு வெற்றி மாமா. அதை நாம பண்ணக் கூடாது. நாங்க கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வர்றோம்..”
“இல்லம்மா..”
“நீங்க எங்க கூடவே இருங்க. உங்க புள்ளை என் கூடவே இருக்க போறார். சுத்தியும் நம்ம சொந்தக்காரங்க இருக்கப் போறாங்க. உங்களை எல்லாம் தாண்டி என்னை என்ன பண்ணுவாங்க அவங்க?” என்று அவள் தீர்க்கமாக கேட்க, சேதுராமன் மகனையே பார்த்தார்.
“சிவரஞ்சனி, பிளீஸ். நான் அவங்களுக்கு பயந்து இதைச் சொல்லல. நாளைக்கு ஏர்லி மார்னிங் நமக்கு சென்னை ஃப்ளைட், உன் கால் வலியோட நாம அங்க போறதுக்கு வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்.” என்று தேவனும் சொல்ல, மறுப்பாக தலையசைத்தாள் அவள். இறுதியில் அவளின் பிடிவாதமே வென்றது.
“சரி, ஹாஸ்பிடல் போய் எக்ஸ்ரே எடுத்துட்டு வந்துடலாம்.” தேவன் சொல்ல, “நாளைக்கு சென்னை போய் எடுத்துக்கலாம்” என்று முடித்து விட்டாள் அவள்.
ராயல் ப்ளூ எனப்படும் அடர் நீல நிறத்தில் வெள்ளி வேலைப்பாடுகள் செய்திருந்த, அவளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நெய்யப்பட்டிருந்த பட்டுச் சேலையில் பளிச்சென்று ஒரு மணி நேரத்தில் தயாராகி நின்றாள் அவள். மிதமான ஒப்பனை, அவசியமான அணிகலன்களுடன் அழகாக நின்றிருந்தவளின் நீள பின்னலை மதுரையின் மல்லியும் சேர்ந்து மேலும் அழகாக்கியது.
தேவன் பெரிதாக உடையில் கவனம் செலுத்தவில்லை. மனைவி எடுத்துக் கொடுத்த உடையை மறுத்து விட்டு, நீல நிற சட்டையும், பட்டு வேட்டியுமாக தயாராகி அவளுடன் நடந்தான்.
அவளின் கால் கட்டு மாற்றப்பட்டிருக்க, வீக்கம் சற்றே குறைந்திருந்தது.
“அங்க போய்ட்டு எங்கேயும் போகாம, என் கூடவே இரு பிளீஸ்” மனைவியை மென்மையாக அணைத்து அவள் காதோரம் முணுமுணுத்தான் தேவன்.
“எல்லாத்துக்கும் முறைக்காத. எனக்கு நீ ரொம்ப முக்கியம்னு சொல்றதுல, எனக்கு எந்த வெக்கமும் இல்ல சிவரஞ்சனி” என்றான்.
நிறைய பேசுவதை விட நிறைவாய் பேசுவதே இனிமை சேர்க்கும். தேவனின் வார்த்தைகள் நிறைவாய் அவளுள் நிறைந்தது.
“இவ்வளவு கெஞ்சுறீங்க, கேட்காம இருப்பேனா?” அவளின் வழக்கம் போல் சீண்டி பேசினாள்.
“அடங்க மாட்ட நீ. என்னை டென்ஷன் பண்றதுல உனக்கு எம்புட்டு சந்தோஷம்” என்று புலம்பியபடியே காரில் ஏறினான் தேவன்.
கார் பசுமலையை நோக்கி விரைந்தது. அவர்கள் இருவரும் முதல் முறையாக சந்தித்த அதே நட்சத்திர விடுதியில் தான் திருமண வரவேற்பு ஏற்பாடாகி இருந்தது.
சேதுராமனின் கார் அவர்களை பின் தொடர, அவரின் காருக்கு பின்னே அவர்களுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தது கர்ணாவின் நண்பன் முரளிதரனின் கார். சட்டென அவளுள் திடுக்கிடல். அவள் சிக்கியிருக்கும் நிலைமையின் தீவிரத்தை அந்தக் கணம் முழுமையாக உணர்ந்தாள் அவள்.
மனதில் கலக்கம் சூழ கணவனை திரும்பிப் பார்த்தாள்.
“போர் அடிக்குதா? ஏதாவது பேசேன். இல்லனா, பாட்டு போடாவா சிவரஞ்சனி?” என்று தேவன் கேட்க, அவனையே பார்த்த அவள் கண்களில் காதலை பார்த்தான் தேவன்.
அவனின் பிரிய ராகம் முதல் முறையாக கண்ணில் காதல் ராகம் பகிர்ந்தது.
“நீ என்னை பாடச் சொல்ற போல தெரியுதே..” குறும்பு சிரிப்புடன் சீண்டினான்.
“ம்க்கும். பாட்ட போடுங்க.” என்று அவள் போலியாக சலித்துக் கொள்ள, இசையை ஒலிக்க விட்டான் தேவன்.
சில நிமிடங்களில் ஹோட்டலை அடைந்து விட்டனர். அங்கு சென்றதுமே இருவருக்கும் அந்த நாள் ஞாபகம் தான். அதிலும் சிவரஞ்சனிக்கு தேவன் போதையில் செய்த அலப்பறை எல்லாம் நினைவு வர, சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினாள் அவள்.
“என் கூடவே இரு” மீண்டும் அதையே சொன்னான் தேவன்.
“இங்கன இருந்துட்டு வர எம்புட்டு நேரம் உங்களுக்கு?” அவர்களை கண்டதும் ஓடி வந்தார் சீதாலட்சுமி.
அவருக்கு நடந்த எதுவும் தெரிந்திருக்கவில்லை.
“கால் வலி இப்போ எப்படியிருக்கு ரஞ்சனி?” என்று விசாரித்தபடி மருமகளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
தேவனுடன் இணைந்துக் கொண்டார் சேதுராமன். அவர்களது குடும்பமே அன்று ஒன்றாக தான் சுற்றினார்கள்.
சற்று நேரத்தில் வரவேற்பில் விருந்தினர்களின் வருகை அதிகரித்தது. சீதாலட்சுமி வந்தவர்களை கவனிக்க மருமகளை விட்டுச் சென்றார். சேதுராமனை பிடித்து வைத்து தொழில் பேசினார் நெருங்கிய உறவினர் ஒருவர்.
அங்கிருந்தோர் அனைவரும் தேவனின் நெருங்கிய உறவினர்கள். அவனது வயதையொத்த நண்பர்கள் அனைவரும் அங்கிருக்க, அவர்களிடம் சிக்கினான் அவன்.
தேவனோடு புகைப்படம் எடுத்தார்கள். அவனைப் பாட சொல்லி காணொளி எடுத்தார்கள்.
சிவரஞ்சனியிடம் சொல்லி விட்டுத் தான் சென்றான் அவன். அவளும் அம்மா, அண்ணி என்று விழாவிற்கு வந்திருந்த தன் குடும்பத்தினருடன் பேசி விட்டு, அண்ணனை, அப்பாவை தேடினாள். அவர்களை காணாமல் கௌரியிடம் விசாரித்தாள்.
“இங்க தான் இருப்பார். நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று அவள் எழுந்து கொள்ள, அவளுக்கு துணையாக அங்கயற்கண்ணியும் நடந்தார். சிவரஞ்சனி அவர்கள் சென்றதும் மேடையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அங்கே கூட்டம் அதிகரிக்க அவளுக்கு காற்றை நிறைத்த கலவையான வாசனை ஒவ்வாமையை தந்தது.
பல்வேறு விதமான நறுமண திரவியங்களின் மணமும், மல்லிகை, முல்லை, பிச்சிப் பூவின் மணமும் கலந்து நாசியில் ஏற ஏற அவளுக்கு தலையை வலித்தது.
அருகில் இருந்த திறந்த வெளி பகுதியில் உணவு ஏற்பாடாகி இருந்தது. அதையொட்டிய பகுதியில் காற்றாட நின்றால் தேவலாம் போலிருந்தது அவளுக்கு. கண்களால் கணவனை தேடினாள். தேவனை காணவில்லை.
அவனது அலைபேசிக்கு அழைக்க, அழைப்பை ஏற்கவில்லை அவன்.
அவள் துணிந்து எழுந்து வெளியே சென்றாள். திறந்த வெளி உணவக பகுதியை அடுத்திருந்த சுற்று சுவரை தொடாமல் நின்று கீழே விளக்கொளியில் மின்னும் மதுரையை ரசித்தாள். நான்கு வருடங்கள் முன்பு இங்கு வைத்து தானே தேவனிடம் பேசினோம் என்று அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் நிறைந்து குறுகுறுப்பூட்ட குறுஞ்சிரிப்பில் பிரிந்தது அவள் இதழ்கள்.
“நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்..” அன்று கணவன் பாடிய பாடல் அசரீரியாக அவள் காதில் ஒலிப்பது போலிருந்தது. காதல் தேவனின் தேவாரம் அவளுள் தளும்ப, கண்களில் மதுரையின் அழகை ரசித்து அப்படியே திரும்பினாள், அவளின் முன்னே கோபத்தில் கண்கள் பளபளக்க கைக் கட்டி ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தார் அவர்.
“என்னம்மா, பசுமலை உச்சிக்கு வந்து பயமில்லாம தனியா நிக்கிற?” மிரட்டும் தொனியில் அவர் கேட்க, சிரித்தாள் சிவரஞ்சனி.
ராயல் ப்ளூ பட்டில் ராணியின் தோரணையுடன் முகம் உயர்த்தி நின்று அவரை தீர்க்கமாக பார்த்தாள் அவள்.